தொப்பி கழட்டிய வணக்கங்க…


PaPaKa

[என் நூலானா பாமரன் பார்வையில் கம்பனைப் படித்து 10-02-2014 ல் முனைவர் தஞ்சை மா அய்யாராஜு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு இதோ. T N கிருஷ்ணமூர்த்தி என்ற என் பெயரினை, தமிழ் நெஞ்சன் (Tamil Nenjan) கிருஷ்ணமூர்த்தி என விரிவு செய்து என்னை மெருகு ஏற்றியவர் அவர். நன்றி ஐயா.. நன்றி. அந்தக் கடிதத்தினை அவரின் அனுமதி பெற்றுத் தருகின்றேன்]

ஒரு தமிழனின் பார்வையில் அந்தமான் தமிழ் நெஞ்சன்

அந்தமான் தமிழ் நெஞ்சன் T N கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பான “பாமரன் பார்வையில் கம்பன்” எனும் அரிய நூலைப் பயின்றேன். நான் என் வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அல்லது புரட்டியிருக்கிறேன். சில நூல்களை மட்டுமே கற்றிருக்கிறேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே பயின்றிருக்கிறேன். (பயிலுதல் என்பது கற்றுப் பயிற்சித்தல் எனப் பொருள்படும்). நான் பயின்ற சில நூல்களில் இரண்டு நூல்களுக்கு மட்டும் நான் ரசிகனாகி இருக்கிறேன்.

ஒன்று… எஸ் இராமகிருஷ்ணனின் “கதா விலாசம்”

மற்றொன்று T N கிருஷ்ணமூர்த்தியின் “பாமரன் பார்வையில் கம்பன்”

காரணம், “பாமரன் பார்வையில் கம்பன்” ஓர் புதுமைப் படைப்பு, அற்புதப் படைப்பு, பிரமிக்க வைக்கும் படைப்பு, அதன் நடை இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாரும் கையாண்டிராத மணிப்பிரவாள நடை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வட்டார வழக்கு மாறி மாறி நடை பயிலும் தெளிந்த நீரோட்ட நடை. இது உயர்வு நவிற்சியன்று. உண்மை நவிற்சி [ஓஹோ… இப்படியும் காக்கா பிடிக்கலாமோ என நெனக்கக் கூடாது]
ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு, நச்சுன்னு இருக்கு, சூப்பரப்பு! இத குத்து டைட்டில்னு சொன்னா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா புரியும்னு நெனக்கிறேன்.

பொதுவா ”முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போட நினைக்காதே” ந்னு சொல்லுவாங்க… ஆனா தமிழ் நெஞ்சன் ஒவ்வொரு பகுதியிலும் அதை எதோட கொண்டாந்து பொறுத்தமா, இருக்கமா.. கொஞ்சமும் நழுவாத படி முடிச்சுப் போட்டிருக்கார்னு பாக்கிறப்போ… மொழங்காலு மொட்டைத் தலை என்ன… வெற்றிடத்தில் கூட முடிச்சுப் போடற தெறமை அவருக்கு இருக்கு…[ஆமா நீங்க பொறந்த ஊரு முடிச்சூருங்களா?]

கட்டிப்புடி… கட்டிப்புடிடா… ங்கிற குத்து டைட்டிலெ மனசுலெ ஏதேதோ கனவோட புரட்டினேன்… நிலமையும், சமயமும் தெரியாமெ கட்டிப்பிடிக்க நெனச்சா… பொசுங்கிப் போயிடுவே மவனேன்னு எச்சரிக்கை.. இது ஒன்னு சும்மா சாம்பிளுக்குத்தான். இப்படி ஒவ்வொரு குத்து டைட்டில்லயும் அவரு சொல்ற விஷயத்தெ நெனெச்சா… ஒரே பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் எழுதியுருக்கியே, என் செல்லம்னு… அப்படியே ஆரத் தழுவி, கட்டிப்புடிச்சு, நச்சுன்னு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. [ஆம்பளையா இருக்கிறதலெ எவ்வளவு வசதி பாருங்க… இல்லேன்னா உஷா அம்மாவோட நெற்றிக்கண்ணுக்குத் தப்ப முடியுமா]

ஐயா தமிழ் நெஞ்சனே… உங்க படைப்பை பயின்ற போதும், இப்பவும் எனக்குப் பொறாமையா இருக்கு.. அது எப்படீங்க உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுது?.

அந்தமானிலிருந்து சென்னைக்கு மதியம் ஒரு மணிக்குப் ஃபிளைட். எல்லாரையும் ஒரு குயிக் ரவுண்ட் பாத்துட்ட்ட்ப் போகலாம்னு 9 மணிக்கே மகிழ்வுந்தில் (Pleasure – Ambassodor மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்து Translation) பயணித்தேன். அப்போது தான், என் கைகளில் பா பா க. நேரம் போனதே தெரியவில்லை. 12 மணிக்கே ஏர்போர்ட் வந்து விட்டோம். டிக்கெட், ஐடெண்டிகார்ட், பேக்கேக், ட்ராலி அவசரத்துலெ பா.பா.கவை வண்டியிலேயே விட்டுவிட்டேன். Boarding Pass வாங்கி Waiting ரூமில் இருந்த போது பா.பா.க – என் மூளையைத் தட்டியது. யார் யாரோடோ தொடர்பு கொண்டேன். கிடைப்பதற்குள் Boarding தொடங்கிவிட்டது.

பா.பா.க – வைப் பிரிந்தது மனதைப் பிழிந்து எடுத்தது…. பார்க்கில் காதலியுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது.. “ஐயோ… அப்பா…..” என தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு… வேகமாக நடையைக் கட்டிய காதலியைப் பிரிந்தவன் போல. [என்ன? சொந்த அனுபவமா…? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலீங்க]

அதுக்கப்புறம்…நாலு நாள் கழிச்சு நண்பர் மூலமா பா.பா.க என் கையில் கிடைத்தது. அசோக வனத்துலெ இருந்த சீதையின் கையில் அநுமன் இராமனின் கணையாழியைக் கொடுத்த போது “ சீதை வாங்கினள், கண்களில் ஒத்தினள், நெஞ்சில் புதைத்தனள், வீங்கிப் புடைத்தனள்” [என் வரிகளை முழுங்கிவிட்டு கருத்தை மட்டும் கையாள்றியா? – கம்பர் கோபப்படுகிறார்] எனக் கம்பர் கூறுவார். அதுக்கும், அதுக்கும் மேலே நான் ஆனந்தப்பட்டேன். பா.பா.க எனக்கு மீண்ட சொர்க்கமாகப் பட்டது. கிடைத்த அன்றே முழுதும் படித்து முடித்தேன். உடனே இந்தப் பாராட்டுரையை எழுதத் தொடங்கினேன். [கலைஞரைப் பாராட்டும் வாலி வைரமுத்து மாதிரி நானும் பட்றேனா…ஐய்யோ… அந்த அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க…]

’கஷாயம்’ என்பது பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவது. பார்க்கவும் குடிக்கவும் ஒரு மாதிரி இருந்தாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘கஷாயம் வேண்டாம்பா… ஏதாவது ‘சிரப்’ இருந்தா குடுங்க டாக்டர் எனக் கேக்கிற காலம் இது. [என்ன இது இந்த ஆள் ட்ராக் மாறி போறாரேன்னு நெனக்கிறீங்களா! இல்லங்க… படிங்க] அந்த கஷாயம் மாதிரி தான் கம்பனின் வரிகள். பார்த்தா புடிக்காது… படிச்சா..ருசிக்காது… இருந்தாலும் குடிச்சித்தான் ஆகனும். கம்பனைப் படிச்சித்தான் ஆகனும்..

என்ன செய்யலாம்…? சிரப்பு, இல்லாட்டியும் சுகர் கோட்டட் மாத்திரை பாலிசியை நம்ம தமிழ் நெஞ்சனும் புடிச்சிகிட்டார். கம்பக் கஷாயத்தை கொம்புத்தேனுலெ கலந்துட்டார். இந்த வித்தையை சிறப்பா, செம்மையா செய்திருக்கிற தமிழ் நெஞ்சனை.. பாமரனா ஏத்துக்க என்னாலெ முடியலைங்க… பா.பா.க வுக்குப் பதிலா.. “கம்பக் கஷாயம் கொம்புத்தேனில்” எனப் படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் கச்சிதமா பொருந்தி இருக்குமோன்னு தோணுது.

ஐயா, தமிழ் நெஞ்சனே… போதாதய்யா… போதாது… இந்த மாதிரி வேணும். இன்னும்.. இன்னும்.. பத்தாயிரத்துலெ ஒரு நூறைத்தான் தொட்டிருக்கீங்க.. பாக்கி இருக்கே ஏராளம்…! அதுகளையும் தொடுங்க (நான் தொடுங்கன்னு சொலறதில் வேறு எதுவும் அர்த்தம் இல்ல) அந்த அனுபவத்தை சுகத்தை சொல்லுங்க… இந்த வேண்டுகோளோட once again தொப்பி கழட்டிய வணக்கங்க… (அதாங்க Hats off to you) ஹாங்… வர்ட்டா…!!

அன்புடன்
முனைவர் மா அய்யாராஜு
துனைக்கல்வி இயக்குநர் (ஓய்வு)
மேடவாக்கம் – சென்னை.

பி கு:

இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.

கேக்காமெக் குடுக்கிற சாமி இது..


”ஆத்துலெ போட்டாலும் அளந்து போடு” ன்னு சொல்லுவாங்க. ஆத்திலெ கொட்ற அல்லது போட்றதுங்கிற முடிவுக்கு வந்தாச்சி.. அப்பொ எதுக்கு அளக்கும் அளவை எல்லாம்? அவங்க அந்தக் காலத்திலெ, எந்த அர்த்தத்திலெ சொன்னாங்களோ தெரியலை. ஆனா.. எனக்கு என்னமோ ஆலைக் கழிவுகள் எல்லாமே கணக்கு வழக்கு இல்லாமல் கொட்டிடக் கூடாதுங்கிற நல்ல மெஸேஜுக்காக சொல்லி இருப்பாங்களோ?? கொட்டுறது ஒரு பக்கம் இருந்தாலும், அதே ஆத்திலிருந்து மணல் அள்றதும் ஒரு வகையில் கணக்கு வழக்கு இல்லாமத்தான் நடந்துட்டு வருது. துட்டு பாக்குறதுக்கும் அது தான் நல்ல வழியாவும் இருக்கு.

ஆத்துலெ போட்றது, எடுக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா வீட்டுக்கு பணம் அனுப்பும் ஆட்களுக்கும் இது பொருந்தும் தெரியுமா உங்களுக்கு? என் நண்பனின் கதை சொல்றேன் கேளுங்க. கஷ்டப்பட்டு படிச்சி வேலைக்கு சேந்தவன் அவன். செலவுக்கு கொஞ்சூண்டு வச்சிட்டு அம்புட்டும் வீட்டுக்கு அனுப்பினான் அந்த அப்பாவி. ரெண்டு வருஷம் கழிச்சி தங்கச்சி கல்யாணத்துக்கு தயார் ஆனது. இருக்கும் காசு எல்லாம் அனுப்பிய ஆசாமி, வீட்டிலெ எவ்வளவு இருக்குதுன்னு கேட்டா, கை விரிச்சிட்டாங்களாம். அப்புறம் கடனெ ஒடனெ வாங்கி கல்யாணம் நடந்தது. நீதி: எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வேணும்கிற மட்டும் அனுப்புங்க.. அது அப்பா அம்மாவாக இருந்தாலும் கூட.

கேட்டாக் கொடுக்கிற பூமி இது. கேக்காமெக் கொடுக்கிற சாமி இது. இது ஒரு சினிமா பாட்டு. (அப்பாடா டைட்டில் வந்தாச்சி..அப்பொ கம்பரை இழுத்து வச்சி போஸ்டிங்கை முடிச்சிரலாமா? அதான் கிடையாது. அதுக்கு இன்னும், கடைசி வரை நீங்க வெயிட் செய்தே ஆகணும்). எந்த பூமி கேட்டதெல்லாம் கொடுக்குது? அந்தமான் பூமியில் பேரீட்சம்பழம் விளையுமா என்ன? நம்ம மக்கள் எப்படியோ காலிபிளவர் வரைக்கும் அந்தமானிலெ விளைய வச்சிட்டாங்க என்பது ஒரு கொசுறுத் தகவல்.

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டுக் கொடுக்கும் என்றார்கள். கூரைகளே நாட்டிலெ இருக்கவே கூடாது என்பது அரசின் திட்டம். இந்த மாதிரி இருக்கறச்சே கொடுக்க நினைக்கிற கடவுள் கூட கான்கிரீட் கட்டர் மிஷின் எல்லாம் கொண்டு வந்து தான் கொடுத்தாகனும். ஆமா.. அப்பிடியே குடுத்தாலும் கூட, அப்புறம் முதல் செலவே, அந்த ஒடைச்ச Slab ஐ சரி செய்யும் வேலை தான் இருக்கும். என்கிட்டெ யராவது, ”கடவுள்கிட்டெ என்ன கேப்பீங்க” என்று கேட்டால், நான் என்ன சொல்வேன் தெரியுமா? ”எனக்கு என்ன தேவை?” என்பது அந்தக் கடவுளுக்கு தெரியாமலா இருக்கும்? ஆனா அழும் பிள்ளைக்குத் தானே பாலு?? தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள். மாணிக்கவாசகர் கொஞ்சம் வித்தியாசமானவர். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பனிந்து என்பார். பால் வேணும் என்று புள்ளை நெனைச்சாலே தாய் வருவாங்கலாம்.. அந்தக் காலத்து அம்மா…

ஃப்ரீயா கொடுத்தா நம்மாளுங்க ஃப்னாயில் கூடக் குடிப்பாய்ங்க. அந்தமானிலிருந்து தமிழகம் போகும் போது ஒவ்வொரு வீட்டிலும் அந்த இலவச டீவியின் பயன்பாடுகள் பாத்தா ஆச்சரியமா இருக்கும். டேபிள் மாதிரி, டீப்பாய் மாதிரியாவும், எத்தனை விதங்கள். கேக்காமெக் குடுத்ததினாலெயே இந்த நிலை என்று சொல்ல முடியுமோ??

சமீபத்தில் லிட்டில் அந்தமான் தீவில், பார்த் நிர்மான் விளக்க விழா நடந்தது. அதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொது மக்களுக்கு விளக்கும் வேலை என் கைக்கு வந்தது. வழக்கம் போல் லெக்சர் முடித்து கேள்வி நேரம் வந்த்து. கேள்விகள் கேட்டாத்தான் குடுப்பாகளா?? கேக்காமெயே தரும் வசதி இல்லியா? (ஒரு வேளை தெரிந்தே கேட்டிருப்பாரோ?? ஒரு இஞ்ஜினியர் Right to Information – RTI Act பத்தி சொல்றதில், இந்த மாதிரியான குறுக்குக் கேல்விகள் தவிர்க்க முடியாதவை. எனக்கு சரக்கு இருக்கா இல்லையா என்று டெஸ்ட் செய்யும் உலக இயல்பு அது)

ஏன் இல்லை?. இதுக்காக செக்சன் 4 என்றே தனியா இருக்கு. பொதுமக்கள் கேக்காமலேயே, மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு புரியும் மொழியில் (புரியாட்டியும் கூட ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ) வெளியிட வேண்டுமாம். இதே செக்சன் 4 ல் இரண்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. Section 4(1)(c) & 4(1)(d) தான் இவைகள். இதிலெ என்ன சொல்றாங்க தெரியுமா? அரசு தயாரிக்கும் திட்டங்களின் விவரங்கள் அனைத்தும், அதில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு சொல்ல வேண்டும். அதே போல் அரசின் முடிவுகளுக்கான காரணங்களையும் அதனால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் சொல்லியே ஆக வேண்டும். சொல்லலையா, ஒரு RTI போட்டு இந்த செக்சன் சொல்லிக் கேளுங்க.

இந்த சமாச்சரங்களை எல்லாம் ரொம்ப சூப்பரா அந்தக் காலத்திலெ நம்ம கம்பர் சமாளிச்சிக் காட்டி இருக்கார். (2005ல் வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கும் கம்பருக்கும் என்ன சம்பந்தம் என்பீர்கள்). நம்ம சட்டம் சொல்லுது: முடிவு எடுத்து விட்டு மக்களுக்கு தகவல் சொல்லு. ஆனா கம்ப(ர்)சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடியே, கலந்து ஆலோசித்து விட்டால் அந்த சிக்கலே வராதே?? இராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது. (எல்லாமே சூப்பர் சீன் தானா??)

விபீஷணன் அடைக்கலம் புக வந்திருக்கும் நேரம். ராமர் தான் தலவர். அவர்கிட்டெ முழு அதிகாரமும் இருக்கு. அவரு ஒரு முடிவு எடுத்துட்டா,யாரும் எதுவும் சொல்லப் போறதில்லெ. ஆனா.. நம்ம தலைவர் அப்படி செய்யலையே.. பாதிக்கப்படப் போகும் குரங்குப் படைகளிடம் கருத்துக் கேட்கிறார். மயிந்தன் என்ற புத்திசாலி வானரம் (நமக்கெல்லாம், அனுமன், வாலி சுக்ரீவன், அங்கதன் இவர்களை விட்டால் வேறு யரையும் தெரியாது) வீடணன் நல்லவரு, வல்லவரு என்று சொல்கிறார். அப்படிச் சொன்ன பிறகு, இவரை பக்கத்திலெ வச்சிக்கலாமா? தூரமா வெரட்டி விட்டு விடலாமா? யோசிச்சி சொல்லுங்க.. என்று வானரப் படைத் தலைவரிடமே (சுக்ரீவன்) கேட்கிறார்.

இது அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ராமரின் சொல் வழியாக கம்பர் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு எப்படிப் படுது?? அதுக்கு முன்னாடி பாட்டுப் பாத்துருவோமா??

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரைஇப்பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன்கைப்பிகற்பாலனோ கழியற்பாலனோஒப்புற நோக்கி நும் முணர்வினால் என்றான்

இப்பொ சொல்லுங்க… கேக்காமலேயே குடுக்கணுமா வேணாமா?? அது சரி..நீங்க கேக்காமலேயே, என்னோட போஸ்டிங்கள் தொடரும்.