அழகா பல்லழகா….



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -20]

கொரோணா வந்து எல்லாரையும் வீட்டோடு முடிக்கிப் போட்டது போல் என் விமானப் பயணங்களும் முடங்கிப் போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தில்லி வரை சென்று திரும்ப வாய்ப்பு கிடைத்தது. பயணம் முடிந்து, திரும்பியவுடன் சொன்னேன்,”மூக்கையும் வாயையும் மூடியதால், எல்லாரும் அழகானவர்களாத் தெரியுது…” என்று. துணைவியார் கோபமாய்ச் சொன்னார், “அவனவன் மூச்சுவிடச் சிரமத்திலெ இருக்கும் போது, சைட் அடிச்சிட்டு வாரீக…”

முகத்துக்கு அழகு தருவது பல்…. ஆனா அது எப்படி இருக்கு என்பதே இந்த மாஸ்க்கில் மறைந்துவிடுவது நல்லது தானே? கொரோணா வருவதற்கு முன்பே ஒரு முறை, ஒரு பல் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்கும் மாஸ்க் போட்ட மான் ஒன்று உள்ளே அழைத்துச் சென்றது. என்னை கை கால் எல்லாம் அந்த டெண்டல் சேரில் கட்டிப்போட்டு மாஸ்க் எடுத்தது தான் தாமதம் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அந்தமானின் பற்கள் அப்படி. ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மாஸ்க் எடுக்காத இடமாப் பாத்து, பல் வைத்தியம் செய்து முடித்தேன். (ஆமா… மனைவியும் படிக்கும் பதிவுகளில், ‘பாக்க லட்சணமான இடத்தில்’ எனச் சொல்ல முடியுமா என்ன…?)

சரி… நாம தான் பல்லைப் பாத்து கலாட்டா செய்றோம்ணா, நம்ம திருஞானசம்பந்தர் தன்னோட தேவாரத்தில் பல் வச்சும் வம்புக்கு இழுக்கிறார். நாமெல்லாம் மின்னலடிக்கும் (சூப்பர் ரின்) வெண்மையான உடை, இதைத்தானே பாத்திருப்போம். ஆனா சிவனடியார்களுக்கு அசுரர்களின் பல்லு மின்னல் மாதிரி தெரிஞ்சதாம்.

முழுக்க தேவார அர்த்தமும் பாத்துட்டு அப்புறம் பாட்டும் பாக்கலாம், வாங்க… கூடவே…; மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

ஆனா பல்லு வச்சி நிறைய பழமொழிகள் இருந்தாலும், பல்லுப்போனா சொல்லுப் போச்சு என்பது மட்டும் செமெ பாப்புலர். ஆனா, பல்லுப் போன பலர் ஸ்ம்யூலில் பாடிக் கலக்குவது தான் வேடிக்கை. கிராமப்புரங்களில் ஒரு சொலவடை (அது என்ன வடை என்று மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்) பச்சரிசிப் பல்லழகி... பவழ மொட்டுச் சொல்லழகி...’,மொச்சக் கொட்டப் பல்லழகி… முத்து முத்துச் சொல்லழகி…’ – இப்படி ஒரு கிராமியப் பாடல் வரிகள் வருது.

கிராமப்புறம் வரை வந்தாச்சி…அப்படியே தி. ஜானகிராமன் கதைகளில் வரும் அந்தப் பல்லுப்பாட்டி, சீ..சீ… கொள்ளுப்பாட்டி… இல்லெ இல்லே, பல்லு கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் பாட்டிகளைப் பாப்போம். (வீட்லெ ஒரு மாதிரியாப் பாக்குறாய்ங்க…. பல்லு இல்லாத பாட்டிகளையுமா சைட் அடிப்பீங்க… என்று கேட்காமல் கேட்பது தெரியுது)

தி.ஜானகிராமன் எழுதிய பாயசம் சிறுகதை. அதில் மணமக்களை ஊர்
விதவைகள் ஊஞ்சலில் வைத்துத் தள்ளும் காட்சி வரும். தி.ஜா.வின் பார்வை, அவரின் வரிகளில் இதோ:

‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ சூப்பரா இருக்கில்லெ… கற்பனை.. !இனி நீங்க செய்துகிடுங்க…விடு ஜுட்…

கார் நாற்பது (21) பாடலில் வேறெ லெவல். எதையாவது பாத்தா, காதலியின் ஒரு பாகத்துக்கு ஒப்பு சொல்லுவாக (அட உவமை எனச் சொன்னா, நீங்க ஓடிப் போயிட்டீக என்றால் என்ன செய்ய?) இங்கே என்ன நடக்குது பாருங்களேன் . அலங்கரிக்கப்பட்டத் தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகளப் பாக்குறாக. அது கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று, பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான். இது தாண்டா டாப்பு…

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.21

அப்படியே கம்பன் வீட்டாண்டெ போவோம்ணு பக்கத்தாலே போனா, அவரு தூரப்போ என கொரோணா (பாசிட்டிவ்) வந்த ஆள் மாதிரி விரட்டுகிறார். என்னான்னு கேட்டா, அவரும் ஒரு பல்லு வச்சிருக்கார். பொதுவா, ராக்கெட்டின் பின்னாடி தான் அதிகமா தீ ஜுவாலை கிளம்பும். ஆனா, நம்ம கம்பர் வச்சிருக்கும் ஆயுதத்தின் முன் பகுதியே அக்னியெக் கக்கிட்டுப் போவுதாம். அது என்ன ஆயுதம் எனஉத்துப்பாத்தா… அடெ.. பல்லு… (அட கொக்கமக்கா…பல்லு என்ன இம்புட்டு உக்கிரமான வெப்பனா என்ன?)

ஆமாம் இதெல்லாம் எப்ப நடக்குது எனக் கேக்கீகளா? அனுமனைப் பாம்பு வச்சிக் கட்டும் போது, அதெப் பாத்து அரக்கர்கள் அடிக்கும் கமெண்ட் இப்படியாம்… அது ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல் ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது. ஆதலால் விரைவுபடாது ஆலோசித்து நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்) செய்யுங்கள். (இந்நிலையில் இக்குரங்கு) அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று என்று சில அரக்கர்கள் சொல்வார்கள்.

’காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள்முகம்;
தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி , செய்யுமின்;
வேந்து உறல் பழுது’ என விளம்புவார், சிலர்.

அப்புறம் வேறு கொஞ்சம் பல்லு..சாரீ… வேலையெப் பாத்துட்டு அப்புறம்…. மீண்டும் வருவேன்…

கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)