*என் செல்லக் குட்டி (யானை) ?*
[கார் நாற்பதில் கம்பராமாயணம் – 29]
யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளனவாம். எல்லாமே தூய தமிழ்ப் பெயர்களாம். நமக்கு இதெப்பத்தியெல்லாம் கவலை இல்லை. குட்டியானைக்கும் ஏதாவது தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று தேடலாம். குட்டி என்றாலே ஒரு கிறக்கம் தான். இனி உங்கள் காதலியை, என் செல்லக்குட்டி, யானைக்குட்டி என்று கொஞ்சுவதற்குப் பதிலாக சும்மா அதக் குட்டியானையின் தூய தமிழ்பெயர் வைத்துக் கொஞ்சியும் தமிழை வளர்க்கலாமே என்ற நல்லெண்னம் தான், வேறு ஒன்றும் இல்லை.
”தென்பாண்டி கூடலா தேவார பாடலா…” இப்படி ஒரு திரைப்பாடல் ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அட தேவாரத்தைப் பற்றி ஏதோ சொல்றாங்க போலிருக்கே! அப்படியே அங்கே போய் எட்டிப் பார்த்தால், தேவாரத்தில் சுந்தரர் ஒரு வித்தியாசமான யானையை காட்டுவார். எல்லா யானைக்கும் 2 தந்தம் தானே இருக்கும்! நான்கு தந்தங்கள் இருக்கிற ஒரே யானை ஐராவதம்.
பிரம்ம லோகத்தில் இருக்கிற யானைதான் அது. சூரன் சூரன் என்றொரு அசுரன் இருந்தானாம். அவர் கூட சண்டை போட்டப்போ அந்த நாலு தந்தமும் வெட்டி கிடாசுட்டார் அந்த சூரன். பெரிய சூரன்தான் போலிருக்கும் அசுரன். சரி அது யார் கிட்ட கேட்டா திரும்ப கிடைக்கும்? சிவபெருமானிடம் கேட்டா திரும்பக் கிடைக்குமாம்.
சிவபெருமான் இருக்கிற பக்கமா போயி எட்டிப்பார்த்தா அந்த ஊர் பெருமையை பாருங்களேன்; அந்த ஊர்ல மாடமாளிகைகள் இருக்கு. இந்த மாளிகை மேல யார் யார் இருக்கிறார்கள்? என்றும் செத்த பாக்கலாம். பொதுவா ஆண் (??) மயில்கள் தான் அழகா இருக்கும்; ஆனால் சுந்தரர் பார்வையில் அது பெண்மயில் மாதிரி படுதாம். அப்படித்தான் இளமையான பெண் கிளிகளும் இருக்காம்; இளைய மான்களுக்கும் பஞ்சமில்லை. எல்லாமே மாடத்திலே வீட்டு மாடத்திலே! இப்படி எல்லாம் சொல்ற ஊரு பேரு திருநின்றியூர்; அங்க போயி ஒரு கும்பிடு போட்டதால் பழையபடி அந்த தந்தங்கள் வந்துருச்சாம். நமக்கும் நம் குடும்பத்திலிருந்து விட்டுப்போன செல்வம், விட்டுப்போன உறவு இப்படி ஏதாவது இருந்தா இந்த சாமிக்கு ஒரு சலாம் வச்சா, திரும்ப கிடைத்துவிடும்; இதுதாங்க தேவாரம் சொல்லுது. அப்ப ஜேசுதாஸ் பாடையும் மனசுல அசை போட்டு விட்டு அசல் தேவாரம் பாடிப் பார்க்கலாமே
கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க
நலங்கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டு நின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் என்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
நிலவு தென்திரு நின்றியூ ரானே
யானை பிழைத்த வேல் பற்றி ஐயன் வள்ளுவன் சொல்லியிருக்கார். ஆனா யானெயெக் குறிவச்சி, கிடைக்காத புலி பத்தி மூவாதியார் தன்னுடைய ஐந்திணை எழுபதில் சொல்லி இருக்கார். பிளந்த வாயை உடைய பெரிய புலி, யானையைத் தாக்கிய முயற்சி தப்பிப் போனதால் ஊர் மன்றத்தில் புகுந்து இரை தேடப் பார்த்துக் கொண்டிருப்பது போல், எண்ணிப் பார்க்காமல் பொருள் மீதுள்ள ஆசையால் தலைவன் சென்றுள்ளார். என் உயிரே, அவரது அருளைப் பெறலாம் என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறாயோ? தலைவியின் மைண்டு வாய்ஸ் எண்ண ஓட்டம் பத்தி சொல்லும் பாடல் இது.
பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப் பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை,
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து,
வாழ்தியோ மற்று என் உயிர்?
ஐந்திணை எழுபது என்ற தொகுப்புப் பாடலிலும் கூட, குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் – என்று யானை பற்றிய குறிப்பு வந்து கொண்டே இருக்கு.
கார் நாற்பது கொஞ்சம் வித்தியாசமான யானையினைக் காட்டுகிறது. நம்ம் ஹீரோயின் வானத்து மேகம் பார்க்கிறார். யானை மாதிரி தெரியுது. வழுக்கிட்டுப் போகுதே! ஒரு வேளை வெண்ணெய் தடவிய யானையோ? இருக்கலாம். சந்தரி சீரியலில் வரும் சுந்தரி மாதிரி கருமையும், கச்சிதமும், அழகும் பொருந்திய மையுண்ட கண்களையுடைய, மயில் போல சாயலினையுடையாய்! நெய் பூசிய யானைகள் போல கரிய மேகங்கள், நம் தலைவர் வருவது உறுதி என்று கூறி எழாமல் நின்றது. இதோ மீண்டும் குஞ்சரம் வரும் பாடல்.
மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்; –
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12
கம்பன் கற்பனையில் யானை வரலை. குட்டி யானை வருது. யானைக் கன்று… இதுக்கு ஒரு தமிழ்ப்பெயர் இருகாம். கம்பன் சொல்கிறார். போதகம். இராமன் அப்படி இருக்கிறாராம். (நம்மளை எல்லாம் எந்த்க் குட்டியோடு ஒப்பிட்டாக என்று சொல்லவும் வெண்டுமோ?) சனகர் தன் மகளையும் இராமனையும் அந்த சிவனின் வில்லையும் மூன்றையும் மாறி மாறிப் பார்த்த காட்சியில் தான் இந்த மோதகம்…இல்லை இல்லை… போதகம் சிக்கியது. இதோ கம்பன் வரிகள். (தனியாக ஏதும் வரிகள் விதிக்கப்படாது)
போதகம் அனையவன் பொலிவை நோக்கி. அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி. தன்
மாதினை நோக்குவான். தன்மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேறினான்;
கார் நாற்பதில் இன்னும் ரசித்துப்படிக்க 11 பாக்கி இருக்கு.
மீண்டும் வருவேன்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (30-04-2022)