நீ ஒண்ணும் நானும் இல்லெ


தனுஷ் ஒரு படத்துல சொல்லுவாரு, “என்னெப் பார்த்தா பிடிக்காது; பார்க்க பார்க்கப் பிடிக்கும்.” அனிருத் இசையமைக்கும் பாடல்களும் (அவரே எழுதிப் பாடும் பாடல்கள் உட்பட) இப்படித்தான். கேட்டாப்பிடிக்காது. கேட்கக் கேட்கப் புரிய ஆரம்பிக்கும். ஒருவகையில் பார்த்தால் திருவாசகமும் அப்படித்தான். முதல் தடவை கேட்டால் பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்கும்.

சமீபத்தில் தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி என்று தொடங்கும் திருச்சிற்றம்பலம் பாடலை கேட்க வேண்டிய சூழல் வந்தது. வீட்டிலும் அதே கேள்விதான் எழுந்தது. ’இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு? திடீர்னு அனிருத் பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டாரு?’ அதுக்குக் காரணம் தெரிஞ்சுக்கணும்னா நீங்களும் என்கூட, நான் படித்த கோவை சிஐடி கல்லூரிக்கு வரணும். வாங்க…

கோவை சிஐடி கல்லூரியில் பழைய மாணவர்கள் கூடி, கல்லூரியின் நிறுவனர் விழாவை இசை விழாவை நடத்துவது வழக்கம். கொரோணா தொற்றுக்குப் பின்னர் விழாவை இந்த வருடம் சிறப்பாக நடத்த, இசைத் துறையில் வல்லுனராக இருக்கும் சாம் நிகோலஸ் என்பவரது தலைமையில் இசை சங்கமம் செய்ய முடிவு செய்யப்பட்டது

சிஐடியின் இளம் இசைப் புயல்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுக்குள் ஒருசில விதிகளை விதித்துக் கொண்டனர்.

விதி 1: இசைக்கருவிகள் வாசிப்பது, பாடுவது எல்லாமே மாணவர்களும் பழைய மானவர்களாகத்தான் இருத்தல் வேண்டும்.

வி2:  தனியாக யாரும் பாட அனுமதி இல்லை. டூயட் அல்லது கோஷ்டி கானங்கள் தான் அனுமதி.

3: சீனியர்கள் அனைவருக்கும் அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை பாட வாய்ப்பு கட்டாயம் தர வேண்டும்.

(உங்க காலேஜ்லெ படிக்கிறவங்களுக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட யோசனை எல்லாம் வருது? – இது அம்மணியின் கேள்வி) ரிஹர்சலில் பார்த்த போது எல்லாம் நல்லாத்தான் இருந்தது. புதிய பாடல்களை மாணவர்கள் பின்னிப் பெடல் எடுத்து கொண்டு இருந்தார்கள். பழைய பாடல்களை நாம் கொண்டு சென்ற போதுதான் சிக்கல் ஆரம்பித்த்து.

35 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டான பாடலை பாட வேண்டும் என்று ஆசைப்பட, இன்றைய தலைமுறை அந்தப் பாடலை கேட்கவே இல்லை என்று கைவிரித்து தான் எங்களுக்கு சங்கடமாக போய்விட்டது. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, நிலா அது வானத்து மேலே, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம், வாடிக்கை மறந்தது ஏனோ, நான் பார்த்ததிலே அவள் இருத்தியைத்தான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இதுபோன்ற காலத்தை வென்ற பாடல்களை இவர்களின் காதுகள் கேட்கவே இல்லையாம். ஆனாலும் சளைக்காமல் மூன்று நாட்கள் இரவு பகல் என்று பாராமல் தங்களுடைய அம்மாவிடமும், சிலர் பாட்டிகளிடம் அந்த பாடலை பற்றி கேட்டு தெரிந்துகொண்டு அவர்கள் இசையமைத்தும், டூயட் வடிவமும் தந்தார்கள்.

62 நபர்களின் கூட்டு முயற்சியின் பலனாக இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி. அரங்கம் முழுவதும் கைதட்டி, குத்தாட்டம் போட்டு, நடனமாடி மாணவர்களின் இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தது. பழைய மாணவர்கள் பாடிய (பழைய) பாடல் அவர்களுக்கு ஓய்வு என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அரங்கத்தில் அமைதி காத்த்தே, பெரிய ஆறுதலாக இருந்தது. அப்போதே மனதில் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.

சின்ன சின்ன கண்ணிலே பாடல் பாடிய மூன்றாம் ஆண்டு மாணவி

ஓரிரு அனிருத் பாடலாவது நான் கேட்டிருக்க வேண்டும் என்று. அதன் விளைவுதான் திருச்சிற்றம்பலம் படத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். திருவாசகத்தை போலவே பாடல் முதலில் பிடிக்கவில்லை. பின்னர் கேட்கக் கேட்க புரிய ஆரம்பித்தது. அதில் வந்த ஒரு வரி எனக்கு என்னமோ இலக்கணச் செறிவு உள்ள வரியாகப் பட்டது. நீ ஒண்ணும் நானும் இல்லெ என்று வரும் இந்த வரிகள் மாணிக்கவாசகரின் வரிகளோடு ஏதோ தொடர்பு உள்ளதாகப் பட்டது.

திருவாசகத்தில் கோயில் திருப்பதிகம் புரட்டினால் அதில் ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை என்று வருவதைத் திருவாசகத்தின் சாரம் என்றே சொல்கிறார்கள். திருபெருந்துறையில் உறைகின்ற சிவனே, இந்த பொருள்களும் உயிர்களும் நீ இல்லை; நீ இல்லாமல் வேறு எதுவும் இல்லை. இது அனிருத் பாடல் வரியின் மூலம் என் சிந்தனையில் உதித்தது.

இதே வரிகளில் கம்பனின் சிந்தனையும் வராமல் இருக்குமா என்ன? அதுக்கு நாம் சூர்ப்பனகையின் பின்னால் போய் நின்று, அவர் மனதைப் படிப்போம். சூர்ப்பனகை சீதையைப் பாக்கிறாள்.

தன் உயிர் ஓய்ந்து அழிந்தாலும் தான் இராமன் மேல் கொண்ட ஆசையிலிருந்து நீங்காத சூர்ப்பணகை, நீலமலரோ கயல்மீனோ என்று கூறத்தக்க இருகண்களையுடைய அவன் மனைவியோ, இலக்குமியை விட அழகுள்ளவளாக இருக்கிறாள்; (அதனால்) பாவியாகிய என்னையும் அவன் கண்ணெடுத்துப் பார்ப்பானோ என்று கூறி வருந்துவாள். அல்லது அனிருத் பாஷையில், நான் ஒண்ணும் நீயும் இல்லை என்று நினைத்திருக்கலாம். இதோ கம்பனின் வரிகள்:

‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.

அனிருத் பாடல் கேட்க முடிவு செய்த பழைய பாடல் இரசிகர்கள்

நீதி: நீங்களும் இனி அனிருத் பாடல்கள் கேளுங்க.

மாறவே மாறாதது மாற்றம் மட்டுமே



வம்பன் பார்வையில் கம்பன் – 100
(16-09-2019)

‘வம்பன் பார்வையில் கம்பன் -100 எங்கே?’ எனப் பலர் கேட்டதை ஒட்டி இப்பதிவு வருகிறது. ’கற்போம் கம்பன்’ கூட…. ம் ஓகே தான். ஆனா உங்க ஸ்டைல், நையாண்டி, குறும்பு, ஜனரஞ்சகம் அதெல்லாம் இல்லாமெ, ஏதோ அந்தக்காலத்து டாக்குமெண்டரி படம் மாதிரி இருக்கு’ எனவும் பலர் கருத்து தெரிவித்ததால், நமக்கு சரளமா வரும் (யார் அந்தச் சரளாவா? இப்படி கேட்கும் விசிறிகளுக்கு நான் எப்படி எழுத?) அதே ஸ்டைலில் தொடராலாம் என நினைக்கிறேன். ’தூய தமிழ் வேண்டும்’ என எதிர்பார்க்கும் தமிழ் அன்பர்கள் மன்னிக்க. (நமக்கு அது சரிப்பட்டு வராது என பெரும்பான்மையினர் முடிவு செய்த பிறகு, மறுபடியும் எஜமான் ஸ்டைலில் துண்டு எல்லாம் தூக்கிப் போட்டு… எதுக்கு அந்தப் பொல்லாப்பு?)

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிவனடியார் ஒருவர் அந்தமான் வந்திருந்தார். (இந்த மாதிரி வீணாப்போன ஏற்பாடெல்லாம் நீங்க தானே செய்வீங்க? – இப்படி என் மனைவி ரேஞ்சுக்கு ஏன் பாக்குறீங்க?) ஏர்போர்டில் கால் வைத்தவுடன் சொன்னார், இந்த மண் அடியார்களின் பாதம் அதிகம் படாத மண். இனி இது மாறும் என்றார். சிங் சிக்கா, சிக்கா சிக்கா பாடல் புகழ் சோலார் சாய் அவர்களின் சிவமயமான பாடல் யூ டியூபில் பாக்கும் போது, அந்தமானில் இப்படி ஒரு மாற்றம் வந்தால் எப்படி இருக்கும்? என நினைத்தது, இப்போது இனிதே நடந்து முடிந்தது 65 சிவனடியார்களோடு திருவாசகத் திருவிழாவில்.  வீட்டில் உணவும், ஏன் பேச்சும் கூட விளம்பர இடைவேளையின் போது தான் என்று ஆகிவிட்ட சூழலில், மதிய உணவு இடைவெளிகூட இன்றி இயல், இசை, நாட்டியம் என சிவலோகமாகவே ஆகிவிட்டது அன்றைய தினம்.

மாணிக்கவாசகர் தன்னை அடிக்கடி நாயை விடவும் கேவலமானவன் எனச் சொல்லிக் கொள்வார். பொல்லாத நாய் தான் போலெ என நானும் மும்பையில் வம்பு வளர்க்கப் போய், எப்படி என் குடும்ப உறுப்பினரை நாய் என்று சொல்லப் போச்சி என சண்டைக்கே  வந்தார் மும்பை சத்தீஷ். (ரேசன் கார்டில் பேர் சேர்த்து, ஆதாரும் வாங்கிட்டாரோ?) நாயா அது? சிங்கம் சாமி அது. இதே கருத்தை எதிர்வீட்டில் இருந்த என் எழுத்தின் விசிறி செர்லி தனது ஜிஞ்ஜருக்காய் வக்காலத்து வாங்கினர். மாணிக்க வாசகர் காலத்து நாயின் குணம் இப்பொ மாறிவிட்டதோ?

மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். நீங்க வேறெ… ஒரு காலத்தில் கவர்மெண்ட் வேலெ…டயத்துக் போயிட்டு வந்தா போதும். (சில சமயம் போகாட்டியும் கூட) மாச சம்பளம் உத்திரவாதம். இப்படி இருந்தது இப்பொ அரசு ஊழியர் வயிற்றில் புளியெக் கரைச்சும் ஊத்துது. தினமும் பேப்பரில் வரும் செய்திக அப்படி. வேலைக்கு லாயக்கில்லாத, மத்திய அரசு ஊழியர்களை, கழுத்தெப் பிடிச்சி தள்ளுவது நாளெரு துறையும் பொழுதொரு எண்ணிக்கையுமா வந்திட்டிருக்கு.  அரசு ஊழியர் நெலெமெ எப்புடி ஆச்சி பாத்தீயளா? உங்க சம்பளத்துக்கு நாங்க கியாரண்டி என்று சொல்லும் ப்ரீத்திகளைத்தான் தேடிகிட்டு இருக்கேன்.

மாறுதலுக்குத் தயாராக இல்லாத காரணத்தால் வீனாய்ப் போனோர் பலர். உலகம் அறிந்த ஓர் உதாரணம் நோக்கியா. அதே.. அதே.. கண்ணும் கண்ணும் நோக்கியா பாட்டு வந்ததே.. அதே நோக்கியா தான். பத்து வருடமாய் செமெய்யா கனெக்டிங் பீப்பிள் என இருந்த நோக்கியாவின் கண், ஸ்மார்ட் ஃபோன் வருவதை கவனிக்கத் தவறிவிட்டது. உலகத்தில் 60 சதவீதமானோர் கைகளில் இருந்த நோக்கியா ரெண்டே ஆண்டுகளில் 10 சதவீதமாக மாறி மஞ்சக் கடுதாசி குடுத்தது. மாற்றங்களோடு மாறலைன்னா இப்படித்தான்.

நேற்று பொறியாளர் தினம். அதன் கருப்பொருளும் இந்த மாற்றம் தொடர்பானதாய் இருந்தது. சேன்ஞ்ஜ் மேனேஜ்மெண்ட் என்று எம் பி ஏ க்களில் நிறைய்ய சொல்லித் தருகிறார்கள். உலகம் முழுதும் இருக்கும் சிக்கல் என்பதால், என்ன தான் சொல்றாய்ங்க அதில், எனத் தேடிய போது கன்பன் (Kanban’s) தியரி சிக்கியது. அதுலெ, மாற்றங்களெப் புரிஞ்சிகுங்க, அடுத்த கட்டத்துக்கு ரெடியா இருங்க. அடுத்தடுத்து தலைமைப் பண்பாளர்களை வளருங்கோ என்கிறாராம் கன்பன்.

’நாங்க சொன்னா மட்டும் எம் பி ஏ சிலபஸ்லெ வைக்க மாட்டாய்ங்க. கன்பன் சொன்னா மட்டும், எல்லாரும் படிக்கிறாய்ங்கப்பா!!’ உதயமானார் கம்பர்.

’என்ன்ய்யா கம்பரே! Change Management எல்லாம் இப்பொ வந்திருக்கும் சங்கதிகள். நீங்க என்ன சாமீ காமெடி பன்றீங்க…’ நானும் விடாமெ மல்லுக்கு நின்றேன்.

‘நீயே பாத்துக்க. அந்த பொடிப்பய கன்பன் சொன்ன மூனாவது தியரிப்படியே, அங்கதன் என்ற பொடியனை தலைமைப் பண்புள்ளவனா மாத்துன சேதி சொல்லியிருக்கேன். ஒழுங்காப் போய் படிச்சிட்டு மைக் போட்டு Engineer’s Day இலெ போய்ச் சொல்லு’

கம்பரே சொல்லிட்டா அப்புறம் ஏது அப்பீல்? பொறியாளர்தின மேடையில் அடியேன் சொன்ன சங்கதியும் அது தான்.

ராமர் பாலம் எல்லாம் போட்டாச்சி. இலங்கைக்கும் வைகோ மாதிரி அனுமதி இல்லாமல் வந்தாச்சி. பொதுக்குழு கூடி இன்னொரு, வடிவேல் ஸ்டைலில் வெள்ளைக் கொடி காட்டிப் பாக்கலாமென முடிவாகுது. யாரை அனுப்பலாம்? நம்ம அரசு ஊழியர் பாணியில் பழைய ஃபைல் பாத்தாக்கா, அனுமன் தான் போய் வந்ததவர். உடனே அனுமனுக்கு மூவ்மெண்ட் ரெடி ஆயிடுத்து. ஆர்டர் காப்பி பிரிண்ட் போடுமுன், சாப்ட் காப்பி பார்த்த இராமன், Ctr + F இல் அனுமனை தேடி, அங்கதன் பெயரால் Replace செய்கிறார்.

காரணம் என்ன தெரியுமா? இராவணன் மனசுலெ, ‘இந்த இராமன் டீம்லெ அனுமனை விட்டா ஆளே இல்லெ போலெ’ என்ற எண்ணம் வந்திடக் கூடாதாம். மாத்தி யோசீச்ச Change Management எப்புடி? இப்பொவாவது Management Guru – Kamban என்பதை ஒத்துக்கிறீங்க தானே?

வாங்க அப்புடியே, கம்பன் பாட்டையும் படிக்கலாம் வாங்க…

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றோ
ஆர் இனி ஏகத் தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

[யுத்த காண்டம் – அங்கதன் தூதுப்படலம்]

[”வாயுவின் மகனான அனுமன் இராவணனிடத்துத் தூதனாகச் சென்றால், பின்னர் ’இந்த அனுமனை அல்லாமல் இலங்கைக்குள் வந்து சேரும் வல்லமையுடையவர் பகைவர் பக்கம் வேறொருவர் இல்லை’ என்கின்ற எண்ணமானது, நம் பகைவர்க்கு உண்டாகும் அன்றோ! ஆதலால் மீண்டும் அனுமனை அனுப்பலாகாது. எனவே அவ்வனுமானையன்றி இலங்கையினுள் தூதனாகச் சென்று திரும்ப வல்லவர் யார்? இதற்கு அங்கதனே தக்கவன் ஆவான். அவன் பகைவர்களாகிய அரக்கர் வீரச் செயலை மிகுதியாகக் காட்டினாலும் தான் யாதொரு துன்பமும் இன்றி மீள்வதற்கு வலிமையுடையவன் ஆவான்”]

வம்பன் பார்வையில் கம்பன் முற்றும்.

(அதுக்காக ரொம்பவே சந்தோஷப்பட வேணாம். விரைவில் அன்பன் பார்வையில் கம்பன் துவங்கும்…. வம்பன் பார்வையில் 100 வரை தொடர்ந்து படித்து, பகிர்ந்து, கருத்தும் கூறி மகிழ்ந்த அனைவருக்கும் என் கைகூப்பிய நன்றி. கற்போம் கம்பனில், அது தனி டிராக் ஓடிட்டே இருக்கும்.)

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

காற்றடைத்த பையடா…



வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 99
(03-09-2019)

காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்பார்கள் உலகை வெறுத்த சித்தர்கள். ஆனால் சித்தர்கள் பலர் நல்லபடியா வாழும் முறையும் சொல்லி இருக்காகளாம். நம்ம ரேஞ்சுக்கு, குழந்தை ஆணா பெண்ணா எது வேணும்? என்பதற்கும் பதில் தந்துள்ளது சித்தர்கள் பாட்டு என்பது நிரூபிக்கப்படாத உண்மை என்பது மட்டும் படித்திருக்கிறேன். காற்றடைத்த காயம், அதாங்க ஒடம்பு எப்படி இருக்கும்? விவேக் ஒரு படத்தில் நடிச்சே காட்டி இருப்பார் பாத்தீயளா?

ஒண்ணுமே இல்லாததை ஊதி ஊதிப் பெருசாக்குறான் பேர்வழி என சிலர், பலரைத் திட்டுவதைப் பாத்திருப்பீங்க. ஆனா சிலரின் உடல்வாகு எல்லாம் பாத்தாக்கா (ஏன் பாக்குறே? என்ற வீண் கேள்வி எல்லாம் எதுக்குங்க ப்ளீஸ்), ஒண்ணுமில்லாததை பெருசாக்கும் வித்தை தெரிஞ்சி வச்சிருப்பாகளோ (விவேக் ஸ்டைலில்) என எண்ணத் தோன்றும். மலைச்சி நிக்கையில் மனதை தேற்றும் விதமா COOL என டீ சர்ட் வாசகம் வேறு. எனக்குப் புரியலைங்க… என்ன சொல்ல வாராக அந்த மகளிர் என்று…

ஒரு நவீன கருத்த(ம்மா புகழ்) கவிஞனுக்கு, இடையைப் பார்த்த போது பிரம்மன் கஞ்சனாய் தெரிந்தாராம். (இத்தனைக்கும் கடவுள் மறுப்பாளர் அவர்). ஆனா, சற்றே நிமிர்ந்து பார்த்த போது வள்ளல் எனப் பட்டதாம் நம் பட்டை தீட்டிய வைர முத்துவுக்கு. அந்த வள்ளல் சமாச்சாரம் அதாங்க அந்த நாயுடு ஹால் மேட்டர் ரொம்பவே கிலுகிலுப்பு தான் போங்க.

நாமளும் வாழ்க்கையில் பிரச்சினைகளை இப்படித்தான் பார்க்கிறோம். என்னமோ ஏதோ பெரிச்சா இருக்கேன்னு பாத்தாக்கா, அது ஒண்ணுமே இல்லாத காற்றடைத்த பை மாதிரி இருக்கும்.  காத்து போனதும் புஸ்ஸுன்னு ஆகுற மாதிரி பிரச்சினையும் பறந்து போயிருக்கும். ஆனா இடைப்பட்ட காலத்தில் தான் நமக்கு பிரஷ்ஷர் எல்லாம் ஒரு எட்டு ஏறி அப்புறம் இறங்கி வந்திருக்கும். தேவையா இதெல்லாம்?. இப்படி பிரஷ்ஷர் பில்டப் செய்வதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?

ஒரு வடநாட்டவர் கேட்டார்: ’உங்க ஊர்லெ இராவணனுக்கு கோவில் எல்லாம் இருக்காம்லெ…’ (குஷ்புக்கே கோவில் இருக்கும் போது) இருக்கலாம் என்றேன். (பரமக்குடியில் இருக்கிறமாதிரி தெரியல்லை); சமீபத்திய என் பதிவில் சூர்ப்பனகை பற்றி எழுதப் போக, சகோதரியைப் பற்றி எப்படி இழிவாப் பேசப் போச்சி? என கண்டனம் வந்தது. நட்பு வட்டத்தில் பிரச்சினைகள் கிளம்புவதும் தெரியாது. முடிவதும் தெரியாது. அதனாலெ, உலக மக்கள் அனைவரையும் நட்பு வட்டத்தில் ஏற்றுக் கொண்டால், அப்புறம் ஏது சிக்கல்? ஏன் பிரச்சினை எல்லாம் வருது?

சில எதிர்பார்ப்புகள் ஜம்முன்னு முடிவைத் தரும். பல பல்ப் காட்டும். இதுவும் கடந்து கோகும்ணு போக வேண்டியது தான். தில்லி விமானநிலையத்தில் இறங்கி லக்கேஜ் வருமெனக் காத்திருந்தால், ஒரு துண்டு சீட்டு குடுத்து, போங்க பெட்டி படுக்கை வந்து சேரும் என்றார் ஒரு ஒத்தைக்கல் மூக்குத்திக்காரி (அழகான குமரி என்பதை சொல்லவும் வேண்டுமோ) அதே போல் ஒரு தபா ஐபேடை மறந்து வ்ச்சிட்டு வந்து, வக்கணையா ஒரு மெயில் கொடுத்தேன். அடெ… ஜம்முன்னு மெயில் வந்தது ’வந்து வாங்கிக்கோ சார்’ என்று. அம்பேல் தான் என்று நினைத்த ஐபேட் கிடைக்குது. லக்கேஜ் வராமல் ஜட்டி பனியனுக்கும் சிரமப்பட வைக்குது. எல்லாம் இந்த ஏர் இண்டியாவின் செயல்.

அந்தர்பல்டி என்று கேள்விப்பட்டிருப்பீங்க தானே! இல்லையா? அப்பொ இந்தியன் பட டயலாக் சொல்றேன். இப்பொ ஞாபகம் வருதா பாருங்க. “சந்துரு என்ற ஒரு மானஸ்தன் இங்கே இருந்தானே? அதான் தேடுறேன்” என கமலைக் கலாய்க்கும் காட்சி. இப்பொ ஞாபகம் வந்திருக்குமே! (சந்துரு பெயர் ஏன்? பிரமாதம் எனக் கலக்கிய விளம்பரத்திலும்  சந்துரு. ஏன்,  கிருஷ்ணமூரத்தி என்ற பெயரெல்லாம் அதிலெ இல்லை? சந்துருக்கள் யோசிக்கவும்) அது தவறா? சரியா? எனற விவாதம் வேண்டாம். எந்த ஒரு பெரும் பிரச்சனை, மிகப் பெரும் கவலை இவைகளைத் தொடர்ந்து ஒரு பெரீய்ய அந்தர்பல்டி பின்னாடியே வரும்ம்ம். அந்த நம்பிக்கையோடு இருந்தால் நாம் கலவரமாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

”என்ன கிட்டப்பனே! ஒரே தத்துவ மழை பொழியுது?” லேசாக நனைந்தபடி கம்பர் தோன்றினார்.  ”அதே சந்துரு, உடனே இன்னொரு மான்ஸ்தனை, அதான் கவுண்டமணியைத் தேடுவாரே! மறந்துட்டியா? இதே ஸ்டைல்லெ, அந்தர் பல்டி, சின்னதை பெருசாக் காட்டும் வித்தை, நம்ம பாட்டுலெயும் இருக்கே… குகனோட ஏரியாவில் வலை வீசு. பாடல் கிடைக்கும்.” சொல்லி மறைந்தார் கவிச்சக்கரவர்த்தி.

நானும் நாயுடு ஹால் ரேஞ்சில் பாட்டு கிடைக்குமா எனத் தேடினேன். கிடைத்தது என்னமோ நார்மலான பாட்டு தான். இதுக்கெல்லாம்  கவலைப்பட முடியுமா என்ன? கம்பன்கிட்டே இருந்து கிடைப்பதெல்லாம் அமுதம் தானே!   ”உங்களை எல்லாம் 200 என்ன?, 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது” என்று கருத்து சொல்வார் விவேக். ஆனா இங்கே ஆயிரம் இராமர் போல, என்று அந்தர்பல்டி அடித்தவர் திரு குகன் அவர்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்தமான் ஆதிவாசி மாதிரி வில்லு அம்பு எடுத்து பரதன் மேல் பாயப் போனவர்..சரீ சரீ… பாட்டெக் காட்டுப்பா.. அதெல்லாம் இலக்கியத்திலெ சகஜமப்பா…

இதோ பாடல்…

 ’தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை என்ற போது புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கே ழாவரோ தெரியிலம்மா!”

[அயோத்தியா காண்டம் – குகப் படலம்]

புகழ் உடையவனே! (உன்) தாயாகிய கைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு, (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த
(கோசல நாட்டு) அரசாட்சியை தீயவினை வந்துசேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு முகத்தில் கவலை தேங்கியவனாய் (வனத்துக்கு) வந்தாய் என்ற காலத்தில்  (உனது) நல்லியல்புகளை ஆராய்ந்தால் ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ!]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 20 ( 19-04-2018)


 

 

உறவுக்குப் பாலம் அமைக்க வேண்டும்.

சமீபத்தில் உலா வரும் வாட்ஸ் அப் பட ஜோக்:

”அழகு என் கூடவே பிறந்தது”.

“நானும் அதைத்தான் சொல்றேன்… உன்னைவிட உன் தங்கை அழகுதான்”

மைத்துனி அழகானவளாக அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் [உங்க வீட்லெ எப்படி? – இப்படி எடக்கா கேட்டா, ரெண்டுமே அழகுதான் நம் கண்ணுக்கு இது தான் ரொம்ப ஷேஃப்பான பதில். மனைவி கையில் தினம் சாப்பாடும், மச்சினி கையில் எப்போதாவது பிரியாணியும் கெடைக்க வேண்டுமே!]

மைத்துனி அழகு? நட்பு?? தம்பி?? – இப்படி எல்லாம் கலந்த கலவையாக நாம் உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். கம்பர் இன்ஸ்ட்டிடுயூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டின் முதல்வர் கம்பர் இப்படிச் சொல்கிறார்.

குகன் ஒரு வனவாசி. ஆதிவாசி. அந்தமான் ஆதிவாசி மாதிரி அல்ல. நல்ல நாகரீகமடைந்த ஆதிவாசி. இராமனுக்கு  அந்த குகனை ரொம்பவே பிடித்து விடுகிறது.

கங்கையினைக் கடக்கும் போது இராமன் சொன்னாராம், “ என் தம்பி, இனி உன் தம்பி; நீ எனக்குத் தோழன்; சீதை உனக்கு மைத்துனி” இப்படிச் சொல்லி திருமதி குகனை மைத்துனி ஆக்கினாராம். சீதை வனவாசத்தில் இருந்த போது இதெல்லாம் நினைந்து வருந்தினாராம்

நமக்குத் தேவையான சங்கதி:  உறவுகளை பல்வேறு வழிகளில் வளர்ப்போம். தம்பியாய், தோழனாய், வீட்டுக்காரியின் சகோதரியாயும் நாம் உறவுகளுக்குப் பாலம் அமைப்போம்.

இதோ கம்பரின் வரிகள்:

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 19


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 19
( 15-04-2018)

பிறரிடம் வாங்குவதை விட, தருவதில் தான் இன்பம் அதிகம்.

யுவராஜ் தமக்குப் பிடித்தமான் விளையாட்டில் மூழ்கி இருந்தான். யுவராஜ் சிங் என்றால் கிரிக்கெட் ஞாபகம் வந்திருக்கும். இந்த யுவராஜும் அதே போன்ற ஒரு விளையாட்டில் தான் இருந்தார்.

தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. யுவராஜா, மஹாராஜா ஆகும் தகவல் சொல்லப்பட்டது. ஒரு ஓவரில் இன்னும் இரண்டு பந்து பாக்கி இருந்தது. விளையாடப் போகட்டுமா? இது யுவராஜ்.

விளையாட்டுப் பிள்ளை…போ போ..அனுப்பி வைத்தான் ஒரு நரை கண்ட மூத்த அரசன்.

கிச்சன் கேபினெட் பிரச்சினையால் அன்று இரவே காய்கள் வேறு திசையில் நகர்ந்தன. 14 ஆண்டுகள் டென்யூர் போஸ்டிங். டிரைபல் ஏரியாவில் டிரான்ஸ்பர் ஆர்டர் கிடைத்து கையில் அந்த யுவராஜா இளராஜா இராமனுக்கு.

விளையாட்டுப் பிள்ளை முகத்தில் அப்பவும் இப்பவும் ஒரு மாற்றமும் இல்லையாம். நொந்து போன நேரத்திலும் மகிழ்வு தசரதன் பார்வையில்.

அது சரி, ஆத்துக்காரி சீதாப் பிராட்டியார் என்ன சொன்னாங்க? அது தானே முக்கியம். கம்பர் அதையும் தான் சொல்கிறார்.

இராமனைப் பிரிந்த சீதை இலங்கையில் வாடும் போது தான் அந்தக் காட்சி நம் கண்ணுக்குப் புலப்படுது. சீதை வாடினாராம். எப்பேர்ப்பட்ட இராமனின் முகம் அது? கோசல நாடு உன் தம்பிக்கு ஆயிற்று என கைகேயி சொன்னதைக் கேட்ட மாத்திரத்தில் பொலிவு பெற்றதாம் இராமர் முகம். அதுவும் முன்பு இருந்ததை விடவும் மும்மடங்கு.

ஹை சிங்கம் போல..என மனதுக்குள் பாடுகிறார் சீதை.
ஆண் சிங்கம் போலவாம்.

அதுவும் கொடிய ஆண் சிங்கம் போன்ற முகம் உடைய இராமனை நினைத்து வருந்தினாராம்.

அப்பொ பொலிவா மும்மடங்கா தெரிந்த முகம், இப்பொ இராவணனை அழிக்க கொடிய ஆண்சிங்கமாய் நினைத்து வாடியதாம் சீதையின் மனது.

இதன் மூலம் யாம் பெறும் சூத்திரம், அடுதவர்க்கு தருவதில் மும்மடங்கு பொலிவு.

ஹலோ..இன்னெக்கி யாருக்காவது ஏதாவது கொடுத்தீயளா?

ஹலோ..ஹலோ.. எங்கே ஓட்றீங்க… கம்பன் பாட்டெ படிச்சிட்டுப் போங்க ப்ளீஸ்.

இதோ கம்பரின் வரிகள்:

தெவ் மடங்கிய சேண் நிலம் கேகையர்
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என
மும் மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்.

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.