பாமரன் பார்வையில் ஃபாரின் – 88


ஏழு முறை தோற்றவன் எட்டாவது முறை எழுவான்’ – இப்படி ஒரு தத்துவம் இருக்காம். (சமீபத்தில் அதைச் சொல்லி பிரபலம் ஆக்கியவர் சிம்பு அவர்கள். இன்னும் சில ஏழின் சிறப்புகள் பாக்கலாமா?

உலகில் 7 அதிசயங்கள்,
7 கடல்கள்,
வானவில்லின் 7 நிறங்கள்,
7 ஸ்வரங்கள்,
வாரத்தில் 7 நாட்கள்,
7 கண்டங்கள்,
7 கொடிய பாவங்கள்,
திருக்குறளில் 7 சீர்கள்,
கண்ணுக்கு புலப்படக்கூடிய கோள்ககளின் எண்ணிக்கை 7,
தாதுக்கள் எண்ணிக்கை 7,
இந்திய முக்கிய நதிகள்,
கடை ஏழு வள்ளல்கள்,
மனிதனின் கழுத்து எலும்புகள் 7,
முக எலும்புகள் 7,
தலையில் 7 துளைகள்,
கணுக்காலில் 7 எலும்புகள்

போதுமா இன்னும் வேண்டுமா?

இராமன் அம்புவிட்டு துளைத்த மரங்கள் 7

வேதாகமத்தில் 7 என்கிற எண் 735 தடவை வருதாம். (எத்தனை ஞாயிற்றுக்கிழமைகள் செலவழித்து கண்டுபிடிச்சாகளோ?க. ஏழாவது, ஏழாம், ஏழு, ஏழு தடவை, ஏழு முறை இப்படி மொத்தமாக 860 இடங்களில் வேறு வருதாம்…

மலேசியாவில் மெர்டேகா, மெர்டேகா என ஏழுமுறை முழங்கினாராம். Tunku Abdul Rahman. சொன்ன நாள 31 August 1957. சரித்திரப் புகழ் வாய்ந்த அந்த புகைப்படத்தை மலேசியா அருங்காட்சியகத்தில். (ஏழு இடங்களில் வைக்கலை… ஒரே ஓர் இடத்தில் தான் வைத்திருந்தனர்.)

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

பாமரன் பார்வையில் ஃபாரின் – 87


மலேசியாவின் அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டதை அறிவிக்கும் தினசரியினை வைத்திருந்தனர். 1965 களில் சிங்கப்பூருக்கு நடந்த அல்லது திணிக்கப்பட்ட அநீதி என்றே சொல்லலாம்.

ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தும் வேலை தான் ஒரு நாட்டுக்கும் வந்து வாய்த்தது.

எனக்கு என்னமோ 1968 இல் கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணி இல்லே
கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே
பெத்த புள்ளே சொந்தமில்லே

பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ

ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா
செல்வமெல்லாம் ஓடி வரும்

அந்தப்பாடலை சிவாஜிக்குப் பதிலா லீ குவான் பாடுவதா நினைத்துப் பார்த்தேன். அப்படியே பொருந்தும் வார்த்தைகள். ஒரு வளமும் இல்லாத இடமாய் சிங்கப்பூர். அட…. குடிக்கத்தண்ணி கூட மலேசியா தந்தாத்தான் உண்டு.

எப்படி இருந்த சிங்கப்பூர்… இன்று… உச்சத்தில்.

வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் லீக்கு வணக்கம் சொல்லியே ஆகணும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 86


சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக்கருமை கொலோ

பாரதி தன் கண்ணம்மாவுக்கு கற்பனையில் வைத்த பெயர்…

மலேசியாவின் அருங்காட்சியகத்தில் படம் பார்த்ததும், இப்படித்தான் நினைக்கத் தோன்றியது. அப்படியே தொடர்ந்து இந்தப் பாட்டும் காதுகளில் ஒலித்தது…

சம்மதமா ???

நான் உங்கள் கூட வர சம்மதமா?

சரி சமமாக நிழல் போலே
நான் கூட வர
சம்மதமா?
நான் உங்கள் கூட வர சம்மதமா?

மலேசியாவிலும் மறக்க முடியாத அந்த வசீகர முகம்.. யார் இவர்?

மூன்று மொழிகளில் திரைப்படங்கள் தயாரித்து இயக்கிய முதல் பெண்; திரைப்பட ஸ்டூடியோ அமைத்து நிர்வகித்த முதல் பெண். கர்நாடக இசை பாடகி, நவரச நடிகை, திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், திரைப்பட இயக்குன…
பாடலாசிரியர், படத்தயாரிப்பாளர், பரணி ஸ்டூடியோ அதிபர், கைரேகை நிபுணர், ஜோசியர், கண்டிப்பான எஜமானி (எல்லா வீட்டு அம்மணி போல்).

இந்திய அரசு, இரண்டு தேசிய விருதும் தந்து தபால் தலையும் வெளியிட்டிருக்கு.

எனக்கு என்னமோ, இதே பெயரில் ஒன்பதாம் வகுப்பில் உடன்படித்த மாணவி தான் நினைவுக்கு வருது.

ஆமா… உங்களுக்கு?

பாமரன் பார்வையில் ஃபாரின் – 85


பதினாறு வயதினிலே படம் பாத்திருப்பீங்க. கமல் ரஜினியை விட மயிலின் அழகு கண்ணில் இருக்குமே!… இருக்கட்டும்… இருக்கட்டும்..

அந்தப் படத்தில் ஒரு டயலாக்… இதுக்கு முன்னாடி…இதுக்கு முன்னாடி… என்பதாய் வரும்.

மயிலை அப்படியே மறந்து விட்டு, இந்த டயலாக் நினைவுக்கு வந்த இடம் மலேசியாவின் அருங்காட்சியகமான டயம் டணலில்..

நாமெல்லாம் கணக்கு போட என்ன செய்வோம்.. கால்குலேட்டரில் தட்டுவோம்.

அதுக்கு முன்னாடி?

லாக்ரதம் டேபிளை உயயோகிப்போம்.

அதுக்கு முன்னாடி?

ஸ்லைடு ரூல்… அட…அப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லையே…

இதோ பாருங்கள்…

பாமரன் பார்வையில் ஃபாரின் – 84


தமிழ்த் திரையுலகம் நமக்கு பல சொற்கள், புதுப் பொருள் தரும் சொற்றொடர்களையும் தந்திருக்கிறது.

சம்பவம்

அவனா நீ?

தேவையில்லாத ஆணி

அரசியலில் சகஜமப்பா

அதான் இது

அது வேற வாயி

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?

இப்படி அவற்றில் சில.

மலேசியாவில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை பத்திரப்படுத்தி, காட்சிக்கும் வைத்திருந்தனர். . எனக்கு என்னவோ அந்த கவுண்டமணி ஜோக்கை விட பெட்ரோமாக்ஸ் தொடர்பான இன்னொரு சம்பவம் (!) தான் நினைவுக்கு வந்தது.

நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஓர் ஊர்வலத்தில் வாசிதபடி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அருகில், அவரின் ஒரு வாசிப்பைக் கேட்டு, தான் தூக்கி வந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை சபாஷ் என தூக்கிப் போட்டு, மீண்டும் பிடித்தாரம்

அந்த சபாஷ் தனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருதை விடவும் உயர்வு என அவரே சொன்னாராம்.

இனி பெட்ரோமேக்ஸ் லைட் பார்க்கும் போதெல்லாம் வித்வான் ராஜரத்னம் பிள்ளை நினைவுக்கு வரட்டும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 83


மலேசியாவின் டயம் டணலில், அரிக்கேன் விளக்கு வைத்திருந்தார்கள். இந்த தலைமுறை மொபைல் ஃபோன் விளக்கு மட்டுமே அறிந்தவர்களுக்கு இதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. இணையத்தில் அரிக்கேன் விளக்கு தலைப்பில் ஒரு நல்ல கவிதை இருந்தது.



இதோ உங்களுக்காய்…


நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !

பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !

போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !

பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து
செல்லும் மாட்டு வண்டிகளுக்கு
அன்று நான்தான் கலங்கரை விளக்கம் !

மணிச் சத்த சந்தத்தோடு
முணுமுணுத்த நாட்டுப் பாடலுக்கு
அன்றே அசைந்திடும் ஒளிகொடுத்து
ஒலி ஒளி காட்சிகள் கிராமத்து
மண் சாலைகளில் அரங்கேற்றியவன் !

வறியவனோடு
வாழ்ந்ததனால்தானோ
என்னவோ இன்னும் என்னை
தேர்தல் சின்னங்களில்
விட்டு வைத்திருக்கிறார்கள் !

இன்றும்
நரைகண்ட மனிதனின்
மனப் பரணுக்குள்
கொஞ்சம் வெளிச்சமாய்
மிஞ்சியிருக்கும் நான்
சிலசமயங்களில் கவிதையாய்
உருவெடுப்பதுண்டு !

யாரோ அனுபவித்தவர்கள் தான் எழுதி இருக்கிறார்கள்.

நன்றி : ஜி ராஜன் அவர்களுக்கு

பாமரன் பார்வையில் ஃபாரின் – 82


ஜப்பானில் கல்யாணராமன் படம் ஜாலியா பாத்திருப்பீங்க…

பொதுவாவே ஜப்பானியர்கள் மேல் எல்லாருக்கும் ரொம்பவே நல்லெண்ணம் இருக்கும். பாவம்…ஹிரோசிமா, நாகசாகி என இன்றும் உச் கொட்டுவர் பலர்.

எப்படி நிமிர்ந்து வாழ வேண்டும்? என்பதை ஜப்பானியர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ளவேண்டும் என்பர் பலர்.

எவனும் செய்யலை… நான் எதுக்குச் செய்யணும்? – இது இந்திய மனப்பான்மை.
எனவும் செய்யலையா? நான் ஏன் செய்யக் கூடாது? ஜப்பானிய மன ஓட்டம் என்பர்.

உலகமே ஒப்புக் கொண்டாலும், ஜப்பானியகளை மன்னிக்காத இரு பகுதி மக்கள் உள்ளனர்.

அந்தமான் வாழ் மக்கள் & மலேசிய வாழ் மக்கள்.

நாசிச, பாசிச, கெச்டாபோ முறை அடக்குமுறைகள் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டவர்கள் பலர். அதனை ஜப்பானியர் ஆட்சியில் அனுபவித்தவர்கள் அந்தமானிலும், மலேசியாவிலும்.

700 பேரை கப்பல் ஏற்றி நடுக்கடலில் தள்ளிக் கொன்ற கொடூரம். தன் சவக்குழியினை தானே வெட்டி ஜப்பானியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு அந்தமானில்.

ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் என மலேசியாயில் தன் அனுபவங்களை புத்தகமாக்கியுள்ளார் சீ வி குப்புசாமி அவர்கள். ஒரே மூச்சில் படித்து வைக்கும் படியான கொடுமையின் எழுத்து வடிவம் அது.

ஒரு படம் வரலாற்றை கற்க எப்படி எடுத்துச் செல்கிறது பாத்தீயளா?

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

பாமரன் பார்வையில் ஃபாரின் – 81


அந்தமானில் அறு வகை ஆதிவாசிகள் வசிக்கிறார்கள்.

செண்டினலிஸ்
ஜெரேவா
கிரேட் அந்தமானியர்
ஓங்கி
சோம்பன்
நிக்கோபாரிகள்

மலேசியாவில் இதே மாதிரியான ஆதிவாசி குழு ஒன்றும் ஓரங்க அசலி என்ற பெயரில் இருக்கிறார்களாம்.

ஏறக்குறைய அந்தமான் ஆதிகுடிகளை நினைவுபடுத்தும் உடை உறைவிடம் நிறம் ஆகியவை.

அதுவும் குறிப்பாக இந்தோனேஷியாவின் அருகில் இருக்கும் அந்தம்மான் வாழ் பழங்குடிகளான சோம்பன் & நிக்கோபாரிகளை நினைவுக்கு கொண்டுவருகிறது.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 80


வரலாறு பலருக்கும் பிடிப்பதில்லை.

எவன் எப்போ பொறந்தா எனக்கென்ன?

எத்தனை மரம் நாட்டா எனக்கென்ன? எப்போ யாரையோ ஜெயிச்சா எனக்கென்ன ஆச்சி?

இப்படி சிந்திப்போர் பலர்.

அவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை (அறிவுரை சொல்ல வயது மட்டும் தான் தகுதி) மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் படிங்க. அப்புறம் பாருங்க…. வரலாறு உங்கள் காதலியை முந்தி நிப்பா.

மலேசியாவின் வரலாறு எப்படி இருந்த நான்… இப்படி வகையில் ஒரு மியூசியம் வைத்துள்ளனர்.

ஒரு பழைய மலேசியா நகரம் போய்வந்த அனுபவம் கிடைக்கும்.

கீழடி போனா இப்படி அனுபவம் கிடைக்குமா? தம்பி அமர்நாத்தை தான் கேக்கணும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 79


வெளிநாட்டுக்குப் போனால் பாஸ்போர்ட் விசா எல்லாம் பெரிதான பிரச்சினையாக இருப்பதில்லை. அங்கு மூன்று வேளையும் நம் முன் நிற்பது சாப்பாடு பிரச்சனை தான்.

அதுவும் பர்கர் பிட்ஸா என்றெல்லாம் சாப்பிட்டு பழகாத நாக்கு ரொம்பவே கஷ்டப்படும்.

நானும் அதில் ஒருவன் தான்.

மலேசியாவில் அட்சய பாத்திரமாய் ஒரு நல்ல அருமையான இந்திய, தமிழக, இராம்நாட் உணவகம் கிடைத்தது.

எம் ஜி ஆர் ஒரு முறை வந்தபோது சாப்பிட்ட உணவகமாம்.

எம் ஜி ஆர் படம் வைத்தால் அவர் குணம் வராமலா போகும்?
ஆம்… வயிறு நிரம்ப சாப்பிடவும், நாமே வேண்டியதை எடுத்து சாப்பிடவும் ஏற்பாடு.

மலேசியாவில் மனதை நிறைத்தது.