துப்பறியும் சொம்பு


Thupparium Sombu

துப்பறியும் சாம்பு படிச்சிருக்கீங்களா? இந்தக் கேள்விக்கு, ஆமாம் என்று பதில் வந்தால், ஒன்று கன்ஃபர்மாச் சொல்லலாம். பதில் சொன்னவரது வயது 45க்கு மேலாக இருக்கும். இதை ஒரு டெஸ்ட் செய்து பாக்கலாமே என்று 50 வயதுக்கு மேலான நண்பர் ஒருவரை லேசாக விசாரித்தேன். சாம்புவா? யாரது? என்றார். என்னடா இது வம்பா போச்சே என்று மேற்கொண்டு ஏதும் பேசாமல் விட்டு விட்டேன். சரி நம்ம ரேஞ்சில் வயது குறைவான ஆளை விசாரித்துப் பாக்கலாமா? என்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் கேட்டேன். என்ன சார் இப்படிக் கேட்டீங்க..என்ன கதைகள் தெரியுமா? இப்படி சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்பொ என்னோட தீர்மானத்தை மாத்திக்கலாமா? அதெப்படி?? இதெல்லாம் ஒரு (சாரி… இரு) விதி விலக்குகள். அம்புட்டுத்தான். ஆக சொல்லப்போனா, தும்பறியும் சாம்பு அந்தக்காலத்து ஆதித்யா டீவி. என்ன… 24X7 தான் கிடையாது. 7 நாளுக்கு ஒரு தரம் வந்து சிரிப்பூட்டிய விகட காலம் அது. அந்தக் கேரக்டரை வைத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை பட்த்தில் நாகேஷ் வந்து போனதாய் என்னுடைய ஞாபக மூளை லேசாகச் சொல்கிறது. ரொம்பவும் கசக்க வேணாம் உட்டுருவோம்…

சாம்பு சரி… இந்த சொம்பு எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அது ஒரு ஃபுளோவிலெ வந்திருந்தாலும் கூட, சொம்பு இல்லாமல் பஞ்சாயத்து நடத்த முடியாது என்ற விவேக விதி இருப்பதை நாம் மறந்திட முடியுமா என்ன? குடிக்கத் தண்ணி வேணும்னு மாப்பிள்ளை வடிவேல் கேட்க, அதை அப்படியே அவருக்கு எதிராய் “மாப்பிள்ளை சொம்பு வந்தாத் தான் தாலி கட்டுவாராம்” என்று திருப்பி விடும் கூத்தும் நடக்கும். இது ஒரு கேலிக்கூத்தான காமெடி என்று மட்டும் பார்க்காமல் சற்றே உற்று நோக்கினால் அதன் பின்னால் ஒரு பெரிய தியரி இருப்பது தெரியும்.

உலகத்திலேயே, வடிவேலு காமெடிக்குப் பின்னாடி, தியரி இருப்பதை பாக்கும் ஒரே ஆளுன்னு பாக்கீகளா?? டிரான்ஸாக்ஸன் அனாலெஸிஸ் என்று ஒன்று கேள்விப் பட்டிருக்கீங்களா? அது தான் இது. ஒருவர் தண்ணி வேணும் என்று சொன்னது பலரின் காதுகளில், மனதுகளில் மாறி, அது சொம்பு வந்தாத் தான் கல்யாணம் என்று மாறுவது இயற்கை என்கிறது அந்தத் தியரி. அதுக்காகத்தான் அடிக்கடி டிரைனிங் எல்லாம் கொடுத்து ஆட்களை தேத்தி வைக்கனும் என்கிறது. அரசுத்துறையில் சும்மா வெட்டியா இருப்பவருக்கு டிரைனிங் சான்ஸ் கெடைக்கும். அவன் ரொம்ப ஜாலியா தூங்கிட்டு, சாப்பாடு சரியில்லை என்று ரிப்போர்ட் தருவான்.

ம்… அப்பொ…, பஞ்சாயத்துக்கும் சொம்புக்கும் எந்த சம்பந்தம் இல்லாட்டியும் கூட, சொம்பு தான் தாறுமாறாக அடிபடுது. அரசுத் துறையிலும் இப்படித்தான். ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் போது, அதில் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் பாதிக்கப்படுவர். சில சமயம் அப்படி சிலருக்கு பாதிப்பு வரவேண்டும் என்பதற்காகவே, சில முடிவுகளும் எடுக்கப் படுவது உண்டு. அரசியல்லெ மட்டுமா ”இதெல்லாம் சாதாரணமப்பா..” என்பார்கள்??? அரசுத் துறையுலும் இப்படித்தான். ஆனா பொத்தாம் பொதுவான ஒரு விதி இருக்கு, யாருக்கும் பாரபட்சமாக முடிவுகள் எடுக்கப் படாது என்று.

இப்படித்தான் ஒரு முறை…. அடுத்தவன் கதை சொன்னால் ஏதும் வில்லங்கம் வந்தாலும் வரும். சொந்தக் கதையே சொல்லி விட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. 1993களில் அந்தமான் போர்ட் பிளேயரிலிருந்து மூன்று நாள் கப்பல் பயணம் செய்தால் வரும், கமோர்டா என்ற தீவில் பணியில் இருந்தேன். போர்ட்பிளேயர் மாதிரி இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் மட்டும் குறையாது இருந்தது. ஆனால் அரசு வேறு மாதிரி யோசித்தது. கிரேட் நிகோபார் தீவுகளில், இந்தியாவின் இறுதி முனைக்கு செல்லும் 41ம் கி மீட்டரில் ஒரு பாலம் கட்ட என்னை ஏவியது. ஏற்கனவே இருக்கும் தீவிலிருந்து இன்னும் ஓர் இரவுப் பயணம். நானே அரசின் முடிவால் நொந்து கொண்டே போனால், அங்கே உள்ள சீனியர்கள் அனைவரும் என்னை ஒரு பிராணியாப் பாக்கிறாய்ங்க.. [அங்கே நான் மட்டும் தான் பி இ படிச்ச புள்ளெ… அதுவும் விரல் விட்டு எண்ணும் இருந்த அந்தக் காலத்தில்] அரசு முடிவு என்று, ஒன்று நினைக்க, மற்றவர்கள் அதனால் பொசுங்கி புன்னானது தான் மிச்சமாச்சி…

ஆனா 2005இல் வந்து (தொலைத்த) பல அரசு ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஒரு சட்டம் தான் “தகவல் அறியும் உரிமை” சட்டம். இதிலும் அதே சரக்கு சந்தடி சாக்கில் நுழைக்கப்படுள்ளது. ஆக அர்சுக்கு க்கூடுதல் தொந்திரவு இப்பொ ஆயிட்ட்து. ஒரு முடிவு எடுக்கப்படும் போது அதனால் பாதிக்கப்படும் நபருக்கு அதைப்பற்றிய தகவல்களைச் சூ மந்திரக்காளி மாதிரி, ஸு மோட்டோவாகத் தரவேண்டும் என்கிறது. இப்படி இருக்கே என்று அர்சு அதிகாரிகளிடம் போய் ஏதாவது கேட்டு வைத்தால், அப்படியா? நமக்கு ஒன்றும் சர்குலர் வரலியே? என்பார்கள். நெட்டில் இருக்கே? என்று கேட்க முடியாது. நெட் என்பது டி ஏ அளவு உயரும் போது பயன்படுத்திக் கொள்ளும் ஒரு வசதி அம்புட்டுத்தான்.

மிஸ்டர் கம்பர் உதயமாகிறார்… என்டாப்பா… கிஷ்மு அம்பி…,. 2005ல் சொன்ன சேதி சொல்றியே.. இதெ நானு எட்டாம் நூற்றாண்டிலேயே சொல்லிட்டேனே..செத்தெ பாக்கப் படாதா..?

என்ன கம்பரே ஏதாவது வெளையாட்றேளா? நானு ஒன்பது வருஷமா.. இது தான் புத்தம் புது காப்பின்னு சொல்லிண்டு வாறேன்… என் காலை இப்படி வாற்றீயளே.. கொஞ்சம் வெளக்கமா சொல்லப்படாதா?

ராமாயணம் படிக்கிறதுலெ நீ.. சின்னப்பய… ஒனக்கு வயசு பத்தாது.. போயி.. பேசாமெ, யுத்த காண்டம், அங்கதன் தூதுப்படலம் திறந்து பொறுமையாப் படி. எல்லாம் விளங்கும்.

அட…ராமா… அடெ… ஆமா.. எனக்கு வெளங்கிடுத்து… உங்களுக்கு?? சொல்லாமலா போவேன்?

தனுஷ்கோடி பக்கத்திலெ ராமர் பாலம், கட்ட பிளான் போடும் போதே, ராமன் மனது, இன்னொரு பிளான் போட்டது. சீதை கைக்கு வந்த கையோடு இந்த இலங்கையை வீடணன் கையில் கொடுத்து விட்டு கம்பி நீடி விட வேண்டியது தான் என்று. ஆனா… ராமர் பாலம் கட்டி முடிச்சப்பொ, ராமன் மனசுலெ இன்னொன்னு தோணுது. அனாவசியமா போர் என்ற அக்கப்போர் எல்லாம் தேவையா? போர் இல்லாமெ சமாதானமா போக முடியாதா? என்று. இது ஒரு அரச முடிவு என்று வைத்துக் கொள்ளலாம். (அரசுக் கட்டிலில் இல்லாவிட்டாலும் கூட, கதையில் ஹீரோ ராமன் தானே?) இந்த முடிவில் அல்லது முயல்வில் பாதிக்கப்படுபவர் யார்? என்று சொல்லவும் வேண்டுமா? வீடணன் தானே.

கம்பர் இந்த நிலையை அருமையாக் கையாள்கிறார். சொல்லப் போனால், இந்தக் காலத்து ஆர் டி ஐ சட்டத்திற்கும் மேலே ஒரு படி சென்ற மாதிரி தான் படும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் கூட, முடிவு எடுத்துக் கொள்ளுங்கள், உங்க இஷ்டத்துக்கு. ஆனா பாதிக்கப்படும் நபர்க்கு தகவல் சொல்லிடுங்க… இது தான் முக்கியம். ஆனால் கம்பன் விதியோ, பாதிக்கப்படும் நபர் கூடவே ஆலோசனை செய்யச் சொல்லுவது தான். இந்த முடிவை அமல் படுத்தலாமா சொல்லுங்கள் என்று இராம பிரான் சொல்லுவது யாரிடம் தெரியுமா? பாதிக்கப்படக் கூடும் என்று இருக்கும் வீடணனிடம் தான். இது எப்படி இருக்கு…

இந்தக் காலம் மாதிரி, பின்னாளில் பிரச்சினை வந்தா, நான் தான் அப்பவே சொன்னேன்லே.. என்று மீட்டிங் முடிக்க சாயா ஆர்டர் சொல்லி முடித்து விடலாம்..

அதே டீ குடிக்கும் நேரத்தில் கம்பர் வரிகளும் படிச்சிடலாம்:

வள்ளலும் விரைவின் எய்தி வடதிசை வாயில் முற்றி
வெள்ளம் ஓர் ஏழுபத்துக் கணித்த வெஞ் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற் குரைப்பதானான்.

வள்ளல் இராமனும், ஓர் எழுபது வெள்ளம் என்று கூறும் படியான சூப்பர் படையுடனே, வேகமாப் போய் இலங்கையை அட்டாக் செய்து சீதையை திருடின திருடன் இராவணன் வரும் வரை வடக்கு வாசலில் காத்திருக்க, வந்த பாடில்லை அந்த திருட்டுப் பய. இப்பொ ஒரு காரியம் மனசுலெ நெனைக்கிறேன் என்று வீடணனிடம் சொல்லலானார். என்ன சொன்னார் எப்படி சொன்னார் என்பது அடுத்தடுத்து வரும் பாடலில் வரும்.

இப்பொ சொல்லுங்க ஆர் டி ஐ சட்டம் பெட்டரா? கம்ப சட்டம் பெட்டரா?

அது போல் வருமா? இந்தப் பொன்னாள்?


ஆண் குரல் மட்டும் உருகி உருகிப் பாடும் இந்தப் பழைய பாட்டு, தேன்கிண்ணம் போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாய் இடம் பெறும். ஆனால் கூடவே வரும் பெண் குரல், வெறும் ஹம்மிங்க் மட்டுமே செய்து கிரங்க வைக்கும் பாடல் அது.. நாம எல்லாத்தையும் உட்டுட்டு அந்த “போல்”… அதை மட்டும் வச்சிட்டு காயை நகர்த்துவோம்.

“அரசியல்லெ இதெல்லாம் சகஜமப்பா” என்று டயலாக் நாம் சொல்லுவோம்.. ஆனா இதுக்கு, முன்னாடி ஏதாவது ஏடாகூடமா ஒரு சேதி நடந்திருக்கனும்.. அப்பத்தான் இந்த சகஜ டயலாக்கை சகஜமா சொல்ல முடியும். சமீபத்திய நிகழ்வு இது தான். ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கியவர் கட்சி மாறிவிட்டார். அடுத்த கட்சிக்குப் போயிட்டா ஊழல் கரைஞ்சிடுமா?? ஆளை உட்ட கட்சி கேக்குது.. கங்கையில் சின்ன ஓடை வந்து கலந்தா, அதுவும் புனிதம் ஆவது போல் என்று பதில் சொல்லுது வரவுக் கட்சி.. நமக்கெதுக்கு கட்சி விவகாரம்?? அந்த “போல” இங்கேயும் வந்திடுச்சா?? அடுத்த கட்சிக்கு இல்லெ இல்லெ காட்சிக்கு.. சாரி ஒரு கதைக்குப் போவோம்.. (இது தெரிஞ்ச கதை தானே என்பவர்கள் அடுத்த போலவுக்குத் தாவலாம்).

கங்கைக்கரையில் ஒரு முதியவர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். தன் மனைவியை கங்கை அடித்துக் கொண்டு போகிறது, என்பதை தெளிவாய்த் தெரிவிக்கிறது அந்த அவலக்குரல். காப்பாற்றப் போனவர்களை அவரே தடுக்கிறார். “ஒரு சாபமமிருக்கு. பாவம் செய்யாத நபர் தான் தன் மனைவியை காப்பாற்ற முடியும்” என்கிறார்.

“இல்லாட்டி… பாவம் செய்தவர் தலை தண்ணீரில் கரைந்து விடும்”. கதை கேட்டு கூட்டமும் கரைந்து விடுகிறது. ஒரு மீனவ இளைஞன் ஜம்மென்று குதித்து கிழவியை கரை சேர்த்தான்.. (இந்த இடத்தில் கிழவி என்று சொன்ன காரணம்… நீங்க பாட்டுக்கு படத்து சீன் மாதிரி தண்ணியை உறுஞ்சும் காட்சி வரும்னு ஜொள்ளு விடாமல் இருக்கத் தான்.)

கூட்டம் வியப்போடு கேட்டது. என்னப்பா?? ஒரு பாவமும் செய்யலையா நீ?? பதில் தெம்போடு வந்தது… ஹ..ஹ…ஹ…. செய்திருந்தேன்.. கங்கையில் மூழ்கினதாலே எல்லாமெ போயிடுச்சி போலெ என்று முடித்தார். (அந்த “போல” அங்கும் ஆஜர்)

இங்கிட்டியும் அங்கிட்டியும் சுத்திப் பாத்தா.. அங்கே வடிவேலானந்தா நிற்கிறார். அவர் பக்கத்திலே யாரோ போலீஸ் மாதிரி தெரியுதே?? பார்த்திபனா இருக்குமோ?? சே..சே.. அவர் பக்கத்தில் இருந்தா வடிவேல் முகத்தில் சிரிப்பு ஏது?? ஒரே அவஸ்தை தானே.. (ஆனா நமக்கு செமெ ஜாலிதான், அந்தக் கூட்டணியால்).. வேற யாரு?? அட நம்ம டைரக்டர் கம் நடிகர் வெட வெட மனோபாலா தான். வ.வே லேசாக தட்டுகிறார் அவர் நெஞ்சை. ரொம்ப பீத்திக்காதெ.. உன்னெயெ தப்பா போலீஸ் வேலைக்கு சேத்தாக போல… (போல வந்ததால் நாம் வந்த வேலை முடிந்தது.. நகர்வோம்)

சொந்தகதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் எப்படி வரும்?? என் வீட்டுக்காரியும் அப்பப்பொ என்னையெ கேப்பா.. உங்களை தப்பா இஞ்ஜினியர் வேலைக்கு சேத்துடாங்க போல. பேசாமா தமிழ் வாத்தியாரா போய் பரமக்குடியிலேயே இருந்திருக்கலாம்…(கம்பராமாயணத்தை விடாமல் இருப்பதை குத்திக் காட்டுறாப்பலெ..)

காட்டுறாப்பலெ… வந்தாப்லெ, போனாப்லெ, சொன்னாப்லெ என்ற வார்தைகள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனா யூஸ் செஞ்சிருக்கீங்களா.. நான் அடிக்கடி யூஸ் செஞ்சிருக்கேன். எப்பொ இதை யூஸ் செய்ய முடியும் தெரியுமா?? உங்களோடு எப்போதோ கூட படித்தவர்.. நண்பர் தான். இப்போது உயர் பதவியில் இருக்காப்லெ. இருக்கிறான் என்று உரிமையுடன் சொல்வதா? அல்லது இருக்கிறார் என்று மரியாதையுடன் சொல்வதா என்ற குழப்பமா?? அந்த “பொலெ” ஐ சேர்த்தா பிரச்சனைக்கு குட் பை. (அது வீட்டுக்காரி பேச்சுக்கும் சொல்லலாம் என்பது சீக்ரட்டான சேதி)

அப்படியே ஊர்க்கதையும் பாப்போமே.. பரமக்குடியில் அந்தக் கால தியேட்டர்களில் படம் பாக்க, பெண்களில் இடுப்பில் வரும் குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.. தியேட்டர் வரை நடந்து வந்து, டிக்கட் எடுக்கும் நேரத்தில் மட்டும் அம்மா, பெரியம்மா, சித்தி, பக்கத்து வீட்டு அக்கா இப்படி யார் இடுப்பாவது எனது சவாரிக்கு தோதாக கிடைக்கும். ஓசியில் படம் பாத்துட்டு, இடைவேளையில் முறுக்கு, குச்சி ஐஸ் சாப்பிட்டு… வாவ்.. அந்த சந்தோஷம் போல இப்பொ வருமா?? இப்பொ தியேட்டர் என்னமோ ஏசி தான்.. ஆனா மனசுலெ ஏன் இத்தனை வெப்பம்??

அந்தக் கால நடிகைகளில் அபிநய சுந்தரி சரோஜா தேவியை தன் மகள் போல்.. மக படம் போட்டிருக்காங்க.. போய் பாக்கணும்.. என்று பெரியம்மாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று இப்படி எந்த நடிகையையாவது இப்படி கூப்பிட மனசு வருமா? ஆரம்ப கால சுஹாசினி, ரேவதி வேண்டுமானால் சொல்லலாம் போலெ… இப்பொ சமீபத்ததிய நடிகைகளில் சினேகா..?? ஓகே வா???

உங்க மூக்கு சூப்பரா தமண்ணா மூக்கு போல இருக்கு… இப்படிச் சொன்னா என்ன அரத்தம். கொஞ்சம் இலக்கணப் பக்கம் போனால், உவமை என்று சொல்லுவாய்ங்க.. ஐஸ் வைக்க பொய் சொன்னா, அது உலகத்திலெ இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்றது (இல்பொருள் உவமை அணி); சாதாரணமா நடக்கிறதை இதுக்காகவே நடக்குது போலெ என்று சொல்வது என்ன வகை? (தற்குறிப்பேற்று அணி – இது சரி தானா?? தமிழ் அறிஞர்கள், தவறு என்றால் மன்னிக்கவும்).. இந்த நேரத்தில் என் மனசுல பட்டதை சொல்லியே ஆகனும். எனக்கு தமண்ணா ஓகே.. ஆனா அந்த மூக்கு தான் கொஞ்சம் ஒதைக்குதே..? ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு??

சரி இத்தனை போல தேடிய பிறகு எங்கே முடிக்க?? வேறு எங்கே.. கம்பராமாயணம் தான்.. கம்பர் உவமை சொல்றதிலெயும் மஹா கெட்டிக்காரர்.. நம்ம லெவலுக்கு தமண்ணாவை வச்சி இவ்வளவு எழுதினா…, பக்தி சிரத்தையோட ராம காவியம் படைத்தவர்… அவர் கண்ணுக்கு உவமை வந்து கொட்டாதா என்ன?? வந்ததே..

தானா தினசரி நடக்கும் செயல்… உலகத்திலெ இல்லாத ஒண்ணு… ரெண்டையும் காக்டெயிலா கலந்து கலக்கி நம்மை மகிழ்விக்கிறார் கம்பர். இலங்கையில் அனுமன் பாத்த முதல் நாள் மாலை நேரம். சூரியன் மறைகிறது.. அது கம்பன் பார்வையில் வேறு மாதிரி தெரியுது.
எப்பொவுவே கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியன் அன்று வடக்கில் உதித்து தெற்கில் மறைஞ்சதாம்.. அது சரி எதுக்கு இப்படி?? ராவணன் தவத்தோட பயன் எல்லாம் சீதையைக் கவர்ந்ததால் போய்விட, இனி அழியப் போகிறான் என்பது சூரியனுக்கு தெரிஞ்சு போச்சாம். ராவணன் 20 கைகள், பத்து தலை வச்சி, ஐந்து புலங்களையும் அடக்கி பெற்ற தவம் வீனாச்சே என்று பன்ச் வேறு வைக்கிறார் கம்பர்..

தடக்கை நால் ஐந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
அடக்கி ஐம்புலங்கள் வென்று தவப்பயன் அறுதலோடும்
கெடக் குறியாக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கைசெல்லும் பரிதி வானவனும் ஒத்தான்.

இனிமே எதைப் பாத்தாலும் அல்லது யாரைப் பாத்தாலும் வேறு ஏதாவது போல யோசிக்க முடியுமான்னு பாருங்க..