பேரரசன் சிற்றரசன் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 9

கம்பன் காட்டிய சந்திப்புகளில் இதுவரை தேவர்கள் பிரம்மனை சந்தித்தது, பிரம்மா சிவனை சந்தித்தது, சிவன் பெருமாளை சந்தித்தது, வசிட்ட முனிவர் அரசனை சந்தித்தது, அரசனை மகளிர் சந்தித்தது, முனிவர்களை மகளிர் சந்தித்தது, அரசன் முனிவரை சந்தித்தது இப்படி பல்வேறு சந்திப்புகளை நாம் பார்த்தோம். இன்று நாம் ஒரு பேரரசன், ஒரு சிற்றரசனை சந்திக்கச் செல்லுகின்ற ஒரு சந்திப்பை கம்பன் எப்படி காட்டுகிறார் என்பதைப் பார்க்க இருக்கிறோம்.

ஒரு சிற்றரசனைச் சந்திக்க, பேரரசன் தானே செல்லவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஒரு வளநபரை, வளம் உள்ள ஒரு நபரை, அவரால் காரியம் ஆகக்கூடிய வகையில் இருக்கின்ற ஒரு நபரை எவ்வளவுதான் சிறியவராக இருந்தாலும், அவர் சிற்றரசனாகவே இருந்தாலும் கூட அவரை நேரில் சென்று சந்திப்பது தான் மரபு என்பதை கம்பர் சொல்கிறார். அவரை வரவேற்கும் விதமாக சிற்றரசர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் நாம் கம்பரின் வரிகளிலேயே பார்க்கலாம் இன்றைய சந்திப்பில்.

யார் அந்தப் பேரரசன்? சிற்றரசன்? என்பது இப்போதைக்கு முக்கியமில்லை. கம்பனின் வரிகள் படிக்கும் போதே நமக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்துவிடும்.

கொடி போல் எங்கும் கொழுந்து விட்டு புகழ் பரப்பி வாழும் அரசன் அந்தப் பேரரசன். பேரரசனின் வருகை குறித்து சிற்றரசனுக்கும் ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துவிடுகிறது. சிற்றரசனுடைய சிறப்பும் சொல்கிறார் கம்பர். போரில் ஈடுபட்டு வெற்றியினைப் பல பெற்றவராம். அதனால் தேய்ந்து மழுங்கித் திரண்ட வரியமைந்த வில்லைக் கையில் வைத்திருப்பவர் என்கிறார் கம்பர். (ஔவை தூது போன கதை நினைவுக்கு வந்தால் நலம்).

கடல் போன்ற வீரர்கள் கொண்ட படை புடை சூழ, செழுமை மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும் சென்றாராம் வரவேற்க. கூடவே மாகதர்கள் திரண்டு வாழ்த்தும் வாழ்த்துகளோடு.. யார் அந்த மாகதர்கள்? அட… நம்ம வடிவேலுவுடன் கூடவே கோரஸ் பாட, இருக்கும் நால்வர் போன்றவர்கள் தான். வரவேற்க தனது நகரிலிருந்து ஒரு யோசனை துரம் சென்றானாம் அந்தச் சிற்றரசன். அதே மன்ன்ன், முனிவரை வரவேற்க இரு யோசனை தூரம் சென்றவன், பேரரசனை வரவேற்க, ஒரு யோசனை தூரம் போதும் என நினைத்தமை யோசிக்க வைக்கிறது.

பேரரசன் பொன்தேரில் வந்திருக்கிறார். அது நகர்ந்தால் அதன் முழக்கம் கேட்டு, மேகமும் நாணும்படியாக இருந்ததாம். ம் அப்புறம். பேரரசன் கீழே இறங்கும் போது, சிற்றரசன் சென்று அவர்தம் பாதத்தில் வீழ்ந்து வணங்க, மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி எடுத்து மன்னனைத் (தன் கைகளால்) வாரி எடுத்துத் தழுவிக் கொண்டாரா. (இன்றைய ஆட்சியாளர்கள் பாதத்தில் விழுந்து ஆசி பெறும் காட்சிகளுக்கெல்லாம் தாய் தந்தைக் காட்சியாய் இருக்கிறதே!) ஆனால் இங்கே அன்பு தான் பீரிட்டு நிற்கிறது.

சரி யார் அந்த அரசர்கள்? சிற்றரசன் உரோமபதன். பேரரசன் அயோத்தியின் அரசன் தசரதன். அது சரி அயோத்தி அரசனுக்கு தசரதன் என்று எப்படிப் பெயர் வந்தது தெரியுமா?

சிலம்பரசன் என்றால் உடனே எல்லாருக்கும் தெரியும். ஆனால் சம்பராசுரன் என்றால் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சம்பராசுரன் போரை வைத்துத்தான் ராமாயண கதையின் அச்சு சுழல்கிறது. அந்த சம்பரன் என்ற அசுரன், இந்திரனை வென்று ஆட்சியையும் கைப்பற்றுகிறான். தன்னையும் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் பெற்றுத் தரும்படி அயோத்தியின் அரசன் உதவியை நாடுகிறார் இந்திரன். சம்பராசுரனிடம் மிகப் பெரிய படை இருந்தது. அதிலும் சிறப்பான பத்து தேர்கள் கொண்ட படை வைத்திருதான். (தசரத = பத்து இரதங்கள்).

அந்தத் தேர்ப் படையினை வெல்வதற்குத்தான் அயோத்தி மன்னன் போரிடத் தொடங்கினார் இந்திரனுக்காய். போரில் தேரோட்டியாக கைகேய நாட்டு இளவரசி கைகேயி உடன் வருகிறார். இனி அடுத்து நிகழ்ந்த கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். தேர் ஓடும் போது அச்சு முறிந்து விடுகிறது. தன்னுடைய விரலை சக்கர அச்சாக பயன்படுத்தி, தேரைச் செலுத்தி அந்த அயோத்தி மன்னனுக்கு உதவி செய்து வெற்றி பெற வைத்தார். தச ரதம் வென்றதால் தசரதன் என்ற பெயரும் பெற்றார். (இரும்புக்கை மாயாவியை வாயைப் பிளந்து கொண்டு படித்த நமக்கு, கைகேயின் இரும்புவிரல் கதையும் இருக்கு படிக்க. அதைப் பின்னர் தனியாகப் பார்ப்போம்)

பொதுவாகவே வாய்க்கு ருசியா நல்ல சமையல் செய்து தந்தாலே, தங்க வளையல் பரிசாகத் தருவோம். (வீட்டுக்காரிக்கோ அல்லது சமையல்காரிக்கோ, அது உங்க சாமர்த்தியம்) போரில் வெற்றியுடன், தசரதன் என்ற பெயரும் வாங்கித்தந்த கைகேயிக்கு தந்த அந்த அன்புப் பரிசுதான், அந்த இரண்டு வரங்கள். வானுலகத்தை நிலைபெறச் செய்த, என்று கம்பன் சொன்னதன் பின்னனி தான் இவ்வளவு கதையும்.

சரி…இப்போது நாம் மீண்டும் தசரதன் உரோமபதன் சந்திப்பில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைப் பார்ப்போம். சொல்லாத நாளில்லை சுடர் மிகு (வடி) வேலா என்பதைப் போல் பாடாமல், உள்ளம் மகிழ்ந்து வரவேற்கிறார். விருந்தினராக வரும் விவிஐபியை முன்னரே சென்று மடக்கி வரவேற்று நம் காரில், மன்னிக்க நம் மாணிக்கத்தேரில் ஏற்றிக் கொண்டு வருவது போல் தான் தன் அரன்மனைக்கு அழைத்து வந்தாராம். இதோ கம்பனின் வரிகள்:

‘யான் செய்த மா தவமோ! இவ் உலகம்
செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என.
மனம் மகிழா மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
செழு நகரில் கொணர்ந்தான் – தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்
என உரைக்கும் உரவுத் தோளான்.

வானுலகத்தை நிலைபெறச் செய்த ஒளி மிகுந்த வேலை உடைய அரசே! இங்குத் தாங்கள் எழுந்தருளக் காரணம் நான் செய்த பெருந்தவமோ! இந்த நாடு செய்த நல்ல தவமோ! மற்றும் வேறு ஏதேனும் நற்செயல்களோ! (எனக் கூறி), மனம் மகிழ்ந்து தயரதனைத் தேரில் ஏற்றி பகைவரின் உயிரற்ற ஊனுடலாக்கிய ஒளிமிக்க கூரிய வேலை உடைய உரோமபதன் எனக் கூறப்படும் வலிய தோள்களை உடைய அவ்வரசன், தேன்பிலிற்றும் பூமாலையணிந்த மணிமுடி சூடியிருப்பவனாகிய தேர்ப்படையை உடைய தயரத வேந்தனை செழிப்புடைய தனது நகருக்கு அழைத்து வந்தான்.

சிந்திப்புகளுடன் அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
17-08-2022

உரோமபத மன்னன் கலைக்கோட்டு முனிவர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 8

உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்தது. அதனைக் களைய, கலைக்கோட்டு முனிவரை மகளிர் அழைத்து வந்தனர். அந்த முனிவருக்கும் நம் அரசனுக்கும் இடையே நடக்கும் சந்திப்பை நாம் ஒரு 360 டிகிரியில் பார்க்க உள்ளோம் இன்று கம்பன் வரியில்.

360 டிகிரி அப்ரைசல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஊழியரின் திறனை மதிப்பிடுவதற்கு இது பயன்படுகிறது. ஒரு நபரை மதிப்பீடு செய்வதற்கு, தலைமை அதிகாரி, உடனடியான மேலதிகாரி, கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், உடன் பணியாற்றும் சக பணியாளர்கள், அவருடைய சுய மதிப்பீடு இவை எல்லாவற்றையும் வைத்து செய்யப்படும் ஒரு முடிவு தான் இந்த வித்தை. ஒரு ஊழியரைச் சுற்றி இருக்கின்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு, அவரைப்பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து, அதன் பின்னரே அவருக்கு பதவி உயர்வு போன்றவைகள் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்த 360 டிகிரி அப்ரைசல் அலசுகிறது.

நம்முடைய HR ஆசான் திருவள்ளுவர் இதைப்பற்றி ஏதும் சொல்லி இருப்பாரே என்று 360 ஆம் குறளை சற்றே புரட்டிப் பார்த்தேன்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

ஒன்றின் மீது ஏற்படும் அதீத விருப்பின் காரணமாய், அது கிடைக்காத போது வெறுப்பு மேலிடுமாம். பின்னர் அறியாமை கூடவே வருமாம். ஆக இந்த மூன்று குற்றங்கள் இல்லாமல் இருந்தால் ஒரு துன்பமும் இல்லாத மனிதனாய் அவன் இருப்பான். அவனை வைத்து நாம் வேலையெ வாங்கிக்கிடலாம் என்கிறார் ஐயன் வள்ளுவன்.

காமமும், வெகுளியும், களிப்பும் என்ற அதே வள்ளுவனின் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் கம்பன். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய முனிவர்களுக்கெல்லாம் தலைவனாம் அந்த கலைக் கோட்டு முனிவன். மகளிர் செய்த சூழ்ச்சியினால் இங்கு வந்தவன்.

வந்தவரை வரவேற்கும் மரபு இருக்கிறதே! இரண்டு ஓசனை தூரம் வந்து வரவேற்றாராம் அரசன். அது என்ன ஓசனை? என யோசனை வருகிறதா? அதனைத் தெரிந்து கொள்ள நீங்கள் கூப்பிடு தொலைவு என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் அழைக்க இன்னொருவர் கேட்கும் தூரம் தான் அது. ஜெரவா மாதிரியான ஆதிவாசிகளுக்கு அது பல கிலோமீட்டர்கள் வரை நீளும். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆன மனைவியைப் பொறுத்தவரை அது சுழியமாகவே இருக்கும். இருந்தாலும், நம் முன்னோர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஒரு பார்வை பார்த்திடலாம்.

திருநள்ளாற்றுப் புராணம் 191 ல், காவிரி தெற்கு ஒன்றரை காதம் சிவன்தன் தருப்பை வனம் சிறப்பெனல் எனச் சொல்கிறது. இந்த தூரத்தை கூகுளாண்டவர் மூலமாக அவரின் நிலவரைபடம், வழியாக அளந்து பார்த்தால், 2.5 கிமீ ஆகிறது. இது திருநள்ளாற்றுப்புராண பாடலின்படி ஒன்றரைக் காத தூரம் ஆகும். ஆக, ஒரு காத தூரம் என்பது 1.67 கிமீ ஆகிறது.

திருமந்திர பாடலின் முலமாய்ப் போய்ப் பார்த்தால், கூப்பிடு தூரம் = இரு காதம்
ஆக கூப்பிடுதூரம் (1.67 கிமீ வகுத்தல் 2) = 835 மீட்டர்கள்.

4 கூப்பீடு = 1 காதம் 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை 26.8 கி.மீ ஆக ஒரு ஓசனை தூரம். இரண்டு ஓசனை என்பது கிட்டத்தட்ட சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை இருக்கும் தூரம் என வைத்துக் கொள்ளலாம்.

ஆமா… இதெல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா? அவ்வளவு தொலைவில் வந்து, அரசன் எதிர் கொண்டு வரவேற்பு தந்தானாம். கூடவே கூந்தல் மணம் கமழும் (இயற்கையா? செயற்கையா? சரியாக விளக்கமில்லை) மகளிரும் வந்தார்களாம். இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது. இதோ கம்பன் வரிகளில்:

‘என்று எழுந்து. அரு மறை முனிவர் யாரொடும்
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்சேர
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் – குவவுத் தோளினான்.

திரண்ட தோள்களை உடைய மன்னன் உரோமபதன் நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து புறப்பட்டு, அரிய வேதங்களைக் கற்ற முனிவருடன் இரண்டு யோசனை தூரம் எதிர் சென்று, மணமும் அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே சிறந்த தவமலை போன்றவளாகிய கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.

சிந்திப்புகளுடன் அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும்…
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
15-08-2022

கலைக்கோட்டு முனிவர் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 7

உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய, கலைக்கோட்டு முனிவரை மகளிர் சந்திக்கும் சந்திப்பை இன்று கம்பன் வரியில் பார்க்கலாம். முனிவரே ஆனாலும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி வரவேற்க வேண்டும் என்பதை நாம் இச்சந்திப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கொரோணா வந்த காலத்தில் தான், வீட்டுக்கு வந்தவுடன் கையினைச் சுத்தப்படுத்துங்கள் என அரசு உத்திரவே வந்து விட்டது. ஆனால் பல்லாண்டுகளுக்கு முன்பே கம்ப உத்திரவு அப்படித்தான் சொல்கிறது. வீட்டிற்கு யார் வந்தாலும், கைகழுவ நீர் தர வேண்டும் என்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளாக, கை கழுவவும், கால் அலம்பவும், வாய் கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும். இவைகளை அருக்கியம், பாத்யம், ஆசமணீயம் என்பர் வடநூலார். இதனையே இந்தச் சந்திப்பில் கம்பரும் ‘அருக்கியம்’ என்று சொல்கிறார்.
வந்தவருக்கு உரிய உட்கார இடம் அடையாளம் காட்டுங்கள். உட்காரவும் சொல்லுங்கள். கலகலவென்று முகம் மலர்ந்து சிரித்தபடி பேசி வரவேற்று உபசரிப்பு செய்யுங்கள். (கம்பர் தான் இத்தனையும் சொல்கிறார்).

கம்பரின் பார்வை அப்படியே வந்த மகளிரின் பக்கம் செல்கிறது. சிவப்பு நிறம் பளிச்செனத் தெரிகிறதாம். இக்காலத்து நட்சத்திர விடுதிகளின் வரவேற்பாளினிகளின் உதட்டுச் சாயம் போல். நமக்கு மனதில் இப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் கம்பர் மனதிலோ, அந்த சிவந்த உதடுகளைப் பார்த்தவுடன் முருக்கு (முள் முருங்கைப்) பூ நினைவுக்கு வந்ததாம்.

அப்புறம் விருந்தாளிகளுக்கும் ஒரு ஆலோசனை. எவ்வளவு தான் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் ரொம்ப நேரம் கடலை போடக்கூடாது அவர்கள் வீட்டில். (அவர்களுக்கு சுந்தரி தொடர் பார்ப்பது போன்ற பல முக்கிய அலுவல்களும் இருக்கலாம்) எனவே சட்டென்று கிளம்பி விட வேண்டுமாம்.

வடிவேலு துபாய் போய் வந்த கதையினைத், தன் மாப்பிள்ளையிடம் சொன்னதை சற்றே நினைவில் கொள்க.

ஏண்டா மாப்பிள்ளை! துபாய் ரோட்டைப் பாத்திருக்கியாடா நீ?

நானெங்கே பாத்தேன்! நீதான் தென்காசிக்குப் போயிட்டு வந்த மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு போயிட்டு வர்ரே!

இதில் வரும் வடிவேலின் மாப்பிள்ளை, பயன்படுத்திய பொசுக்கென்ற சொல், விரைவுக் குறிப்புச் சொல்லாம். கம்பன் பயன்படுத்திய பொருக்கென என்பதைத்தான் இப்படத்தில் பொசுக்கென பயன்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.

மேலும் சில விரைவுக் குறிப்புச் சொற்கள் பார்க்கலாமே! பொள்ளென, பொருக்கென, கதுமென, சடக்கென, மடக்கென, திடீர் என போன்றவை விரைவுப் பொருளில் வரும் வார்த்தைகள். எடுத்துக்காட்டு சொன்னால் எளிதில் விளங்கிடுமோ!

பொள்ளெனப் பொழுது விடிந்தது

திடீரென மறைந்து விட்டான்

மற்ற விரைவுக் குறிப்புச் சொற்களையும், இன்று வழக்கில் இல்லாத பல ஒலிக்குறிப்புச் சொற்களையும் இலக்கியங்களில் மட்டுமே பார்க்கலாம் (சில நேரங்களில் வடிவேலு நகைச்சுவைக் காட்சிகளிலும் பார்க்கலாம்).

அப்புறம் அதென்ன முனிவனைத் தொழா…? முனிவனை வணங்காமலா? அது தான் இல்லை. பொய்கை ஆழ்வார் பாசுரம் ஒன்றையும் துணைக்கு கையோடு எடுத்துப் பார்க்கலாமே!

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம்
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலைநஞ்சு
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி.

எனது வாயானது எம் பெருமானைத் தவிர மற்றொன்றைப் புகழாது. கைகள், உலகங்களைத் தாவி அளந்து கொண்ட திரு விக்கிரமனை அல்லாது வேறு ஒருவனைத் தொழ மாட்டா; பூதனையின் மார்பகங்களில் தடவியிருந்த நஞ்சை உணவாக உண்ட கண்ணபிரானுடைய திருமேனியையும், திருநாமத்தையும் அல்லாது மற்றெதையும் கண்கள் காணாது. காதுகள் கேட்காது. சுருக்கமாய்ச் சொன்னால் உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே; விதை இல்லாமல் வேரில்லையே என்ற இன்றைய வரிகளின் புத்தம் பழைய வரிகள் அது.

எதுக்கு இவ்வளது தூரம் பேசாமல் வள்ளுவனையே அழைக்கலமே!

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!

இனிமேலும் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். கம்பனின் சந்திப்புப் பாடலை முழுதும் ஒரு முறை பார்த்துவிடலாம்.

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து
”இருக்க” என இருந்த பின் இனிய கூறலும்
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர்.

அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து அமர்வீராக என முனிவன் கூற, அந்த மகளிர் அமர்ந்ததன் பின்னர், இனிய உரையால் முகமன் கூறி வரவேற்க முருக்கம் பூப் போன்ற உதடுகளை உடைய அப்பெண்கள் அந்த முனிவனைத் தொழுது (பின்பு) விரைந்தெழுந்து சென்று தமது பன்ன சாலையை அடைந்தனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
10-08-2022

உரோமபத மன்னன் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 6

கம்பன் காப்பியத்தில் இன்றும் நாம் காண இருப்பது வசிட்ட முனிவர் சொன்ன காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய முனிவர்களின் சந்திப்பில் சில ஆலோசகள் சொல்லப்படுகிறது. அதனை அமலாக்கும் விதமாய் அடுத்த இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

நாட்டிற்கு மழையினை வரவழைக்க ஒரு சிறப்பான தவமுனியினை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் அவையில் இருந்த பெண்கள் எழுந்து நின்று, நாங்கள் சென்று அந்தத் தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர். நம் முன் இம்மகளிர் சந்திப்பில் சில கேள்விகளை எழுப்புகிறது.

மகளிர் அரசவையில் இருந்திருக்கிறார்களா?
மகளிருக்கு அரசுப் பணிகளில் பங்கேற்கும் உரிமையும் தரப்பட்டிருக்கிறதா?
அப்படி மகளிர் சொல்லும் ஆலோசனையும் ஏற்கப்பட்டுள்ளதா?

இவைகளின் பதில், மகளிரை அடிமைகளாக நடத்தவில்லை என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

கம்பன் சந்திப்பில் மகளிர் என்றே சொல்வதாய் எனக்குப் பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனைகளை வைத்து உரையாசிரியர்களோ, அவர்கள் விலைமகளிர் என்று சொல்கின்றனர். அப்படி என்ன சொல்லி விட்டார் நம் கம்பன்? அவையில் வந்த மகளிர் இப்படி இருந்தார்களாம். ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடையவர்களாகவும் இருந்தார்களாம். அது போக, யாம் சென்று முனிவனை அழைத்து வருவோம் என்று கூறிய துணிவு இருந்த்தினாலும் அம்மாதர் விலை மகளிர் தான் எனச் சொல்கின்றனர் சான்றோர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும், விலைமகளிரை அரசவையில் வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறதா? அதுவும் அரச காரியங்களைல் மூக்கை நுழைக்கும் அளவு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறதா? யோசிக்க வைக்கிறது.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும் என்ற நூலைக் கையில் எடுத்தேன். சங்க காலம் என்பது மனித வளத்தினை வடித்தெடுப்பதற்கான பொற்காலம் என்கிறார்கள். இதனை திருநெல்வேலியிலிருந்து முனைவர் இரா சிவசங்கரி அவர்கள் சிறப்பான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். (செம்மூதாய் வெளியீடு)

தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் விலைமகளிரைக் குறிப்பிட்டுள்ளனர். பரத்தையர் என்பது சங்க இலக்கிய இலக்கணத்தில் காணமுடிகிறது. பின்னர் அற இலக்கியங்களில் வரைவின் மகளிர் என்று சொல்கிறார்கள். காப்பியங்களில் கணிகையர் என்றும் காலத்திற்கு ஏற்றார்போல் அவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. சங்ககாலத்தில் கூறப்பட்ட காமக்கிழத்தி என்பவள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டபின் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப் பட்ட பெண்களாவர். இவர்களையும் மூன்று வகைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் இளம்பூரணார். இதில் ஒத்தகிழத்தி என்பவள், தலைவியை ஒத்த குலத்தை உடைய இரண்டாவது உரிமைப் பெண் என்கிறார். [அதாவது குருடான கோழி எல்லாம் கிடையாது.] இழிந்த கிழத்தி என்பவர் அரசர்களால், அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பெண்களாம். வரையப்பட்டோர் என்பவர்கள் ஆடல், பாடல், அழகு, அறிவில் சிறந்து பலருக்கு காலம் கணித்து தந்து, கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்தில் இருந்து, தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமை பெண் என்கிறார்.

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே பொருள் வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் பொதுமகளிர். தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே சான்று சொல்கின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி போன்றவை சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள். [நன்றி: ம.செந்தமிழன் வலைப்பூ] அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோர் தேவரடியார்.

கம்பன் எழுதிய இராம அவதார நூலை அரங்கேற்றம் செய்ய ஒரு அரங்கேற்றப்(!) பாவையின் சிபாரிசு தேவைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்று ஒரு தாசி இருந்தாளாம். கம்பன் காவியத்திற்கு சான்றிதழ் இவரிடமிருந்து பெற்று வந்தால் தான் அரங்கேற்றம் செய்ய இயலும் என்றனராம் அறிஞர்கள். தாசி உருவில் நடமாடும் சரஸ்வதியாம் அவர். அவரும் ஒரு பாடலைப் பாடி அதை ஏட்டில் எழுதி கம்பரிடம் கொடுத்தாராம் படிக்காமலே. ”என்னுடைய காவியத்தை ஆய்வு செய்யப் போவதில்லையா?” என்று கம்பர் கேட்க, ”இல்லை இராமகாதை அரங்கேற்றத்தின் போது எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அப்பொழுது தங்கள் திரு வாயாலேயே அதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னாராம். அஞ்சனாட்சி எழுதிக் கொடுத்த பாடல்

அம்பரா வணி சடை யரண யன் முதல்
உம்பரான் முனிவரால் யோக ராலுயர்
இம்பரார் பிணிக்கரு மிராம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருஹ்திலிருத்து வாம்.

இத்தனை சிரமங்களுக்கு பின்னர்தான் அந்த இராமகாதை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது [நன்றி: கம்பர் இராமாயணம் அரங்கேறிய கதை – கவிமாமணி பூவாளூர் ஜெயராமன்] அந்த ராமகாதை தான் இப்பொழுது கம்பராமாயணம் என்று நாம் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சரி… மீண்டும் அந்த சந்திப்பு நிகழ்ந்த பாடலை பார்த்துவிட்டு அடுத்த சந்திப்பிற்கு தயாராவோம்

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை
மாதர் எழுந்து. “யாம் ஏகி அருந் தவனைக்
கொணர்தும்” என வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாக உடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களை எல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்றகுற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது? என்று சிந்திக்கும் போது, ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய மாதர் சிலர் எழுந்து நாங்கள் சென்று அந்த அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

உரோமபத மன்னன் முனிவர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 5

கம்பன் காப்பியத்தில் இன்று நாம் காண இருப்பது நேரடியான சந்திப்பு அல்ல. வசிட்ட முனிவர் சொன்ன ஒரு சந்திப்புக் காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் போனதாம். அக்குறையினைக் களைய முனிவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. மழை என்றதும் நமக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மராபிலேய்… ஹொய்
வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே…
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

இப்படி ஒரு பாடல் யேசுதாஸ், சித்ரா குரலில் தேனைக் குழைத்துத் தந்தது போல் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். மழை என்றாலே மகிழ்வு தான். அந்தமானில் இருப்போர்க்கு இந்த மழை அடிக்கடி, பல மாதங்களுக்கு வந்து இன்பம் தந்து கொண்டிருக்கும். மழை இல்லை என்றால் குடிநீருக்கும் சிக்கல் தான். ஏன் மழை இல்லாமல் போகிறது? நல்லவர்கள் நாட்டில் குறைவது தான் காரணம் என்கிறது மூதுரை. ரொம்பவெல்லாம் வேண்டியதில்லை. நல்லார் ஒருவர் இருந்தாலும் போதுமாம் மழை பெய்ய.

நம் கல்லூரித் தோழரும் நல்லவருமான அந்த ஒருவர் கதை பார்ப்போம். பொதுவாக யாருக்காவது சிரமம் வந்து, அது நல்லபடியா சரியானால், கடவுளுக்கு நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வர். பொங்கல் வைப்பது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது இப்படி இத்யாதி இத்யாதி. நம் நல்லவரோ, வித்தியாசமான நேர்த்திக்கடன் வேண்டி இருக்கிறார். வருஷத்துக்கு ஓர் இலட்சம் என ஏழைகளுக்கு மருத்துவச் செலவு செய்வதாக. அதுவும் ஐந்து ஆண்டுகள்.
சரி எப்படி உதவ? அதுக்கு ஒரு நல்லவன் தேவைப்பட, நான் அகப்பட்டேன். (இன்னுமா என்னை இந்த உலகம் நல்லவன்னு நம்பிட்டிருக்கு!!) கோவையில் உள்ள ஒரு டாக்டரிடம் விசாரித்த போது, உடன் நோயாளி தயாராய் இருப்பதைச் சொன்னார். தான் வாங்கும் ஃபீஸ் எல்லாம் தள்ளுபடி செய்து உதவ முன் வந்தார். அதெப்படி டிவி நியூஸ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நல்லவர்களாகவே நிறைந்து இருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருந்தது. உதவியது யார் என்றே தெரியாமல், ஓர் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட திருப்தி நம் நண்பருக்கு. தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நம் நல்ல(வர்) நண்பர் உதவியால் கோவை மருத்தவர், ஏழை நோயாளிகளுக்கு உதவி செய்ய, அது அரசல் புரசலாக வெளியே தெரிந்திருக்கிறது. நாமும் செய்வோம்லே என்று ஒரு குணமடைந்த நோயாளி, 1000 பவுண்ட் (ஏறக்குறைய ஒரு லட்சம்) தந்து விட்டு, அந்த நண்பர் மாதிரியே உதவுங்க எனச் சொல்லிட்டுப் போனாராம். இப்ப தெரிகிறதா கோவையில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணம்?

கோவை டாக்டருக்கும் கிடைத்த ஒரு நல்லவர்

அப்படியே மழை இல்லாமல் இருந்தால், நல்ல காரியங்கள் செய்யத் தொடங்கினால் போதுமாம்! இப்படித்தான் ஒரு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில், முனிவர் ஒருவர் வசித்து வந்தாராம். அதன் அருகே ஒரு கிராமத்தில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதாம். குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கவலையோடு இருந்தனர். ”இன்னும் சிறிது நேரத்தில், இங்கே மழை பொழிய வைத்து, கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தையும் போக்கப் போகிறேன்; ஆனால், அதற்கு முன், நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்…” என்றாராம் வந்தவர். உங்கள் கிராமம் செழிப்படைந்த பின், தான, தர்மங்கள் செய்வதை அதிகப்படுத்த வேண்டும். என்ற உறுதிமொழி வாங்கி பின்னர் மழை பொழிய வைத்தாராம்.

இதெல்லாம் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா? வெளிநாட்டில் நடந்த சமாச்சாரம் என்றால் நீங்கள் எளிதில் நம்பிட ஏதுவாக இருக்கும். அது 1991 இன் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணம். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மழை இல்லையாம். இந்தியாவிலிருந்து சென்ற யோகி ஒருவர்தான் யாகம் வளர்த்து மழை பெய்ய வைத்தாராம். முதலில் யாகம் வளர்த்த போது, பக்கத்து வீட்டுக்காரரோ தீயணைக்கும் படைக்கு தகவல் சொல்லி யாகத்தை நிறுத்திவிட்டாராம். பின்னர் தான், மழை அவர்களுக்கும் தேவை என்பதால் அனுமதி தந்தார்களாம். யாகம் நடந்த ஒரு வாரகாலத்தில் 08-07-1991 இல் நல்ல மழை பொழிந்ததாம் சுவாமி லக்‌ஷ்மன் ஜு ரைனா அவர்களின் கைங்கரியத்தால்.

சுவாமி லக்‌ஷ்மன் ஜு ரைனா

அதென்ன நல்ல மழை என்று கேட்கிறீர்களா? தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான அளவு பெய்தல் தான் நல்ல மழை எனப்படும்.

இப்படித்தான் உரோமபத மன்னன் ஆட்சிக் காலத்திலும் மழை இல்லாமல் சிரமப்பட்டார்களாம். அப்போதைய முறைப்படி (ஏன் இப்போதைய நடைமுறையும் கூட) ஏதாவது சிக்கல் வந்தால் முனிவர்களிடம் ஆலோசனை கேட்கும் சந்திப்பு நிகழ்கிறது. நாம் பார்த்த ஜு ரைனா மாதிரி அந்தக் காலத்தில் கலைக்கோட்டு முனிவர் வந்தாலாகும் என முனிவர்கள் சொன்னார்களாம். இப்படிச் சொல்கிறது கம்பனின் சந்திப்பின் வரிகள் இதோ.

‘அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
நெடுங் காலம் அளவது ஆக.
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம்
பெருகுதலும். வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து. மா தானம்
கொடுத்தும். வான் வழங்காது ஆக.
பின்னும். முனிவரர்க் கேட்ப. “கலைக்கோட்டு-
முனி வரின். வான் பிலிற்றும்” என்றார்.

அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில் நீண்ட கால அளவாக மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால் கொடிய துன்ப நோய் மிகவே அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
28-07-2022

கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 4


தயரதன் வசிட்டர் சந்திப்பு

கம்பனின் படைப்பில் இதுவரை பார்த்த மூன்று சந்திப்புகள் எல்லாமே, வசிட்ட முனிவர் தன் மனதில் நினைத்துப் பார்த்தவைகள். இன்று நாம் அந்த வசிட்டர் எப்படி தயரத மன்னரைச் சந்தித்தார்? என்பதைப் பார்க்க உள்ளோம். அதனைக் கம்பன் அவர்கள் தன்னுடைய வரிகளில் எப்படி குறிப்பிட்டுள்ளார்? என்பதையும் சற்றே பார்க்கலாம். நேராக மூக்கைத் தொடுவது என்பது தான் நம் வழக்கம் இல்லையே! சற்றே கொஞ்சம் கொஞ்சமாக சுற்றிவிட்டு, மீண்டும் கம்பனின் மூக்கை தொடுவது பற்றி யோசிக்கலாம்.

களத்தூர் கண்ணம்மா… களத்தூர் கண்ணம்மா என்று ஒரு படம். இந்த படத்தில் மற்ற எல்லாச் சிறப்புகளையும் தூக்கி எறிந்து விட்ட்து ஒரு குழந்தை நட்சத்திர அறிமுகம். ஆம். அன்று குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் தான், இன்றைய உலக நாயகன் கமலஹாசன்.

இப்போதைக்கு, களத்தூர் கண்ணம்மா என்றாலே கமலஹாசன் அறிமுகமாகிய படம் என்கின்ற அளவிற்கு புகழ் பெற்று விட்டது அந்தப் படம். அந்தக் காலத்தில், அதாவது கமலஹாசன் என்று பெயரே, யாரும் அறியாமல் இருந்த காலத்தில் நடந்திருக்கும் செய்தியினை ஒட்டியது தான் நான் சொல்ல வந்திருக்கும் சேதி. இந்தப்படம் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டதாம். அதைப் போலவே கமலஹாசன் பிறந்த ஊரான பரமக்குடியிலும் மிகப் பிரபலம் அப்படம். அந்தப் படத்தில் கமலஹாசன் பாடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் பாடல் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! மேலும் பிரசித்தம். அந்தப்பாட்டை அப்படியே கொஞ்சம் மாற்றி வீடுகளின் பாடிக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருகிறது. தமிழின் சிறப்பே அது தானே!

தமிழில் ஒன்றை நாம் எப்படி உச்சரிக்கின்றோம் என்பதை ஒட்டி அதன் பொருள் மாறுபடும். நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் கமலஹாசன் பாடிய பாடலின் சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் பாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் அதன் பொருளும் மாறி இருந்தது. அம்மா உண்ணியே! அப்பா உண்ணியே என்று பாடிக் கொண்டிருந்தனர். பரமக்குடி வட்டாரத்தில் உண்ணி என்பது, ஆடு மாடுகள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூச்சி.

ஆனால் அந்தப் படத்திலோ, இறைவனைப் பார்த்து அம்மாவும் நீயே தான்; அப்பாவும் நீயே தான்; என்று பாடுவது போல அமைந்த பாடல் அது. அப்பா ஒரு பூச்சியைப் போல்; அவன் அம்மாவும் ஒரு பூச்சி தான்; கடவுளே! நீ தான் எல்லாம் என்ற வகையில் வயோதிக பாட்டிகள் பாடிக்கொண்டிருந்தனர். சிறுவயதில் கேட்டது இன்னும் மனதில் நினைவாக இருக்கிறது. கடவுளையே இப்படிப் புகழ்ந்து பாராட்டி வருகிறார்களே! ஏன் இப்படி? உணர்வுபூர்வமாக யோசிக்கத் தோன்றுகிறது, இந்த பாடலை கேட்டதும். கடவுள் தான் எல்லாமே என்று முழு சரணாகதி அடந்த நினையினைக் கடவுளிடம் சொல்வது போலத்தான் அமைந்திருந்த்து அப்பாடல்.

அதேபோலத்தான் எல்லாம், எல்லாம்தான் என்று பிரகாஷ்ராஜ் ஒரு ரகசியமானதை பகிரங்கமாக விளம்பரம் செய்து ஏதோ விற்பனை செய்து கொண்டு இருந்தார். ஆனால் வெளிப்படையாக எல்லாவற்றையும் விட்டாலும் கூட, விடாமல் இருக்க போவது எதை? இப்படி ஒரு கேள்வி கேட்டாரல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தான் பதில் சொல்வார். இங்கே இப்படிப்பட்ட கேள்விகு ஓர் ஆங்கிலேய அதிகாரி என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.

அது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு வடமொழியில் இருந்த பகவத்கீதையை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கான செலவு கணக்கை எடுத்து அவருடைய மேலதிகாரிக்கு அனுப்பி இருக்கிறார். மேலதிகாரியோ, இன்றைக்கும் கேட்கும் அதே கேள்வியை அன்றைக்கே கேட்டாராம்! இதற்காக ஆகின்ற செலவை நியாயப்படுத்த வேண்டும் என்றாராம். அதற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி சொன்ன பதில் தான், மேலே குறிப்பிட்ட எல்லாம் தான்… எல்லாமே தான் போன்ற பதில். நாம் தான் ஏதோ ஒரு காலத்தில், இங்கிலாந்துக்கு திரும்பி செல்லத்தான் வேண்டும். அப்பொழுது ஒன்றுமே வேண்டாம் ஆனால் எல்லாமும் இருக்கின்றது போன்ற நிலையிலும் ஏதாவது ஒன்றை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லவேண்டும் என்றால், அது இந்த பகவத்கீதை ஆகத்தான் இருக்க முடியும். மேலதிகாரிக்கு அவரின் விளக்கம் பிடித்திருந்தது. பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையும் அப்படித்தான் தொடங்கியது.

இப்படித்தான் கம்பனின் வரிகளை படித்தவுடன் நினைக்கத் தோன்றுகிறது. வசிட்ட முனிவரை தசரத மன்னன் சந்தித்தபோது. யாரையாவது சந்திக்கும் பொழுது, நீங்க வல்லவர், நல்லவர் என்பதும், மானே தேனே எனப் புகழ்ந்து தள்ளுவதும் இப்போதைய பழக்கம் என நினைக்க வேண்டாம். காலம் காலமா கம்பன் காலம் தொட்டு அது நடந்திட்டே இருக்கிறது. இது தூரமாய் இருக்கின்ற ஒருவரை, மிகவும் அருகில் அவரை நெருக்கி, நெருங்கியவர் ஆக்கிக் கொள்வதற்கு இத்தகைய புகழ் வார்த்தைகள் தேவைப்படுகின்றது. இதைத்தான் கம்பனும் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது போலத்தான் படுகிறது.

ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது தொல் குலத்
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.

தயரத மன்னன், ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி, பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும், தந்தைமாரும் தவப்பயன்களும் அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும் மற்றையோரும். வேறுபட்ட உயிர்களும் எல்லாமே எனக்குத் தாங்களேதாம் என்றாராம். வசிட்டரை மன்னன் எப்படி மதித்துள்ளான் என்பது இதனால் புலப்படும்.

அதென்ன ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் பிரம்மன்? இதற்கும் பதில் பகவத்கீதையில் இருக்கிறது. ‘ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘யுகம்’ என்பது ‘மகாயுகம்’ என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு.

அதாவது கிருத யுகம் (17,28,000 ஆண்டுகள்), திரேதாயுகம் (12,96,000 ஆண்டுகள்), துவாபரயுகம் (8,64,000 ஆண்டுகள்), கலியுகம் (4,32,000 ஆண்டுகள்); ஆக மொத்தம் ஒரு மகாயுகம் என்பது 43,20,000 ஆண்டுகள். ஆயிரம் மகாயுகங்கள் என்றால், 432 கோடி ஆண்டுகளுக்குச் சமமானவரே என்று அழைக்கிறார் அரசர். அப்புறம் சந்திப்பு வெற்றியாய் முடிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன?

கம்பன் வரிகள் மூலம் நாம் கற்க வேண்டிய பாடமும் அது தானே!

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 3


குத்துப் பாடல்கள் இப்பொழுது மிகப் பிரபலம். பல்வேறு தொலைக்காட்சிகளிலும், குறிப்பாக டிஜே என்ற பெயரில், கூட்டம் கூடுகின்ற எல்லா இடங்களிலும் இந்தக் குத்துப்பாட்டு அரங்கேறும். இப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சியிலும் இவைகளுக்கு தனி நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். குத்துப்பாடல்கள் என்னவோ இப்பொழுதுதான் வந்தது என்று நினைக்க வேண்டாம். இதற்கெல்லாம் தாத்தா பாடல் எல்லாம் இருக்கிறது. சித்தாடை கட்டிகிட்டு, சிங்காரம் பண்ணிகிட்டு என்ற குத்துப் பாடலும், மச்சானைப் பார்த்தீங்களா? என்று குசலம் விசாரிக்கும் பாட்டாகவும் இருக்கட்டும், தன் இசையால் அனைவரையும் மயக்கி சொக்க வைக்கிறது.

ஒய் திஸ் கொலவெறி? துவங்கி, பத்தலை பத்தலை வரை இளைஞர்களை குறி வைத்தே இப்பாடல்கள் அமைகிறது. பாடல்களின் வரிகளில் இலக்கணம், இலக்கியம் எல்லாம் பார்க்கக் கூடாது. ஆனால் கால்களும் கைகளும் தானாகவே ஆட்டம் போட ஆரம்பிக்க வேண்டும். இது மட்டும்தான் இந்த குத்துப் பாடல்களின் விதி. லாலாக்கு டோல் டப்பிமா அல்லது ரண்டக்க ரண்டக்க இவற்றுக்கெல்லாம் கூகுளில் சென்று தேடி பார்த்தாலும் பொருள் தெரிய வாய்ப்பில்லை. ஆட்டம் போடுவதற்கு இந்தப் பாடல்களின் இசை மிக அவசியமாக இருக்கிறது.

சில சமயங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகள் நம்மை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கும். சபை நாகரீகம் கருதி ஆடுவதைத் தவிர்த்தாலும் கூட, மனதில் ஒரு குதூகலம் இருக்கத்தான் செய்யும். இந்த மாதிரியான குதூகலம் தான் கம்பன் படைத்த இந்த மூன்றாவது சந்திப்பில் நாம் காண இருக்கிறோம். தேவர்கள் முதலில் சிவனிடம் சென்று உதவி கேட்க, அவர் பிரம்மனை நோக்கி கைகாட்ட, பிரம்மனுடன் சேர்ந்து திருமாலை, அவர் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கும் நிகழ்ச்சியைத் தான் நாம் இப்போது காண இருக்கிறோம்.

நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து, அதனால் இன்பம் எய்தும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கனவில் வந்து போவது என்னமோ, கவர்ச்சிக் கன்னிகளாகத்தான் இருக்கும். காதலர்கள் படும் பாடும் பெரும்பாடு இந்த நேரங்களில். காதலன், காதலியை கனவிலேயே சந்தித்து, நேரில் சந்திக்கின்ற இன்பத்தை பெற்ற மாதிரி நினைப்பர். ஒரு காதலன் சற்றே வித்தியாசமானவன். அவன் தேசத்தைக் காதலிக்கின்றவன். மனம் முழுதும் தேச ரதம் இழுப்பவன். அவன் பெயர் பாரதி. அப்போது சுதந்திரம் அடையவில்லை; ஆனால் சுதந்திரம் அடைந்து விட்டோம் என அவன் மனது கும்மியடிக்க சொல்கிறது. சுதந்திரத்தை பாராதே மூடிய அவன் வீரியக் கண்கள், சுதந்திரத்தை கண்டுவிட்டோம் என்று களியாட்டம் ஆனந்த நடனம் புரிந்து இருக்கின்றது.

இதேபோல் சுதந்திர இந்தியாவை வீரத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த சுபாஷ் சந்திர போஸின் கண்களில் 1943 ஆம் ஆண்டிலேயே அப்படி ஒரு கனவு வந்துள்ளது. அதை அந்தமான் நிக்கோபார் தீவுகளில், முதன் முதலாக சுதந்திர இந்தியக் கொடியினைப் பறக்கவிட்டு, அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறான். தந்தையின் விருப்பம் அரசு நிர்வாக அதிகாரி ஆக வெண்டும் என்பது. அதில் தேர்வாகி தந்தையின் விருப்பம் நிறைவேற்றுகிறான். பின் தன் விருப்பம் சொல்லி அதன் பின்னர் தேசத்திற்காக பாடுபட தந்தையின் ஒப்புதலோடு, தேசியக்கொடியை பார்த்தவன் அல்லவா அந்த வீரன்! நேதாஜி அவர்கள் ஆனந்த நடனம் ஆடினார் என்ற தகவல் இல்லை.

1943 இல் நேதாஜீ கொடியேற்றியதின் நினைவாக இன்று அந்தமானில்

அந்தமானில் சிறைச்சாலை வருவதற்கு முன்பு, முழு அந்தமான் தீவே ஒரு சிறையாகத்தான் இருந்திருக்கிறது. அங்கும் பாட்டும் ஆட்டமும் நடந்திருக்கிறது. ஆனால் ஆடியோர் ஆங்கிலேயர். உடன் ஆடியவர் மட்டும் தூத்நாத் திவாரி என்ற வடநாட்டு எட்டப்பன். இதென்ன புதுக்கதை என்கிறீர்களா? வாருங்கள் அப்படியே 1858 ஏப்ரல் மாதத்தை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்.

அப்போது அந்தமான் தீவுகளின் காடுகளில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட கிரேட் அந்தமானிய ஆதி பழங்குடி இருந்தார்களாம். அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வேட்டையாடுதல் தான் அவர்களின் ஒரே தொழில். அந்த வேட்டையாடல் தொழிலுக்கு ஆங்கிலேயர்களின் வரவு தடையாக இருப்பதை உணர்ந்து அவர்களோடு மோதியுள்ளனர். இந்தப் போரில் ஆதிவாசிகள் தோல்வி தான். ஆனால் அதைப் பார்த்து தூத்நாத் திவாரி மட்டும் பரிதாபமாக ஆடிக் கொண்டிருந்தார்.

திறந்தவெளி சிறைச்சாலையாக அந்தமான் இருந்தபோது அங்கிருந்து 130 கைதிகளுடன் தப்பித்து ஓடிய ஒருவர்தான் அந்த தூத்நாத் திவாரி. தப்பித்த கைதிகள் அனைவரும் ஆதிவாசிகளின் அம்புக்கு இறையாகிவிட, இவர் மட்டும் சிறு சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். தப்பித்த அவர், மீண்டும் சிக்கினார். இந்தமுறை அவரின் நல்ல நேரம். மகளிரும் குழந்தைகளுமாய் ஆதிவாசிகள். தூத் என்ற பெயரை ஒட்டி பால் வடியும் முகம் பார்த்து ஆதிவாசிகளின் உள்ளமும் ஏதோ உருகி இருக்கிறது. அந்த கருணையின் காரணமாக அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது அவர் ஆதிவாசி கூட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆதிவாசிப் பெண்ணுடன் திருமணமும் செய்தி வைக்கிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, கண்ணா… ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று கேட்காமலேயே இன்னொரு மனைவியும் தந்திருக்கிறார்கள் அந்த ஆதிவாசிகள்.

இதற்கிடையில் மிகப்பெரிய போராட்டம் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆதிவாசிகள் போரிடத் தயாரான பொழுது, ஏனோ தெரியவில்லை இந்த எட்டப்பன்தான் அந்த தகவலை ஆங்கிலேயர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அம்புகளோடு வந்த ஆதிவாசி மக்களை, துப்பாக்கியால் சுட்டு அழித்து நாசமாக்கியது பிரிட்டிஷ் இராணுவம். அந்தமான் நிக்கோபார் தீவுகளிலேயே மிகவும் அதிகமான அளவில் இருந்த ஆதிகுடிகள் இப்போது மிகவும் குறைந்த அளவாய் ஆக்கியது அயோக்கிய ஆங்கில அரசு. பிரிட்டிஸ் மன்னர்களும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஆடிப்பாடியது ஒருபக்கம் இருக்கட்டும். இங்கே தேவர்கள் எப்படி ஆடிப் பாடுகிறார்கள் என்பதை கம்பனின் பார்வையில் பார்க்கலாம்.

ஆதிவாசிகளின் போர்க் கருவிகள் கொண்டு அலங்கரித்த ஆங்கிலேயர்கள்

கம்பன் பார்வையில் அப்படி ஒரு சந்திப்பு தென்படுகிரது. ஏன் இப்படி ஆட்டம்? பாட்டம்? என்ன நடக்கிறது அங்கே? நம்ம கையில் இருப்பதே அந்த கம்பன் பாடல் என்ற தொலைநோக்கி தான். அந்தப் பெருமாளைச் சந்தித்த போது அப்படி ஒரு மகிழ்ச்சியாம். தொலைநோக்கு சிந்தனையில் தேவர்கள் ஆடுகிறார்கள் பாடுகிறார்கள்.

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
சூடினர். முறை முறை துவளத் தாள்- மலர்.
[பாலகாண்டம் – பாடல் எண் – 194]

அசுரர்கள் இறந்து பட்டார்கள் என மனம் மகிழும் பொருமலால் (அத்தேவர்கள்) மகிழ்ச்சி என்னும் தேனைப்பருகி, எதுவும் அறியாதவர்களாய், ஆடியும் பாடியும் அங்கும் இங்குமாய் ஓடினவர்களாக அப்பரமனது துளசி மணக்கும் பாத மலர்களை வரிசை வரிசையாகச் சென்று வணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள். இதன் உட்குத்து (குத்துபாடல் சொன்னதெ இதற்குத்தானே!) ‘பரமனது தரிசனமே தமது துயரைப் போக்கும்’ என்ற நம்பிக்கை இருப்பதனால் துயருக்கே காரணமான அரக்கர் அழிவர் என்ற மகிழ்ச்சி மிகுதியால் ஆடிப்பாடி உவந்தனராம்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 1


சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை. இப்படி ஒரு திரைப்பட பாடல் வரும். திரைப்படங்களில் வரும் காதலில் வேண்டுமென்றாலும் இது சாத்தியமாகும் ஆனால் ஒவ்வொரு சந்தித்த வேளையிலும் சிந்திக்க வைப்பவர் நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பரின் இரு பாத்திரம் மற்ற பாத்திரங்களை சந்திக்கும் போதெல்லாம் எப்படி நம்மைச் சிந்திக்க வைக்கிறது என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.

இந்தவகையில் கம்பராமாயணத்தில் வரும் முதல் சந்திப்பு உம்பர்களுடன் சிவபெருமான் சந்திப்பு. (உம்பர்கள் – தேவர்கள்; உம்பர்கட்கரசே என்று மாணிக்கவாசகர் பாடியதை நினைவில் கொள்க).

சிவபெருமான் தியானத்தில் இருக்கிறார். அப்படித்தான் அவர் நம் கண்ணுக்குத் தெரிந்தவரையில். ஆனால் அவரோ வேறு ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ஒரு பின்னோக்கு பயணத்தில் இருந்தார். முகத்தில் லேசான ஒரு புன்னகை.

தன்னிடம் வாங்கிய வரத்தை வைத்து தன்னையே, சோதிக்க முனைந்த ஒரு சிவனடியாரும் அசுரனுமாகிய பஸ்மாசுரனைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். பக்தி என்று வந்துவிட்டால், அதில் அடியார்களுடைய தவ வலிமையை மெச்சி அவர்களுக்கு வரம் கொடுத்து மகிழ்ந்த நேரங்களை சிந்தித்துக் கொண்டிருந்தார். தன் தலை மேல் கை வைத்தாள் எரியுமா? என்று சோதனை செய்து பார்க்க முயன்ற அந்த அசுரனின் வரத்தை எண்ணிப் பார்த்து சிரிக்கிறார். அப்பொழுது மோகினியாக உருவெடுத்து தன் தலை மேல் கை வைத்து அழிந்து போகச் செய்தது மகாவிஷ்ணுவை நினைத்துப் பார்க்கிறார் நன்றியுடன்.

ஏன் இப்படி திடீர் என்று இந்த எண்ணம் சிவபெருமானுக்கு? தேவர்கள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணம் அவர் அறியாத்தா என்ன!! இராவணன் என்ற அசுரன் தங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார் அவரிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொண்டு வந்திருந்தனர். வரம் கொடுத்தவரே சிவனே என்று உட்கார்ந்திருக்க, மற்றவர்கள் அலறிக் கொண்டிருந்தது தான் வேடிக்கை. கொடுத்த வரத்தை எப்படி திரும்பப் பெற முடியும்? சாபம் என்று ஒன்று இருந்தாலாவது சாபவிமோசனம் கிடைக்கலாம். ஆனால் சிவன் தந்தது வரமும் ஆயிற்றே!

நாட்டு நடப்பு ஒன்றைப் பார்த்துவிட்டு வரலாம். ஒரு செல்வந்தர் இருக்கிறார். அவரிடம் ஒரு தெரிந்தவர், ஒரு பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்குகிறார். கடனாக பெறும்போது அந்த அன்பருக்கு பத்தாயிரம் ரூபாய் மிகப்பெரிய தொகையாக தெரிகிறது. ஆண்டுகள் பல கழிகின்றது வட்டியுடன் தருவதாகத் தான் பேச்சு. ஆனால் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் அவருக்கோ துளியும் இல்லை. மறைமுகமாக அந்த செல்வந்தர், பிறர் வாயிலாக விசாரித்தபோது பத்தாயிரம் ரூபாய் எல்லாம் ஒரு செல்வந்தருக்கு என்ன பெரிய தொகையா? என்று கேட்டதாய் தகவல் வந்தது.

வட்டி தருவதாக வாங்கியவரிடமே திருப்பி போய் கேட்பது எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிகமான அளவு சங்கடம் அல்லவா வரம் கேட்டவரிடமே போய் வரத்தை திரும்ப பெறுவது. அதுதான் தர்மசங்கடத்தில் சிவபெருமான்.

சரி இன்னொரு நாட்டு நடப்புக்கும் வரலாம். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட்து. அந்த தீர்ப்பை எதிர்த்து அதை விட உயரிய உச்சநீதிமன்றத்தில் போய் முறையீடு செய்கிறார்களே! அப்படி செய்ய இயலுமோ?

அதற்கும் முன்பாக, ஒரு சமரசம் போவதற்கான வழிகளும் தான் கடைபிடித்து வருகிறார்கள். சமரசம் பேசுவதற்கு ஏதாவது ஒரு சொந்தக்காரர் இருந்தால் நல்லது என்று பட்டிருக்கிறது சிவபெருமானுக்கு. ஒரு தாத்தா சொன்னால் பேரன் கேட்பார் என்று நினைத்திருப்பாரோ? அதனால்தான் இராவணனுக்கு தாத்தா உறவுமுறை ஆகிய பிரம்மனிடம் சென்று முறையிடுங்கள் என்று சிவபெருமான் தேவர்களிடம் சொல்லியதாக கம்பர் சொல்கிறார். கம்பர் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான காரணங்கள் கம்பன் சொல்லாதது. என்னுடைய கற்பனையில் உதித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். பிரம்மனின் பேரன் தான் இராவணன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். குபேரன் கூட இராவணணின் சகோதர உறவு தான். நம்பமுடியலையா? குடும்ப வாழையடி வாழைப் படம் பாருங்கள்.

சரி அப்படியே அந்த கம்பர் நிகழ்த்திய முதலாம் சந்திப்பு பாடலை இரசித்து விட்டு மேலே செல்லலாம்.

சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்.
[பாலகாண்டம் – பாடல் எண் – 186]

சுடுகின்ற தொழிலை உடைய அரக்கர்களால் வானுலகில் வாழும் தேவர்கள் வாழ்வறிந்து நஞ்சுதங்கிய மிடற்றை உடைய சிவபெருமானது பாதங்களை அடைந்து தமது துன்பத்தைக் கூறலும், மேலே நிகழவேண்டியவைகளை முன்னரே உணர்ந்துள்ள அப்பெருங்கடவுளான சிவபெருமான் இனி யான் அரக்கருடன் போர்புரிய மாட்டேன் என மறுத்து உரைத்து நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

இதே போன்று அடுத்த சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு உங்களை பின்னர் அழைத்துச் செல்கிறேன்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி
10-07-2022.