இன்றைய சூழலில் அகநானூறு


[சிட்னி (ஆஸ்திரேலியா) சங்கத்தமிழ் மாநாடு 2014 மலரில் வெளியான எனது கட்டுரை இது… சும்மா எத்தனை நாள் தான் கலாய்ச்சியே எழுதுவீங்க? ஏதாவது நல்ல தமிழிலும் எழுதப்படாதா? என்று என் மீது (ரொம்ப அதிகமாகவே) நம்பிக்கை வைத்து கேட்ட ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்களுக்கு நன்றி…நானும் நல்ல தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன்…இதோ உங்கள் பார்வைக்கு…]

Capture 3

சங்கத் தமிழ் என்ற தேடலுக்குள் செல்லாமல், சமீப காலத்திய காப்பியமான கம்பராமாயணத்தை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கும் வேலையினை செய்து கொண்டிருந்தேன். சிட்னியின் சங்கத்தமிழ் மாநாட்டை ஒட்டி, சங்கத் தமிழின் பக்கம் ஒரு கழுகுப் பார்வை பார்த்திட வாய்ப்பு வாய்த்தது. அகநானூறு பாடல்களை வைத்து கட்டுரை வடிக்க எண்ணம். (அந்தமான் தீவில், கைக்கு எட்டிய நூல் என்ற காரணம் தவிர வேறு ஏதும் யாமறியேன்). காலத்தை மிஞ்சி நிற்கும் கவிகளின் தொகுப்பாம், சங்கத்தமிழ் வகைப்படுத்தித் தந்த அகநானுறுப் பாடலகளை இன்றைய சூழலுக்கும் பொருத்திப் பார்க்கும் முயல்வு தான் இக்கட்டுரை. என்றோ, யாரோ எழுதி வைத்த பாடல்கள் இன்றைய நவீன கணிய உலகில் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி, இயற்கையாகவே எழும். அகநானூறு பாடல்களின் உள்ளே எங்கும் புகாமல், அவைகள் தொகுக்கப் பெற்ற முறையினைப் பார்க்கும் போதே, இன்றைய நவீன யுகத்திற்கு தொடர்பு உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

images 1

அறிவியல் வளர்ச்சியினைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தாவரங்கள், விலங்கினங்கள், கணிமங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதின் மூலம் அதன் தொடர்பினையும் தெரிந்து கொள்ள ஏதுவாய் தொகுப்பு செய்யும் பணி நடைபெறும். இப்படி முயன்றதின் மூலமாகத்தான் அறிவியல் நமக்கு அதிகமாய், பெயரிடல் முறையும் பட்டியலிடும் கலையுமாய் தந்துள்ளது இவ்வுலகிற்கு. இத்தகைய தொகுப்பின் மூலமாய்த்தான் விலங்குகலுக்கு பெயரிடுவதும், தாவரங்களுக்கு அறிவியல் பெயர் சூட்டலும் நடைபெறுகின்றது. வேதியியல் பயன்பாட்டில் இருக்கும் கணிம அட்டவணையும் இந்த தொகுக்கும் அறிவியலில் அடங்கும். இவை எல்லாம் இக்கால அறிவியல் முன்னேற்றம் என்று நினைப்போம். இதற்க்கு சற்றும் முறைவான தரம் என்று சொல்ல இயலாதவாறு அகநானூறு பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன சங்க காலத்திலேயே என்பது வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

பெயருக்கு ஏற்றபடியே, அகம் தொடர்பாய் மொத்தம் நானூறு பாடல்கள்.. (நானூறு பாடல்களின் தொகுப்பு என்பதாலேயே அதன் பெயரும் இப்படி) அந்த பாடல்கள் எல்லாமுமே ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன. பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்ட சேதி தான் நாம் அனைவரும் அறிந்த்து தானே? எல்லாப் பாடல்களிலும் ஏதோ ஒரு நிலம் நிச்சயமாய் சம்பந்தப் பட்டு தானே இருக்கும்? அந்த்த் தொடர்பினை வைத்து பாடல்களின் தொகுப்பு நிகழ்ந்துள்ளது. கணிய அறிவியலில் உயிர்நாடியான ஒழுகுபடம் (ஃப்ளோ சார்ட்) மூலம் இதனை நாம் உற்று நோக்கலாம்.

Capture 2

சங்ககாலத் தமிழனின் அறிவியல் பூர்வமான சிந்தனை வடிவாக்கத்தில் அகநானூறுப் பா பாடல்கள் தொகுத்துள்ளனர் என்கின்ற உண்மையினை இந்தச் சிட்னி சங்கத்தமிழ் மாநாட்டில் பதிவு செய்திட விழைகின்றேன். இதோ இதற்கு சான்று சொல்லும் சங்க காலத்துப் பாடல்:

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

anbu jeya

இனி சற்றே ஓரிரு பாடலை உள் நோக்கி, படித்து இன்புற அகத்தின் உள் செல்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் தீவுகளாம் அந்தமான் நெய்தல் நிலத்தினின்று பல வருடங்கள் வாழ்ந்து வரும் காரணத்தால் நெய்தல் நிலப் பாடல்கள் சில்வற்றை நோக்குங்கால், அன்றைய தமிழரின் அறிவியல் பார்வையும் உடன் தெரிய வந்தது. கடல் மட்டம் ஏறி இறங்கும் இயற்கை நியதியினை அன்றே தெரிந்து சொன்ன, அகப்பாடல் வரிகள் சொல்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையினை தோழி விவரிக்கும் போது,கடலின் இயற்கையான சூழலான அலைகளோ, ஏறி இறங்கும் ஓத மாற்றங்களோ (டைட்) இல்லாமல் இருந்தன என்பதை சேந்தன் கண்ணனார் “ எறிதிரை ஓதம் தரல் ஆனதே” என்று குறிப்பிடுகின்றார். [பாடல் எண் – 250; நெய்தல் நிலப்பாடல் என்று சொல்லவும் வேண்டுமோ?]

நக்கீரணார் பாடிய இன்னொரு பாடலின் மூலம் வடநாட்டவருடன் வியாபாரத் தொடர்புகள் இருந்த செய்தியும் தெரியவருகின்றது. அப்போதே பிடித்த மீனுக்கு பண்டமாற்றாய் கிடைத்த வெண்ணெய் என்ற செய்தியும் கூடவே வருகின்றது. அந்த நெல்லின் மாவினைத் தயிரிட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை தந்ததாய் தகவல் சொல்கின்றது. அப்படியே மணம் பொருந்திய சாந்து உண்டாக்கும் வித்தை சொல்ல வந்த நக்கீரணாரோ, வடநாட்டினரிடமிருந்து வாங்கிய வட்டக்கல்லிலே அரைத்த சேதியும் சொல்கின்றது.

“….வடவர் தந்த வான் கேழ் வட்டம்; குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய; வண்டிமிர் நற்சாந்து அணிகுவம்- திண்திமில்…” இப்படிச் செல்கின்றது அந்த அகநானூற்றுப் பாடல், அகநானூற்றுப் பாடல்கள் இன்றைய சூழலில் ஏற்றவையாக, அறிவியல் மற்றும் வரலாற்றுக் கோப்புகளின் பெட்டகமாய் விளங்குகின்றது என்பது தான் இக்கட்டுரை மூலம் சொல்லவந்த கருத்து.

உலக (முழுதும்) கால் பந்து…


Ball

உலகமே கால் பந்தாட்டம் பத்திப் பேசிட்டும், டீவியில் பாத்திட்டும் இருக்கிறச்செ.. நாம மட்டும் சும்மா காலாட்டிட்டுக் கெடந்தா நல்லாவா இருக்கும்? இதை எழுதுவதற்கு முன், மழைக்குக் கூட நான் இந்த ஃபுட்பால் விளையாடும் கிரவுண்டுக்குள் ஒதுங்கியதில்லை என்பதை சொல்லி விட்டே தொடர்கின்றேன்.. (அது சரி… மழை பேஞ்சா கிரவுண்ட்லெ எப்படி ஒதுங்க முடியும்? என்ற உங்க அறிவுபூர்வ கேள்வியை நான் பாராட்டுகிறேன்). அப்பொ எப்படி அதைப்பத்தி எழுத முடியும்னு கேக்கிறீங்களா? காதல் கவிதை எழுதுறவங்க எல்லாம் காதலித்தவர்களா என்ன? (ஆனா…. காதலித்தவர்கள் அனைவரும் கவிதை எழுதியிருப்பார்கள் என்பதை ஓரளவுக்கு நம்பலாம்). அப்பொ நானு…. ஹி..ஹி…

சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்திருந்தனர். வந்தவங்க ஏதாவது வில்லங்கத்தை வீட்டில் கிளப்பி விட்டுச் செல்வது தான், நம்ம ஆட்களோட தேசியக் குணம் ஆச்சே..!! அன்றும் அப்படித்தான் ஆச்சி. சும்மா தேமேன்னு கேம் ஆடிட்டு இருந்த என் பையனெப் புடிச்சி, படிச்சி என்ன ஆகப் போறதா உத்தேசம்? என்று கேட்டனர். மறக்காமல் என்னைப் பாத்து, உங்க நிறைவேறத ஆசை எல்லாம், உங்க பையன் மேல் திணிக்காதீர்கள் என்று அட்வைஸ் வேறு. என்னோட நிறைவேறத ஆசையெல்லாம், வெளியில் சொல்லுகின்ற மாதிரியாவா இருக்கு..? ஐயோ..ஐயோ…

யாரும் (இந்த யாரும் என்பதில் நானும் அடக்கம்) எதிர்பாக்காத மாதிரி பையன், சூப்பரா ஒரு பதில் சொன்னான். ஃபுட்பால் டீமுக்கு மேனேஜராகப் போகனும் என்று. அன்று வரை அவன் ஒரு நாளும் ஃபுட்பால் ஆடியே நான் பார்த்ததில்லை. எனக்கு மட்டும் தான் இப்படி என்றில்லை. சீட்டுக்கட்டை நானும் ஒரு முறை லாவகமாய் கலக்கி, பிரிச்சிப் போடும் போது, என அப்பாவும் இப்படித்தான் திகைத்துப் போனார். சமீபத்தில் அந்தமான் வந்த வழக்கறிஞர் ஜெயராஜனின் குடும்பத்திலும் இப்படித்தான் நிகழ்ந்தது. வீட்டிற்கு வந்த ஆரவக் கோளாறில் ஆங்கிலப் பாடல் ஒன்றை சுதி சுத்தமா பாட (நானும் அன்று தான் அந்த ஆங்கிலப் பாடலை முதன் முதலாய்க் கேட்டேன்) ஆரம்பித்தனர். தன் பிள்ளைகள் இவ்வளவு நன்றாய், அதுவும் ஆங்கிலப் பாடல் பாடுவார்கள் என்பதே அந்த வக்கீலுக்கும் அன்று தான் தெரியும் என்பதே அன்றைய ஹைலைட். [நீதி: உங்கள் பிள்ளைகளின் கூடுதல் திறமை பற்றி தெரிந்து கொள்ள ஆவலா? உடனே அந்தமானுக்கு வரவும். கூடவே எனது வீட்டிற்க்கும் தவறாது ஒரு விசிட் அடிக்கவும்]

மறுபடியும் கால் பந்து பக்கம் கால் வைப்போம். இந்த உலக கால் பந்து போட்டி ஆரம்பிச்சதிலிருந்து நம்ம முக்கால் வாசி தூக்கம் தொலெஞ்சி போச்சி… (வயசான காலத்திலெ கலைஞர் கூட பார்ப்பதாய் தகவல் தெரிய, நம்ம தூக்கத்துக்கும் வந்தது வெட்டு..) நாமளும் யூத்துன்னு சொல்லிக்க என்னென்ன தியாகம்ல்லாம் செய்ய வேண்டியிருக்கு? ஆரம்ப கால மேட்ச்களை பார்க்காமல் விட்டேன். ஆபீசில், தெருவில் அதைப் பற்றியே கேட்டுத் தொலைக்க…(அது ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்டு உயிரெ வாங்குகிறார்கள்?), நான் ஃபுட்பால் பாக்கிறதில்லை என்று உண்மை விளம்பியாய் சொல்லி வைத்தால், ஏதோ வித்தியாசமான ஜந்துவைப் பாக்கிற மாதிரி பாக்க ஆரம்பித்தனர். இதுக்கு பேசாமெ மேட்ச் பாத்தே தொலைக்கலாம் என்று பாக்க ஆரம்பித்துவிட்டேன்.

தலைபோடு தலையினை கோபத்தோடு முட்டி, போட்டி போட்டு ஆடிய சங்கதியினைக் கூட அழகாய் அமுல், தன் விளம்பரத்தில் பயன் படுத்திக் கொண்டிருந்தது பாக்க ரசிக்கும்படியும் இருந்தது. கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலபார் பகுதிகளில் கோலகலத் திருவிழா போல் நடக்குமாம்.. அந்த கால்பந்து மழையின் சாரலால் கொச்சியின் நகரங்களிலும் லேசாய் நனைய முடிந்தது. சின்னஞ்சிறு தீவுகளான இலட்சத்தீவுகளில் கூட ஜெர்மனிக்கும், அர்ஜெண்டைனாவிற்கும், பிரேஜில் அணிகளுக்கும் மிகப் பெரிய அளவிலான ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்து தங்கள் அபிமானத்தைக் காட்டி இருப்பதைப் பார்க்க முடிந்தது. [ஆனா, நம்ம பாலாபிஷேகம் நடத்தும் மதுரெ ஸ்டைல் யாராலும் மிஞ்ச முடியாது தான்].

வழக்கம் போல் ஆஜ்தக் ஹிந்தி சேனலும் தன் கேலியும் கிண்டலும் கலந்த கார்ட்டூன் படத்தை ”ஸோ சாரீரீரீ….” என்று சொல்லி கால் பந்தாட்டத்தையும் அரசியலையும் கலந்து நையாண்டி செய்துள்ளது. பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் ரெண்டு பக்கமாய் உண்டு இல்லை என்று கலாய்க்கிறது அந்தக் கலாட்டா. அதில் ஹைலைட் சமாச்சாரம், திக்விஜய் சிங்கை கோல்கீப்பராய் காட்டி, ஒட்டு மொத்த ஆட்டத்தையும் மோடி ஒருவரே ஆடுவது போலவும் காட்டியது தான். சந்தடி சாக்கில் அத்வானி & மு ம ஜோஷி ஆகியோரை ஓரம் கட்டுவதும் நாசூக்காய் காட்டியது நகைச்சுவையின் உச்சம்.

இந்த மாதிரி உச்சங்களை விட்டுத் தள்ளுங்க. பசங்களை நாம் கேள்வி கேட்டுத் தாளிக்கிறோமா? அதுக்கு பதிலா என்னோட பையனும் ஒரு நாள் அடம் பிடிச்சி என் ஆஃபீஸ் வந்து ஒரு நாள் நோட்டம் விட்டுப் போனான். நாம மட்டும் தான் பாத்ததை எழுதுவோமா என்ன? அவனும் பாத்ததை அப்படியே புட்டுப் புட்டு வைத்தான். [நல்ல வேளை எழுதி மானத்தை வாங்கலை]. இந்தப் பக்கம் டிரேயில் இருக்கும் ஃபைல்களை எடுத்து ஹிந்தியில் கைநாட்டு வைத்து அந்தப் பக்கம் போட்றீங்க.. அப்பப்பொ ஃபோன் கால் அட்டன் செய்றீங்க. மெயில் பாத்து பதில் போட்றீங்க. யாரையாவது கூப்பிட்டு ஏதோ சொல்றீங்க அல்லது கேக்கிறீங்க. ஃபேக்ஸ் வருவதை பாத்து ஏதோ கிறுக்கிறீங்க.. அப்பப்பொ சைட் விசிட்டுன்னு சுத்தக் கிளம்பிற்றீரீங்க. [அப்படிப்பாத்தா…. அடுத்தவன் பார்வையிலெ நாம பாக்கிற வேலை, ஒரு வேளை இவ்வளவு சிம்பிளாவா இருக்கு?]

நான் பதில் சொன்னேன். ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாய் இருப்பது என்பது, கால் பந்தாட்டத்தில் கோல்கீப்பராய் இருப்பது மாதிரி. இரண்டும் ஒரே மாதிரியான பொறுப்புகள் உள்ள பதவி. பத்து பேரின் ஒட்டு மொத்த தாக்குதல் எப்படி கோலியின் மீதே இருக்கோ, அப்படித்தான் மேலதிகாரியின் பணியும். எல்லா பந்தையும் எதிர் கொள்ள வேண்டும். எங்காவது கொஞ்சம் அசந்தால் எதிர் அணிக்கு சாதகமாய் அமைந்து விடும். பல பார்வையாளர்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும். பையன் தொடர்ந்தான். எதுக்கும் எதுக்கும் டாடி கம்பேர் செய்றீங்க? இனி அடுத்து கம்பராமாயணம் தானா? நான் உங்க ஆட்டத்துக்கு வரலை. ஃபுட்பால் ஹைலைட்ஸ் பாக்க கிளம்பிவிட்டான்.

இதே மாதிரி ஒரு சின்ன கம்பேரிஷன் கம்பராமாயணத்திலெ…. இல்லெ.. இல்லெ.. பெரிய புராணத்திலெ வருது. என் எஸ் கிருஷ்ணன் காமெடியில் கலக்கிய கிந்தன் சரித்திரம் பாத்திருப்பீங்க. அதன் ஒரிஜினல் தான் அந்த நந்தனார் கதை. அதில் வரும் ஒரு சின்ன சங்கதி. நந்தன் வசிக்கும் குக்கிராமத்தில் குடிசைகள். குடிசைக்குப் பக்கத்தில் நாய்கள் இல்லாமலா இருக்கும்? ஆனா நாய்கள் இருந்தாலும், சத்தமில்லாமெ இருக்காம். எப்புடி?

சேக்கிழார் பெருமான் சொல்கீறார்… (கீரன் சொன்னதுங்க இது..) அங்கு வாழும் மக்கள் கையில் இரும்புக் காப்பு அணிந்து இருந்தனராம். அந்தக் காப்பு நாயின் கழுத்தை அழுத்தும் போது கூட சத்தமே இல்லையாம். ஏனென்றால், அங்கு தெருவில் விளையாடும் (அந்தக் காலங்க… அது) குழந்தைகள் அரைஞானில் கட்டியுள்ள மணிகள் ஓசை எழுப்ப, அந்த நாய் கத்தல் கேக்காமெப் போச்சாம். எப்புடி????? பெரிய்ய புராணத்திலெ இப்புடி. பெரிய்ய காப்பியமான நம்ம கம்பராமாயணத்திலெ கம்பர் எப்படி கம்பேர் செஞ்சிருக்கார்ன்னு பாக்கலாமா?

அநுமன் இலங்கை கோட்டை வாயிலைப் பார்க்கிறான். அதன் ஒளியையும் பார்க்கிறான் அப்படியே ஆகாயத்தில் ”நின்னு” ஒளிவிடும் சூரியனையும் பார்க்கிறான். ஞாபகம் வருது கம்பனுக்கும் (அநுமனுக்கும்), மின்மினிப்பூச்சியின் வெளிச்சம். பகல்லெ தான் காணாமெப் போயிடுமே, அந்த மாதிரி காணாமப் போயிட்டியே என்று சூரிய்னைப் பாத்து நெனெச்சாகலாம் கம்பரும் அநுமனும். இது எப்படி இருக்கு? சூரியன் உதித்து மறையும் என்று நம்பிய காலத்தில் “ஒரே இடத்தில் நிற்பதாய்” கம்பர் கூறுவதை உற்று நோக்கிக் கவனிக்க அந்தப் பாட்டையும் பாருங்க…

அண்ட முற்றவும் வீங்கிரு கைற்றுநின் றலரி
கண்ட வாற்றினிக் கடிநகர் நெடுமனைக் கதிர்கள்
உண்ட வாற்ரினொன் றிரைப்பரி தொப்பிடிற் றன்முன்
விண்ட வாய்ச்சிறு மின்மினி யென்னவும் விளங்கா

உலகமே உலகக் கால்பந்தை நினைக்கையில், கம்பன் காட்டிய உலக முழுப்பந்தான சூரியனை, அதுவும் நின்று ஒளி தரும் எனச் சொன்ன அறிவியல் அறிஞர் கம்பனையும் சற்றே நினைவு கூர்வோம்.