கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

நீ யார்? நீ யார்? நீ யார்?


naan yaar

ஒரு காலத்தில் நான் யார்? நான் யார்? நான் யார்? என்று ஆரம்பிக்கும் பாட்டு வந்தது. அந்தப் பாட்டின் அடுத்த வரியிலேயே அதற்கான பதிலும் வந்துவிடும். நாலும் தெரிந்தவர் யார்? யார்? எல்லாம் தெரிந்த நபர் யாரும் இல்லை என்பதை ரொம்பவும் நாசூக்காய் சொல்லித் தந்த பாட்டுங்க அது. (பாட்டெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் எழுதிய காலம்…. ம்….. அதெல்லாம் அந்தக் காலமுங்க)

ஒரு கேள்வி கேட்டால், மற்றொரு கேள்வியே எப்படி பதிலாகும்? இப்படி எதிர் கேள்வி கேக்கீகளா? அது வேறெ ஒண்ணும் இல்லீங்க. கேள்விக்கு பதில் சரியா தெரியல்லேன்னு வச்சிக்கிங்க… அப்பொ இப்படி ஏதாவது சொல்லி சமாளிச்சே ஆகணும். இப்படித்தான், தெரிஞ்சோ தெரியாமலோ, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பயிற்சியாளன் ஆகி விட்டேன். (எல்லாருமா சேந்து ஆக்கிட்டாய்ங்க) எல்லா வகுப்பிலும் சொல்லும் அதே சங்கதியினை (கேள்வியையே கேள்விக்கான பதிலாக தரும் வித்தை) உங்களுக்கும் சொல்றேனே..

RTI in DD

2005ம் ஆண்டுக்கு முன்பு வரை (அதாவது இந்த ஆர் டி ஐ சட்டம் வராத வரை) ஒரு பொது ஜனம், ஏதாவது அரசு நிறுவனத்தில் சென்று, ஏதும் தகவல் கேள்வியாய் கேட்டால் என்ன பதில் வரும் தெரியுமா? ஒரு பதிலும் வராது என்பது தான் எல்லாருக்கும் தெரிந்த கதையாச்சே… அதுக்கும் மேலே நாலு பதில் கேள்வியும் வரும்… நல்லா ஞாபகப் படுத்திப் பாருங்க.. இதோ என் ஞாபகத்துக்கு வந்த பதில் கேள்விகள்:

  1. ஆமா… வக்கனையா இங்கே வந்து கேக்கறியெ, யாருய்யா நீ?
  2. இல்லெ, தெரியாமத்தான் கேக்கிறேன், இதெல்லாம் உனக்குத் தேவையா? எதுக்கு இப்படி எல்லாம் கேட்டு எங்க உயிரெ வாங்குறெ?
  3. நீ கேக்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றதுக்கா இந்தக் கவர்மெண்டு சம்பளம் குடுத்து என்னெயெ வேலைக்கு வச்சிருக்கு…?
  4. பதில் சொல்ல முடியாது. உன்னாலெ என்ன முடியுமோ செஞ்சிக்க.

இப்படித்தான் பெரும்பாலான இடங்களில் பதில் கெடைக்கும். ஒருவேளை இப்படிச் சொல்லிட்டு, நாக்கெப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டேன் என்று அவர்களும் சந்தோஷப் பட்டிருப்பாங்களோ?

எது எப்படி இருந்தாலும் நாம் செய்யும் உரையாடல்கள் ஏதோ ஒரு வகையில் கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுவாக இருக்க வேண்டும். அது பொய்யாகக் கூட இருக்கலாம். உதாரணமாய் ஒரு ஆஸ்பத்திருக்கே போறீங்க. நோயாளிக்கு நம்பிக்கை தரும் விதமா நாலு வார்த்தை சொல்லாட்டி, நீங்க அங்கே போயும் என்ன பிரயோஜனம்? அய்யய்ய இங்கே ஏன் அட்மிட் ஆனீங்க. பத்துக்கு ஒன்பது பேர் பொழெக்க மாட்டாகளே? இப்படிச் சொன்னா நோயாளி என்னத்துக்கு ஆவார்? (ஒரு வேளை போறதே அந்த நோயாளியெ மேலே அனுப்புறதுக்கா இருக்குமோ?)

கம்பர் உதயமானார்.. என்ன ஆச்சி? என்னெக் கழட்டி விட்ட மாதிரி தெரியுதே?

அதெல்லாம் இல்லெ சுவாமி. மோடி சர்க்காரில் கொஞ்சம் வேலைப் பளு அதிகம் அதான்…. சரி….. உங்க கிட்டெ ஏதும் சங்கதி இருக்கா?

அடெப் பாமரனே… நீ யார்? இப்படி யாராவது கேட்டா, நீ ரெண்டு நிமிஷத்திலெ சொல்லிடுவே. ஆனா அதுலெ யாருக்கும் ஒரு புண்ணியமும் இருக்காது. சொல்ற பதில் கேக்கிற ஆளுக்கு நம்பிக்கை தரணும். அனுமன் சீதைகிட்டெ விசிட்டிங்கார்ட் கொடுக்காமெ அறிமுகம் செஞ்ச இடம் படிச்சிப் பாரு. உனக்கே புரியும்.

கம்பர் டிப்ஸ் கொடுத்துட்டு மறைஞ்சிட்டார். நானும் வழக்கம் போல் தேடிப் பாத்தேன்.. அடெ..ஆமா… சீதையம்மா விரக்தியின் உச்சியில் உயிரை மாய்த்துக் கொள்ள அசோக வனத்தில் தயாராகும் இடம். அனுமன் முன் சென்று காட்சி தொடர்கிறது. சோகம் ஒரு பக்கம். பயம் மறுபக்கம். ஒரு வேளை இராவணனே குரங்கு வடிவில் வந்திருப்பானோ? சந்தேகமும் சேர்ந்து குழப்பும் இடம். சீதை கேட்ட கேள்வி தான் இந்தப் பதிவின் தலைப்பான ”நீ யார்?”

Hanuman meet sita

இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் என்னெய மாதிரி அல்பமான ஆட்களுக்கு கெடெச்சா என்னோட சிவி பயோடேட்டா ரெஸுமி இப்படி என்னென்ன பேர்லே என்னவெல்லாம் தரமுடியுமோ எல்லாம் தந்திருப்பேன். இதனாலெ என் விபரம் கேட்டவர்களுக்குத் தெரியும். அவ்வளவு தான். ஆனால் அனுமன் நிலை முற்றிலும் வேறு. சீதையின் முகத்தில் இருக்கும் கவலை ரேகையினை களைய வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ஏற்கனவே எல் கே ஜி பரீட்சை எழுதும் போதே டாக்டரேட் வாங்கியது போல் சொல்லின் செல்வன் பட்டம் வேறு வாங்கியாச்சி. சாதாரணமா பதில் சொல்லிட முடியுமா என்ன?

அனுமன் மூலமா கம்பர் சீதையின் மனக் குழப்பத்தை தீர்க்க உதவுகின்றார்.

தாயே, இராமபிரான் உங்களைப் பிரிந்த பின்னர் ஒரு தோஸ்த் புடிச்சார். சூரியனோட புள்ளெ. குரங்குக் கூட்டத்துக் கெல்லாம் தலைவன். குற்றமே இல்லாதவன். பேரு சுக்ரீவன். (நீ யாருன்னு கேட்டா உன்னோட ஆர்கனைசேஸன் பத்திச் சொல்றியேன்னு கோபம் வரலை சீதையம்மாவுக்கு. குற்றம் சில செய்திருந்தாலும் சுக்ரீவனைப் போட்டுக் குடுக்கலையே அனுமன்; நோட் பண்ணுங்கப்பா… நோட் பண்ணுங்கப்பா..)

தொடர்கிறார் அனுமன்: அந்த சுக்ரீவனுக்கு ஒரு வலிமையான அண்ணா வாலி. தன்னோட வாலில் இராவணனை கட்டி சுத்தி சுத்தி அடிச்சவர். (நிச்சயம் சீதை முகத்தில் சந்தோஷம் வந்திருக்க வேண்டும்) தேவர்கள் பாற்கடலைக் கடையும் போது லஞ்ச் பிரேக்கில் இந்த ஒத்தெ வாலி எல்லா வேலையும் பாத்தாரு. அம்புட்டு வலிமை. (வாவ்… மனதிற்குள் சீதை நினைத்திருக்க வேண்டும்)

அன்னையே, அம்புட்டு வலிமையான வாலியை உங்கள் அரசன் ஒரே அம்பில் போட்டுத் தள்ளிட்டார். (கவனிக்கவும்… இங்கேயும் மறெஞ்சி அம்பு விட்ட சங்கதி மிஸ்ஸிங். எதெ எங்கே எப்படி சொல்லனும்… கத்துகிடுங்க மக்களே) வாலியெத் தூக்கிட்டு, சுக்ரீவனை அரசனாக்கினார். அந்த அவைச்சரவையில் ஒருவன் நான். வாயு புத்திரன். என் பெயர் அனுமன்.

எப்படி இருக்கு அறிமுகம்? தான் யார் என்ற செய்தி சீதைக்கு தெரிவிப்பதை விட சீதையின் கலக்கத்தை முற்றிலுமாய் போக்க முழு முயற்சி எடுக்கும் கம்பரின் சொல்வித்தை பாத்தீங்களா?

முணு பாட்டா இருக்கும் கம்பரின் கவியில் ஒரு பாடல் இதோ

அன்னவன் தன்னைஉம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி
பின்னவர்க்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான் எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின்
நல் நெடுங் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன்.

இனி மேல் ஆறுதல் சொல்ல நினைக்கும் சம்யங்களில் ஆயிரம் முறை கம்பனை நினையுங்கள்.. கொஞ்சம் இருங்க… ஒருத்தருக்கு ஆறுதல் சொல்லிட்டு வாரேன்…