இப்படியும் பார்க்கலாமா?


TNK with Dr Saraswathi Ramanathan at A

[பாமரத்தனமாய் கம்பனை எழுத ஊக்கம் அளித்து, என நூலான பாமரன் பார்வையில் கம்பனுக்கு முனைவர் சரசுவதி இராமநாதன் அளித்த அணிந்துரை…. சாரி… மிகப் பெரிய கௌரவம்… இதோ உங்கள் பார்வைக்கு)

இப்படியும் பார்க்கலாமா?

(முனைவர் சரசுவதி இராமநாதன்.
தமிழ்ப் பேராசிரியை – பணி நிறைவு, பள்ளத்தூர்.
தலைவர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.
தலைவர், இசைப்பிரியா, திருவாரூர்.
தலைவர், சரசுவதி இராமநாதன் அறக்கட்டளை, பள்ளத்தூர்.
தலைவர், ஔவைக்கோட்டம், திருவையாறு)

ஒன்பது வயதில் காரைக்குடி கம்பன் திருநாளில் பாட மேடையேறி, 10 முதல் 12 வயது வரை நடனம் ஆடி, அதே மேடையில் 22 வயது முதல் இந்த 74 வயதிலும் பேசிவரும் பேறு பெற்ற ஒரே பேச்சாளர் நானாகத்தான் இருக்க முடியும். அது குறித்து நான் இறையருளையும், குருவருளையும் வணங்கி மகிழ்கிறேன். பலப்பல கோணங்களில் கம்பனை அணுகி ஆராயும், அல்லது அரைத்த மாவையே அரைக்கும் எந்த அறிஞரும் சிந்திக்காத புதுக் கோணத்தில் கம்பரை அணுகிப் பல கட்டுரைகள் தந்துள்ள அந்தமான் தமிழ்நெஞ்சன் கிருஷ்ணமூர்த்தியை உளமார வாழ்த்துகிறேன். [ ”என்ன பார்வை உந்தன் பார்வை” என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதலாமா என எண்ணினேன்! சரிதானே?]

அந்தமான் தமிழர் சங்கத்துடன் எங்கள் ஔவைக்கோட்டம் இணைந்து மாநாடு நட்த்திய போது அறிமுகமான சிரித்த முகத்துத் தமிழ்நெஞ்சனின் மடிக்கணினி (அதாங்க லேப்டாப்) கம்பனை கலகலகம்பர் என அறிமுகப் படுத்தியது. கம்பன் கலகலக்க வைத்தாரோ இல்லையோ, கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகள் கலகலப்பாக, பாமரனையும், கம்பனையும் இணைத்து மகிழ்கிறது. எளிய யாவரும் அறிந்த திரைப்பாடல் வரிகளைத் தலைப்பாக்கி, நடைமுறைப் பேச்சுத் தமிழில் எழுதி அரிய செய்திகளைக் கம்பன் வழி நின்று விளக்கும் அற்புதக் கலவை இவரது கட்டுரைகள்! புதிய சிந்தனைகளை நூல்கள் வழி வெளியிடுவோர் (தேவகோட்டை) மணிமேகலைப் பிரசுரம், எங்கள் அண்ணா தமிழ்வாணனின் அன்புக் குடும்பம் வாழ்க! வளர்க!

எடுத்தவுடனேயே “காக்கா பிடித்த” விசுவாமித்திரர் நமக்கு அறிமுகமாகிறார். நமக்குத் தமிழ் நெஞ்சன் பாடம் சொல்கிறார், “யாராவது காக்கா பிடித்தா உண்மைன்னு நம்பிடாதீங்க. தள்ளி நின்னு ரசிங்க.” (பக்கம் 4)

டி எம் எஸ் என்ற மாபெரும் இசைக்கலைஞன் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்றும், ‘என் கதை முடியும் நேரமிது’ என்றும் பாடியது தான் அவரது திரையிசைப் பயணத்தை முடித்ததா? தசரதன், “இத்தனை நாள் மன்பதை காத்து நான்பட்ட வேதனைகளை இனி என் மகன் இராமன் படட்டும்” என்று சொன்ன வேளைதான் இராமனின் துன்பங்களுக்கு ஆளானதோ? சிந்திக்க வைக்கிறார். எதையும் எதையும் முடிச்சுப் போட வைக்க முடிகிறது. (பக்கம் 6)

வரமா – சாபமா – தசரதன் புத்திர சோகத்தால் மரணம் அடைவான் என்று சலபோசன முனிவன் சாபம் கொடுத்தான். அப்போது தசரதனுக்குப் பிள்ளை இல்லை. ஆகவே பிள்ளை பிறப்பா என மகிழ்ந்தான். அது வரமாயிற்று என்றது அழகு! இப்படி கட்டுரை வருவது ‘வரமா? சாபமா?’ (பக்கம் 9)

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்த அகத்தியன் குறுமுனி. இராமனோ நெடுமையால் உலகளந்த நெடியோன். இருவரும் தழுவிக் கொண்டனர். கம்பனின் வார்த்தை ஜாலம் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றாகப் புலப்பட்டிருக்கிறது. நமக்கும் காட்டுகிறார். (பக்கம் 13)

ஒரு மாலையால் நிலத்தைக் குழி விழச் செய்ய முடியுமா? அவ்வளவு அழுத்தமாகப் பந்து வீசும் “பௌலரா” கூனி என்று கூஇயின் ஆத்திரத்தின் வேகத்தை நாம் அறிய வைக்கிறார் கம்பர்; இல்லை; தமிழ் நெஞ்சன். (பக்கம் 21)

‘பெர்முடாஸ்’ என்ற அரைக்கால் சட்டை நாகரீகம் எங்கும் பரவிவிட்ட்து. குகன் அப்படித்தான் போடு வந்தான். ’காழம் இட்ட குறங்கினன்’ என்ற தொடரின் விளக்கம் நன்று. (பக்கம் 25)
‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற வீரப்பனின் வசனம் – சூர்ப்பனகை வாயில் ’உல்டா’ ஆகிறது. (நானும் தமிழ் நெஞ்சன் நடைக்கு வந்து விட்டேனா?) மண்ந்தால் மாதவன் அன்றேல் மரணதேவன் – என்கிறாளாம். (சூர்ப்ப – முறம், நாகா – நகம்) (பக்கம் 31)

‘பெண் பிறந்தேனுக்கென்றால் என்படும் பிறருக்கு?’ என்ற கம்பன் வரி, ‘ செந்தமிழ்த்தேன் மொழியால்’ பாட்டில் ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?’ என வைத்த்து என்கிறார். சரிதான். ‘கம்பன் கொடுத்த கவிப்பிச்சை ஓரளவு’ என்று கவியரசரே பாடியுள்ளாரே!

நைய்யாண்டியா?

ஏங்க! கிருஷ்ணமூர்த்தி மட்டும் திரைப்பாடல், பட்த்தலைப்புகளை எடுத்தாளலாமா? நான் செய்யக் கூடாதா? கிண்டலில் சமுதாயச் சிந்தனைகளைத் தருவது நல்ல கலைஞர்களுக்கு அழகு! வெறும் சிரிப்பலைகளை மட்டும் வீசாமல் அந்தமான் ஆழ்கடல் பவளம் போல அழகான சமுதாயச் சிந்தனைகளைத் தந்துள்ளமை போற்றற்குரியது. “மனசு முழுக்க மனையாளை வச்சிக்குங்க! பார்க்க நல்லது. பர்சுக்கும் அல்லது” – காலத்திற்குத் தேவையான புத்திமதி இது! ( வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே – பாட்டின் விளக்கம் தொடங்கி, சூர்ப்பநகை இராவணனிடம் பேசுவது வரை கலகலப்புத்தான்.)

’எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்’ விவேக் ‘காமெடி’ எய்ட்ஸ் த்டுப்புக்கான விளம்பரமாயிற்று! தசமுகன், சீதையின் அழகில் மயங்கி உடம்பு பருத்துவிட்டானாம். அவள் கிடைப்பாளா, மாட்டாளா என்ற ஏக்கத்தில் இளைத்து விட்டானாம்!

“வீங்கின, மெலிந்தன வீரத்தோள்களே!” என்றார் கம்பர். தமிழ்நெஞ்சன் ஒரு காலத்தில் கம்பனைக் கிண்டல் செய்தவர் தான்! பத்துத்தலை எந்த வரிசையில் இருந்தாலும் ’பேலன்ஸ்’ ஆகாதே!” என்றவர்! இப்போது இராமாயணத்தை வரிவரியாக விழுந்து விழுந்து படித்து நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். “எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?”

அறை சிறை நிறை

கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்த்து என்று தொடங்கி, சடாயு என்ற் கழுகு, இராமனுக்குக் கோபத்தை அடக்கு என்ரு அறிவரை சொன்னதை வளர்த்து,கம்பனின் பாதை அறப்பாதை, அமைதிப் பாதை என முடித்த்து அருமை! லார்ட் மயோ கொலை, அந்தமான் செல்லுலார் சிறை என்று அனைத்தையும் இணைத்து விட்டாரே! அபார மூளை!

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம தோணுதடி’ என்ற பாட்டில் வெற்றிலை இடிக்கும் சத்தம் இடையிசையாக வரும். அதிலே மனம் லயித்து, ‘கொட்ட்டைப் பாக்கும் கொழுந்து வெத்திலை’ குஷ்புவின் ஆட்ட்த்தில் ஈடுபட்டு, அப்பாவின் வெற்றிலை போடும் பழக்கத்தினை அசை போட்டு, ஊரெல்லாம் வெற்றிலையை மென்று வீதியுல் துப்பும் நம் (துப்பு உள்ள துப்பு கெட்ட) மனிதரை நினைத்து வருந்துகிறார். அரக்கிமார் வீசி எறிந்த நகைகள் அனுமனை நடக்க விடாமல் தடுத்ததாம் இலங்கையில் – கம்பர் காட்சிக்கு வம்பர் எங்கெல்லாம் போய் விளக்கம் தருகிறார் பாருங்கள்!

சோகத்திலும் சிரிக்கலாம் – கடவுள் துணையிருந்தால், கடவுள் கூடவே இருந்தால்!

கம்பரைப் படிக்கணும், அன்போடு, இன்னும் அன்பு சேர்ந்து படிக்கணும்.

கம்பன் கணக்கில் புலி. வெள்ளம் என்பதன் விளக்கம் நமக்கு அதைக் காட்டுகிறது.

எதிர்காலத்தில் நிகழ்காலமாய் நினைத்துத் தேசத்திற்கு விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியாரைத் தினம் நினைவு கொள்வோம்.

பொண்டாட்டி இல்லாத நேரத்தில் அதிக்க் கவனம் தேவை!

மனப்பாடமா வாய்ப்பாடுகள் சொல்லும் இந்தியாவின் மனக்கணக்குத்திறன் உஅலக அரங்கில் அவனை உயர்த்தியுள்ளது.

ஏழ்மையைக் கழித்து, செழுமையைக் கூட்டி, சமதர்ம்ம் பெருக்கிட வழி செய்வோம்.

பேசித் தீருங்க பிரச்சினைகளை!
பிரச்சினைகளை அலசிப் பார்த்து முடிவெடுங்க!

நியூட்டனின் விதி – 3 ‘ஒவ்வொரு விசைக்கும் அதற்க்குச் சம்மான எதிர் விசை உண்டு’ என்பது. வாலி சுக்ரீவனைப் போருக்கழைக்குமிட்த்தில் (கிட்கிந்தா காண்டம் – வாலி வதைப்படலம்) இதைக் கம்பன் முன்னரே சொல்லி இருக்கானே! என வியக்கிறார் ஆசிரியர். ‘வாழைப்பழத்தில் ஊசி’ நுழைந்த மாதிரி வாலியில் மார்பில் இராமபாணம் சென்றது. பின் நின்றது! இதை வாழைப்பழ (கரகாட்டக் காரரின் கவுண்டமணி செந்தில்) நகைச்சுவைக் கலாட்டாவில் தொடங்கி, விளங்கிவிட்டு, ஆமாம் எது வாழைப்பழம்? எது ஊசி? என்று கலாய்க்கிறாரே! அழகு!

கழுதைக்குப் பின்னாலும், ஆபீசருக்கு முன்னாலும் அடிக்கடி போய் நிற்காதே! – நல்ல அறிவுரை.

அரசு அலுவலகத்திற்குப் போன கடிதம் மாதிரி ஒரு பதிலும் இல்லை. நல்ல அங்கதம் (Satire). கலைஞரை வாலியும் வைரமுத்துவும் புகழ்வது போல எனக் கிண்டல் வேறு!

மென்மையாகக் காலைப்பிடித்துக் கொடுத்து எழுப்பினால், (கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்) எழுப்பிப் பாருங்கள் சண்டை சச்சரவே இருக்காது. நல்ல தீர்வு! காலில் விழும் கலாச்சாரம் – கம்பனில் நிறைய உண்டு.

தேவையில்லாத கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்! சீதையைப் பிரிந்த இராமன் இயந்திர மனிதன் (Robot) மாதிரி இயங்கினான் எபதால் கம்பனுக்கு எந்திரன் பற்றித் தெரிந்திருக்க்க் கூடும் என்கிறார்.

நொடிப் பொழுதில் விபத்து. ரேஷன் கார்டிலிருந்து அவன் பெயரே நீக்கப்படுகிறது.

திமிங்கில கிலங்கள் (திமிங்கிலங்களையே கொன்றுவிடும் கடல்வால் உயிரினம்) என்று கம்பன் குறிப்பது வியப்புக்குரியது.

நிறைவாக்க் கம்பன் மேலாண்மை குரு என்று கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறார். இன்று காலம், ஆற்றல், மனாழுத்தம் எல்லாவற்ரிற்கும் மேலாண்மை தேவை என்கிறோம். அவையனைத்தும் கம்பநாடனின் இராமகாதையிலே உள்ளன என்றுஇந்த நிர்வாக மேலாண்மையாளர் சொன்னால சரியாய்த்தானே இருக்கும்!

இன்னும் எழுதுக!

எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது அத்தனை செய்திகள்! அதுவும் எளிய இனிய நடையில்! பாமரனிடம் கம்பனைக் கொண்டு செல்லும் அரிய முயற்சி இது! தமிழ்நெஞ்சனே! இனிய கம்பநேசனே! அந்தமானைப் போன்ற அழகான நூலைத் தந்த உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க! இன்னும் எழுதுங்கள்.

என வாழ்த்தும்,
சரசுவதி இராமநாதன்

Kamban – a Management Expert


ஆய்வுக் கட்டுரை - தொகுதி 3[காரைக்குடி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்திய கம்பராமாயண உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கில் அடியேன் முதன் முதலாய் படைத்த ஆய்வுக் கட்டுரை. இக்கட்டுரையினையும் ”வேறுள குழுவையெல்லாம் மென்ற மானுடன்: கம்பன்”- என்ற தலைப்பில் கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிய்ட்டுள்ள நூலில் வெளியிட்டுள்ளனர். வெளியீடு: கபிலன் பதிப்பகம். arunankapilan@gmail.com]

கம்பன் என்றொரு மேலாண்மைத் திறனாளன்

மேலாண்மைக் கோட்பாடுகள்:

மனித நாகரீகம் தொடங்கிய காலம் தொட்டே, குழுவுடன் வாழும் மனப்பாங்கும் ஆரம்பம் ஆனது. குழுவினரிடையே ஒரு சுமூக சூழல் நிலவத் தேவையான அனைத்தும் செய்திட வேண்டிய தேவையும் ஏற்பட, மேலாண்மை நிர்வாகம் என்ற பெயர் இடப்படாமலேயே அக்கலையும் (ஒரு வகையில் அறிவியலும் கூட) வளர்ந்தே வந்தது. காலத்திற்கேற்ப அதன் வரம்புகளும் மாறியபடியே இருந்து வருகிறது. ஆயினும் இன்று வரை மேலாண்மையின் மூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலாண்மைக் கண்ணாடி அணிந்து, கம்பராமாயணத்தை படிக்க ஆரம்பித்த போது தான், கம்பன் ஒரு மேலாண்மைத் திறனாளன் என்பதில் எந்த விதத்திலும் ஐயம் இருப்பதாய்த் தெரியவில்லை. கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த, காப்பியம் என்ற உண்மையினையும் மீறி எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலான நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் அதில் இருப்பதை ஆணித்தரமாய்க் கூற இயலும்.

இலக்கு நோக்கிய பயணம்:

நிர்வாகத்தின் பணிகளாக எதிர்காலமதை உத்தேசமாய்க் கணித்தல், சரியான திட்டமிடல், அதனைச் சரிவர செயலாக்கம் செய்தல், தலைமையேற்று நடத்தல், ஒருங்கிணைத்தல், கட்டுப்படுத்தல் ஆகியவை கூறத்தக்கவை ஆகும். இவை அத்தனையும் ஒன்றுசேர்த்து இலக்கை எட்டுவதை பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் தனது இராமாயணத்தில் பல இடங்களில் கையாண்டு இருக்கிறார்.

உதாரணமாக சீதையினைத் தேடும் முயல்வில் வானரங்கள் ஈடுபடும் செயலினை அவர்கள் எவ்விதம் செய்தனர் என்பதைப் பார்க்கலாம். செய்ய வேண்டியதில் தெளிவு, சீதையினை தென் திசையில் சென்று தேடிட வேண்டும் என்பதில் இருந்தது. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ, அதனைச் சரியாக பிரித்துத் தருதல். அனுமனை அதற்குத் தலைவனாயும் தேர்வு செய்தல். தேர்வு செய்த பின்னர் அவ்வேலை செவ்வனே செய்திடத் தேவையான அனைத்தும் தருதல். அதற்கு இரண்டு வெள்ளப் படை தருதல். திட்டமிடும் போதே இறுதியாய் இலக்கினை எட்ட முப்பது நாள் கெடுவாய்க் குறித்தல் இங்கே கவனிக்கத் தக்கது. இறுதியாய்ப் ’பணிகள் சரிவர நடக்கிறதா?’ என்பதை கண்கானிக்கவும் செய்தல். இவை அனைத்தும் சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 11)

இன்றைய காலகட்டத்தில்கூட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுமக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களில் தந்தே ஆக வேண்டும் என்ற முறை உள்ளது. செல்ல வேண்டிய தூரமோ அதிகம். சிக்கலும் சிரமமும் கூடவே உண்டு. சிதாபிராட்டியினையும் இது வரை கண்டதே இல்லை. ஆனால் கம்பன் விதித்த காலக் கெடுவில் எந்தத் தளர்வும் இல்லை.

வரமான சாபம்

இடுக்கண் வருங்கால் நகுக என்கிறது உலகப் பொதுமறை. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது. வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்திக் கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் தந்தை “நீயும் இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று சாபம் தருகிறார்.. இதை கேட்டு தசரதனுக்கு துயரம் ஒரு பக்கம். தனக்குக் குழந்தைப் பேறு இல்லையே என்ற கவலை ஒழிந்தது குறித்து மகிழ்ச்சி மறுபக்கமாம். சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் மனோநிலையின் நிர்வாகக் கலையினை கம்பர் கற்றுத் தருகிறார்.

சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 87)

கனிவான சொற்கள்:

வள்ளுவரின் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதினை உலகத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவர். நிர்வாகச் சிக்கலின் பெரும்பாலான காரணங்களைத் தேடிப் பார்த்தால் அதில் பரிமாரிய வார்த்தைகளின் தன்மை தான் மேலோங்கி நிற்கும். ஒரு சூழலில் பயன்படுத்தும் சொற்கள் மற்றவர்க்கும் இதமாய் இருக்கும் போது, செய்ய வேண்டிய செயல் இலகுவாய் முடியும். இல்லாவிடில் ஈட்டியாய் குத்திய வார்த்தைகள் காயப் படுத்தும் பணி தவிர்த்து, வேறு எந்த வினையையும் ஏற்படுத்தாது. அந்தமான் தீவுகளில் வழங்கும் மொழி வழக்கை வைத்து கம்பன் பார்வையில் சற்றே இதனை நோக்கலாம்.

அந்தமான் தீவுகளில் வழக்குமொழியாக ஹிந்தியினைப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி மொழி தெரியாமல் தான் வருவர். அதுவும் அவர்களுக்கு ஹிந்தியில் எண்களைப் பயன் படுத்துவது மிகச்சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு பின்னர் இருபது, முப்பது என மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை தெரிந்து கொண்டாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர்.

15 க்கு ஹிந்தியில் “பந்தரா” என்று சொல்வதற்குப் பதிலாக ஏக் பான்ச் (ஒன்றும் ஐந்தும்). இதே போல் 55 ஐ சொல்லிட தமிழர்க்கு ”பச்பன்” தேவைப்பட வில்லை. ”பான்ச் பான்ச்” (ஐந்தும் ஐந்தும்) என்பதே போதுமானதாய் இருக்கின்றது. இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறார். அது என்ன “பத்தும் நாலும்” தானே என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு முறையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் நீங்களே சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே?
எத்தைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ? என்றான்.
(அயோத்தியா காண்டம்/ நகர் நீங்கு படலம்/பாடல் எண்: 21)

அந்தமானிற்கு கப்பலில் மூன்றே நாளில் சென்று விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர இந்தக் கம்பன் யுத்தி உதவுகிறது. நிர்வாக சிக்கலினை எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளப் பழக வேண்டும் என்பதையும் கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும். தவிர்க்க இயலாத மாற்றங்கள் வரும் சமயத்தில் அதனை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது தான் மேலாண்மைக் கோட்பாடு. மாறி வரும் சூழலில் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. அதை ஏற்றுக் கொள்ளும் இதம் மனதளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் இந்த திறனாளன் எவ்வளவு கவனமாய் இருந்திருக்கிறான்?

ஆதாரங்களின் தேவைகள்:

ஒரு பணியினைச் சரியான நேரத்தில், சரியான நபர்களைக் கொண்டு, செவ்வனே செய்திடும் கலையினைத் தான் மேலாண்மை கற்றுத்தருகிறது. அதனால் வரும் சிக்கல்களையும் அது எதிர்பார்க்காமல் இல்லை. ஆனால் திறனாளனுக்கு அந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் கண்டிப்பாய் இருத்தல் அவசியம். கம்பனிடம் இல்லாமல் போகுமா என்ன? ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமானதாய் இன்றளவும் கருதப் படுகின்றது. இந்தச் செய்தியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை, கம்பனின் மேலாண்மைத் திறனாளன் பதவிக்கு சான்று சொல்லும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படி வருகிறது கம்பனின் வரிகள்.

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.
(கிட்கிந்தா காண்டம்/நாடவிட்ட படலம்/பாடல் எண்- 38)

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்டு வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக் கட்டுரையின் நோக்கம்.

குடுத்து வைக்காத ஆளு


நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???

படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.

பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.

பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??

ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.

தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)

மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.

எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.

சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.

பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.

அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??

உலக நாயகனே…


அந்தமானில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்ட தமிழக மண்ணிலிருந்து வந்தவர்கள் தான். மேலூர் தொடங்கி மானாமதுரை வரையிலும் பிறந்த ஊர்க்காரர்கள் தங்களது சொந்த ஊராக மதுரை என்று சொல்லி விடுவர். இதேபோல் மனாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ளவர்கள் ஜாலியாய் பரமக்குடி என்று சொந்த ஊராய் உறவு கொன்டாடுவர். இராமநாதபுரம் என்பதை மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். (ஏன் என்பது தான் விளங்கவில்லை).

எனக்கும் சொந்த ஊர் பரமக்குடி தான். (பரமக்குடியே தாங்க..அக்கம் பக்கம் எல்லாம் இல்லாமல பக்காவா அந்த ஊரே தாங்க). குசலம் விசாரிப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி “உங்க சொந்த ஊரு?”. ஊரை வைத்து இன்னார் இப்படி என்று ஊகம் செய்ய முடியுமோ!!! இருக்கலாம் போல் தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் வளைத்து வளைத்து ஆங்கிலத்தில் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொண்ட போது நானும் புகுந்து தமிழில் பதில் சொல்ல, அட நீங்க தமிழா? என்ற ஆச்சரியமான கேள்வி எழுந்தது. [அந்தமான் என்றால் தமிழர்கள் அல்லாதவர்கள் இருக்கும் பகுதி என்ற அவரின் அடிமனதின் உறுதி கேள்வியாய் வந்தது] அடுத்த கேள்வி.. ஆமா தமிழ்நாட்டில் எந்த ஊர்?

நான் பதில் சொன்னேன்: பரமக்குடி.

ம்..ம்… கமலஹாசன் பொறந்த ஊரா?
அப்படி சொல்ல முடியாது. ஆனா.. நானும் கமலஹாசனும் பிறந்தது ஒரே ஊரில். அதாவது பரமக்குடியில் என்றேன். (ஒரு மாதிரியாய் பார்த்தார்கள்). அப்புறம் என்ன!! போர்பந்தருக்கு காந்தியால் வந்த மரியாதை மாதிரியும், எட்டயபுரம் பாரதியால் எட்டிய இடத்தையும் கமலஹாசன் மூலம் பரமக்குடியும் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மையாய் தெரிகிறது.
சொல்லப் போனால் ஒருகாலத்தில் கமலஹாசக்குடி அல்லது கமலனூர் என்று பெயர் மாற்றம் பெற்றாலும் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பரமக்குடிக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? இது நான் 7 வது படிக்கும் போது ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் அன்று மாலை வாரியாரின் சொற்பொழிவுக்கு வந்து இதையே கேள் என்றார். (அந்த வாத்தியாருக்கு பதில் தெரிந்திருந்தும், நாம் வாரியார் ஸ்வாமிகளின் கூட்டங்களுக்கு போவதை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல ஆசையால் பதில் தராது விட்டிருந்தார்). வாரியார் சொன்ன பதில். பரமன் அதாவது பெருமாள் குடி கொண்டுள்ள ஊர்தான் பரமன்குடி… பின்னர் பாமரர்களால் பரமக்குடி ஆனது என்றார்.

கமலஹாசன் படித்த பள்ளி பாரதியார் நடுந்லைப் பள்ளி பரமக்குடியில் இருக்கு. அரசுப் பள்ளிக்கே உரித்தான் அத்தனை அமசங்களும் நிறைந்த பல பள்ளிகளில் இதுவும் ஒன்று. எவ்வளவோ நபர்கள் நல்லா படித்து எங்கெங்கோ இருந்தாலும், தான் படித்த பள்ளிக்கு (அவ்வளவு நல்லா படிக்காட்டியும் கூட..) சில வகுப்பறைகள் கட்டிக் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார் கமல். நல்ல மனிதர். சிந்தனையாளர் என்பதோடு சமூகத்தில் தனக்கென ஒரு கடமை இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல் பட்டது தான் இந்த காரியம் மூலம் தெரிகிறது.

கமல் படங்களில் ரவிகுமார் இயக்கங்கள் எல்லாம் பளிச் தான். (எல்லா பளிச்சும் சேர்த்துத் தான்). எல்லா படங்களிலும் கடைசிக் காட்சியில் தோன்றி தன் முகம் காட்டும் யுக்தி அவரது. சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏற வரிசையில் நின்றார். அப்போதும் கடைசியில் தான் இருந்தார். ஒரு படம் எடுக்க முயற்சிக்கும் போது நான் தான் விடுபட்ட கடைசி ஆள் என்ற அழைப்பு வர, அந்தமான் விமானத்தில் தாவி ஏறப் பொய் விட்டேன்.

கமலுக்கு எவ்வளவோ பட்டங்கள் இருந்தாலும் இந்த “உலக நாயகன்” என்பது தான் அனைவராலும் சொல்லப் படுகிறது. பத்து வேடங்களில் கலக்கிய கமலின் தசாவதாரம் படத்தில் உலகநாயகனே என்ற பாட்டும் தூள் கிளப்பும். பத்து விதமான அவதாரங்களை எடுத்தவர்க்குத்தான் இது மிகவும் பொருந்தும் என்று யார் தான் யோசித்து சொன்னார்களோ?? அல்லது அப்படி ஒன்று இருப்பதை தெரியாமலெயே சொல்லிட்டாங்களொ.. (சரி இருந்துட்டுப் போகட்டுமெ. அதுக்கு என்ன இப்பொ?)

அது ஒண்ணுமில்லை. இந்த மாதிரி உலகநாயகனே என்று யாராவது யாரையாவது சொல்லி இருக்காங்களா? என்று தேடினேன். கம்பராமாயணத்தில் வந்து தேடல் நின்றது. ராமன் தேடிய சீதை மாதிரி நான் தேடிய சேதி கிடைத்தது.

அனுமன் சீதை இருக்கும் இடத்திற்கு சென்று வந்த பிறகு நடக்கின்ற காட்சியை கொஞ்சமா எட்டிப் பாக்கலாம். அனுமன் முதல்லெ தன் ராஜாவான அங்கதனை வணங்க்கினான். அப்புறம் சாம்பவானை நமஸ்கரித்தான் காலில் விழுந்து. பொறவு எல்லார்க்கும் வணக்கம் வைத்தான். பேச ஆரம்பித்தான். “இங்கிருக்கும் எல்லாருக்கும் உலகநாயகனான இராமனின் தேவி சீதை நன்மை தரும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்”. இப்பொ சொல்லுங்க. உலக நாயகன் என்று முதலில் சொல்லியது யாரு?

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து பின்னை கடன்முறைக் கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்த இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞாலநாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்.

அதுசரி உலகநாயகன் கமல் படிச்ச பள்ளிக்கு ஏதோ செய்தார். நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மார்க் எடுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த பரிசு தந்து வருகிறேன்.

பத்த வச்சிட்டியே


Do or Die செய் அல்லது செத்துமடி என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீங்க.. வாழ்க்கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான்… இதனை விட்டால் வேறு வழி இல்லை.. என்கின்ற போது தான் இந்த வார்த்தைகளின் பிரயோகம் வரும். ஆனா இப்பொ எல்லாம் பைக்கில் சிலர் வேகமாப் போவதைப் பாத்தால், அந்த பயணம் தான் வாழ்க்கையின் நோக்கம் என்பதாய் போகிறார்கள். சில சமயம் அதுவே அவர்களின் கடைசிப் பயணமாகவும் மாறி விடுவது தான் வேதனை. இப்படி வேகமாகப் போகும் ஒருவரை மடக்கி கேட்டேன்: “அப்படி என்ன அவசரம்?”. கிடைத்த பதில்: அநிட்3கோ (அந்தமானின் டாஸ்மாக்) கடை மூடி விருவார்கள்.. அதான். அடப்பாவிகளா.

நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களுக்காய் எரிந்தும் போய் தங்களின் விஸ்வாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். ஹிட்லர் வாழ்க்கையில் நடந்ததாய் சொல்லப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று. (இப்படியும் நடக்குமா என்ற பில்டப்புடன் ஆரம்பிக்கலாம் இந்தச் சம்பவத்தை)

ஹிட்லரின் திறமையினைக் கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர், அவரிடம் (கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு) உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டாராம். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஹிட்லர் தன் அடியாளான படையாளனைக் கூப்பிட்டு, இந்த மூனாவது மாடியிலிருந்து குதி என்றாராம். அவனும் ஒன்றும் யோசிக்காமல் குத்தித்து உயிரை விட்டானாம். இதுலெ ஏதும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் (பத்திரிக்கைக் காரங்களுக்கு கூடவே எப்பவுமே அது தான் இருக்குமே?) ஒருத்தர் தான் இப்படியா?? என்று இழுத்தார் அந்த நிருபர். ஹிட்லர் அடுத்த படைக் காவலரை கண்ணால் ஜாடை காட்டினார். அடுத்த உயிர் போனது.

நம்பவே முடியலையே…இது நிருபர். ஹிட்லர் மூன்றாவது ஆளை அழைத்தார். நிருபர் காலில் விழாத குறையாய் வேண்டாம். எனக்காய் ரெண்டு உயிர் போனது போதும் என்றார். படைக்காவலன் பேசினான். யோவ் ஆளை வுடுய்யா… இந்த ஆள் கிட்டெ குப்பெ கூட்றதெ விட சாவுறது மேலுண்ணு அவனவன் சந்தோஷமா சாவுறான். (தகவல் உபயம் சுகிசிவம்). இது எப்படி இருக்கு?

செய்யும்தொழிலில் சிரத்தையோடு செய்யணும் என்பது தான் எல்லாரும் எதிர் பார்க்கிறார்கள். சும்மா ரெண்டு நிமிஷத்தில் செய்யும் நூடூல்ஸில் எத்தனை நுணுக்கம் இருக்கு தெரியுமா? (அவனவன் நொந்து நூல் ஆகும் போது, நூடுல்ஸில் நுணுக்கம் வேற கேக்குதா?) நான் செய்யும் நூடூல்ஸில் எப்பவும் அந்த மசாலா சரீய்யா கரைஞ்சிருக்காது. கட்டி கட்டியா இருக்கும். வீட்டு அம்மணி செய்யும் போது லேசா எட்டிப் பாத்தப்பொ நானு செஞ்சிட்டு வந்த தப்பு விளங்கிடுச்சி. முதலில் தண்ணியிலேயே மசாலா போட்டு விட்டால் அந்த பிரச்சினை தீந்தது. (என்ன ஒரு பெரிய்ய கண்டுபிடிப்பு?)

வாத்தியார் படத்துப் பாட்டில் வரும் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு வசனம். “எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் கொஞ்ச்சம் நீளம்”. திறமைசாலிகள் கூடவே இருப்பது வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை. ஜால்ராக்களை கூடவே வைத்து இருப்பதில் தான் ஆபத்து ஜாஸ்தி. 100வது திருட்டுக்கு போஸ்டர் ஒட்டி அழகு பார்க்கும் ஜால்ராக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில “கீழ்படிந்துள்ள” என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருப்பார்கள். ஆபீசில் ஒரு பைல் வேண்டும் என்றால் உடனே ஓடி விடுவார்கள் தேட. என்ன பைல் என்பதைக்கூட கேட்காமல் (ஆளை உட்டா பொதுமடா சாமி என்ற ரகம்).

அதே மாதிரி வச்சிட்டு வாடான்னா, பத்த வச்சிட்டு வருகின்ற ஆட்களும் உண்டு. இதிலிருந்து எல்லாரும் தெரிஞ்சிக்கும் உண்மை என்னவென்றால் சொல்ல வேண்டிய சேதியை பக்குவமா பாத்து பதமா சொல்ல வேணும் இல்லாட்டி இப்படி ஏதாவது ஏடா கூடமா நடக்கும். யார் கிட்டெ சொல்றோம் என்பதையும் குறிப்பா சொல்லாமல் விட்டாலும் சிக்கல் தான் வரும்.

ஒரு தலை வச்சிருக்கும் தறுதலைகளான நமக்கே (சாரி.. சாரி.. எனக்கே) இவ்வளவு சிக்கல வந்தா ஒன்பது தலையை extra fitting ஆ வச்சிருக்கும் ராவணனுக்கு வராதா? வந்ததே. “தீ வை” என்ற உத்திரவு பொதுவாய் வந்து விழுந்தது. அனுமன் வாலில் வைத்தனர் அரக்கர் தீயை. அனுமனோ, ஊருக்கே தீயை வைத்தான். அரசாங்க உத்திரவை அச்சரம் பிசகாமல் follow செய்தார்கள் இருவருமே. “என் வாலைக் கொளுத்தும் இவர்களது செயல், இந்த ஊரைக் கொளுத்துக” என்று அனுமனுக்கு பட்டதாய் கம்பர் சொல்கிறார்.

கடவுள் படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றே இவர் வென்றி
சுடுவிக்கின்றது இவ்வூரைச் சுடுக என்று உஐத்து துணிவு என்று
நடு உற்று அமையம் உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான்.

என்ன இனிமே ஏதாவது சொல்லும் போது சரிய்யாச் சொல்லுவோமா???

காலில் விழும் கலாச்சாரம்


இந்தக் காலில் விழும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வருவது தான். நான் முழுவதும் என்னை உன்னிடம் ஒப்பதைத்து விட்டேன், இனி எல்லாமே நீதான்… என்று சராணாகதி தத்துவத்தை போதிக்கும் Total Surrender தான் காலில் விழும் உச்ச கட்ட முயற்சி.

சாமி கும்பிடுவதை விட்டால் இப்படி சாஸ்டாங்கமாய் காலில் விழுவது தீபாவளி அன்று தான். பட்டாசும் பலகாரமும் அம்மா அப்பாவின் காலில் விழுந்து வணங்கிய பின் தான் கிடைக்கும் என்ற போது, அதை எப்படி செய்யாமல் விட இயலும்? பட்டாசும் பட்சனமும் முக்கியம்.

முழுவதும் காலில் விழவில்லை என்றாலும் சற்றே குனிந்து ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெறும் டிரில் கண்டிப்பாய் நடக்கும் நாள், திருமண தினம். அதிலும் முதல் மரியாதை என்று தெரிவு செய்து சரியாய் அதே வரிசைக்கிரமமா விழ வேண்டும் இல்லையேல் அதுவே பெரிய்ய பிரச்சினையாக வெடித்துவிடும்.

சாஸ்டாங்கமாய் காலில் விழுவது ஒழிந்து போய் விடுமோ என்று இருந்த போது, அதை சில அரசியல் கட்சிகள் தூக்கி நிறுத்தின. புடவை பேண்ட் மாதிரியான உடைகள், கீழே விழுந்து நமஸ்கரிக்க ஒவ்வாத உடைகள். வேட்டி சுடிதார் தான் அதுக்கு ரொம்ப சௌகரியம். ஒரு வேளை அரசியல்வாதிகள் காலில் விழும் கலாச்சாரத்தை கெட்டியாய் பிடித்து வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ??

வடநாட்டவரிடம் இன்னும் அந்தக் காலை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. அப்படியே காலை வாரிவிடும் பழக்குமும் இருக்கு என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆனா வாஜ்பேய் காலில் விழுந்தது தமிழகத்திற்கே மரியாதை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இத்தகைய நல்ல பழக்கங்களை நாம் சொல்லிக் கொடுக்க மறந்திட்டோமோ?? கோவையில் இருந்து என் கல்லுரித் தோழர் குடும்பத்துடன் அந்தமான் வந்து திரும்பினர். அவரின் துணவியார், நாம் படித்த அதே பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். டூர் முடிந்து ஊர் திரும்பும் போது அவர்தம் குழந்தைகள் சாஸ்டாங்கமாய் வரிசையாய் அனைத்து பெரியவர்களின் காலில் விழுந்த போது, உண்மையில் புல்லரித்து விட்டது.

அலுவலகத்தில் காரியம் ஆகனுமா?? காலைப்பிடி என்ற தத்துவம் படு பிரபலம். நான் கூட சில முறை கழுதை ஆகி இருக்கிறேன். வயது வித்தியாசம் கூட பாக்காது சிலர் விழுந்திருகிறார்கள். அப்போதெல்லாம் நான் மனதில் நினைப்பதுண்டு.. இவர்கள் என் காலில் விழவில்லை… அந்த காரியத்தில் குறியாய் இருக்கிறார்கள். காரியத்தில் கை வையடா தாண்டவக்கோனே.. என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வரும்.

இந்தக் காலில் விழுந்து காரியம் சாதித்து சம்பாதிப்பதை வைத்து கவுண்டமணி ஒரு படத்தில் நல்ல காமெடி செய்திருப்பார். மேலிடம் என் கையில் என்று உள்ளே புகுந்து அவர் காலில் விழுந்து காரியம் சாதித்து வெளியில் கம்பீரமாய் வந்து வாய் சவ்டால் விட்டு தூள் கிளப்புவார். எப்படியோ காரியம் ஆக வேண்டியது நம் எல்லாரின் கட்டாயத் தேவை.

இந்தக் காலில் விழும் கலாச்சாரம் காக்காய் பிடிக்க இருந்திருக்கோ இல்லையோ, அந்தக் காலத்திலும் இருந்திருக்கு. இதுக்கு நான் வேறு எங்கே போகப்போறேன்.. வழக்கமா கம்பரைத்தான் புடிக்கனும்.
கம்பராமாயணத்தில் இராவணனை வர்ணிக்கும் ஒரு இடத்தில் கம்பர் இந்த மேட்டரை எடுக்கிறார். இராவணனின் பாதங்களில் ஏகப்பட்ட வடுக்கள் இருக்காம். அது எப்படி அங்கே வந்தது? எதிரி மன்னர்கள் கிரீடத்தோட காலில் விழுந்து விழுந்து அதனால் காயமான தழும்புகளாம்.. எப்படி கீது??

அதுமட்டுமா? முரட்டுத்தனமான வீரன் இராவணன். யானை எல்லாம் மோதி மோதி அந்த தந்தக் காயங்கள் உடம்புலெ அங்கங்கெ இருக்காம். இராவணன் உடம்பிலெ பூசின சந்தனம் யானையின் முகத்திலெ மாறுது. அதே மாதிரி யானையின் முகத்திலெ இருக்கிற குங்குமம் இராவணன் உடம்புக்கு டிரான்ஸ்பர் ஆகுதாம்.

மாலை போட்டிருக்கும் இராவணன் பக்கத்திலெ வந்து ஒரு வண்டு தேன் குடிக்குது. அது அப்படியே யானையின் மதத்தில் போயும் திளைக்குதாம். அங்கே திளைத்த வண்டுகளும் மாலைகளுக்கு Exchange ஆகுதாம்.
ஆனா காலில் விழுந்த ஆட்களுக்கு மட்டும் பயம் தான் Exchange Offer ஆக கிடைக்குதாம்.

தோடு உழுத தார் வண்டும் திசை யானை
மதம் துதைந்த வண்டும் சுற்றி
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின்
சிந்துறத்தை மாறு கொள்ள
கோடு உழுத மார்பானை கொலை உழுத
வடிவேலின் கொற்றம் அஞ்சி
தான் தொழுத பகை வேந்தர் முடி உழுத
தழும்பு இருந்த சரண்த்தானை.

சரி.. இப்பொ யார் கால்லெ விழுவதா உத்தேசம்?? நானு கம்பர் கால்லெ விழுந்து நமஸ்காரம் செய்யலாம்னு இருக்கேன். நீங்களும் கூட வாரியளா?

மருமகள் மெச்சிய மாமியார்


[அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற சித்திரைமலர் “தேனமுது” சிற்றிதழில் வெளி வந்த கட்டுரை]

சமீபத்தில் இணையதளத்தில் படித்த ஒரு செய்தி. இராமாயண காலத்தில் முகநூல் என்று அழைக்கப்படும் ஃபேஸ்புக் வசதி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை வலை விரித்திருந்தார் ஒரு நண்பர். அதன் போக்கில் ராமரும் சீதையும் இலக்குவனுடன் கானகம் செல்கின்றனர். அதனை வலைத்தளத்தில் இராமர் அறிவிப்பார். அதனை கைகேயி லைக் செய்திருக்க வேண்டும் என்பதாய் முடிகிறது.

கைகேயி அப்படி எல்லாம் மகிழ்ந்திருப்பாரா? என்ற கேள்வியை புறம் தள்ளி விட்டு, கைகேயி மேல் சீதையின் அபிப்பிராயம் எப்படி? என்ற கேள்விக்கு பதில் தேடலாம். அதன் மூலமாய் மாமியார் மருமகள் உறவு எப்படி இருத்தல் நலம் என்ற தெளிவான சிந்தனையை உங்கள் முன் வைக்க விளைகிறேன்.

ராமர் கானகம் போக வேண்டும் என்பது தான் கைகேயி வாங்கிய வரத்தின் சரத்து. அதில் சீதையும் சேர்ந்து கொண்டது தானாக நடந்தது. ஆக சீதையினை வருத்தப்பட வைக்கும் நோக்கம் நேரடியாக கைகேயிக்கு இல்லை. எனவே சீதைக்கு கைகேயி மேல் நேரிடையான எந்த கோபம் வருவதற்கும் வாய்ப்பில்லை.

இராமன் காட்டுக்குப் போனால் சீதையும் உடன் செல்வார் என்று எப்படி கைகேயியால் யோசிக்காது இருக்க முடிந்தது? மனது சஞ்சலத்தில் இருக்கும் போது எல்லாவற்றையும் சரிவர யோசிக்க இயலாது என்பதைத்தான் பதிலாகத் தர இயலும். மனக்குழப்பத்தில் அப்போது கைகேயி இருந்திருக்கிறார். குழப்பத்தில் உச்சியில் நின்று உணர்ச்சிப் பெருக்கால் எடுக்கப்பட்ட முடிவு அது.

ஆனால் அதே சமயம், உணர்ச்சிப் பெருக்கில் கூட சரியான முடிவினை எடுக்க முடியும் என்பதையும் இராமயணம் சொல்லத் தவறவில்லை. அப்படி செய்தவர் இராவணன். இராமனை வீழ்த்தி சீதையினைக் கவரலாம் என நினைத்த இராவணன், தன் முடிவை மாற்றிக் கொண்டானாம். இராமன் இல்லாமல் சீதை உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று இராவணன் கருதியதால் இராமனைக் கொல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு வஞ்சகமாய் கவர நினைத்தானாம். இது கம்பன் வழிச்செய்தி.

குழந்தை வளர்ப்பில் நவீனகால உளவியல் நிபுனர்கள் கூற்று என்னவெனில், நாம் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதை விட நம் நடைமுறையிலிருந்து பழகுவது அதிகமாம். ஆனால் நாம் என்ன சொன்னாலும் அதனையே திரும்பச் சொல்லும் கிளி வேறு ரகம். கானகத்தில் வாழ்ந்த போது இராமனும் சீதையும் சேர்ந்து கிளி வளர்த்துள்ளனர். அந்தக் கிளிக்கு தன் தாயார் பெயரான கைகேயி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். மாமியார் மீது எக்காரணம் கொண்டும் காழ்ப்புணர்வு வந்து விடக் கூடாது என்பதில் கணவன்மார்கள் மிகக் கவனமாய் இருத்தல் வேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறதோ?

இதை கம்பன் தன் வரிகளில் சொல்லும் இடம் தான் இன்னும் கவனிக்க வேண்டிய இடம். அதாவது அனுமன் சீதையினை அடையாளம் கண்டு, திரும்பும் சமயம் மனதில் நிற்கும் சில பசுமையான நினைவுகளை ராமனுக்கு சொல்லும் பொருட்டு சொல்லிய செய்தி தான் இந்தச் சம்பவம். இதோ கம்பரின் வரிகள்:-

என் ஓர் இன் உயிர்மென்ன் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என்
அன்னைதன் பெயர் ஆக என அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடந்தோய்.

[“உண்மை வழி பின்பற்றுபவனே(அனுமானே)! ‘நாயகனே (இராமனே)! என் இனிய உயிர் போன்ற மென்மையான கிளிக்கு யார் பெயரை வைப்பது?’ என்று நான் (சீதை) கேட்டேன். உடனே ‘என் தாயாகிய மாசற்ற கேகய மன்னன் மகளாகிய கைகேயியின்பெயரை இடுக’ என்று அன்போடு அக் காலத்தில் சொன்ன உண்மைமான மொழியையும் இராமனிடம் சொல்வயாக”]

இன்னொரு சேதியினையும் அனுமன் வசம் சொல்கிறார் சீதை. துயரத்தின் உச்சத்தில் உயிர் போவதாய் இருந்தாலும் கூட, அந்தத் தருணத்திலும் தன் மாமியார்களை வணங்கி தான் விடை பெற்றேன் என்ற தகவல் சேர்த்துவிட வேண்டுகிறார். இத்தகவலை இராமன் தன் தாயாரிடம் சொல்ல மறந்தாலும் அனுமனே, நீ சொல்வாயாக என்ற வேண்டுகோள் விடுக்கிறார். இதோ கம்பரின் வரிகள்:-

சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன் பால் அருள் இனமையால்
மறக்கும் ஆயினும் நீ மறவேல் ஐயா

[“இலங்கையில் சீதை இறக்கிறாள். அப்போது சிறப்பு மிக்க தன் மாமியார் மூவரையும் வணங்கினாள்- என்னும் இச் சொற்களை, என் மாமியாரிடம் கூறுமாறு தருமத்தின் தலைவனான இராமனிடம் சொல் அனுமனே. இராமன் இந்தச் செய்தியினை சொல்ல மறந்து விடுவானாயின், ஐயனே! நீ இதை அவர்களிடம் தெரிவிக்க மறந்திடாதே.”]

இந்த செய்திகள் இரண்டாய் இருந்தாலும் கூட சொல்ல வந்த கருத்து ஒண்றே தான். மாய்யாரிடம் மருமகள் வைத்திருக்கும் மரியாதை, வைத்திருக்க வேண்டிய மரியாதை. இது தான் சீதை மூலம் கம்பர் நம் அனைவருக்கும் சொல்லும் நீதி. மாமியாரை மதிக்கும் மருமகள்களை உருவாக்கும் முயற்சியில் கம்பரோடு வாருங்கள் நாமும் கை சேர்த்து நடப்போம்.

சமீபத்தில் திருமணம் ஆனவர்…


பெரும்பாலான ஹோட்டல்களின் கதவுகளில் பூட்டு சாவி இருக்கோ இல்லையோ இந்த Just Married – அதான் சமீபத்தில் திருமணம் ஆனவர் என்ற அட்டை கண்டிப்பாய் இருக்கும். ஹோட்டல் காரர்களுக்கு மட்டும் அவர்கள் மேல் ஏன் இவ்வளவு அக்கரை. யாரும் அவர்களை தொந்திரவு செய்து விடக்கூடாது, என்பதில் ஓர் அதீத கவனம். மனைவியின் நொய் நொய் அல்லது கணவனின் கண்டிப்புகள் இவைகளிடமிருந்து தப்பிக்க இந்த மாதிரி மாற்று ஏற்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (உங்களுக்கு தெரிஞ்சா தகவல் சொல்லுங்க… பெயர் ரகசியம் காக்கப்படும்)

ஒருவரைப் பார்த்தவுடன் எப்போது திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஊகிக்க ஒரு சின்ன வழி இருக்கு. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குஷியா கத்தும் ஆசாமியா? கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்தவர்.

“நீ பஸ்ஸில் முன்னாடி போ.. நா அப்புறம் வந்து சேர்ந்துக்கிறேன்” என்று சொன்னால், உங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும் என்பது ஆரூடம்.

ஒரே பஸ்ஸில் தான் போவார்கள் ஆனால் பேச்சு மூச்சு இருக்காது. போகும் போதும் கணவன் முன்னாடி போக, பின்னால் மனைவி சற்று தள்ளியே.. இது 10 வருட தாம்பத்யத்தின் பின்னால் நடப்பது.

ஒன்று சேர்ந்தே போவது… ஒன்றாய் இருப்பது. இப்படி இருந்தால் இன்னும் சரியா புரிந்து கொள்ள முனைப்பாய் இருக்கும் 5 வருட அனுபவசாலிகள்.

ஒரு சீட்டு இருக்கா.. அதுவே போதும். நாம் ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று கெஞ்சும் பேர்வழிகள் தான் சமீபத்தில் திருமனமான அதிர்ஷ்டசாலிகள்.

இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலிகள் அந்தமானுக்கும் வரத் தவறுவதில்லை. அந்தமான் வருபவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு முக்கிய இடம் இங்கிருக்கும் செல்லுலார் ஜெயில் – கூண்டுச்சிறை. ஜப்பான் நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவார்களாம். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தியாகபூமி அந்த சிறை வளாகம் (இது என் மனைவி சொன்னது. மனைவி சொன்னா அப்பீல் இருக்கா என்ன??)

இங்கிருக்கும் ஜெயிலில் இரவு நேரத்தில் ஒலி ஒளிக்காட்சி Light & Sound Show நடக்கிறது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும். அந்த ஜெயில் கட்டும் போதே இருந்து பாத்த ஒரே சாட்சி ஒரு அரச மரம். அந்த அரச மரம் பேசுவது போல் இருக்கும் காட்சி அது. ஓம்பூரியின் குரலில் கம்பீரமாய் இருக்கும். [அந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாரி… நாயகரே அந்த அரச மரம் தான். ஒரு புயலில் அது முரிந்து சாய…. அரசு முனைப்புடன் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் உயிர் தந்துள்ளது.]

பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் ஆங்கிலம் தான் வசதி. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் ஆங்கிலம் பேசினால் அது நல்லாவா இருக்கும்??

சமீபத்தில் கல்யாணம் ஆன ஜோடியிடம் அந்த சிக்கல் வந்தது. மனைவிக்கு ஹிந்தி நஹி. அவருக்கு ரெண்டுமே ஓகே. நான் நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொன்னேன். ஹிந்தி ஷோவே பெட்டர். கணவன் மனைவிக்கு translate செய்து காட்டலாம். [சொல்லாமல் விட்டது: ஆமா.. ஆமா.. இப்பொ தான் கணவன் பேச முடியும். அப்புறம் கேட்பது தான் நித்திய கடமை ஆகி விடும்.]

இன்னொரு தியரியும் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் கணவன் சொன்னதை மனைவி கேட்பார். சிறிது காலம் கழித்து மனைவி பேச கணவன் கேட்பான். அதற்கும் சில காலம் கழித்து இருவரும் கத்துவர் தெருவே வேடிக்கை பார்க்கும். ஆமா.. நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கீக?

கல்யாணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது பெண்ணின் தாய் தகப்பன் கண்களில் தெரியுமே ஒரு கலக்கம்… சஸ்பென்ஸ் தெளியாத படம் பாக்கும் உணர்வு. எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும். அது திருமணத்தின் பொருட்டு அதிகம் தான். என்ன நடகுமோ என்ற திகில் கல்யாணத்தில் மட்டுமா?

1986ல் அந்தமானுக்கு போறேன் என்று கையில் பையோடு பரமக்குடியில் நின்றேன். பஸ்ஸில் போனாலே ஒத்துக்காத மவன்.. ஏதோ அந்தமானாம்.. கப்பலில் போகிறேன் என்கிறான் என்று கேட்ட முறைப்பான என் அப்பாவின் கண்களும் சற்றே கலங்கத்தான் செய்தன. இப்போ, சின்ன போட், கப்பல், கடல் விமானம், ஹெலிகாப்டர், விமானம் என்று சுத்தி வரும் போது அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்று சொல்ல நினைக்கும் நேரத்தில், அவர் இல்லை…

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திரலாம். அது 1992. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அவ்வளவாய் இல்லாத காலம் அது. டெக்கான் விமானம் வராத காலம். சென்னையிலிருந்து அந்தமான் செல்ல, விமானம் கிளம்ப நான்கு நிமிடங்கள் இருக்கும் போது, தம்பதி சமேதராய் உள்ளே நுழைந்தோம். விமான அதிகாரி கேட்டார், ஏன் இவ்வளவு லேட்?. பள்ளிக்காலம் முதல் சொல்லி வரும் அதே பதில், லேட் ஆயிடுத்து என்றேன்.

அவரும் விடாமல், அதான் தெரியுதே… ஏன் லேட்டாச்சு??. என் பதில் “அதிகாலை எழுந்திரிக்க முடியலை”. அதான் ஏன்? என் கையில் இருந்த கடைசி ஆயிதம் பிரயோகித்தேன். “இப்பொத்தான் முதன் முறையா புதுசா கல்யாணம் ஆயிருக்கு. அதான்” என்றேன்.

அதிகாரி சிரித்தபடி, ஓஹோ… Just Married??? அனுமதித்தார். அட சமீபத்தில் கல்யாணம் ஆன ஆட்களுக்கு இவ்வளவு கருணை காட்டுகிறார்களே?? அதன் பின்னனி ஏதாவது இருக்குமா? என்று யோசித்தேன். கிடைத்தது இன்று.

இராமயணத்தில் இந்த கருணை காட்டும் இடம் வருவதை கம்பர் மறக்காமல் காட்டுகிறார். மறுபடியும் நீங்கள் ஒரு முறை அசோகவனம் வரவேண்டும். ஒளிந்திருந்து அனுமன் துவம்சம் செய்வதை பார்க்க வேணும். சகட்டு மேனிக்கு அரக்கர்களை கொன்று குவித்த அனுமன் ஒரு இடத்தில் சற்றே நிதானிக்கிறார்.

கம்பரின் பார்வையில் “கொல்லும் தன்மை கொண்ட பெரிய்ய்ய யானை மாதிரி” அனுமன் தெரிகிறார். அப்படி இருந்தும், துன்பப்படும் அரக்கியரைப் பாத்து “வூட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார். ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு அரக்கர்களை வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கே தான் அந்த Just Married பார்ட்டிகள் கண்ணில் தெரிகிறார்கள்… [அந்தக் காலத்திலும் தெரிஞ்சிடும் போல் இருக்கு.. அந்த வழியல் முகம் பாத்தே..]

அப்போது தான் மணந்த அரக்கியர் சிலருக்கு, அவரது உயிர் போன்ற அரக்கரை கொல்லாது விட்டாராம் அனுமன்.. ஆஹா.. என்னே கருணை..

ஆடல் மாக்களிறு அனையன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.

இத்லெ பெரிய ஆச்சர்யயம் என்ன என்று கேட்டாக்கா… “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பார்கள். ஆனால் அனுமனோ கல்யாணம் செய்யாதவர். “தன் பெறாத இன்பமும் பெறுக இவ்வையகம்” என்று விட்டிருப்பது தான். மனித வாழ்வில் (அரக்க வாழ்விலும் தான்) சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமா இருக்குமோ?

ஆமா உங்க பார்வையில் எப்படி படுது?

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??

அறை..சிறை…நிறை….


அந்தமான் என்றாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது ஜெயில்தான். இந்த பிளாக் ஆரம்பிச்சி 145 போஸ்ட் தாண்டி ஓடும் போது தான் இந்த சிறை பத்தி எழுதாம விட்டது தெரியுது. (அது சரி இன்னெக்கி என்ன ஆச்சி?? அந்த திடீர் ஞானோதயம் என்று கேக்கீகளா??… இருக்கு… அதையும் தான் சொல்லாமெலெயா போயிடுவேன்??)

அந்தமானில் அந்த கூண்டுச்சிறை உருவாக வேண்டும் என்ற சூழல் உருவான இடத்துக்கு இன்னெக்கி போனேன். ஆனா நீங்க அப்படியே காலச்சக்கரத்தை பின்னாடி சுத்தி இதே மாதம் 8ம் தேதி.. ஆனா வருஷம் மட்டும் 1872க்கு வரணும்.

அந்தமானின் தீவுகளில் மவுண்ட் ஹரியட் எனப்படும் ஓர் உயரமான இடம் அது. (இப்போது கூட அந்த இடம் மத்த இடங்களை விட ரொம்ப கூலா இருக்கும். ஹனிமூன் ஜோடிகளுக்கு உகந்த இடம் என்பது ஒரு கூடுதல் தகவல்). லார்ட் மயோவுக்கும் அந்த இடம் ரொப்பவும் பிடிச்சிருந்தது.. இருக்காதா பின்னெ…?? ராணியும் தான் கூடவே வந்திருந்தாகலாம். (ராணி தானா என்பதற்கு வரலாற்று சான்று தேட வேண்டும்)

ஒரு தேனிலவுக் கூடம் கட்டலாமா என்று யோசிக்க வேண்டிய நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சான்டேரியம் கட்டலாமே என்று யோசித்தாராம் அந்த மனுஷன். ஒரு வேளை ராணியை தனியே உட்ரலாம் என்ற எண்ணமா இருந்திருக்குமா?? யாருக்கு தெரியும்??

அதே யோசனையில் 15 நிமிடம் பயணம் செய்து திரும்புகிறார் லார்ட் மயோ. ஹோப் டவுன் என்ற இடத்தில் நல்ல ஒரு வரவேற்பு காத்திருக்கிறது அவருக்கு. ராணியை சொகுசான உயரமான இடத்தில் உக்கார வைத்து தனக்கு கொடுக்கப்பட இருக்கும் வரவேற்பை ஏற்க தெம்பாக நடக்கிறார். அது அவரது கடைசி நடை என்பது அவருக்கே அப்போது தெரியாது.

வரவேற்பு ஏற்பாடு சரியாக ராணியால் பார்க்க முடிந்ததோ இல்லையோ ஒரு கொலையை அவரால் தெளிவாய் பார்க்க முடிந்தது. ஆம் கொலை செய்தவர் ஷேர் அலி. பரிதாபமாய் உயிர்விட்டவர் வேறு யாரும் அல்ல… லார்ட் மயோ தான் அது. கணவரின் கடைசி வார்த்தைகளை உயிர் பிரியும் போது கேட்க முடியவில்லை ராணியால். ஏனென்றால், அவரரோ கொலையைப் பாத்து மயங்கி கிடந்தார்.

அந்த ஒரு உயிர் பலி தான், அதுவரை இருந்த “அந்தமான் ஓபன் ஜெயில்” என்ற கான்செப்டை குழி தோண்டி புதைக்க வைத்து, கூண்டுச்சிறை என்னும் கொடுஞ்சிறை தோன்ற அஸ்திவாரம் போட்டது. எண்ணம் ஈடேற 24 ஆண்டுகள் ஆனது. 1896ல் செல்லுலார் ஜெயிலின் அஸ்திவாரம் தோண்டும் பணி ஆரம்பம் ஆனது.

அங்கு அப்போது கணபதி ஹோமம் செய்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால் அந்த லார்ட் மயோ கொல்லப்பட்ட பகுதியில் அந்த ஹோமம் நடந்தது இன்று. முத்து மாரியம்மன் கோவில் ஒன்று தமிழர்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் வரை இனிதாய் இன்று நிகழ்ந்தது.

எல்லா கும்பாபிஷேக நிகழ்விலும் தவறாது கருடன் வருவதாய் சொல்கிறார்கள். இன்றும் 20 நிமிட மந்திரங்களுக்குப் பின்னர் ரெண்டு கருடர்கள் வந்து வட்டமிட்டது இன்றைய ஹைலைட் சமாச்சாரங்கள். கருடன் வந்தது இருக்கட்டும்… கருடன் சொன்ன சேதி பத்தி எதும் தெரியுமா உங்களுக்கு??

அதெச் தெரிஞ்ச்சிக்க இன்னும் கம்ப காலம் வரைக்கும் போயே ஆக வேண்டும். அடிக்கடி கோபப் படுவோர்கள் கவனத்திற்கு… இனி மேல் ஏன் இப்படி லொள் என்று விழுகிறீர்கள்? என்று யாராவது கேட்டா, தைரியமா சொல்லுங்க.. அந்த ராமனுக்கே கோபம் வந்திருக்கே என்று.

ராமர் கோபப்பட்ட இடம் அந்த ஜடாயு என்ற கருடன் சொன்ன செய்தி (சீதையினை ராவணன் வஞ்சித்து எடுத்துப் போன தகவல்) கேட்ட போது தான்.

இந்த மூ உலகத்தையும் இந்த சினம் கொண்ட அம்பினால் அழிப்பேன் என்ற ராமனின் கூற்றுக்கு ஜடாயு பொறுப்பாய் சொன்ன பதில்: ஓர் அற்பன் தீமை செய்தால் அதுக்காக தீமை செய்யாத உலகத்தையா அழிப்பது?? கோபம் வேண்டாம்… இராமன் சீற்றம் குறைந்தது…

சீறி இவ்உலகம் மூன்றும் தீந்து உக சினவாயம்பால்
நூறுவென் என்று கையில் நோக்கிய காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி

ஒரு லார்ட் மயோவின் மறைவுக்கு பின்னால் எழுந்த கோபம், எத்தனை எத்தனை கொடுமைகளை அந்த சிறையால் அனுபவிக்க வைத்தது… ஆனால் நம்ம கம்பர் சொல்லும் சேதியோ.. அமைதிப் பாதை…

என்ன நான் சொல்வது சரி தானே??