சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

சட்டை செய்யாதவர்கள்


சட்டை செய்யாதவர்கள்…

ஆடையின்றிப் பிறந்தோம்… ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கேள்வி கேட்கும் ஒர் அற்புதமான பழைய பாடல் கேட்டிருப்பீங்க. ஆடைக்கும் ஆசைக்கும் அப்படி என்ன சம்பந்தம்? ஆசையினைத் துறக்க அறிவுரை சொன்னவர்கள், முதலில் ஆடையைத் தான் துறக்கிறார்கள். (ஆனால் சினிமாவில் வரும் நாயகிகள் ஆடையினைத் துறந்து, நம் ரசிகர்களின் ஆசையினைத் திறந்து விடுகிறார்கள் என்பது தனிக்கதை)

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்கிறார்கள். ஆதிகாலத்தில் நாமெல்லாம் கூட ஆடையின்றித்தான் இருந்தோம். நாகரீகம் என்று சொல்லி ஆடையில் ஆளை வகைக்படுத்தும் கலையும் ஆகரீகம் என்ற பெயரில் வளர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. அந்தமான் தீவுகளில் இன்னும் சில ஆதிவாசிகள் முழுநிர்வாணமாகவும், அரை நிர்வாணத்திலும் வாழத்தான் செய்கிறார்கள். ஆனால் காலில் சாக்ஸ், முழு பேண்ட், முழுக்கை சட்டை என்று திரியும் நவநாகரீக (என்று சொல்லிக் கொண்டு, 5 வயது சிறுமிகளை சில்மிஷம் செய்யும்) மனிதர்களை மட்டும் கொசு எப்படி தேடிக் கடிக்கிறது? ஆதிவாசிகளை கடிப்பதில்லையே? கடித்தாலும் மலேரியா போன்ற நோய்கள் அவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லையே? அப்பொ ஆடை வெறும் சுமை தானா?

கோட்டும் சூட்டும் மாட்டிக் கொண்டு வாழ்ந்த மோஹன்தாஸின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் அவரை ஆடையைக் குறைத்து மஹாத்மா ஆக்கியது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது மதுரை என்றும் சொல்கிறார்கள். ஆடை தயாரித்து வாழும் நெசவாளர்களும், விவசாயிகளும் மேலாடையில்லாமல் அமர்ந்திருக்க, அங்கே தான் ஆடைகுறைப்பு முடிவு எடுத்தாராம். காந்திப் பொட்டல் (அப்பொ பொட்டல் காடாய் இருந்த இன்றைய மென்யின் ரோட் இருக்கும்) அந்த இடத்தில் ஒரு சின்ன பொம்மை வடிவில் (வடநாட்டு சாமி மாதிரி) காந்தி சிலையும் வைத்திருக்கிறார்கள். காந்திய்ன் கொள்கைகளை மற்றவர்கள் மதிக்கிறார்களோ இல்லையோ, இன்றைய இளைஞிகள் தான் சரிவர ஆடைக் குறைப்பில் பின்பற்றுவதை மேத்தா கவிதை குத்தி காட்டி இருப்பதை படித்திருப்பீர்கள்.

சமீபத்திய பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு காரணம் என்று சொல்லியவர்களை பெண்கள் அணி செமெ டோஸ் விடுகிறது. வெளிநாடுகளில் உடைகள் குறைந்தாலும், இல்லாவிட்டாலும் கூட பெரிதாய் பாதிப்பதில்லை. இங்கேயோ… மேலாடை கொஞ்சம் விலகினாலும் ஹார்மோன்கள் கலகம் செய்யுது. (ஆமா.. அந்த ஹார்மோன்கள் அங்கே மட்டும் ஏன் வேலை செய்வதில்லை??). முன்பெல்லாம் அந்தமான் வரும் வெளி நாட்டுப் பயனிகள் ஆடையில் அவ்வளவு கவனம் இல்லாது தான் இருப்பர். சமீப காலமாய் நம்மைக் கண்டதும், துண்டு போட்டு அங்கங்களை மூடும் தமிழ் கலாச்சாரத்துக்கு வந்து விட்டார்கள். (ம்… அவனவன் எடுக்கிற முடிவெல்லாம் நமக்குச் சாதகமவே அமையுது)

கோட் சூட்டு போடுவதில் ஒரு பெரிய்ய்ய கௌரவமே இருப்பதாய் பலர் யோசிக்கிறார்கள். அது வெள்ளையர்கள் ஆண்ட போது, அங்கிருந்து இந்தியாவிற்க்கும் இறகுமதி ஆன வெட்டிப் பந்தா அது. சுவாமி விவேகாநதரை பார்த்து ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்டாராம். “கொஞ்சம் நாகரீகமாய் உடை உடுத்தக் கூடாதா?” என்று. அதுக்கு அவர் சொன்ன பதில், “உங்கள் நாட்டு நாகரீகம் உடையில் இருக்கலாம். ஆனால் இந்திய நாகரீகம், நடத்தையில் இருக்கிறது”. என்றாராம். (ஊரெல்லாம் டாஸ்மாக் கடை திறது வைத்துவிட்டு, இன்னும் இந்த நடை நடத்தை என்றெல்லாம் சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான உடை நமது இந்திய நாட்டில் தான். ஒரு நாடு… ஒரு உடை… என்றெல்லாம் கிடையாது இங்கே. (நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் கைலி கட்ட அனுமதி கிடையாது. அது ஒரு மதத்தினர் மட்டும், கட்டுவதாய் இருந்தது. வேட்டியை விட சைக்கிள் ஓட்டுவதில் கைலி தான் ரொம்பவும் சௌகரியம் என்பதால் அனுமதி கிடைத்தது). வேலக்குப் போகும் பெண்களுக்கு சேலை ரொம்ப அசௌகரியம். அப்படி சேலையில் வரும் அம்மணிகளுக்கு, வேலையினை விட சேலையின் மீது தான் கவனம் அதிகம் இருக்குமோ!!

உச்சி வெயில் மண்டெயெப் பிளந்து, வேத்து விறுவிறுத்துப் போகும், இந்த இந்திய சூழலில் டை கட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு டை கட்டத் தெரியாது என்பது அந்தமானில் எல்லாருக்கும் தெரியும். ஒரு Engineers Day ல் வேடிக்கை விளையாட்டு என்று ஆட்களை மேடைக்குப் கூப்பிட, நானும் முந்திரிக் கொட்டையா மேடைக்குப் போயிட்டேன். அப்புறம் தான் தெரியுது. யாரு டை சீக்கிரம், அதுவும் பெர்பெக்ட்டா கட்றாங்களோ, அவங்க தான் வின்னர் என்று. (ஒருவர் ”எத்தனை நாட்?” என்று கேள்வி கேட்ட பிறகு தான், அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிந்தது). அதை வீடியோ எடுத்து லோக்கல் கேபிள் டிவீயும் அடிக்கடி என் மாணத்தை வாங்குது.

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம், என்று கவிஞர் கற்பனை செய்கிறார். கவிஞர்கள் கற்பனையில் கூட, மேலாடை போட்டுத்தான் பாத்திருக்கிறார்கள். மேலாடை இல்லாத கேரளா பக்கமும், சல்வார்களும் சங்கடமாய்த் தான் இருக்குது. (ஆத்தாளுக்கும் தாவணி போட்டும் அழகு பாத்தது சினிமா உலகம்)

கம்பனடிப்பொடி என்று இப்போதைக்கு அழைக்கப்படும், சா கணேசன் அவர்கள் சுதந்திரப் போராளி என்று பலருக்குத் தெரியாது. அவரை ஒரு ஆங்கிலேயர் சுட வந்தாராம். ”எங்கே சுடு பாக்கலாம்” என்று சட்டைடையைக் கழட்டிக் காண்பித்தாராம். அப்போது கழட்டினவர் தான். பின்னர் சட்டையப் பத்தின சட்டை செய்யாமல், செமெ ஜாலியா, உலகமெங்கும் கம்பன் கழகம் அமையப் பாடுபட்டவர் தான் அந்த சட்டை அணியாத தமிழர்.

ஆனால் சமீப காலமா சின்னத்திரை சட்டை கலட்டும் வேலையினைச் செய்து வருவதைப் பாக்க முடியுது. (ஆமா… பெண்கள்ளின் உடையை இதுக்கு மேல் குறைக்க முடியாது.. என்று ஆண்கள் பக்கம் வந்திருப்பாங்களோ!!). சந்தோஷத்துக்கும் ஆடைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?? அப்படித்தான் தெரியுது. சின்னத்திரையில் வரும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளில் கிளைமாக்ஸில் சந்தோஷத்தின் உச்சிக்கு போய் சட்டையைக் கழட்டும் (கன்றாவிக்) காட்சிகள் நடப்பதைப் பாத்திருக்கலாம்.

ஜி மெயிலில் கம்பர் ஒரு மெயில் அனுப்பியிருப்பதாய் என் மொபைலில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. ஓடிப் போய் தொறந்து பாத்தா… இந்த ஆடை கழட்டி எறிந்து சந்தோஷத்தை கொண்டாடுவதை தனது ராமாயணத்தில் சொல்லி இருப்பதாய் தெரிவித்திருந்தார். அதெ உங்களுக்கும் சொல்லுங்க என்கிறார். சொல்லிட்டாப் போச்சி…

இராம அவதாரம் நிறைவேறிய நேரம். அதான், இராவணன் இறந்து போய் கீழே கிடக்கிறான். வானுலக தெய்வங்களுக்கு ரொம்பவே குஷி ஆயிடுச்சாம். அப்பொ மூனு மணி நேரம் பாக்கும் கிளைமாக்ஸே இவ்வளவு திரில் இருக்கிறச்சே, ஆண்டாண்டு காலமாய் எதிர் பாத்த விஷயம் குஷியா இருக்காதா என்ன? வானத்திலிருந்து பூமிக்கே நேரா குதிச்சாங்களாம். அது மட்டுமா?? காலால் எட்டி உதைத்தனர் பூமியை. திரிகூட மலையே ரெண்டாய் ஆயிடுச்சாம். அப்புறம் நம்ம சங்கதி…?? ம்… அதான்.., தங்கள் மேலாடையையும் உடையையும் கலட்டி எறிந்து ஆடிப் பாடினார்களாம்.

குதித்தனர் பாரிடை குன்று கூறுறமிதித்தனர் வடகமும் தூசும் வீசினார்துதித்தனர் பாடினர் ஆடித் துள்ளினார்மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்.

சாமிகளே செஞ்சது… இந்த ஆசாமிகள் செய்வது தப்பா?? நன்றி கம்பரே..உங்கள் மெயிலுக்கு.