எமோஷனல் இப்போது நமோஷனல்…


Namotional

வரலாறு என்பது பலருக்குக் கசக்கும். சிலருக்கே அது இனிக்கும். இப்படித்தான் அந்தமானில் ஒரு மூத்த தமிழாசிரியரும் கல்வி அதிகாரியுமான ஒருவர் சொன்னார். ’இந்த ஆண்டில் இந்த அரசர் பிறந்தார். வளர்ந்தார். சண்டையெப் போட்டார்.. மண்டையைப் போட்டார். அதன் பின்னர் இன்னொருவர் வந்தார் என்பதை வெறும் தகவல் தொகுப்பாய் வரும் செய்திகள் கொண்ட வரலாறுகள் எனக்கும் அறவே (ஆமா… இதுக்கும் என்ன பொருள்?) பிடிப்பதே இல்லை’ என்றார்.

நான் அவரிடம் ஒரு சின்ன கேள்வி கேட்டேன். ”நீங்கள் அந்தமானுக்கு எப்போது வந்தீர்கள்?” சரியான தேதியுடன் தொடர் செய்திகள் பலவும் சேர்ந்து சொல்ல ஆரம்பித்தார் படு சுவாரஸ்யமாக. ”உங்கள் வரலாறு இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லும் போது, மன்னர்கள் வரலாறு மட்டும் கசக்கிறதா?” என்றேன்.

நான் 1986 மே மாதம் அந்தமானில் வந்தேன். இது சாதரணமாய் ஒரு, போரடிக்கும் வரலாற்று நிகழ்வு. ஆனால் அதனுடன் தொடர்பு கொண்ட பல செய்திகள் சொன்னால் மெருகு கூடும். அப்போது மழை செமெயாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. (அந்தமானில் பருவ மழை மே மாதத்தில் தொடங்கும் என்பது செய்தி) அப்போது ஆட்டோவே அந்தமானில் இல்லை. (டாக்சிகள் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்தன அப்போது). ஒரு பைக் கூட அப்போது பார்க்க முடியலை. (பஜாஜ் ஸ்கூட்டர் தான் அந்தமான் ரோடுக்கு உருவானது என்று அப்போது நம்பினர். 1998 வாக்கில் தான் ஆட்டோவும், பைக்கும் வர ஆரம்பித்து இப்போது ஸ்கூட்டரை வைத்திருப்பவரை ஒரு மாதிரியா பார்க்கும் அளவு வரலாறு மாற்றிவிட்டது).

ஆக, வரலாற்றில் பிழை இல்லை. அதனைச் சொல்லும் வகையில் தான் பிழை நிகழ்ந்துள்ளது என்று சொல்லலாமா? ஆனால் வரலாற்றுப் பொக்கிஷங்களாய் வந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவே நின்றன ஒரு காலத்தில். பொன்னியின் செல்வன் தொடங்கி, கடல் புறாவில் பயணித்தவர்கள் வரலாற்றையும் சேர்த்தே பின்னிப் பினைந்து ரசித்துப் படித்தவர்கள் தானே. வரலாறு உங்களுக்கும் இனிக்க வேண்டுமா? மதன் எழுதிய “வந்தார்கள்..வென்றார்கள்” படிங்க. ஆடியோ புத்தகமாவும் வந்திருக்கு. நீண்ட பயணங்களில் ஜாலியா கேட்டுக் கொண்டே போகலாம்.

வரலாற்றை நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ, இன்றைக்கு சாதாரண நிகழ்வுகள் நாளை சுவாரஸ்யமான் (பிற்கால மக்களும், உங்களைப் போலவே வெறுக்கும்) வரலாறாக மாறும் என்பதே வரலாறு. சிலர் வரலாற்றைப் படிக்கின்றோம். சிலர், அதில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வரலாற்று நாயகன்… இல்லை இல்லை… நாயகர் நரேந்திர மோடி. அப்படி என்ன தான் செய்து விட்டார் அந்தக் குஜராத்தில்? இந்தக் கேள்விக்கு பதில் தேடவும், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்திருக்கும் என் மூதாதையர்கள் வாழ்ந்த வரலாற்று இடங்களையும் என் வாரிசுகளுக்கு காட்டவும் ஒரு டிரிப் அடித்தேன்.

குஜராத் தலைநகரில் தங்கி இருந்த போது, வழக்கம் போல் அந்த ஊர் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தேன். (இப்படி ஜாலியா டூர் வந்த இடத்திலும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? என்று மனைவி வழக்கமாய் கேட்டார்.) அன்றைய செய்தியில் ஒரு சுவையான தகவல் இருந்தது. ஒரு சூட்கேஸ் தொலைந்து போன சந்தோஷத்தில் இருந்தவர், அளித்த மகிழ்வான பேட்டியின் செய்தி அது. பொட்டி காணாமப் போனா, சந்தோஷமா பேட்டி குடுப்பாகளா என்ன? இருந்ததே…. விஷயம் இது தான்…

பெட்டி தொலெஞ்சி போனதெப் பத்தி அந்த குஜராத்திக்காரர் அவ்வளவு கவலைப் படவில்லையாம். அதில் இருந்த ஏடிஎம் கார்டு, கிரிடிட் கார்டுகள், லைசன்ஸ் இப்படி பல கார்டுகளும் அதே பொட்டியில் இருந்திருக்கின்றன. என்ன தான் இ கவர்னன்ஸ் என்று சொன்னாலும் கூட, ஒட்டுக்கா எல்லா கார்டும் போனதில் கதி கலங்கி இருந்தார் அவர். ஓரிரு நாட்களில் ஒரு கவர் தபாலில் வந்திருக்கிறது. பொட்டியைத் திருடின நபர், பொறுப்பாய் இதெல்லாம் அனுப்பி உதவி செய்துள்ளார் என்பது தான், நான் படித்த செய்தி. ஆக, குஜராத்தில் திருட்டுப் பசங்களே இவ்வளவு யோக்கியமா இருக்கிறச்சே, நல்லவங்களைப் பத்திச் சொல்லவும் வேண்டுமோ??

குஜராத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாய் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. மகளிர் அதுவும் இஸ்லாமிய மாதுக்கள் கூட மது இல்லாத வீதிகளில் இரவு நேரங்களில் உலாவுவதைக் காண முடிந்தது. சாலைகள் எங்கும் சோலார் லைட் வசதிகள். (அதெப்படி குஜராத்தில் மட்டும் இந்த சோலார் விளக்குகள் ஒழுங்கா எரியுது?) ரோட்டில் சுத்தும் போது தொடர்ந்து வரும் காற்றாலைகள் எங்கு பாத்தாலும் இருக்கிறது. திடீரென்று சாலை ஓரங்களில் அதிக மரங்கள் தென்பட ஆரம்பித்தாலே, அப்புறம் ஏதோ தொழிற்சாலை வருவதை அறிவிக்கும்.

குஜராத் புராணத்தை விட்டுவிட்டு, லேசா நம்ம மீடியாக்கள் செய்த செய்து கொண்டிருக்கும் செய்யும் மோடி புராணத்துக்கு (மறுபடியுமா?) வருவோம். மோடி நாய் பற்றி பேசினாலும் சரி, டீ பற்றிப் பேசினாலும் சரி, அது தான் தலைப்புச் செய்திகள், எல்லா டீவிகளிலும். (ஆதித்யா போன்ற டீவிகள் நீங்கலாக). இதில் ஹைலைட்டான செய்தி, மோடி அவர்கள் அந்த எமோஷன் ஆன நிமிடங்கள். ஆனால் நம் மீடியாக்கள், நமோஷனல் என்று அலங்கரித்து ஆங்கிலத்துக்கே புது வார்த்தை வார்த்துத் தந்து விட்டார்கள்.

இப்படித்தான், தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றி நம்ம ஆம் ஆத்மி கெஜ்ரிவால் முன்பு ஒரு புத்தகம் எழுதினார் ஹிந்தியில். தகவல் பெறும் உரிமை சட்டம் என்பதை ஹிந்தியில் ஸூசனா கா அதிகார் என்பர். (இதில், இந்தக் கா போடவா? கீ போடவா? என்பது ஹிந்தியில் நமக்குப் பெரும் தலைவலி) ஆனால் நூலுக்கு அவர் ”ஸூசனாதிகார்” என்று பெயர் வைத்து புது வார்த்தையினை ஹிந்திக்கு வழங்கினார்.

அப்படியே சேனல் மாத்தி நம்ம “கம்பர்” டீவிக்கு மாற்றிப் பாக்கலாம். அங்கும் இதே மாதிரி புதுப்புது வார்த்தைகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் தமிழ் வயலும் வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. கம்பன் வயலில் செம அறுவடை நடக்கிறது. எம்பி, உம்பி, நும்பி இப்படிப் பல. என் தம்பி, உன் தம்பி, நுன் தம்பி இப்படிப் பல அரத்தங்கள் வரும் படி புதுசு புதுசா பாட்டு வைக்கிறார். என்ன நான் கதை உட்ற மாதிரி தெரியுதா? ஒரு பாட்டு சொன்னா நம்புவீங்க தானே?

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி; நீ
தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்

ஆழமான கங்கையில் படகோட்டியான சிம்பிள் குகனிடம்,” என் தம்பி உன் தம்பி; நீ நன்பெண்டா; சீதை உனக்கு மச்சினி, மச்சி…” இப்படி தன் மச்சான் சொன்னதை நினைத்து சீதை கலங்கிய இடம் தான் இந்தப் பாட்டின் இடம் பொருள் விளக்கம். இந்தப் பாட்டை வைத்து பலர் பலவிதமான விளக்கம் சொல்லிவிட்ட காரணத்தால் நான் வெறும் எம்பி – என் தம்பி எனபதை மட்டும் சொல்லி கலண்டுக்கிறேன். விரிவான தகவல்களுக்கு நாஞ்சில் நாடன் எழுதிய “அம்பறாத் தூணி” படியுங்கள்.

வரட்டுமா??

கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.