என் செல்லக் குட்டி (யானை) ?


*என் செல்லக் குட்டி (யானை) ?*

[கார் நாற்பதில் கம்பராமாயணம்  – 29]

யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளனவாம். எல்லாமே தூய தமிழ்ப் பெயர்களாம். நமக்கு இதெப்பத்தியெல்லாம் கவலை இல்லை. குட்டியானைக்கும் ஏதாவது தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று தேடலாம். குட்டி என்றாலே ஒரு கிறக்கம் தான். இனி உங்கள் காதலியை, என் செல்லக்குட்டி, யானைக்குட்டி என்று கொஞ்சுவதற்குப் பதிலாக சும்மா அதக் குட்டியானையின் தூய தமிழ்பெயர் வைத்துக் கொஞ்சியும் தமிழை வளர்க்கலாமே என்ற நல்லெண்னம் தான், வேறு ஒன்றும் இல்லை.

”தென்பாண்டி கூடலா தேவார பாடலா…”  இப்படி ஒரு திரைப்பாடல் ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அட தேவாரத்தைப் பற்றி ஏதோ சொல்றாங்க போலிருக்கே! அப்படியே அங்கே போய் எட்டிப் பார்த்தால், தேவாரத்தில் சுந்தரர் ஒரு வித்தியாசமான யானையை காட்டுவார்.  எல்லா யானைக்கும் 2 தந்தம் தானே இருக்கும்! நான்கு  தந்தங்கள் இருக்கிற ஒரே யானை ஐராவதம்.
பிரம்ம லோகத்தில் இருக்கிற யானைதான் அது. சூரன் சூரன் என்றொரு அசுரன் இருந்தானாம். அவர் கூட சண்டை போட்டப்போ அந்த நாலு தந்தமும் வெட்டி கிடாசுட்டார் அந்த சூரன். பெரிய சூரன்தான் போலிருக்கும் அசுரன்.  சரி அது யார் கிட்ட கேட்டா திரும்ப கிடைக்கும்? சிவபெருமானிடம் கேட்டா திரும்பக் கிடைக்குமாம்.

சிவபெருமான் இருக்கிற பக்கமா போயி எட்டிப்பார்த்தா அந்த ஊர் பெருமையை பாருங்களேன்; அந்த ஊர்ல மாடமாளிகைகள் இருக்கு. இந்த மாளிகை மேல யார் யார் இருக்கிறார்கள்? என்றும் செத்த பாக்கலாம்.  பொதுவா ஆண் (??) மயில்கள் தான் அழகா இருக்கும்; ஆனால் சுந்தரர் பார்வையில் அது பெண்மயில் மாதிரி படுதாம்.  அப்படித்தான் இளமையான பெண் கிளிகளும் இருக்காம்; இளைய மான்களுக்கும் பஞ்சமில்லை. எல்லாமே மாடத்திலே வீட்டு மாடத்திலே! இப்படி எல்லாம் சொல்ற ஊரு பேரு திருநின்றியூர்;  அங்க போயி ஒரு கும்பிடு போட்டதால்  பழையபடி அந்த தந்தங்கள் வந்துருச்சாம். நமக்கும் நம் குடும்பத்திலிருந்து விட்டுப்போன செல்வம், விட்டுப்போன உறவு இப்படி ஏதாவது இருந்தா இந்த சாமிக்கு ஒரு சலாம் வச்சா, திரும்ப கிடைத்துவிடும்; இதுதாங்க தேவாரம் சொல்லுது. அப்ப ஜேசுதாஸ் பாடையும் மனசுல அசை போட்டு விட்டு அசல் தேவாரம் பாடிப் பார்க்கலாமே

கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க
நலங்கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டு நின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் என்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
நிலவு தென்திரு நின்றியூ ரானே

யானை பிழைத்த வேல் பற்றி ஐயன் வள்ளுவன் சொல்லியிருக்கார். ஆனா யானெயெக் குறிவச்சி, கிடைக்காத புலி பத்தி மூவாதியார் தன்னுடைய ஐந்திணை எழுபதில் சொல்லி இருக்கார். பிளந்த வாயை உடைய பெரிய புலி, யானையைத் தாக்கிய முயற்சி தப்பிப் போனதால் ஊர் மன்றத்தில் புகுந்து இரை தேடப் பார்த்துக் கொண்டிருப்பது போல், எண்ணிப் பார்க்காமல் பொருள் மீதுள்ள ஆசையால் தலைவன் சென்றுள்ளார். என் உயிரே, அவரது அருளைப் பெறலாம் என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறாயோ? தலைவியின் மைண்டு வாய்ஸ் எண்ண ஓட்டம் பத்தி சொல்லும் பாடல் இது.  

பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப் பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை, 
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து, 
வாழ்தியோ மற்று என் உயிர்?

ஐந்திணை எழுபது என்ற தொகுப்புப் பாடலிலும் கூட, குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் – என்று யானை பற்றிய குறிப்பு வந்து கொண்டே இருக்கு.

கார் நாற்பது கொஞ்சம் வித்தியாசமான யானையினைக் காட்டுகிறது. நம்ம் ஹீரோயின் வானத்து மேகம் பார்க்கிறார். யானை மாதிரி தெரியுது. வழுக்கிட்டுப் போகுதே! ஒரு வேளை வெண்ணெய் தடவிய யானையோ? இருக்கலாம். சந்தரி சீரியலில் வரும் சுந்தரி மாதிரி கருமையும், கச்சிதமும், அழகும் பொருந்திய மையுண்ட கண்களையுடைய, மயில் போல சாயலினையுடையாய்! நெய் பூசிய யானைகள் போல கரிய மேகங்கள், நம் தலைவர் வருவது உறுதி என்று கூறி எழாமல் நின்றது. இதோ மீண்டும் குஞ்சரம் வரும் பாடல்.

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்; –
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12

கம்பன் கற்பனையில் யானை வரலை. குட்டி யானை வருது. யானைக் கன்று… இதுக்கு ஒரு தமிழ்ப்பெயர் இருகாம். கம்பன் சொல்கிறார். போதகம். இராமன் அப்படி இருக்கிறாராம். (நம்மளை எல்லாம் எந்த்க் குட்டியோடு ஒப்பிட்டாக என்று சொல்லவும் வெண்டுமோ?) சனகர் தன் மகளையும் இராமனையும் அந்த சிவனின் வில்லையும் மூன்றையும் மாறி மாறிப் பார்த்த காட்சியில் தான் இந்த மோதகம்…இல்லை இல்லை… போதகம் சிக்கியது. இதோ கம்பன் வரிகள். (தனியாக ஏதும் வரிகள் விதிக்கப்படாது)

போதகம் அனையவன் பொலிவை நோக்கி. அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி. தன்
மாதினை நோக்குவான். தன்மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேறினான்;

கார் நாற்பதில் இன்னும் ரசித்துப்படிக்க 11 பாக்கி இருக்கு.

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (30-04-2022)

அழகா பல்லழகா….



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -20]

கொரோணா வந்து எல்லாரையும் வீட்டோடு முடிக்கிப் போட்டது போல் என் விமானப் பயணங்களும் முடங்கிப் போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தில்லி வரை சென்று திரும்ப வாய்ப்பு கிடைத்தது. பயணம் முடிந்து, திரும்பியவுடன் சொன்னேன்,”மூக்கையும் வாயையும் மூடியதால், எல்லாரும் அழகானவர்களாத் தெரியுது…” என்று. துணைவியார் கோபமாய்ச் சொன்னார், “அவனவன் மூச்சுவிடச் சிரமத்திலெ இருக்கும் போது, சைட் அடிச்சிட்டு வாரீக…”

முகத்துக்கு அழகு தருவது பல்…. ஆனா அது எப்படி இருக்கு என்பதே இந்த மாஸ்க்கில் மறைந்துவிடுவது நல்லது தானே? கொரோணா வருவதற்கு முன்பே ஒரு முறை, ஒரு பல் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்கும் மாஸ்க் போட்ட மான் ஒன்று உள்ளே அழைத்துச் சென்றது. என்னை கை கால் எல்லாம் அந்த டெண்டல் சேரில் கட்டிப்போட்டு மாஸ்க் எடுத்தது தான் தாமதம் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அந்தமானின் பற்கள் அப்படி. ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மாஸ்க் எடுக்காத இடமாப் பாத்து, பல் வைத்தியம் செய்து முடித்தேன். (ஆமா… மனைவியும் படிக்கும் பதிவுகளில், ‘பாக்க லட்சணமான இடத்தில்’ எனச் சொல்ல முடியுமா என்ன…?)

சரி… நாம தான் பல்லைப் பாத்து கலாட்டா செய்றோம்ணா, நம்ம திருஞானசம்பந்தர் தன்னோட தேவாரத்தில் பல் வச்சும் வம்புக்கு இழுக்கிறார். நாமெல்லாம் மின்னலடிக்கும் (சூப்பர் ரின்) வெண்மையான உடை, இதைத்தானே பாத்திருப்போம். ஆனா சிவனடியார்களுக்கு அசுரர்களின் பல்லு மின்னல் மாதிரி தெரிஞ்சதாம்.

முழுக்க தேவார அர்த்தமும் பாத்துட்டு அப்புறம் பாட்டும் பாக்கலாம், வாங்க… கூடவே…; மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

ஆனா பல்லு வச்சி நிறைய பழமொழிகள் இருந்தாலும், பல்லுப்போனா சொல்லுப் போச்சு என்பது மட்டும் செமெ பாப்புலர். ஆனா, பல்லுப் போன பலர் ஸ்ம்யூலில் பாடிக் கலக்குவது தான் வேடிக்கை. கிராமப்புரங்களில் ஒரு சொலவடை (அது என்ன வடை என்று மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்) பச்சரிசிப் பல்லழகி... பவழ மொட்டுச் சொல்லழகி...’,மொச்சக் கொட்டப் பல்லழகி… முத்து முத்துச் சொல்லழகி…’ – இப்படி ஒரு கிராமியப் பாடல் வரிகள் வருது.

கிராமப்புறம் வரை வந்தாச்சி…அப்படியே தி. ஜானகிராமன் கதைகளில் வரும் அந்தப் பல்லுப்பாட்டி, சீ..சீ… கொள்ளுப்பாட்டி… இல்லெ இல்லே, பல்லு கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் பாட்டிகளைப் பாப்போம். (வீட்லெ ஒரு மாதிரியாப் பாக்குறாய்ங்க…. பல்லு இல்லாத பாட்டிகளையுமா சைட் அடிப்பீங்க… என்று கேட்காமல் கேட்பது தெரியுது)

தி.ஜானகிராமன் எழுதிய பாயசம் சிறுகதை. அதில் மணமக்களை ஊர்
விதவைகள் ஊஞ்சலில் வைத்துத் தள்ளும் காட்சி வரும். தி.ஜா.வின் பார்வை, அவரின் வரிகளில் இதோ:

‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ சூப்பரா இருக்கில்லெ… கற்பனை.. !இனி நீங்க செய்துகிடுங்க…விடு ஜுட்…

கார் நாற்பது (21) பாடலில் வேறெ லெவல். எதையாவது பாத்தா, காதலியின் ஒரு பாகத்துக்கு ஒப்பு சொல்லுவாக (அட உவமை எனச் சொன்னா, நீங்க ஓடிப் போயிட்டீக என்றால் என்ன செய்ய?) இங்கே என்ன நடக்குது பாருங்களேன் . அலங்கரிக்கப்பட்டத் தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகளப் பாக்குறாக. அது கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று, பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான். இது தாண்டா டாப்பு…

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.21

அப்படியே கம்பன் வீட்டாண்டெ போவோம்ணு பக்கத்தாலே போனா, அவரு தூரப்போ என கொரோணா (பாசிட்டிவ்) வந்த ஆள் மாதிரி விரட்டுகிறார். என்னான்னு கேட்டா, அவரும் ஒரு பல்லு வச்சிருக்கார். பொதுவா, ராக்கெட்டின் பின்னாடி தான் அதிகமா தீ ஜுவாலை கிளம்பும். ஆனா, நம்ம கம்பர் வச்சிருக்கும் ஆயுதத்தின் முன் பகுதியே அக்னியெக் கக்கிட்டுப் போவுதாம். அது என்ன ஆயுதம் எனஉத்துப்பாத்தா… அடெ.. பல்லு… (அட கொக்கமக்கா…பல்லு என்ன இம்புட்டு உக்கிரமான வெப்பனா என்ன?)

ஆமாம் இதெல்லாம் எப்ப நடக்குது எனக் கேக்கீகளா? அனுமனைப் பாம்பு வச்சிக் கட்டும் போது, அதெப் பாத்து அரக்கர்கள் அடிக்கும் கமெண்ட் இப்படியாம்… அது ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல் ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது. ஆதலால் விரைவுபடாது ஆலோசித்து நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்) செய்யுங்கள். (இந்நிலையில் இக்குரங்கு) அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று என்று சில அரக்கர்கள் சொல்வார்கள்.

’காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள்முகம்;
தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி , செய்யுமின்;
வேந்து உறல் பழுது’ என விளம்புவார், சிலர்.

அப்புறம் வேறு கொஞ்சம் பல்லு..சாரீ… வேலையெப் பாத்துட்டு அப்புறம்…. மீண்டும் வருவேன்…

இளைய நிலா பொழிகிறது….


இளைய நிலா பொழிகிறது….
[கார் நாற்பதில் கம்பராமாயணம் -19]

இளைய நிலா பொழிகிறது என்ற எஸ்பிபியின் குரலில் என்றும் ஓர் இளமை துள்ளும். இளமையாக இருக்கிறீங்க என்ற மந்திரச்சொல்லே மந்திரம் மாதிரி வரம் அள்ளி வழங்கும். நவீன சுயம்வரம் ஒன்றுக்கு (அதுவும் கூட இப்பொ ஆன் லைன் தானே) நானும் தலைகாட்ட, ”மாப்பிள்ளையோ என்று நினைத்தேன்” என்ற கமெண்ட் வந்தது தான் தாமதம், வீட்டம்மாவிடமிருந்து இந்த மாதிரியான மீட்களுக்கு எனக்கு தடா வந்து விட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, இளையர் என்று இலக்கியங்களில் பல இடங்களில் கண்ணில் படுது. (இளமைன்னா நம்ம கண்ணிலும் படாமலா போகும்?) தேரில் இருப்பவன் திடீரென்று குதிரையை வேகமாக ஓட்டு என்கிறான். போர் தான் முடிந்ததே? இன்னும் வேகமாப்போய்…என்ன அக்கப்போர் இது? என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான் அந்தச் சாரதி.

என்ன காரணமாம்? இதோ தலைவன் அங்கே கண்ட ஒரு சாதாரணமான காட்சி… அழகான ஆண் கோழி ஈர மணலெக் கிண்டி கிழங்கெடுக்காமல் புழுவை எடுத்து பேடைக்குக் கொடுத்ததாம்.உடனே தலைவனுக்கும், போரில் வெற்றியும், ஈட்டிய பொருளும் சேர்த்து பேடை முன் நிற்க வேண்டும் என நினைப்பு வந்ததாம். (ஆமா நாமளும் தான் எத்தனையோ கோழிகளைப் பாத்திருக்கோம் இந்த மாதிரி நெனெப்பே வரலையே நமக்கெல்லாம்.) நற்றிணையில் மருதன் இளநாகனாருக்குத்தான் இப்படியான யோசனை எல்லாம் வரும். (பேசாமெ இள கிருஷ்ணமூர்த்தி என பேர் மாத்தி வச்சிப் பாக்கலாமோ?) இங்கு இளையர் என்றால் அது வீரரைக் குறிக்கும்.

விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ
….. புலரா ஈர்மணல் மலரக் கெண்டி
நாளிரை கவர மாட்டித்தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே.

திரைப்படங்களில் இளமை என்றும் மாறாது இருக்கும் (நாயகர்களுக்கு அடுத்து) நம்ம நகைச்சுவை சூரி, சந்தாணம், விவேக் போன்றோர்கள். அவர்கள் தான் இந்த காதலியிடம் தூது போகும் வேலையினைச் செய்வோர். தொலகாப்பியர் இவங்களுக்கு இளையர் எனப் பேர் வச்சிருக்கார். வடிவேலு பாஷையில் அங்கே போய் இதர் ஆவோ என்று சொல்வது போல, தூது செல்ல 12 வாயில் இருக்கு என்கிறார் அந்த இலக்கணப் பேராசான்.

தோழி (அது தான் டாப் சாமீ); தாயே (தாயுமா…?), பார்ப்பான் (அட நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி..புர்…. மாதிரியோ?), பாங்கன் (அட நம்ம பக்கத்து, அடுத்த வீட்டுக்காரன் – சண்டெ போடாமெ சுமுகமான உறவில் இருந்தால்…),
பாணன் (அடெ நம்ம ஸ்ம்யுல் பாடகர்கள் உட்பட அனைத்துக் கலைஞர்களும்தான்)
பாடினி (நம்பி தூது அனுப்பலாம், தாளம் தப்பாமல் பாடுவர்)
இளையர் (அடநம்ம சந்தானம், சூரி, விவேக்)
விருந்தினர் (மயில்வாகனம்….என அழைத்து விருந்தளித்து உபயோகிக்கலாம்)
கூத்தர் (சின்னத்திரை நடிகர்களையும் வச்சிக்கலாமா?)
விறலியர் (ஆடிக் கறக்கும் மாட்டை ஆடிக் கறக்க)
அறிவோர், கண்டோர் (சுற்றமும் நட்பும் மாதிரி)

இளைஞர்களுக்குக் கலை என்றால் அது கை வந்தக் கலை தான். கூத்தாடிகள் என இப்போது வேறு அ(ன)ர்த்தம் வந்தாலும், அதில் 20 வகை கலைஞர்கள் இருக்காகளாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எல்லாம் அப்படித்தான் சொல்லுது. லிஸ்டைப் பாத்து வைப்போமே. இளையரும் வாராகளே அங்கும்…. கூத்தர், பொருநர், விறலியர், பாணர், பாடினி, கண்ணுளர், கோடியர், வயிரியர், இயவர், நகைவர், சூதர், மாதகர், அகவன் மகளிர், அகவுநர், கட்டுவிச்சி, கல்லா இளையர் (கர்மவீரர் மாதிரி), கைவல் இளையர்(சுந்தர் பிச்சை மாதிரி), குறுங்கூளியர், உருவெழு கூளியர், வேதாளிகள் என்போரே அவர்கள். இவர்கள் பெரும்பாலும் வாய்மொழிக் கலைஞர்கள்.

அப்படியே கார்நாற்பது பக்கம் வந்தாச்சி. இங்கே இளையர், சேவகர் என்பதாய் வருகிறது. அவர் ஸ்வெட்டர் மாதிரி உடையினை உடுக்க , தலைக்குல்லா அணிந்து வந்தார்களாம். ஜாலியா புல் சுவைக்கும் குதிரை, தேருடன் பூட்டி இருக்காம். காடுகள் பூரிப்பா இருந்ததாம். எப்புடி எப்புடி? நற்குணமுடைய மகளிரின் இளமைச் சொல் போல அழகாகவும், மாசாமாசம் பென்ஷன் வார மாதிரி, செல்வமும் வந்தது போல் பொலிவோடு இருந்ததாம்.

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு. 2
2

இளைய தலைமுறைக்கு அதிகம் கைவசம் ஐடியா வச்சிருப்பார் நம்ம கம்பர். அவர்கிட்டேயும் கையேந்துவோம்.

இஞ்ஞன இளக்கர்க்கு பொருள் யாதெங்கில், இளகும் தன்மையுடடையவாம். (எதைப் பார்த்து?)

பகைவர்கள் நொந்துபோக வைக்கும் அளவுக்கு சிறப்பானவர்போல, காத்து விளக்கை அணைத்துவிட்டது. இதுவரை கம்பர் வரலை. இனி தான் வருகிறார். இருட்டிலும் அங்கே வெளிச்ச மின்னலாம். காரணம் மேனியில் பொருந்தியுள்ள நகைகளாம். ஒரு கொசுறு தகவல்: ஏதோ கலவி சமாச்சாரம் சொல்றா மாதிரி தெரியுது (இன்றும் நல்ல பெயர் தக்க வைத்துக்கொள்ள இத்தோடு விடுகிறேன்)

இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தென்றல், பகைசோர உயர்வோரின்
அளக்கரொடு அளக்கரிய ஆசையுற வீசா,
விளக்கு இனம் விளக்குமணி மெய் உறு விளக்கம்

மீண்டும் வருவேன்…

கொண்டாடி வரும் வளையல்


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -18]

சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரம் பெரீய்ய சர்ச்சையினை உண்டாக்கிவிட்டது. ஆனா அந்தமான் அதன் மறு பக்கம். மதநல்லிணக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே இத்தீவினைச் சொல்லலாம். நான் கல்யாணம் செஞ்சிகிட்டு (அடெ…முதல் முறையாகத்தாங்க) ஒரு வீட்டுக்குப் போனா, அங்கே ஆரத்தி எடுத்து வரவேற்றது ஓர் இஸ்லாமிய சகோதரி.

அதே சகோதரி பரமக்குடிக்கு வந்தபோது, கருவுற்ற சேதி அறிந்து பரமக்குடியின் முறையில் வளைகாப்பு போல் எல்லாம் செய்து, சிகை அலங்காரம் செய்து ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு எல்லாம் போய் ஃபோட்டோ எடுத்து (அட…அது மொபைல் எல்லாம் வராத காலமுங்கோ); சரி எல்லாத்தையும் விடுங்க..ஆனா வளையல மட்டும் விடாமெ வாங்க. வள்ளுவர் கிட்டே போய் மைக் நீட்டுவோம்; ஏதோ கருத்துச் சொல்ல ரெடியா இருக்கார் அவர். அவர் எப்பவும் 7 வார்த்தைகள் தான் பேசுவார். சில புரியும் சிலபுரியாது. (ரஜினி மாதிரி என வச்சிக்கலாமே)

இப்பொல்லாம் நம்ம தமிழில் வந்த சமாச்சாரங்களை ஆங்கிலத்தில் சொன்னால் தான் ஓஹோ என்று ஒத்துக்கிறாகளாம். நாமளும் வள்ளுவன் பாட்டுக்கு ஆங்கிலக் கோணார் வச்சிப் பாக்கலாமே… (மொதல்லெ பாட்டப் போடப்பா…இதோ இதோ போட்டேன்)

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.

Pleasure of all five senses – sight, hearing, taste, smell and touch-
reside together in this girl with shiny bangles. She pleases me completely. (இது ஐயன் சொன்ன மாதிரி தெரியலையே..? வெள்ளைக்காரப் பாஷையில் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்..) நம்ம கையில் போடும் ஐட்டம் இந்த ஒண்டொடி = ஒண் + தொடி – shiny bangle ஒளிரும் வளையல் (என்ன…. எல்லாரும் வளையல் வாங்கக் கிளம்பிட்டீங்களா?)

குன்றியனார் அழைத்தார். அவர் ஹீரோ, கொஞ்சம் போக்கும் வரவுமாய் இருக்கும் பார்ட்டியாம். ஒரு காலகட்டத்தில் வீட்டு அம்மணிகிட்டே வந்து தானே ஆகணும்? (எத்தனை படத்திலெ பாத்திருக்கோம்?) ஆனா வழியில் தோழி மறிச்சி…இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எனச் சபதம் (சூள்) வாங்கி, ஹீரோயின் கிட்டே சொல்லப் போனாளாம் .
ஒண்டொடியும் கூடவே வரும், படிச்சிட்டு கூடவே வாங்க…

பாசவலடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டலயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே!

கொஞ்சம் ஆன்மீகப் பக்கமும் போயிட்டு வந்திடுவோம். (அப்பத்தானே, இந்த உலகம் நம்மை நல்லவன்னு நம்பும்) அப்பொ கவனமா வளையல் வரும் அந்த பக்திப்பாடல் தேடி எடுத்தாச்சி. (எல் ஆர் ஈஸ்வரி பாட்டு மாதிரி வச்சிக்கலாமே)

ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்
பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்
நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்
ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

அடேய் சிவனே… ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக வச்சிருப்பவனே, படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; கூத்தாடியே; ”வயல் சூழ்ந்த திருநனிப்பள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே” என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை;

இந்தமாதிரிப் பதிகம் என்றால், நாம் எப்பவும் ஏதோ தேவாரமோ, திருவாசமோ எனத் தேட வேண்டி இருக்கும். ஆனா இது அதிலெல்லாம் இல்லை. இந்தக்காலத்திலும் இப்படியானப் பாடல்களை ”மதிசூடி துதி” எனப் பாடி வீ சுப்பிரமணியன் அவர்கள்(மரபுக் கவிதைகளாக) தந்துள்ளார் .

அப்படியே கார்நாற்பதில் நம்ம ஒண்டொடி பத்தி என்ன சொல்ல வாராக எனவும் பாத்துடலாமே… இந்ந ஒண்டொடி எதற்காக தலைவனை நினைத்து நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும் மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது. அவர் வந்துவிடுவார் அன்றோ? தோழி சொல்கிறாள்.

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று;
எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை?

கம்பன் கிட்டெ நாம கருத்தைக் கேக்காட்டி அவர் கம்பெடுத்து அடிக்க வந்திடுவார். அவரும் ரெடியா ஒரு பாட்டு தந்தார். விளக்கம் எதுவும் சொல்லாம புரியுதே என நினைத்தேன். இது காட்சிப் படல, மிகைப் பாடலாம் (இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ?)

தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள்.

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (16-10-2020)

துளித் துளித் துளித் துளி மழைத்துளி


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)

கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

தெருவெங்கும் கார்த்திகை தான்


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -15]

இந்தக்கொரோணா காலம் வந்தாலும் வந்திச்சி, செய்யும் எல்லா வேலையும், ”நாம அப்பவே சொன்னது தானே இதெல்லாம்!” எனச் சொல்வதெக் கேட்டுக் கேட்டு, காதெல்லாம் வலிக்குது. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். நாமெல்லாம அம்புட்டு அறிவாளிகள் இல்லைங்கிறத ஒத்துக்க, பலருக்குக் கஷ்ட்டமா இருந்தாலும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எனச் சிலராவது இப்பொ நம்ப ஆரம்பித்துள்ளனர். நாமளும் நம்ம பங்குக்குக் கார்த்திகை மாதம் ஏன் தீபம் ஏற்றும் வழக்கம் வந்தது, எனத் தேடி வைப்போமே! (வீட்டுக்காரி செய்யும் செயல்களுக்கே அரத்தம் புரியல்லே, காலம் காலமா செய்து வரும் செயலுக்குக் காரணம் புரியுமா என்ன?)

அடைமழை பெய்து ஓய்ஞ்சி, ஐப்பசி மாசம் முடிஞ்சி அப்புறம் வரும் மாதம் தான் கார்த்திகை. தொடர்ந்து பெய்த மழையினால் பூமியும் வானமும் ஜில்லென்று குளிர்ந்து, அப்படியே சிலு சிலுவென காற்று வீசும் போது, ஒளியும் ஒலியும் , (சாரி சாரீ…ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி) ஒளியும் வெப்பமும் தேவை என்பதை, அழகாகவும் மங்கலமாகவும் வெளிப்படுத்தும் திருநாள் தான் கார்த்திகைத் திருநாளாம். தங்களையும் அலங்கரித்துக் கொண்டு, மேலும் அழகாக்குவது அந்த தீபமேற்றும் அழகான குத்துவிளக்குகள், பார்ப்போரின் கண்களுக்கு ஓர் இலவச இணைப்பு.

இருளிலும் குளிரிலும் அல்லல்படும் சின்னஞ்சிறு உயிர்களுக்கு ஒளியும் வெப்பமும் தந்து அதுகளையும் வாழவிடும் பொருட்டே, கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலையிலும் மாலையிலும் வீடுகளின் முன்பாக வரிசையாக விளக்கேற்றி வைக்கும் வழக்கம் வந்ததாம். காலப்போக்கில் தீபம் ஏத்துங்க என்றால், கிண்டல் செய்யவும், அப்புறம் அதெ வச்சே மீம்ஸ் போடவும் இது பயன்பட்டு வருகிறது.

அகநானூறு, நற்றிணை, களவழி நாற்பது போன்ற சங்க இலக்கியங்களில் அறுமீன் என்று ஆங்காங்கே வருதாம்.

கார்த்திகை மாதமோ, காயலாங்கடை வியாபாரமோ, எந்த நேரத்திலும் சுட்டெரிக்கும் வெயிலில் மணலில் உக்காந்திருக்கும் இளம் (சிலநேரம் முது)சிட்டுக்களைப் பாக்கும் போது எப்படி இவர்களால் உக்கார முடியுது? எனத் தோன்றும் (அவனவன் வெயில் கூட தெரியாமெ இருக்கான். நீங்களும் இருக்கீகளே? இப்படிப்பட்ட கேள்வி வந்ததால், நான் என் இல்லத்தரசியை மெரினாவுக்கு அழைத்துச் செல்வதில்லை)

ஆனா இந்தமாதிரி மண்டைகாயும் வெயிலில் காதலியோட திரிவதும் நம்ம பண்பாட்டின் ஓர் அங்கம் போலத் தெரியுது. அகநானூறு பாடலில் ஒளவையார் கூட இந்தமாதிரி காட்சியெப் பாத்து சொல்லி இருக்காய்ங்க… காதலனும் காதலியும் தங்கள் ஊரையும் சுற்றத்தாரையும் விட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் வெம்மை மிகுந்த கானகத்தின் வழியே போறாகளாம்.அப்பொ கண்ணில் தெரியும் காட்சி பாருங்களேன்…

நம்ம வைகை மாதிரி நீரில்லா காட்டாற்றின் கரையோரம் மரங்களின் கிளைகள் தாழ்ந்திருக்க, அதன் நிழலில் உயர்ந்த மணல் மேடுகள் இருக்காம். வரிசையா நிக்கும் இலவ மரங்களின் எல்லா அரும்புகளும் செவேலென்று அழகாப் பூத்திருக்காம். அந்தக் காட்சி, இளம் பெண்கள் ஏற்றி வைத்த கார்த்திகை விளக்குகளின் நெடிய வரிசை போல இருந்ததாம்.

சிலப்பதிகாரம் கார்த்திகையை “அழல்’ என்று கூறுகின்றது (அப்பாடா என் பதிவைத் தவறாது படிக்கும் நண்பர் முத்துமணி அவர்கள் (சிலப்பதிகாரப் பிரியர்) மனம் மகிழ்வார்.

வைரமுத்துவின், “கவிதையே பாடலாக” என்ற மேடைப் பாடலிலும்
( கலைஞர் முன்னிலையில் எஸ்.பி.பி. குரலில் பாடிய பாடலில் ) கேட்கும் போதே, மார்கழி என்றால் குளிரும்; கார்த்திகை என்றால் அங்கே கதகதப்பாகவும் இருக்கும்.

”மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்..” இது திரைப்பாடலுக்கான வரி.

…..நீ என்னைக் கடந்த காலம்,
மனசெல்லாம் மார்கழி தான்,
தெருவெல்லாம் கார்த்திகை தான்…..

இது ’கவிதையே பாடலாக’ பாடல் வரி.

கார் நாற்பதின் பக்கம் நம்ம நினைவுக் காரின் கதவைத் திறப்போம். அட…அங்கும் கார்த்திகை தான்.

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; சிலமொழி!
தூதொடு வந்த, மழை. 26

சில சொற்கள் மட்டும் பேசும் தோழியே!

கார்த்திகை, தலைமையான திருநாள். நாட்டு மக்கள் எல்லாம் தெருவில் விளக்கு ஏற்றி வழிபடுவர். அந்தக் கார்த்திகை விளக்குப் போல நிலமெல்லாம் தோன்றிப் பூ பூத்துத் திகழ்கிறது. மழை பொழிகிறது. இது அவர் வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறி.

இனி நேரே நம்ம கம்பர் கிட்டேப் போய் பாட்டு கேட்டா… செமெ கடுப்பிலெ இருக்கார். ஆமா சுக்கிரீவன் சொன்ன நேரத்தில் வரலையாம்.. (அவரு வராங்காட்டி என்ன, கார்த்திகை வருதா இல்லையா? அது தான் நமக்கு முக்கியம்)

அன்ன காலம் அகலும் அளவினில்,
முன்னை வீரன், இளவலை, ‘மெய்ம்பினோய்!’
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ?

நமக்கெல்லாம் குளிர்காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் அடங்கிய கூதிர் எனப்படும் இலைகள் கூம்பி உதிரும் காலமாகும். அக்காலம் நீங்கியவுடன், இராமன் இலக்குவனைப் பார்த்து, வாரேன்னு சொன்ன சுக்ரீவன் வரலையே? நான்கு மாதம் கழிந்த பின்பும் வரலையே? என்ன செய்கிறார் அந்த சுக்ரீவன்? எனக் கேட்டாராம் இராமன் இலக்குவனிடம்.

மீண்டும் வருவேன்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (04-10-2020)

கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

துளித் துளித் துளித் துளி மழைத்துளி



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17]

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)