ஒரு அடிமை சிக்கிட்டான்யா…


valluvar

ஒரு வேலையெ ஒரு ஆளுகிட்டெ குடுக்கிறதுக்கு முன்னாடி, அவனாலெ அதெ செய்ய முடியுமான்னு பத்து தடவெ பலவிதமா பாத்து யோசிச்சி அப்புறமா அவன் கிட்டெ கொடுத்து வேலெ வாங்கனும். இது ஐயன் வள்ளுவன் சொன்னதுங்க. இதெத்தான் Resource Allocation  அது இதுன்னு ஏகமா பக்கம் பக்கமா எழுதி இருக்காய்ங்க. ஆனா நம்ம ஐயன் வள்ளுவன் ரெண்டே வரியிலெ நச்சுன்னு சொல்லிட்டார். வள்ளுவரை இந்தியா முழுதும் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு நம்ம அப்துல் கலாம் ஐயாவையே சேரும். அவர் தனது பதவி ஏற்பு விழாவில் குறள் ஒன்றினை தமிழில் கூறி அதன் பொருளை வழக்கமான ஆங்கிலத்தில் கூறியது நினைவில் இருக்கலாம் பலருக்கு. அந்தமான் தீவின் கல்வித்துறை இயக்குனர் கூட (வட இந்தியர் தான்), யார் அந்த வள்ளுவர்? நம்ம கலாம்ஜீ அடிக்கடி சொல்றாரே என்று விசாரித்தார். பொறுப்பாய் குறளின் ஆங்கில வடிவத்தினை அவரிடம் சேர்த்தோம். (ஏதோ நம்மால் முடிந்தது).

சமீப காலமாய் அந்த வேலையை உத்தராகண்ட் எம் பி திரு தருண்விஜய் அவர்கள் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் அந்தமான் வந்திருந்தார். அவரது வருகையினை அறிந்து, அந்தமான் நண்பர் காளிதாசன் அவர்கள் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார். வாய் மொழி செய்தி பரவி 25க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கூடி விட்டனர் அவர் தங்கியிருந்த இடத்தின் வரவேற்பரையில். சரளமாய் அவர் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தேங்க்ஸ் என்று கேட்டு கேட்டு பழகிய நம் காதுக்கு ”நன்றி” ”நன்றி” என்று அவரிடமிருந்து கேட்பது கூட வித்தியாசமாய்த்தான் தெரிந்தது.

Tarun

குறள் தெரியாத அந்தமான், முழுமை பெறாது என்கிறார். அது போல் வட இந்தியாவில் குறள் அறிமுகம் இல்லாவிடில், அதுவும் முழுமை ஆகாது என்கின்றார் தருண்விஜய். அது சரி…. இம்புட்டு பிரியம் திருவள்ளுவர் மேலே எப்புடி வந்திச்சி? என்று கேட்டேன். ஒரு வேளை முன் ஜென்மத்தில் நான் தமிழனாய் இருந்திருப்பேன் என்று பதிலாய் சொன்னார். எப்படியோ, தமிழின் பெருமையினை பெருக்கிட தமிழர் அல்லாதவர் பலர் முன்னோடியாய் இருந்திருக்க,  இப்பொ இவர் கோடு போட்டு, ரோடும் போடுகின்றார். நாம ஜாலியா அதில் பயணிக்க வலிக்கவா செய்யும்?

சமீபத்தில் மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார் அந்தமானுக்கு.. அவருடைய பையன் படிக்கும் பள்ளியில் இருந்து ஆசிரியர் அழைத்தாராம். அப்பா அம்மா ஆசிரியர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இருபது அம்ச திட்டம் தந்து அட்வைஸ் மழை பொழிந்தாராம். கடைசியில் தான் அந்த அட்வைஸ் காப்பிரைட் உரிமையாளர் திருவள்ளுவர் என்றாராம் அந்த மராட்டிய ஆசிரியை. அவர் கணவர் பாண்டிச்சேரியில் வேலை பார்க்கும் போது கத்துகிட்டது என்றாராம். [ஆனா நம்ம மக்கள் பாண்டிச்சேரிக்கு போகும் காரணமே வேறெ…]

மறுபடியும் அந்த வேலையினை பாத்துத் தரும், குறளுக்கே வருவோம். கார்பரேட் கலாசாரத்தில் யார் ஒரு வேலையை திறம்படச் செய்ராகளோ, அவர்கள் தலையில் அந்த வேலையெக் கட்டியிரணும். அரசுத்துறை கொஞ்சம் விசித்திரமானது. வேலையெச் செய்யும் ஆளுங்க கிட்டெ வேலையெக் கொடு. மத்தவனுக்கு சம்பளத்தெக் கொடு. இது அரசிதழில் எழுதப் படாத (அ)தர்மம். புதிய டெக்னாலஜியினை கற்பதற்க்கு அரசு ஊழியர்களின் தயக்கம் இருக்கும். காரணம், தெரிந்து கொண்டால் தலையில் வேலையெக் கட்டிடிவாகளேங்கிற பயம் கூடவே இருக்கும். தெரியலை என்றால், தெரியாது என்று தப்பிச்சிரலாம்லெ…

ஆனா சமீபத்திய மோடிஜீயின் அரசு அதுக்கும் ஆப்பு வைத்து விட்டது. தெரியாத விஷயத்தெக் தெரிஞ்சிக்கிங்கொ என்று அறிவுரை வழங்கியுள்ளது. வாராவாரம் புதன் கிழமை 10 முதல் 11 மணிவரை தெரிந்தவங்க தெரிஞ்ச விசயத்தெ தெரியாதவங்களுக்கு (தெரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கும் சேத்துதான்) சொல்லித் தர உத்திரவு வந்திருக்கு. மத்த எடத்திலெ நடக்குதோ இல்லையோ, அந்தமானில் அந்த வேலை அடியேன் மேற்பார்வையில் (நான் இருக்கும் துறையில்) தொடர்ந்து நடக்குது.

10527311_729670610453353_8831568050053572345_n

ஆனா, ஒரே ஆளுகிட்டெ ஓவர் லோடா வேலையெக் கொடுக்கிறது நல்லதா? கெட்டதா? இந்த மாதிரி டவுட்டு எல்லாம் வந்தா நேரா கம்பர் கிட்டெ போய்க் கேட்டா போதும். அவரு சூப்பரா பதில் சொல்லிடுவாரு. நீங்களும் வாங்க ஒட்டுக் கேளுங்க நாம பேசுறதெ. (ஒட்டுக் கேக்கிறதும் ஓட்டுக் கேக்கிறதும் தான் நம்ம தேசிய குணமாச்சே..)

கம்பரே…… எனக்கு ஒரு டவுட்டு…

கம்பர் கேள்வியினை கேக்கும்முன்னர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஆளு மேலெ வேலையெத் தலையி்ல் கட்டுறதிலெ ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு அவரோட டென்ஷன் ஏறுது. அடுத்து, அந்த துறையிலெ இந்த ஆளை விட்டா வேற ஆளே இல்லைங்கிற ஒரு கெட்ட இமேஜ் உருவாக்கும். இது ரொம்ப மோசமான இமேஜ். இதெ தவிர்க்கும் வேலையிலெ மும்முரமா இருக்கனும். அதுக்கு பிளான் B பிளான் C தயாரா வச்சிருக்கிற மாதிரி அடுத்தடுத்த ஆளுகளெ தயாரா வச்சிருக்கனும்.

கம்பரே… கேக்கிறேன்னு கோவிச்சுக்கக் கூடாது. வக்கனையா இவ்வளவு பேசுற நீங்க அதெ ஃபாலோ செஞ்சிருக்கீங்களா?

தெரியும் கிட்டப்பா…இப்படி கேப்பேன்னு. நம்ப ராமாயணத்திலேயும் இந்த மாதிரி ஒரு சீனு வருது. அங்கதன் தூதுப் படலம் போய் தேடு கிடைக்கும்.

தேடினேன். கிடைத்தது. இராவணனுடன் யுத்தம் துவங்கும் முன்னர் இன்னொரு முறை தூதுவர் ஒருவரை அனுப்பலாமே என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கிறார்கள். யாரை அனுப்பலாம்? நாமளா இருந்தா என்ன செய்வோம்? பழைய ஃபைல் தேடிப் பாத்து, ஏற்கனவே இந்த வேலையெ அனுமன் பாத்திருக்கான். அவன் தலையிலெ கட்டு என்போம். ஆனா கம்பன் மேன் மேனேஜ்மெண்ட் வேறு மாதிரி. அனுமனை அனுப்பினா, வேற ஆளு இல்லையோங்கிற கெட்ட இமேஜ் வந்திடும். அதனாலெ இப்பொ அங்கதனை அனுப்பலாம் என்று முடிவு செஞ்சாகலாம்.

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏகத்தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

கம்பரோட ஃப்ரீ யோசனை நீங்களும் கடைபிடிக்கலாமே. ஃப்ரீயா கெடெச்சா நாம ஃப்னாயில் கூட குடிப்போமெ. இதெச் செய்ய மாட்டோமா?

அப்புறம் ஏதாவது ஃப்ரீ ப்ளானோட வாரென்…

Brand Vs Punch Dialogue பிராண்ட் Vs பன்ச் டயலாக்


நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

எல்லாம் வெலெ ஏறிப்போச்சி… பாக்கெட்டிலெ காசு கொண்டு போய் பையிலெ காய்கறி வாங்கிணு வந்த காலம் போயி, பையிலெ காசு கொண்டு போய் பாக்கெட்டிலெ காய்கறி வாங்கிணு வர வேண்டியிருக்கே என்கிற புலம்பல் ஒரு பக்கம். ஆனாலும் கார் வாங்கும் மக்களும், பல மாடல்களில் மொபைல் மாற்றி வரும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். [Tab 1 மாடல் தெரியாத்தனமா வாங்கிட்டேன். அடுத்து Tab 2 வந்த பிறகு, இன்னுமா இதெ வச்சிட்டிருக்கே?? என்று துக்கம் விசாரிக்கிற மாதிரி என் தூக்கத்தெக் கெடுக்கிறாய்ங்கப்பா…அடிக்கடி.]

காலேஜ் டயத்திலெ சூப்பரான ஒரு பாட்டு, சுராங்கனி… சுராங்கனி. [இன்னும் கூட இந்த பாட்டுக்கு ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்யுது] அதுலெ மாலு மாலு மாலு என்று வரும். அதன் அர்த்தம் அப்பொ தெரியலை. ஆனா இப்போ இந்த மால் கலாச்சாரம் வந்த பிறகு தான் தெரியுது. ஓஹோ இந்த மால் பத்தித்தான் சொல்றாங்களோ என்று. மால் என்றால் பணம் என்கின்ற அர்த்தம் இருந்தாலும், மாலுக்குள் போயிட்டு வந்தா பணம் அம்பேல் தான். [ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. லிப்ஸ்டிக்கை விட, அத விக்கிற குமரிகள் உதட்டு லிப்ஸ்டிக் நல்லாவே இருக்குங்க..]

மதுரெயிலும் கூட இப்பொ மால் தலையெக் காட்டியிருச்சி.. எங்கே திரும்பினாலும் பிராண்டட் ஐடம் தான். ஒரு சாதாரண செருப்பு, அதாங்க.. சிலிப்பர் அது 2500 போட்டிருக்கு. அதெ வேறு எங்கேயும் போட முடியாது. பாத்ரூமில் மட்டுமே தான் போட முடியும். வேறு எந்த வேலைக்கும் ஆவாது. (லேடீஸ் சப்பலுக்காவது அப்பப்பொ வேலை வரும்) அதுக்கு போயி அம்புட்டு ரேட்டா?? அப்புறம் அதே மாதிரி ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விக்கும் பேனாக்கள். பெரும்பாலும் நம்ம ஏர்போர்ட்களில் நோட்டம் விட்டா தெரியும். அந்தமான் ஏர்போர்ட்டில் இப்பொத்தான் சிப்பி முத்து வச்சி நகை கடை வச்சிருக்காய்ங்க.. ஒரே மகளிர் அணி கூட்டம் தான். நம்மாலெ எட்டிக்கூட பாக்க முடியலை (தூரத்திலிருந்து பாகிறதோட சரி.)

எனக்கும் இந்த பிராண்டட் பொருளுக்கும் என்னமோ தெரியலை ஏழாம் பொருத்தம் தான். ரெண்டாயிரம் ரூபாக்கும் அதிகமா சொன்ன ஒரு பிராண்டட் சட்டை வாங்கி போட்டால், அதன் பட்டன் அடுத்த நாளே பல் இளிக்கும். செமெ பிராண்ட் பெல்ட் வாங்கி போட்ட அடுத்த வாரம் அது ரெண்டு பீஸா ஆயிருக்கும். சரி பேட்மிண்டன் வெளையாட நல்லா பிராண்டட் ஷூ வாங்கி, போட்ட ரெண்டாவது நாள் அன்பே சிவம் கமல் மாதிரி நடக்க வேண்டி வந்திடுச்சி.. நமக்கு என்னமோ அந்த குமார் ஷர்ட் (இன்னும் இருக்குங்களா 90 ரூபாய்க்கு சட்டை தந்த புண்ணியவான்கள்), சரவனா ஸ்டோர்ஸ் அன்னாச்சி கடை சரக்கு தான் ராசி போல் இருக்கு. (ஆமா… அந்த சரக்குகளோட பிரண்ட் பேரு எனக்கு புரியவே புரியாத புதிர். ஒருவர் சூப்பர் சரக்கு என்பார். இன்னொருவர் அதையே புளிச்ச தண்ணி என்பார். அது ஒரு தனிக் கதை)

பிராண்டட் வார்த்தைகளை பன்ச் டயலாக் என்று சொல்லலாமா? (இதென்ன கேள்வி? சொல்லிட்டாப் போச்சி.. யாரு எதிர் கேள்வி கேக்கப் போறாக… கேட்டாலுமே, சும்மா ஜாலிக்காக எழுதினதுன்னு சொல்லிட மாட்டோமா என்ன?) ஏதோ பன்ச் டயலாக் இப்பொ வந்த மாதிரி நெனைக்கிறீங்களா?? (இப்பொ கம்பராமாயணம் வருமே… இப்படி நீங்க நெனைச்சா அது ரொம்ப தப்புங்க.. அதுக்கு கொஞ்சம் இன்னும் டயம் இருக்குங்க)

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…. அம்பாள் எப்போது பேசினாள்?. இதெல்லாம் அந்தக் காலத்தில் வந்த, பன்ச் டயலாக் என்று பெயரிடப்படாத.. பன்ச் டயலாக்கள். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் திருவிளையாடல் படம் பாத்திருப்பீங்க. இதுவும் ஒரு வகையில் பன்ச் டயலாக் தானே.. இதே படத்தில் திருவிளையாடல் முடிந்த பிறகு நக்கீரனின் கடைசி டயலாக் “மன்னியுங்கள் தவறிருந்தால்”. (இது உண்மையில் நக்கீரனின் சொல்தானா? அல்லது ஏபி நாகராஜனின் டயலாக்கா என்ற கேள்வியை கொஞ்சம் தள்ளி வைப்போம்). சிவனிடம் மன்னிப்பே கேட்டாலும், மதுரெக்காரெங்க இப்புடித்தான் கேப்போமில்லெ என்று சொல்ற மாதிரி குசும்பா இல்லே..??

சொல்வதை எல்லாம் சொல்லிட்டு, மன்னிக்கனும் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா என்று சொல்வதற்கு உண்மையில் பெரிய மனசு வேணும். (அப்படிப் பாத்தா, சிவ பெருமானையே வம்புக்கு இழுத்து, உண்டு இல்லைன்னு ஆக்கிய நக்கீரனும் பெரிய மனசுக்காரர் தானா??).. சரி..இப்பொ அப்படியே கம்பர் பக்கம் போவோம். அங்கேயும் இப்படி வக்கனையா தன்னோட பாஸ் கிட்டெ சொல்றதெல்லாம் சொல்லிட்டு… தப்பா இருந்தா உட்ருங்க. என்பதாய் வருகிறது.

கம்பர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா.. அவர் கொஞ்சம் ஒரு படி மேலேயே போவார். பாஸ் கிட்டே, ”நீ தான் பெரிய்ய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண டம்மி பீசு..ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. ஏதாவது ஏடா கூடமா இருந்தா, திட்டனுமா திட்டு” என்பதாய் வருகிறது. இங்கே (பழைய) பாஸ் இராவணன். ஊழியர் – விபீஷணன். இராமன் படையைப் பற்றி போருக்கு முன்னர் எச்சரிக்கும் இடம். ஆனா எரிச்சல் இராவணனுக்கு… ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு?? பாட்டு பாருங்க.

கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்.
(யுத்த காண்டம்; இராவணன் மந்திரப் படலம்)

ஒரு அதிகாரி (அரசன்) கிட்டெ ஊழியம் எப்படி பேசனும்கிறது சொல்லாமெ சொல்ற மாதிரி இல்லே..????

ஜால்ரா ஜாங்கிரிகள்…


அந்த ஆளு சரியான ஜால்ரா என்பார்கள்… ஜால்ரா அடிப்பது என்னமோ அவ்வளவு ஜாலியான வேலெ மாதிரி நெனைக்கிறது அப்படியே தெரியும். ஒத்து ஊதுறது என்பது அதற்குச் சமமான தமிழ் வார்த்தையாகச் சொல்லலாம். ஒத்து ஊதுபவரிடம் ஒரு சிக்கல் இருக்கும். மெயின் கலைஞர் என்ன வாசிக்கிராறோ, அதை ஒத்தபடி தான் ஒத்து ஊத வேண்டும். அவருக்கு என்ன தான் ஆசையா இருந்தாலும் கூட, கும்கி படத்திலெ வரும் ஸொய்ங் பாட்டை வாசித்துவிட முடியாது. பல கணவன் மனைவி உறவுகள் இந்த ஒத்து ஊதும் தர்மத்த்தில் தான் ஓடிகிட்டே இருக்கு. அப்படியே அந்த ஒத்து ஊதலில் ஏதாவது பிசகினால் அப்புறம் தர்ம அடி தான்.

அலுவலகங்களிலும் இந்த ஜால்ரா சமாச்சாரங்கள் அதிகம் காணக் கிடைக்கும். அரசியலில் இது தான் பாலபாடமா இருக்குமோ!! (அரசியலை இங்கே இழுக்காமல் விட்றலாம்… இதுக்கு இதைப் படிக்கும் பலர் ஒத்து ஊதுவீங்கன்னு நெனைக்கிறேன்.) அது சரி ஜால்ராவுக்கும் ஜாங்கிரிக்கும் என்ன சம்பந்தம்…? (அது ப்ளோவிலெ வந்திடுச்சி…இதுக்கும் வெளக்கம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க) அது வேறு ஒண்ணுமில்லீங்கோ, ஜாங்கிரி மாதிரி தித்திப்பாவும் இருக்கும். அதே நேரத்தில் சிக்கலாவும் இருக்கும். அளவோட இருக்கணும். அதிகமாப் போனா, திகட்டிடும் முடிச்சை அவிழ்க்கப் பாக்கக் கூடாது..அப்படியே ஸ்வாகா செஞ்சிரணும். ஜாலராவும் அப்படித்தானே?? என்ன ஏதுன்னு யோசிக்கவே படாது.. ஜிங்..ஜிங்.. தட்டிவிட வேண்டும். (இந்த வெளக்கம் போதுமா?)

சமீபத்தில் Office Procedures (அலுவலக நடைமுறைகள் – இப்படி சொன்னா சரியா??) பத்தி ஒரு நாள் டிரைனிங் கிளாஸ் எடுக்க அழைப்பு வந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கூடி இருந்தனர். பெரும்பாலும் போலீஸ், ரிசர்வ் போலீஸ், தீயனைப்பு போலீஸ், தபால்துறை, மற்றும் கூட்டுறவு தொடர்பான அலுவலகங்களின் கூட்டனியாய் வந்திருந்தனர். பொதுவா இந்தமாதிரி வகுப்புகளை அரசு ஊழியராய் சேரும் போது தான் நடத்துவார்கள். வந்திருந்த ஆட்களை பாத்தா, பழம் திண்ணு கொட்டை போட்ட ஆட்களாவே தெரிந்தனர். அறிமுகம் செய்து கொள்ளும் போதே, எத்தனை ஆண்டு அனுபவம் என்பதையும் சொல்லுமாறு வேண்டினேன். ஏழு முதல் முப்பது ஆண்டுகள் வரை பணி செய்த அனுபவசாலிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல்.

இந்த அலுவலக நடைமுறைகள் பற்றி 60 பவர்பாய்ண்ட் ஸ்லைட் தயாரிக்கும் போதே, என் உதவியாளர் சந்தேகம் எழுப்பினார்… சார் இதை நாமளே முக்காவாசி ஃபாலோ பன்ற மாதிரி தெரியலையே??? இதையே வைத்து வகுப்பை ஆரம்பித்தேன். தெரியாம செய்றதை, இனி தெரிஞ்சே செய்ய வைக்கிறதுக்குத் தான் இந்த டிரைனிங் உதவும். ”நீங்க பாட்டுக்கு ஏற்கனவே ஒரு பிரச்சினையில்லாம ஓடிக்கிட்டிருக்கிற அரசு இயந்திரத்தை, உங்க அலுவலக நடைமுறை அறிவை பயன்படுத்தி, நிப்பாட்டி வச்சிராதீங்க” – என்ற வேண்டுகோளோடு நடைமுறைக்கு ஒத்துப் போகும் குணமும் இருக்கணும் என்று ஆரம்பித்தேன்..

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. கோப்புகளில் எழுதுவது பற்றி வரும் வரை. அதில் தான் சிக்கலே வந்தது. கீழ்நிலை பணியாளர்கள் எழுதியதை மாற்றம் செய்து தரச் சொல்லியோ, எழுதிய பக்கத்தையே கிழிச்சிட்டு ”புதுசா எழுதி தாங்க” என்று சொல்வதையோ, செய்தல் கூடாது என்கிறது நடைமுறை. ஆனா தினம் தினம் இந்த அவஸ்தையில் பலர் இருப்பது தெளிவாய்த் தெரிந்தது. அதிகாரிக்கு விருப்பம் இல்லாத கோப்பு வந்தால் அதனை அவர்தம் விருப்பம் போல் மாற்றி எழுத அதிகாரிகள், சற்றே மூளையினைக் கசக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாவே எழுதனும். தேவையா இதெல்லாம்.? தனக்கு எப்படி வேணுமோ அப்படி ஊழியர்கள் எழுதிட்டா, அப்புறம் அதிகாரி சும்மா ஒரு கைநாட்டு வச்சா முடிஞ்சது ஜோலி… இப்படி ஒத்து ஊதும் கலைக்கு ஒத்துப் போகும் அதிகாரிகள் அதிகம் என்று சண்டைக்கு வந்தனர் மகளிர் பயிற்சியாளர்கள். மீறி எழுதினா, தண்ணியில்லாக் காடு தானாம்… (அது சரி..அந்தமானுக்கே வந்தாச்சி..அப்புறம் வேறு எங்கே தான் மாத்திட முடியும்?)

தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை சுதந்திரமாய் வேலை செய்ய அனுமதி அளிக்கும் உயர் அதிகாரி தான் நியாயமான முறையில் பணியாற்ற முடியும். அந்த மாதிரியான அனுமதி கொடுக்காத போது அதன் Scrutiny அவ்வளவு தெளிவாக இருக்காது என்று எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். அதெல்லாம் கதைக்கு ஆவாது சார்…என்று தான் ஒத்து ஊதினர். கடைசியில் சரி நீங்கள், உங்கள் கீழ் வேலை பார்க்கும் ஆட்களிடம் இதனைச் செய்யாது இருங்கள் என்று சொல்லி முடித்தேன்.

நிலைமை சீரியஸாக போகவே, தமிழருவி மணியன் புத்தகத்தில் படித்த Noting பற்றிய செய்தியினை விவரித்தேன். ஒரு அலுவலகத்தில் எல்லாம் … எல்லாம் தான்… முடிந்த பிறகு Approved என்று எழுதி கையொப்பம் இட்டாராம் ஓர் அதிகாரி. பின்னர் ஏதோ கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வரவே, கோப்பை வரவழைத்து, Not Approved என்று அர்த்தம் வரும்படி Not சேர்த்து எழுதி விட்டாராம். பின்னர் வரும்படி போய்விடும் என்று பயந்த, பாதிக்கப்பட்டவர் நன்கு, அதிகாரியைக் கவனித்து வைக்க, மீண்டும் கோப்பு பறந்தது. Not Approved என்பது ஒரு எழுத்து d சேர்த்த பின்னர் Noted Approved என்றாகி விட்டதாம். இப்படி தேவைக்கு ஏற்ப எழுதும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு ஜால்ரா அடித்து முடித்தேன்.

உயர் அதிகாரிக்கு எது பிடிக்கும்? எப்பொ எதைப் புடிக்கும்? இந்த மாதிரி தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்கள் வருவதில்லை. நமக்கு எதுக்கு அதெல்லாம், ரூல்படித்தான் எழுதுவேன் என்பவர்களுக்கு சிக்கல் தான். உயர் அதிகாரிக்கும் பிடிக்கனும் அதே சமயம் ரூல் படியும் இருக்கனும் என்று உழைப்பது ஒரு கலை தான். அது எல்லாருக்கும் அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது தான். (கவலைப் படாதீங்க, நானும் உங்க லிஸ்ட்லெ தான் இருக்கேன்.)

அது சரி மேலதிகாரி மனசு கோணாமல் நடப்பது அல்லது ஜால்ரா அடிப்பது என்னமோ இப்ப வந்த சங்கதி என்று நினைக்கிறீங்களா?? உங்க கணக்கு தப்புங்க… இதை நிரூபிக்க இப்பொ நானு கம்பராமாயணத்தெக் கொண்டுவர வேண்டி இருக்கும். தேவலிங்களா??

விபீஷணனை தம் கட்சியிலெ சேத்துக்கலாமா என்று ராமர் பொதுக்குழு கூட்டி கேட்கிறார். சுக்ரீவன், கூடவே கூடாது என்கிறார். அப்புறம் தளபதி மாதிரி அனுமன், சேத்துகிடலாம் என்று சொல்ல, அந்தத் தீர்மானம் நிறைவேறுகிறது. சுக்ரீவன் ராமனின் பல்ஸ் பிடிச்சிப் பாத்து வைக்கிறார். என்னெக்காவது தேவைப்படும் என்று. சரியான சான்ஸ் மாட்டுது. கும்பகர்ணனைப் பத்தி நல்லவர் என்று விபீஷணன் சொல்கிறார் மேலதிகாரி ராமரிடம்.

சட்டுன்னு உடனே ஜிங் என்று ஜால்ரா அடிக்கிறார், நம்ம சுக்ரீவன். இவரை நம்ம கூட சேத்துகிட்டா நல்லது என்று. இதிலெ வேடிக்கை என்னென்னா, அதை ராமரும் ஒத்துக் கொள்வது தான். அந்த அதிகாரி ராமர். அங்கே ஊழியர் சுக்ரீவன். கொஞ்ச நாளுக்கு முன் எடுத்த முடிவுக்கும் இப்போது எடுத்த முடிவிற்கும் எவ்வளவு வித்தியாசம். வாலிருக்கும் ஜந்துக்கே விளங்கிடுச்சி.. உங்களுக்கு வெளங்காமெப் போகுமா என்ன??

பாட்டுப் பாருங்க:-

என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடு மேல் கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும் மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைத்தேன் என்றான் நாதனும் ஈது என்றான்.

[அப்படி விபீடணன் சொன்னவுடன், சூரிய புதல்வனான சுக்கிரீவன். இன்னெக்கி இந்த கும்பகர்ணனை கெடாசுரதாலெ எந்தப் புண்ணியமும் இல்லெ. நம்ம கூட சேத்துகிட்டா, விபீஷணனுக்கும் நல்ல கம்பெனி கெடைக்கும். இதுதான் சூப்பர் ஐடியா என்று சொல்ல, ராமரும் சூப்பரோ சூப்பர் என்று சொல்லி ஏத்துக் கிட்டாராம்]

இனிமேல் உங்க ஆபீசர் மனசு கோணாத மாதிரி வேலை செய்வீங்களா?? கம்பரை எப்படி எல்லாம் பயன் படுத்த வேண்டி இருக்கு??