கம்பன் பார்வையில் வெற்றிலை


பொதுவாவே ஆஃபீசில் ஏதாவது கடிதம் எழுதிட்டு வரச்சொல்லும் போது, அதில் திருத்தங்கள் செய்வதை பெரும்பாலும் பணியாளர்கள் விரும்புவதில்லை. அடிக்கடி மாத்தி மாத்தி திருத்தம் செய்யும் மேலதிகாரிகளை பணியாளர்கள் வெறுக்கவே செய்வார்கள். இவ்வளவு தெரிஞ்ச பெரிய மனுஷன் அந்தக் கடிதாசியையும் அவரே (அந்த நாயே என்பதை சபை நாகரீகம் கருதி எழுதலை) எழுதி இருக்க வேண்டியதுதானே? சாதாரண கடிதமே அப்படின்னா, கட்டிடம் கட்டுபவர் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு கட்டிடத்தை கட்டுபவரிடம், ஏதாவது குறை இருக்கிறது என்று சொல்லி,  அதனை இடித்து விட்டு மாற்றிக் கட்டுங்கள் என்றால் போதும். அவருக்கு வருகின்ற கோபத்திற்கு அளவே இருக்காது. கட்டும்போதே, பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே! (வெளக்கெண்ணெய் – இதுவும் சபை நாகரீக ஏற்பாடு தான்).  அப்பவே திருத்தி இருப்போமே! என்று கோபம் வெடிக்கும். அப்படியே அவர் கட்டியதை இடித்தாலும், அவர் இடிக்கும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! இடது கையிலும், இடது காலிலும் உதைப்பார்.. இடிக்கச் சொன்னவரையே தன் காலில் உதைப்பது போல். அப்படி இல்லாமல், ஒரு வெத்திலை மிகப்பெரிய கட்டுமானம் செய்ய உதவி இருக்கு என்பது ஆச்சரியமா இருக்கில்லே!

தமிழ் திரையுலகில் அகன்ற திரையில் முதன் முதலாக ஒரு படம் வந்தது, ராஜராஜ சோழன். அதில் கதாநாயகன் ராஜராஜ சோழனை அறிமுகம் செய்து வைக்கும் இடமே மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒரு சிற்பி செதுக்கி கொண்டிருப்பார். அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பையன் வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சென்றுவிட, அவ்வழியாக வந்த ராஜராஜசோழப் பேரரசர், அந்த சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பார். சிற்பி துப்பியதையும் செம்பில் எடுத்துக் கொண்டிருப்பார். தனக்காய் வெற்றிலை மடித்துத் தந்தும், எச்சிலும் ஏந்திய ஓர் அரசனுக்கு நல்ல கட்டுமானம் தராமலா போயுடுவார்கள்? அதன் நிரூபனம் தான் தஞ்சை பெரிய கோவில்.



இப்படித்தான் வெங்கனூர் என்ற ஓர் ஊர்ல, தியாகராஜர் ரெட்டியார் என்பவர் ஒரு கோயில்ல கட்டுவதற்கு உதவிகள் செஞ்சிட்டு இருந்தாராம். ரொம்ப பிரமாதமா, கோயில் சிறப்பாவே எல்லாம் செஞ்சிட்டு இருந்தாங்களாம். அவரும் ஒரு தடவை இந்த மாதிரி (சினிமாஸ்கோப் படம் எல்லாம் பார்க்காமல்), ஒரு சிற்பிக்குத் (தெரியாமலேயே) வெற்றிலை மடித்துக் கொடுத்தாராம். அத அப்புறமா தெரிஞ்சிட்டு அந்த சிற்பி, அதுவரைக்கும் பிரமாதமாக கட்டியிருந்த அந்த கோயில் எல்லாம் பிரிச்சிட்டு, இன்னும் பிரமாதமாக் கட்டினாராம் அந்த சிற்பியின் தலைவன். வெற்றிலை மடித்து கொடுத்த ஆளுக்கு, இந்த மாதிரியான சாதா கோவில் சிற்பம் எல்லாம் சரி வராது. இன்னும் சிறப்பாக ஸ்பெஷல் சிற்பம், சிறப்பா செஞ்சி கொடுத்தாங்களாம்.

உடனே ஆதாரம் கேப்பீங்களே! என் சரித்திரம் என்று உ வே சாமிநாதையர் தன்னுடைய சுயசரிதையை எழுதி இருக்கிறார். (அந்த தமிழ்த் தாத்தாவே தான்) அதில் தான் இந்த வெற்றி(லை)க்கதையெச் சொல்லி இருக்கார். உடனே ஓடிப்போய் என் சரித்திரம் படிக்கத் தேட்றீகளா? ஹலோ ஹலோ… அவ்வளவு சீக்கிரம் எல்லாம் படிச்சிட இயலாது. 960 பக்கம் இருக்குதுங்கோ!  ஆனா படிக்க ஆரம்பிச்சுட்டீங்க…. ஏதோ துப்பறியும் நாவல் மாதிரி அம்புட்டு விறுவிறுப்பா போயிட்டே இருக்கும்! உங்கள கூட்டிக்கொண்டு போய் 1870 களில் உக்கார வச்சிடும். அப்போ எப்படியெல்லாம் சிரமப்பட்டுத் தமிழ் கற்று, தமிழ் வளர்த்திருக்கிறார்கள்? என்பது ரொம்ப நல்லாவே தெரியவரும்! இப்ப எவ்வளவு வசதிகள்? கம்ப்யூட்டர் என்ன? இன்டர்நெட் என்ன? சொல்லச் சொல்ல டைப் அடிக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்ன? இவ்வளவு வச்சுக்கிட்டு நாம் என்ன செய்கிறோம் என்று கேள்வி கண்டிப்பாக மனசுல உதிக்கும், உவேசாவின் சுயசரிதம் படித்தால்.

அது சரி… அம்புட்டு வேலை செய்ய வைத்த அந்த வெத்தலை, அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? இந்த வெத்திலை பலான வேலைகளுக்கும், கரு உருவாகமல் இருக்கவும் பயன் படுமாம்.  வெத்தலை பாக்கு சுண்ணாம்பு இந்த மூணு செமெ காம்பினேஷன் தான். காலை உணவுக்குப் பின், பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு மிக குறைவாகவும் வச்சிக்கணுமாம். அப்பத்தான் பித்தம் ஏறாது என்பர்; மலச்சிக்கலும் வராதாம். மதியம், சுண்ணாம்பு அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வாயு கட்டுப்படும்; ஜீரண சக்தி அதிகரிக்கும். இரவு, வெற்றிலை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கபம் தங்காது; சளி வெளியேறி விடும். இப்படி மூன்று வேளையும் மெல்லுவதால், வெற்றிலையில் உள்ள மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, ‘கால்சியம், இரும்பு சத்து’ போன்றவை இயல்பாக உடலுக்குக் கிடைக்குமாம். ஆனா நாமதான் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காமெ ஒரே மாதிரி பீடாவை போட்டு சாப்பிட்டு இருக்கோம்? (வீட்டுத் தோட்ட்த்திலும் கூட வெற்றிலைக் கொடி இருக்குதுங்கோ…!)

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் கம்பர் ஏதாவது வெற்றிலை பத்தி எங்காவது சொல்லியிருக்கிறாராண்ணு பாக்கலைன்னா அது தெய்வ குத்தம் ஆயிடும்லெ! இணையத்தில் தேடிப் போனா, எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒரே இடத்தில் போய் நிக்குது. சீதை அசோகவனத்தில் இருக்கிறப்போ, ராமரைத் தேடி யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பது ராமனால் முடியாதே! இப்படிக் கவலைப்பட்டாகளாம் சீதையம்மா. அதை ஒட்டிய பாடலில் அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;அப்படிப் போகுது கம்பனின் வரிகள். அதில் மெல் அடகு என்பதை வெற்றிலை என்று சிலரும், கீரை எனப் பலரும் பொருள் சொல்கின்றனர்.

அடுத்து இன்னொரு இடம் பரவலாக சொல்லப்படுது. சீதையம்மா விரக்தியில் இருந்த நேரத்தில், அனுமன் வந்து நல்ல செய்தி சொன்னார். அதனால் மகிழ்ந்த சீதை, அவரைப் பாராட்டும் விதமாக தலையில் வெற்றிலை வச்சு ஆசிர்வாதம் செஞ்சதா பல இணையதளங்கள் சொல்லுது. கம்பர் சொன்னதா வேறு சொல்லுது. ஆனா கம்பருடைய பாடல்களை தேடித் தேடி பார்த்தா அந்த மாதிரி தெரிஞ்ச மாதிரி இல்லை. வால்மீகி ராமாயணத்தை அப்படியே மேலோட்டமா (எதையுமே ஒழுங்காத்தான் படிப்பதில்லையே!) படிச்சு பார்த்தா அதுலயும் ஒன்னும் கிடைச்ச மாதிரி தெரியல.

அப்ப எங்கேதான் கம்பர் வெற்றிலையெக் கொண்டு போய் வச்சாரு? கம்பருக்கும் வெற்றிக்குமாவது தொடர்பு இருக்கா இல்லையா? கண்டிப்பா இருக்கு. கம்பருக்கும் சோழ மன்னருக்குமிடையே  ஒரு சின்ன கருத்து மோதல். கம்பர் கோவிச்சிட்டு சேர நாட்டுக்குப் போய்விடுகிறார். ஆறு ஏழு ரீலுக்குப் அப்புறம், சோழ மன்னன், கம்பரை அழைக்கிறார். கம்பரை ஒரு பல்லக்கில் வைத்து சோழ நாட்டு எல்லைக்கு கம்பருடன் சேரனும் ஒரு அடைப்பக்காரன் (வெற்றிலை வைத்திருக்கும் பெட்டியினை வைத்திருப்பவன்) ரூபத்தில் செல்கிறான். அடைப்பக்காரன் தந்த வெற்றிலையை வாயில் போடாது தனது விரல்களுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறார் கம்பர். சோழன், இது என்ன சமாச்சாரம்? எனக் கேட்க, அடைப்பக்காரராக வந்தது சேர மன்னன் என்பதால் தான். அந்த வெற்றிலையை வாயில் போட்டிருந்தால் அரச பதவிக்கு அது அவமானம் என கம்பர் கூறுகிறார்.
 

கம்பர் வாழ்க்கையில் இப்படி ஒரு சூப்பர் சீன் நடந்திருப்பதை ராமாயணத்தில் தராமலா  இருப்பார்? கம்பர் தன்னுடைய வெற்றிலை புராணத்தை ராவணனுடைய அறிமுகத்தில் காட்டுகிறார். ஊர்வசி இருக்காகளே ஊர்வசி, அவங்க உடைவாளை எடுத்து வராங்களாம். ராவணனுக்கு பின்னாடி மேனகை வெற்றிலையெக் பக்கத்திலிருந்து கொடுத்திட்டே வாராங்களாம்…வெற்றிலை வந்து விட்டதால் கதையெ நிப்பாட்டிட்டு பாட்டு பார்ப்போம்.

உருப்பசிஉடைவாள் எடுத்தனள் தொடர, மேனகைவெள்ளடை உதவ,
செருப்பினைத்தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர்குழாம் புடை சுற்ற,
கருப்புரச்சாந்தும், கலவையும், மலரும், கலந்துஉமி்ழ் பரிமளகந்தம்,
மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக் கைவாய் மூக்கிடை மடுப்ப;
(
சுந்தர காண்டம் 407)

ஊர்வசியானவள் உடைவாளை எடுத்துக் கொண்டு பின்னே வரவும்,
மேனகையானவள்  பக்கத்திலிருந்து வெற்றிலையை  வழங்கவும், திலோத்தமையானவள் செருப்பைச் சுமந்தபடி போகவும்,  மற்ற  தேவ மகளிரின் கூட்டம் பக்கங்களில் சூழ்ந்து வரவும், அவன் மேனியைச் சார்ந்த கர்ப்பூரம் கலந்த சந்தனம் குங்குமம் முதலியவற்றின் சாந்தும் பலவகைப்  பூக்களும் ஒன்று சேர்ந்து  வெளிப்படுத்தும் நறுமணமானது, மலைகளை ஒத்த  திக்கு யானைகளின் புள்ளிகளைப் பெற்ற துதிக்கையிலே உள்ள மூக்கில் கலக்கவும், (இராவணன் வந்தான்).

இன்னொரு பக்கம் போனா கொங்கு மங்கல வாழ்த்து கம்பர் தான் எழுதியது எனச் சொல்கிறார்கள். 1913 ல் வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கு. இந்தக் கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்திலும் பல இடங்களில் வெற்றிலை சொல்லப்படுது. மங்கலம் நிறைந்த வெற்றிலைக்கும் நம்முடைய கட்டுமானத்துக்கும், கம்பனுக்கும் தொடர்பு ஏதோ ஒரு வகையில் (பல வகைகளில்)  இருக்கத்தான் செய்யுது. மீண்டும் வேறு ஒரு கோணத்தில் கம்பனைப் பார்ப்போம்

பறக்கும்… பட்டம் பறக்கும்…


ராசாத்தி ஒன்னெக் கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே…

இந்தப் பாடல் இன்று கேட்டாலும் தேனாய் இனிக்கும்.. மனதை நெருடும் ஒரு சோகம் இளையோடும் பாடல் அது.. ஜெயசந்திரன் குரல், விஜய்காந்துக்கு பொருந்தாவிட்டாலும் கூட, அந்த அசாத்திய நடிப்பில் அந்தக் குறையே தெரியாமலே போனதுதான் இதில் ஒரு சிறப்பான அம்சம்.

அதில் காத்தாடியை மட்டும் நாம வச்சிட்டு வெளியெ வந்து விடுவோம். ஏனென்றால் விஜயகாந்த இப்போது பரபரப்பாய் அரசியலில் பேசப் பட்டு வருகிறார். நமக்கெதுக்கு அந்த மதுரையோட பொல்லாப்பு??

சிறு வயதில் காத்தாடி விட்டு மகிழாத ஆட்களே மிகக் குறைவு என்றே சொல்லலாம். K for Kite என்று படிக்கும் எல்லா இளைய தலைமுறையும் கூட அதை ஒரு முறையாவது விடாமலா போய் விடுவார்கள். மொட்டை மாடியிலும், கடற்கரைகளிலும், கிரவுண்ட்களிலும் பார்க்கலாம்.

அந்தமானில் இல்லாத சிலவைகள் என்று பட்டியல் போட்டால் கமுதை குதிரை எல்லாம் இருக்கும். (அதாவது இங்கு இல்லை). பட்டம் விட்டு விளையாடும் பழக்கும் கூட இங்கு இல்லை. ஒரு வேளை 8 மாதம் மழை பெய்வதால் இது எடுபடாமல் போயிருக்குமோ?? (ஆனா கருவாடு மட்டும் செமயா தயாராவதாய் தகவல். அது எப்படி மழையிலும்.. மலைப்பாத்தான் இருக்கு)

காத்தாடி விடும் நிகழ்வை இன்றும் ஒரு திருவிழாவாக ஆக்கி மகிழ்கிறது மோடியின் குஜராத் அரசு. இதற்கு பக்க பலமாய் வண்ண வண்ண காத்தாடிகளோடு அமிதாப் கூட விளம்பரத்திலேயே அசத்து அசத்து என்று அசத்துகிறார்.

காத்தாடி ராமமூர்த்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதனை இங்கே சொல்லாமல் விடுகிறேன். (அப்பொ இங்கே சொல்லப்பட்ட மத்த சேதி எல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன?? என்று நீங்கள் கோபப் பட வேண்டாம்..ப்ளீஸ்).. அப்பொ சொல்லிட்டா பிரச்சினை இல்லை தானே?

மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி இந்தப் பேர் எல்லாம் எப்படி வந்தது? அவர்கள் நாடகத்தில் நடித்த பாத்திரத்தின் பெயர் தான் பின்னர் நிலைத்துவிட்டது. காத்தாடி என்ற பாத்திரத்தில் நடித்து கலக்கிய ராமமூர்த்திக்கு காத்தாடி பறக்காமல் ஒட்டிக் கொண்டது தான் ஆச்சரியம்.
எனக்கு அந்த கவலை இல்லை.. கல்லூரி நாடகத்தில் பெண் வேடம் போட்டு தான் நடித்திருந்தேன்.. கலக்கினேன் என்று நானே எப்படி சொல்ல முடியும்? நண்பர்கள் கிரங்கித்தான் போனார்கள் (என் மேக்கப் பார்த்து..)

காத்தாடியின் இன்னொரு பெயர் தான் பட்டம். ரொம்பவும் மண்டையை ஒடெச்சி படிச்சி வாங்குறதுக்கும் பட்டம் என்கிறார்கள்.. ஆனா ஜாலியா செஞ்சி விளையாடற பொருளுக்கும் பட்டம் என்கிறார்கள். என்ன இது பெரிய்ய வெளெயாட்டா இருக்கே… விருதுக்கும் கூட பட்டம் தருகிறார்கள் என்றும் சொல்வதுண்டு..

இந்த பட்டம் என்றவுடன் ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வரும்.

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல் போலே..

பட்டம் போல் அவர் பள்பளப்பார்…
நூல் போலே இவர் இளைத்திருப்பார்..

இரு வேறு உலகம் இது என்றால்..
இறைவன் என்பவன் எதற்காக??

இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன் தான் படைத்தானா?

இந்தப் பாடல் தரும் சேதியினைத்தான் நம்மூர் உலக நாயகன் கமல் சொல்றார் இப்படி: “அனாதை என்பவர்கள் கடவுளின் குழந்தை என்பது உண்மையாக இருக்குமானால், அந்த கடவுளுக்கே குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்”

முரட்டுத்தனமான நாத்திக வாதமாய் இருப்பினும் கூட, உண்மை அதில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

என்னாலெ காத்தாடி பத்தி, இப்படி நடிகர் திலகம் வரை தான் யோசனை செய்ய முடியுது. ஆனா… இதே மேட்டரை Mr கம்பர் யோசிச்சா…? அவர் எப்படி யோசிப்பார்? அங்கும் ஒரு திலகம் வருகிறது. கொஞ்சம் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு தான் வருவோமே!!

அனுமனின் வீரதீரச் செயல் பார்வையில் படுது நம்ப கம்பருக்கு. உத்துப் பாத்தார்.. சாவே வராத வரம் வாங்கிய தலைவருக்கெல்லாம் திலகம் மாதிரி இருந்தாராம் நம்ம அனுமன். (இப்பொ தெரியுதா..?? நம்மாளுங்க ஏன் நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் பெயர் வைச்சாங்க என்று!!)

அந்த வீரன், அரக்கியின் வாயில் புகுந்து குடல்களைச் சுற்றிக் கொண்டு வானத்தே உயர எழுந்தானாம். அதைப் பாத்த கம்பனுக்கு கயிறு நிலத்திலிருந்து புறப்பட்டு உயரப் பறக்கும் காத்தாடி மாதிரி இருந்ததாம்..

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி சுடர்கொண்டு உடன் எழுந்தான்
மாகால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்.

அது சரி…. உங்களுக்கும் எதைப் பாத்தாவது
இப்படி காத்தாடி ஞாபகம் வருதா?? வந்தா சொல்லுங்க…

பறக்கும் கப்பல் (அ) கடல் விமானம்.


நண்பர்களோடு சின்ன வயசில் என்னென்னவோ செஞ்ச்சிருப்போம். விளையாடியும் இருப்போம். எனக்கு தொட்டில் பழக்கமாய் இருந்து வந்த பழக்கம் இந்தக் கப்பல் செய்வது.. பலர் மழைக் காலத்தில் தான் கப்பல் செய்து விடுவர். நான் மட்டும் எப்போதும் ஏதாவது ஒரு கப்பல் செய்து கொண்டே இருப்பேன். சாதாக் கப்பல், கத்திக் கப்பல், பறக்கும் கப்பல் இப்படிப் பல…

பெரும்பாலும் இந்த கப்பல் செய்து விளையாடும் பழக்கம் எல்லா ஊர்களிலும் மழைக் காலத்தில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.. ஆனால்.. என இளம் பிராயமோ, மழையே மழைக்கு ஒதுங்கும் பரமக்குடியில் கழிந்தது.. ஆனாலும் இந்தக் கப்பல் விடும் ஆசை மட்டும் விட்டு விடுவதாய் இல்லை. திறந்த வெளி கழிவு நீர் பயணிக்கும் தண்ணீரையும் கூட விட்டு வைக்காமல் பயன் படுத்தி கப்பல் விட்டிருக்கிறேன்.

அந்த drainage தண்ணியை மணல் போட்டு மூடி அணை கட்டி நிப்பாட்டி… அதுக்குக் கீழே இன்னொரு அணை கட்டி அதில் சின்ன ஊதுகுழல் பைப் வைத்து அதன் மூலம் தண்ணீர் போக ஏற்பாடு செய்ததும் ஞாபகம் இருக்கு.
வரும் காலத்தில் ஒரு சிவில் இஞ்சினியராக வர இருப்பதை முன்னரே காலம் அறிவித்த விதம் தான் அத்தகைய விளையாட்டுகளொ?? என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.

கப்பல் நிற்கும் துறைமுகங்கள் கட்டும் பணியில் இருந்தாலும் கூட, இந்த பேப்பரில் கப்பல் செய்யும் வேலை மட்டும் மறந்த பாடில்லை. அதுவும் எனக்கு ரொம்பவும் இஷ்டமான ஒரு கப்பல் அந்த பறக்கும் கப்பல் தான். எந்த வீட்டிலும் குழந்தைகளுக்கு அது ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால் கப்பல் எப்பவுமே தண்ணியிலெ தானே போகும்?? அது என்ன பறக்கும் கப்பல்? இந்தக் கப்பல் பறக்குமா? என்ற கேள்விகளை ஆவலோடு கேட்கும் ஆரவமுள்ள குழந்தைகள்.
தொடர்ந்து ஒரு வீட்டிற்கு வாரந்தோறும் போய், அவர்தம் குழந்தைகளுக்கு இந்த பறக்கும் கப்பல் செய்து கொடுக்கப் போய் என்னோட பேரே, “கப்பல் மாமா” என்பதாக மாறி விட்ட கூத்தும் நடந்தது.

ஒரு காலத்தில் கனவாக இருந்த பல, பல ஆண்டுகள் கழித்து நிஜமாகவே நடந்துள்ளன. ரேடியோ, டீவி, மொபைல் போன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனது கனவுக் கப்பலான பறக்கும் கப்பல் அந்தமானில் தனது சேவையைத் துவக்கிய போது நான் தான் அதிகம் சந்தோஷித்தேன். கடலிலும் மிதந்து செல்லும்.. அப்படியே ஆகாயத்திலும் பறக்ககும் வகையில் வடிவமைக்கப் பட்ட பறக்கும் கப்பல் அது sea plane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த மாதிரி இல்லை என்பதும் இதன் தனிச் சிறப்பு. விமானதளத்தில் கிளம்பி கடலில் இறங்குவதும், கடலிலிருந்து மேலே கிளம்பி விமான தளத்தில் இறங்கியதும் ஒரே திரில்லான அனுபவம் தான்.

இந்த பறக்கும் கப்பல் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு. அதனை ஓட்டும் விமானிகளும் வெளி நாட்டவர்.

சமீபத்தில் ஒரு நாள் துணை விமானி இல்லாமல் அந்த பறக்கும் கப்பல் வந்தது. அந்த துணை விமானி சீட்டில் உட்கார நல்ல படித்த பண்பான ஆளை விமானி தேடினார். லேப்டாஉம் கையுமாய் சென்ற நான் அதில் தேர்வானேன்.. அடெடே.. இன்னுமா இந்த உலகம் லேட்டாப்பும் டையும் போட்ட ஆட்களை நல்லவன்னு நம்புது??
பைலட் சீட்டுக்கு அருகில் பயணம்.. நான் எதிலும் கை வைக்க முடியாத அளவுக்கு சீட் பெல்ட்டுகள்… ஆனாலும் ஏதோ நானே ஓட்டுவது போல ஒரு உணர்வு..

நன்றாய் உற்று நோக்கினால்… நவீன தொழில் நுட்ப உபகரணங்களுக்கு மத்தியில் ஒரு சாமி படம் ஒட்டி இருந்தனர்.. பாத்தா..அட… அனுமான் தான் அது… இந்தியாவின் முதல் sea plane என்ற அடை மொழிக்குச் சொந்தக்காரர் அனுமன் தானே.. அதனை அந்த பறக்கும் கப்பலில் ஒட்டி வைத்திருப்பது பொருத்தமான ஒன்று தான்.
அனுமன் வந்தால் தானே ராமாயணமே களைகட்டும். அப்பொ லேசா கம்பராமாயணமும் டச் செய்யலாமே..!! அதுவும் அனுமன் பத்தின சேதி தான்.

ஒரு வேலையை செய்யும் முன் இதை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இறங்குவது ஒரு POSITIVE ரகம். இதெல்லாம் எங்கே முடியப் போகுது? இப்படி நினைத்தும் இறங்குவது Negative ரகம். ரெண்டுக்கும் நடுவிலெ ஒரு ரகம் இருக்கு. மயித்தெக் கட்டி மழையை இழுப்போம்.. வந்தா மலை.. இல்லையா மயிரே போச்சி.. இது எந்த ரகம். Neutral அல்லது நடுநிலை ரகம் என்றும் வச்சிக்கலாம்.

ஆனால் கம்பன் ஒரு புது ரகம் காண்பிக்கிறார். அனுமன் கடல் தாண்ட வேண்டிய தருணம். அனுமன் மனசுலெ என்ன ஓடுது என்பது அவர் கூடவே சுத்திகிட்டு இருக்கும் வானர நண்பர்களுக்குத் தெரியுது..

பூ.. இந்தக் கடல் தானா.. இதையா தாண்ட முடியாது?? இப்படி ஓடுதாம் அனுமன் மனசில்… இதுவும் ஒரு வகை complex தான். Superiority complex என்று சொல்லலாமா??

அதெப்படி முடியும். சாதாரன நபராக இருக்கும் ஒருவர் திடீரென ஒரு மந்திரியின் உதவியாளர் ஆகிவிட்டால், அவரோட நடவடிக்கைகள், எண்ணங்கள் எல்லாம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுது?? அப்பொ ராமர் கிட்டெ நட்பு பழகியவர் கொஞ்சம் மனசுக்குள் காம்ப்ளெக்ஸ் வரத்தான் செய்யும்.

ஆனால் கம்பரோ அப்படி வரப்படாது என்கிறார். சந்தானம் எப்போதும் சொல்லும் advice போல் எடுத்துச் சொல்கிறார்கள் அனுமனின் நண்பர்கள். உன்னோட தோள்கள் என்னவோ மலை மாதிரி இருக்கு. வெற்றி மாலையும் இப்பொவே போட்டுட்டே.. ஆனா மனசுலெ மட்டும் குள்ளமுனி அகத்தியரே குடிச்ச கடல் தானேன்னு நினைக்கிறே அதெ மட்டும் மாத்திக்கோயேன்.. என்றனர் அந்தக் கால சந்தானங்கள்.

குறுமுனி குடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல் வீர
சிறிது இது என்று இகழற்பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.

அதுசரி.. இப்படி கம்பராமாயணம் பத்தி எழுதுறேனே.. என்ன நெனைச்சி எழுதுறேன்.. படிக்கமாட்டாங்கன்னு இல்லை… படிச்சா நல்லா இருக்குமே.. இந்த நெனைப்பு தான்.

கம்ப தர்மர்


ஏழாம் அறிவு படம் மூலமாய் போதி தருமர் பற்றி தமிழ் உலகமே கண்டு கொண்டது. தமிழர்களுக்கு ஆறாம் அறிவு தாண்டி வேறு என்னவெல்லாம் இருந்தது..இருக்கிறது..இருக்கும் என்ற கோணத்தில் இப்போது யோசிக்க வேண்டியுள்ளது.

வடிவேலு காமெடி ஒன்று.. “ஹலோ நான் வட்டச் செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்…யார் பேசுறது” என்று கேட்பார். பதிலுக்கு நான் சதுரச் செயலாளர் பேசுறேன் என்றும், வட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கும் போது சதுரத்துக்கு இருக்க மாட்டாரா என்று கேள்வி வேறு இருக்கும் அருமையான ரசிக்க வைக்கும் காமெடி அது.

ஒரு உன்மை மட்டும் மறுக்க முடியாது இதில். வட்டம் ஏதாவது வம்பு செய்தால் நாம் அனுக வேண்டிய இடம் மாவட்டம். மாவட்டம் ஏதும் வில்லங்கம் செய்தால் அவரை விட மேலிடத்தை நாம் அணுக வேண்டும் என்பது தான் அந்த காமெடி பீஸ் நமக்கு உணர்த்தும் 6ம் அறிவு.

நியூட்டனின் விதி தெரியுமா என்று யாரைக்கேட்டாலும் அந்த மூன்றாம் விதி தான் கூறுவர். இது தான் விதி போலும் என்று மற்ற விதிகள்,  விதி வலியது என்று சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்குமோ..??

முதல் விதியினை கொஞ்சம் பாருங்கள்.. நகரும் பொருள் நகர்ந்து கொண்டே இருக்கும்… நகராப் பொருள் நகராதும் இருக்கும்.  எது வரை?? ஏதாவது ஓர் இடைஞ்சல் அதற்கு வராத வரை..

அதுவும் புவி ஈர்ப்பு விசை உள்ள இடத்தில் அதையும் மீறி ஏதாவது பொருள் போக வேண்டுமா..என்ன செய்யணும்?? அதை விட மஹா சக்தி தேவை. இதைச் சொல்லத்தான் மாவட்டம் வட்டம் கதை எல்லாம் எடுத்தேன் முன்னாடியே..

கம்பராமாயணத்தில் ஒரு கட்டம் வருகிறது.. அனுமன் இலங்கையின் மதிற்சுவரை தாவி அதன் மேல் நிக்கிறார்..(மதில் மேல் பூனை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மதில் மேல் குரங்கு) அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட மேல் உலகு வாழ் தேவர்கள், அனுமனுக்கு வாழ்த்து தெரிவிக்க மலர்கள் தூவினார்களாம்… அந்த மலர்களும் நேரே கொஞ்சம் இறங்கி வந்தனவாம்.. அப்புறம் அந்த இராவணனுக்கு கோபம் வந்துட்டா என்னா செய்றது என்று நெனைச்சி அப்படியே மேலே போயிடிச்சாம்..

கீழே விழுவது வேண்டுமானால் புவி ஈர்ப்பு விசையில் விழுவதாய் வத்துக் கொள்ளலாம்.. ஆனால் தேவர்களின் ஆசியையும் தாண்டி இராவணனின் எதிர் விசை செயல் படுகிறதாம்.. அதுவும் அந்த புவி ஈர்ப்பு விசையையும் தாண்டி… நட்சத்திரம் போல் அங்கேயே நின்னுடுதாம்…கம்பர் சொல்றார்..நானும் படிச்சதைச் சொல்றேன்.

இரண்டு விஷயங்கள் இங்கு தெளிவாகுது:

  1. நியூட்டனின் முதல் விதி நியூட்டனுக்கு முன்பே கம்பன் அறிந்திருக்க வேன்டும்.
  2. புவி ஈர்ப்பு சக்தி பற்றிய சேதியும் கம்பர் தெரிந்து வைத்திருக்கிறார்.

 இதோ அதன் ஆதரவுப் பாடல்:

எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூமழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்.

கம்பனின் பார்வையில் என்னும் என்ன என்ன கிடைக்குமோ?? பாக்கலாம்..

எல்லாம்…ம்..எல்லாம்….


சமீப காலமாக பிரகாஷ்ராஜ் கலக்கும் ஒரு ஃபோன் விளம்பரம் டிவியில் பிரசித்தம்..அதிலும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் லேசா கண் சிமிட்டி விட்டு லேசாக சிரித்தபடி ம்…எல்லாம் என்று சொல்வதும், அழகோ அழகு தான்.

இவ்வளவு வரிஞ்சி கட்டி எழுதும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஏதோ பலான மெட்டர் என்று… இருக்கட்டுமே..அதுவும் வாழ்க்கையோடு சேர்ந்த பகுதி தானே.. எவ்வளவு என்பதில் தான் மனிதனின் தரம் நிர்ணயம் ஆகிறது.

அந்தக் காலத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று படங்கள் சில வந்தன.. குழந்தைகளோடு அந்தப் படங்கள் போகாது இருந்தோம்.. இப்பொ சின்ன வீடா வரட்டுமா? என்ற பாடல் நமது வீட்டின் முன் அறையில் எல்லார் முன்பும் கேட்கிறது.

சமீபத்திய Science Exhibhition ல் கருத்தடை சாதனங்கள் வைத்து ஒரு எட்டாம் வகுப்பு மாணவி விளக்கிய போது.., கேட்கும் நமக்குத்தான் சங்கடமாய் இருந்தது.

என் பையனிடம், பொடிப்பயலே, Facebook ல் அம்மனமா படம் வருதாம் பாத்து பாரு என்றேன்.. அவன் கூலா சொல்றான், அந்த Close button எதுக்கு இருக்கு?. Internet ல் எல்லாம் தான் இருக்கும். நாம நல்லதை எடுத்துக்க வேணும் என்று லெக்சர் தருகிறான். ம்… என்னத்தெச் சொல்ல???

இந்த பலான சமாச்சாரங்கள் காலம் காலமாய் இருந்து தான் வருகின்றன. அறத்தின் வழியாக பொருள் ஈட்டி அதன் மூலம் இன்பம் துய்க்க வேண்டும் என்கிறார் நமது ஐயன் வள்ளுவர்.

அந்த காலத்து A சர்டிஃபிகேட் வாங்கிய பாடல்களின் தொகுப்புகள் அகப் பாடல்கள் என்று அடக்கி விட்டனர்.

இப்பொ யார் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் படிக்கலாம் என்று வந்ததில் தான் சிக்கலே உருவாகிறது. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சாமான்யன் ஒருவன் படித்து.., அதை எப்படி பொருள் கொள்வான் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

உணர்சிகளை கட்டுக்கும் வைத்திருக்கும் கலை மனிதனுக்கு வேன்டும் என்பதால் தான், சில சேதிகளை அரசல் புரசலாக வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்தில் அப்படி ஏகப்பட்ட இடங்களில் அரசல் புரசல்களாக வந்ததை கம்பரஸம் என்று தொகுத்து விட்டார்கள்.

நம்ம கண்ணுக்கும் அப்பப்பொ சில சங்கதிகள் மாட்டுது. அதில் அந்த மாதிரி ஒரு மேட்டரைத் தாண்டி கம்பர் சொல்லும் சேதியும் தெரியுது. ஒரு காட்சி பாக்கலாமா??

அனுமன், ஜாலியா இலங்கைக்கு என்ட்ரி செய்கிறார். அனுமனின் பார்வையில் என்ன என்ன படுகிறது என்பதை கண்ணில் பார்த்த கம்பன் அப்படியே எழுதுகிறார்… வாங்க… நாமளும் கூடவே ஒட்டுப் பாப்போம்.

மனைவிமார்கள் தங்கள் கணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்… அவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா?? வீராதி வீரர்கள்..சூராதி சூரர்கள்.

அவர்களுக்குத் துணை யார் தெரியுமா? காதல் மயக்கம் தான். உயிரை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் உடலாய் படுக்கையில் கிடந்தார்களாம் காதல் மயக்கத்தில்..

அந்த மயக்கத்திலும் வாசல் மேல், விழி மேல் விழியே வைத்து பாத்துக் கிடந்தார்களாம். அப்போது தூது சென்ற மகளிர் வந்தார்களாம். அவர்களைப் பாத்ததும்..அவர்களின் முகத்தில் புன்னகையைப் பாத்ததும் போன உயிர் திரும்பி வந்ததாம்… ஆனந்தத்தில் அப்படியே பூரித்தார்களா??…அதுதான் இல்லை…துடித்துப் போய் விட்டார்களாம்..கம்பன் சொன்னது இது.

கம்பன் சொல்லாத கதை இப்பொ பாக்கலாமா… இது கம்பன் எழுதியது என்றாலும் கூட, பார்த்தது யார்? அனுமன். ஒரு வகையில் அனுமனும் தூதர் தானே… சீதா தேவியைப் பாத்துவிட்டு தகவல் சொன்னால் ராமரும் இப்படித்தான் சந்தோஷத்திலும் துடித்துப் போவார் போலும்..என்று அனுமன் நினைப்பதாய் கம்பர் நினைத்து எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. ஆமா..நீங்க என்ன நெனைக்கிறீங்க???

அதுக்கு முன்னாடி பாட்டையும் போட்றேன் (சன் ம்யூசிக் பாக்கிற பின் விளைவு தான்)

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய சலத்தர் வைகும்
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலின் சாய்வர்
மாதுயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை  .

 மீண்டும் அனுமனோடு பாத்து வருகிறேன்.

எங்கே தொட்டா எங்கே வலிக்கும்??


 தொட்டுக் கொள்ளவா?? என்று செல்லமாய் கேட்கும் பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீங்க… கேக்கும் போதே தொடத் தோன்றும்… அவ்வளவு பாவனையுடன் அமைந்த பாடல் அது.

அதுக்கப்புறம் தொட்டால் பூ மலரும்…என்று சொல்லி, பதிலுக்கு தொடாமல் நான் மலர்ந்தேன் என்று போட்டு வாங்கியது.. அதுக்காக காதலன் தொடவே கூடாது என்ற அர்த்தத்தில் காதலி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை தான்.  தொடாமலேயே என் மலர் போன்ற முகம் இவ்வளவு மலர்கிறதே… நீ தொட்டால்..இன்னும் மலரும் என்று யோசிக்க வைக்குது.. (நான் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறேன்..உங்களுக்கு அப்படி ஏதும் படுதா???)

 காலங்கள் மாறின… அட சன்டாளா..உன் கண் பட்டாலே கர்ப்பம் ஆயிடுவாளே!!! என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்… இது என்ன கண்கட்டு வித்தை என்று யோசிக்க வேண்டாம்.. கர்ண பரம்பரையாக கர்ணன் பிறந்த கதையும் இந்த கர்ப்ப வகை தானே..

சரி அப்படியே… எங்கே தொட்டா எங்கே  வலிக்கும் எரியாவுக்கு வந்து ரவுண்ட் கட்டுவோம்.

கதாநாயகனை வழிக்குக் கொண்டு வர இந்த வலியினை கையில் எடுக்கும் யுத்தி. இதில் நாயகனுக்கு வேண்டிய நபர்கள் அம்மா, அப்பா, தாத்தா, தங்கை, சகோதரன் குழந்தைகள் என்று எது எதுவோ மாறி மாறி வரும்.. ஆனா மாறாத ஒரு விஷயம்… அந்த ஒரு டயலாக்.. அங்கே தொட்டா இங்கே வலிக்கும் என்பது தான்.

மேடைப் பேச்சுகளிலும் எதைத் தொட்டா ஆடியன்ஸ் காதில் சங்கதி ஏறும்? என்பதை தெரிந்து கொள்ளல் அவசியம்.. (இந்த மாதிரி போஸ்டிங்க் போடும் போது உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை நான் போடுகிறேனா?? – என்ன நான் சரியா….எழுதுறேனா???)

இன்று (17-11-2011) லிட்டில் அந்தமான் தீவுகளின் அனைத்து பள்ளிகளும் ஒன்று சேர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தினர். நான் தான் சிறப்பு விருந்தினர் இங்கு அதனைத் திறந்து வைக்க…பேச.. (புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பதில் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கிறது). மாணவர்கள் கூட்டம் எக்குத் தப்பாய். கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு அதை பார்க்கவும் பொது ஜனங்கள் வேறு.. இவர்கள் மத்தியில் அறிவியல் பற்றியும் பேச வேன்டும்.

“நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா தண்ணி குடிக்கக் கேட்டா, உடனே கொண்டு வந்து குடுப்பேன்.. இப்பொ நீங்க குடுப்பீங்களா??” இது என் முதல் கேள்வி…

நஹி… என்று உண்மையான பதில் வந்தது. குழந்தைகள் எந்த ஊரிலும் எந்தத் தீவிலும் பொய் சொல்வதில்லை.

“இதெ..இதெ தான் எதிர் பாத்தேன்.. ஏன் இப்படி?? Generation Gap என்று நான் சொல்ல மாட்டேன். This generation needs everything into scientific approach… ஏன் நான் தண்ணீர் தரனும்? நீங்களே ஏன் போய் தண்ணி புடிச்சி தரக்கூடாது?? அக்காவை அல்லது தம்பியை ஏன் கூப்பிடலை?? இவ்வளவு ஏன் எதற்கு எப்படி இப்போதைய பசங்க கேக்கிறாய்ங்க… கேளுங்க… கேளுங்க.. நல்லா கேளுங்க.. இந்த மாதிரியான கேள்விகள் தான் அறிவியலின் ஆதாரம்..” கூட்டம் ஆர்வத்துடன் கேக்க ஆரம்பித்தது.

கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம் பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல. என்னையும் உங்களையும் மாதிரி சாமானியர்கள் தான். சொல்லப் போனால்,  காதுலெ என்ன பஞ்சா வச்சிருக்கே என்று திட்டு வாங்கின பையன் தான் Ear Muff கண்டுபிடித்த சேதியும், வீட்டு வேலை செய்த பெண்மனி மேடம் கியூரி ஆகி இரண்டு நோபல் பரிசு பெற்ற சேதியும் சொல்ல… பசங்க மாத்திரமில்லெ மற்றவர்களும் நல்லா கேட்டார்கள்..

சம்பந்தம் இல்லாததை இழுத்துக் கொண்டு வந்து சம்பந்தப் படுத்தி எழுதுவது எதில் சேத்தி… நான் மட்டும் வம்படியா கம்பரை இழுக்கலையா என்ன???

இப்பொ கம்பர் வந்துட்டாரா… இவர் பாருங்க… சம்பந்தம் இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்வார்.. பாக்கலாமா???

அனுமனைப் பாக்கிறார்.. பாத்தா ஒரு பாய்மரம் மாதிரி தெரியுதாம்.. (எனக்கு என்னமோ Life Boat மாதிரி தெரியுது). ஓகெ Fine.. எப்பொ தெரியுமா?? ஒரு மலைமேலே அனுமன் கால் வைக்கிறார். அப்பொ அந்த மலை அப்படியே பூமிக்கும் கீழே போகுதாம்.. அதெப் பாத்தா ஒரு படகு மூழ்கும் போது பாய்மரம் வெளியே தெரியுதே…அது மாதிரி இருக்காம். இது வரை எல்லாம் சரி தான்.

நடுவில் கம்பர் ஒரு பிட்டு போட்றார் பாருங்க..

அந்த மலையில் அனுமன் கால் அழுத்தத்தால் வானத்திலெ கீற நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மேகம் இவை எல்லாம் கொஞ்சம் மெரண்டு போய் மேலே போயிட்டதாம்.. இங்கே கால வச்சா அங்கே என்ன நடக்குது பாத்தீகளா??

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிரத் தாழ்ந்து
பாரிடை அழுத்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு எனக் குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!

இன்னும் வரும்.

அரண்டவன் கண்ணுக்கு…


வெளிப்பார்வைக்கு சாதுவாய் இருப்பவர்கள் வீட்டிலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் என்று சில லீலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அலுவலகத்தில் சாந்த சொரூபியாய் இருந்து கொண்டு, வீட்டிற்கு வந்தால் மூக்குக்கு மேலும், தொட்டதுக்கெல்லாம் அடி என்று விளாசுபவர்களும் இருக்காக..

பிறர் முன்னர் தான் இன்னார் என்று நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு இமேஜ் உருவாக்க வேண்டியது.. பின்னர் அதைக் காப்பாற்ற சிரமப் பட வேண்டியது..இதுவே பலரின் வாழ்க்கை தத்துவம்.

என் நண்பர் ஒரு பார்ட்டிக்கு போனார்… நல்ல வெளிநாட்டு சரக்கை ஒரு பிடி பிடிக்கலாம் என்று இருந்தாராம். ஆனா..நீங்க எல்லாம் எங்கே தண்ணி அடிக்கப் போறீங்க??.. இந்தாங்க..என்று ஒரு ஜுஸ் கிளாஸ் கையில் கிடைத்ததாம்… அட..உலகம் இன்னுமா என்னையெ நல்லவன்னு நெனைச்சிட்டு இருக்கு?? என்று அவரும் நல்ல புள்ளையா ஜூஸ் குடிச்சிட்டு வந்திட்டாராம்.. இது எப்படி இருக்கு??

மாமியார் ஒடைச்சா மண்குடம்…அதே மருமகள் ஒடைச்சா.. பொன்குடம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க…. அந்தமானில் ஒரு மாமியார் ஊரிலிருந்து வந்தால் போதும்… அந்த மருமகளின் நண்பிகள் அனைவரும் அந்த மாமியாரை அம்மா என்று அழைத்து விடுவார்கள்… எனக்கு அது விளங்கலை ஆரம்பத்தில்.. நண்பியின் அண்ணாவை அண்ணா என்றும், தங்கையை தங்கை என்றும் அழைப்பவர்கள்… அத்தையை மட்டும் அம்மா என்கிறார்களே..ஏன்??

அத்தை உறவு கொஞ்சம் சிக்கலானது..அம்மா..அன்பு மயமானது.. இதை விட்டால் வேறு என்ன காரணம் பெரிசா இருக்கப் போவுது.

மரத்துக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா யாரோ நல்லா கதை கட்டி விட்டாங்க… புளிய மரம்… மரத்து உச்சி…என்ன சம்பந்தமோ… பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்தில் தொங்கித்தானே ஆகனும்…இப்படி வேறு…

டி என் கே, அந்த பேயும் புருஷன் கூட சன்டை போடும் தெரியுமா??

யாரது?? திரும்பினா… அட..நம்ம கம்பர்.. வாலை சுருட்டி ஐயா என்ன சொல்றாருன்னு கேப்போமே…

இலங்கைக்கு அனுமன் போகும் மெய்டன் விசிட். பாக்குறது எல்லாம் வித்தியாசமா தெரியுது.

அங்கே அரக்க மகளிர் சரக்கு அடிச்சி கெடக்கிராய்ங்க… இடை எக்கச்சக்கமா இருக்காம்…ஆகாயம் மாதிரி.. ஒரு ஷேப்பில் இல்லாமெ..

தண்ணி அடிக்கிற அடியில் கண்ணே சிவந்து போச்சாம்… ஓரம் வேறு கருப்பா அந்த மை வேறு… வாய் வெளிறிப் போச்சாம்… புருவம் வளைஞ்சே போச்சாம்… துடித்தன வாயும் கண்ணும்..

மதிமுகம்…புதுமுகமா ஆச்சாம்… எங்கே பாத்தாக அதை?? அதே கள்ளில் முகம் பாத்தாக..

அட..யாரு இந்த சக்களத்தி…?? அப்படியே புருஷன் கூட போய் சன்டை போட்டாகளாம்…

அனுமன் அமைதியா ஜாலியா அதை ரசித்தபடி நடக்கிறார்.

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி முகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கிக் கணவரைல் கனல்கின்றாரை.

நாம ஏதோ சீரியல் பாக்கிற மாதிரி இல்லை??