கம்பன் பார்வையில் வெற்றிலை


பொதுவாவே ஆஃபீசில் ஏதாவது கடிதம் எழுதிட்டு வரச்சொல்லும் போது, அதில் திருத்தங்கள் செய்வதை பெரும்பாலும் பணியாளர்கள் விரும்புவதில்லை. அடிக்கடி மாத்தி மாத்தி திருத்தம் செய்யும் மேலதிகாரிகளை பணியாளர்கள் வெறுக்கவே செய்வார்கள். இவ்வளவு தெரிஞ்ச பெரிய மனுஷன் அந்தக் கடிதாசியையும் அவரே (அந்த நாயே என்பதை சபை நாகரீகம் கருதி எழுதலை) எழுதி இருக்க வேண்டியதுதானே? சாதாரண கடிதமே அப்படின்னா, கட்டிடம் கட்டுபவர் மனநிலை எப்படி இருக்கும்?

ஒரு கட்டிடத்தை கட்டுபவரிடம், ஏதாவது குறை இருக்கிறது என்று சொல்லி,  அதனை இடித்து விட்டு மாற்றிக் கட்டுங்கள் என்றால் போதும். அவருக்கு வருகின்ற கோபத்திற்கு அளவே இருக்காது. கட்டும்போதே, பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே! (வெளக்கெண்ணெய் – இதுவும் சபை நாகரீக ஏற்பாடு தான்).  அப்பவே திருத்தி இருப்போமே! என்று கோபம் வெடிக்கும். அப்படியே அவர் கட்டியதை இடித்தாலும், அவர் இடிக்கும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! இடது கையிலும், இடது காலிலும் உதைப்பார்.. இடிக்கச் சொன்னவரையே தன் காலில் உதைப்பது போல். அப்படி இல்லாமல், ஒரு வெத்திலை மிகப்பெரிய கட்டுமானம் செய்ய உதவி இருக்கு என்பது ஆச்சரியமா இருக்கில்லே!

தமிழ் திரையுலகில் அகன்ற திரையில் முதன் முதலாக ஒரு படம் வந்தது, ராஜராஜ சோழன். அதில் கதாநாயகன் ராஜராஜ சோழனை அறிமுகம் செய்து வைக்கும் இடமே மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒரு சிற்பி செதுக்கி கொண்டிருப்பார். அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பையன் வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சென்றுவிட, அவ்வழியாக வந்த ராஜராஜசோழப் பேரரசர், அந்த சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பார். சிற்பி துப்பியதையும் செம்பில் எடுத்துக் கொண்டிருப்பார். தனக்காய் வெற்றிலை மடித்துத் தந்தும், எச்சிலும் ஏந்திய ஓர் அரசனுக்கு நல்ல கட்டுமானம் தராமலா போயுடுவார்கள்? அதன் நிரூபனம் தான் தஞ்சை பெரிய கோவில்.



இப்படித்தான் வெங்கனூர் என்ற ஓர் ஊர்ல, தியாகராஜர் ரெட்டியார் என்பவர் ஒரு கோயில்ல கட்டுவதற்கு உதவிகள் செஞ்சிட்டு இருந்தாராம். ரொம்ப பிரமாதமா, கோயில் சிறப்பாவே எல்லாம் செஞ்சிட்டு இருந்தாங்களாம். அவரும் ஒரு தடவை இந்த மாதிரி (சினிமாஸ்கோப் படம் எல்லாம் பார்க்காமல்), ஒரு சிற்பிக்குத் (தெரியாமலேயே) வெற்றிலை மடித்துக் கொடுத்தாராம். அத அப்புறமா தெரிஞ்சிட்டு அந்த சிற்பி, அதுவரைக்கும் பிரமாதமாக கட்டியிருந்த அந்த கோயில் எல்லாம் பிரிச்சிட்டு, இன்னும் பிரமாதமாக் கட்டினாராம் அந்த சிற்பியின் தலைவன். வெற்றிலை மடித்து கொடுத்த ஆளுக்கு, இந்த மாதிரியான சாதா கோவில் சிற்பம் எல்லாம் சரி வராது. இன்னும் சிறப்பாக ஸ்பெஷல் சிற்பம், சிறப்பா செஞ்சி கொடுத்தாங்களாம்.

உடனே ஆதாரம் கேப்பீங்களே! என் சரித்திரம் என்று உ வே சாமிநாதையர் தன்னுடைய சுயசரிதையை எழுதி இருக்கிறார். (அந்த தமிழ்த் தாத்தாவே தான்) அதில் தான் இந்த வெற்றி(லை)க்கதையெச் சொல்லி இருக்கார். உடனே ஓடிப்போய் என் சரித்திரம் படிக்கத் தேட்றீகளா? ஹலோ ஹலோ… அவ்வளவு சீக்கிரம் எல்லாம் படிச்சிட இயலாது. 960 பக்கம் இருக்குதுங்கோ!  ஆனா படிக்க ஆரம்பிச்சுட்டீங்க…. ஏதோ துப்பறியும் நாவல் மாதிரி அம்புட்டு விறுவிறுப்பா போயிட்டே இருக்கும்! உங்கள கூட்டிக்கொண்டு போய் 1870 களில் உக்கார வச்சிடும். அப்போ எப்படியெல்லாம் சிரமப்பட்டுத் தமிழ் கற்று, தமிழ் வளர்த்திருக்கிறார்கள்? என்பது ரொம்ப நல்லாவே தெரியவரும்! இப்ப எவ்வளவு வசதிகள்? கம்ப்யூட்டர் என்ன? இன்டர்நெட் என்ன? சொல்லச் சொல்ல டைப் அடிக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்ன? இவ்வளவு வச்சுக்கிட்டு நாம் என்ன செய்கிறோம் என்று கேள்வி கண்டிப்பாக மனசுல உதிக்கும், உவேசாவின் சுயசரிதம் படித்தால்.

அது சரி… அம்புட்டு வேலை செய்ய வைத்த அந்த வெத்தலை, அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? இந்த வெத்திலை பலான வேலைகளுக்கும், கரு உருவாகமல் இருக்கவும் பயன் படுமாம்.  வெத்தலை பாக்கு சுண்ணாம்பு இந்த மூணு செமெ காம்பினேஷன் தான். காலை உணவுக்குப் பின், பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு மிக குறைவாகவும் வச்சிக்கணுமாம். அப்பத்தான் பித்தம் ஏறாது என்பர்; மலச்சிக்கலும் வராதாம். மதியம், சுண்ணாம்பு அதிகமாகவும், மற்றவை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வாயு கட்டுப்படும்; ஜீரண சக்தி அதிகரிக்கும். இரவு, வெற்றிலை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கபம் தங்காது; சளி வெளியேறி விடும். இப்படி மூன்று வேளையும் மெல்லுவதால், வெற்றிலையில் உள்ள மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, ‘கால்சியம், இரும்பு சத்து’ போன்றவை இயல்பாக உடலுக்குக் கிடைக்குமாம். ஆனா நாமதான் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காமெ ஒரே மாதிரி பீடாவை போட்டு சாப்பிட்டு இருக்கோம்? (வீட்டுத் தோட்ட்த்திலும் கூட வெற்றிலைக் கொடி இருக்குதுங்கோ…!)

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம் கம்பர் ஏதாவது வெற்றிலை பத்தி எங்காவது சொல்லியிருக்கிறாராண்ணு பாக்கலைன்னா அது தெய்வ குத்தம் ஆயிடும்லெ! இணையத்தில் தேடிப் போனா, எல்லாம் சொல்லி வச்ச மாதிரி ஒரே இடத்தில் போய் நிக்குது. சீதை அசோகவனத்தில் இருக்கிறப்போ, ராமரைத் தேடி யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களை உபசரிப்பது ராமனால் முடியாதே! இப்படிக் கவலைப்பட்டாகளாம் சீதையம்மா. அதை ஒட்டிய பாடலில் அருந்தும் மெல்அடகு ஆர்இட அருந்தும்? என்று அழுங்கும்;அப்படிப் போகுது கம்பனின் வரிகள். அதில் மெல் அடகு என்பதை வெற்றிலை என்று சிலரும், கீரை எனப் பலரும் பொருள் சொல்கின்றனர்.

அடுத்து இன்னொரு இடம் பரவலாக சொல்லப்படுது. சீதையம்மா விரக்தியில் இருந்த நேரத்தில், அனுமன் வந்து நல்ல செய்தி சொன்னார். அதனால் மகிழ்ந்த சீதை, அவரைப் பாராட்டும் விதமாக தலையில் வெற்றிலை வச்சு ஆசிர்வாதம் செஞ்சதா பல இணையதளங்கள் சொல்லுது. கம்பர் சொன்னதா வேறு சொல்லுது. ஆனா கம்பருடைய பாடல்களை தேடித் தேடி பார்த்தா அந்த மாதிரி தெரிஞ்ச மாதிரி இல்லை. வால்மீகி ராமாயணத்தை அப்படியே மேலோட்டமா (எதையுமே ஒழுங்காத்தான் படிப்பதில்லையே!) படிச்சு பார்த்தா அதுலயும் ஒன்னும் கிடைச்ச மாதிரி தெரியல.

அப்ப எங்கேதான் கம்பர் வெற்றிலையெக் கொண்டு போய் வச்சாரு? கம்பருக்கும் வெற்றிக்குமாவது தொடர்பு இருக்கா இல்லையா? கண்டிப்பா இருக்கு. கம்பருக்கும் சோழ மன்னருக்குமிடையே  ஒரு சின்ன கருத்து மோதல். கம்பர் கோவிச்சிட்டு சேர நாட்டுக்குப் போய்விடுகிறார். ஆறு ஏழு ரீலுக்குப் அப்புறம், சோழ மன்னன், கம்பரை அழைக்கிறார். கம்பரை ஒரு பல்லக்கில் வைத்து சோழ நாட்டு எல்லைக்கு கம்பருடன் சேரனும் ஒரு அடைப்பக்காரன் (வெற்றிலை வைத்திருக்கும் பெட்டியினை வைத்திருப்பவன்) ரூபத்தில் செல்கிறான். அடைப்பக்காரன் தந்த வெற்றிலையை வாயில் போடாது தனது விரல்களுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறார் கம்பர். சோழன், இது என்ன சமாச்சாரம்? எனக் கேட்க, அடைப்பக்காரராக வந்தது சேர மன்னன் என்பதால் தான். அந்த வெற்றிலையை வாயில் போட்டிருந்தால் அரச பதவிக்கு அது அவமானம் என கம்பர் கூறுகிறார்.
 

கம்பர் வாழ்க்கையில் இப்படி ஒரு சூப்பர் சீன் நடந்திருப்பதை ராமாயணத்தில் தராமலா  இருப்பார்? கம்பர் தன்னுடைய வெற்றிலை புராணத்தை ராவணனுடைய அறிமுகத்தில் காட்டுகிறார். ஊர்வசி இருக்காகளே ஊர்வசி, அவங்க உடைவாளை எடுத்து வராங்களாம். ராவணனுக்கு பின்னாடி மேனகை வெற்றிலையெக் பக்கத்திலிருந்து கொடுத்திட்டே வாராங்களாம்…வெற்றிலை வந்து விட்டதால் கதையெ நிப்பாட்டிட்டு பாட்டு பார்ப்போம்.

உருப்பசிஉடைவாள் எடுத்தனள் தொடர, மேனகைவெள்ளடை உதவ,
செருப்பினைத்தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர்குழாம் புடை சுற்ற,
கருப்புரச்சாந்தும், கலவையும், மலரும், கலந்துஉமி்ழ் பரிமளகந்தம்,
மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக் கைவாய் மூக்கிடை மடுப்ப;
(
சுந்தர காண்டம் 407)

ஊர்வசியானவள் உடைவாளை எடுத்துக் கொண்டு பின்னே வரவும்,
மேனகையானவள்  பக்கத்திலிருந்து வெற்றிலையை  வழங்கவும், திலோத்தமையானவள் செருப்பைச் சுமந்தபடி போகவும்,  மற்ற  தேவ மகளிரின் கூட்டம் பக்கங்களில் சூழ்ந்து வரவும், அவன் மேனியைச் சார்ந்த கர்ப்பூரம் கலந்த சந்தனம் குங்குமம் முதலியவற்றின் சாந்தும் பலவகைப்  பூக்களும் ஒன்று சேர்ந்து  வெளிப்படுத்தும் நறுமணமானது, மலைகளை ஒத்த  திக்கு யானைகளின் புள்ளிகளைப் பெற்ற துதிக்கையிலே உள்ள மூக்கில் கலக்கவும், (இராவணன் வந்தான்).

இன்னொரு பக்கம் போனா கொங்கு மங்கல வாழ்த்து கம்பர் தான் எழுதியது எனச் சொல்கிறார்கள். 1913 ல் வெளியான ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கு. இந்தக் கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்திலும் பல இடங்களில் வெற்றிலை சொல்லப்படுது. மங்கலம் நிறைந்த வெற்றிலைக்கும் நம்முடைய கட்டுமானத்துக்கும், கம்பனுக்கும் தொடர்பு ஏதோ ஒரு வகையில் (பல வகைகளில்)  இருக்கத்தான் செய்யுது. மீண்டும் வேறு ஒரு கோணத்தில் கம்பனைப் பார்ப்போம்

சொல்வன நச்செனச் சொல்


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 90
(28-07-2019)

’நீரில்லாத பூமி பாழ்’ எனக் காலம் காலமாய் சொல்லி வந்தாலும் கூட, நிலத்தடி நீர் இல்லா (தமிழ்) நாடு குறித்த சமீபத்திய நிதி ஆயோக் அறிக்கை ஒரு பக்கம் பயமுறுத்த்திக் கொண்டு தான் இருக்கிறது. ஆன்மீகப் பக்கமோ ’நீறீல்லா நெற்றி பாழ்’ என்கிறது. சில வருடங்களாக லேசான விபூதி கீற்று வைத்து வருகிறேன். ”கிருஷ்ணன் பேரு வச்சிகிட்டு திருநீறா?” இப்படிக் கேட்பவர்களும் உண்டு. அளவில் கொஞ்சம் பெருசானாப் போதும், தாலி கட்டியவள் நெற்றிக்கண் திறப்பார். எங்கே பக்திமான் ஆகி, நித்யாணந்தா மாதிரி ஆகிவிடுவேனோ என்ற பயமாக, ஒருவேளை இருக்கலாம்.

சமீபத்திய ஜுன் மாதம் என் நெற்றிவிபூதி அதிகம் பேசப்பட்டது. பின்னே…. நல்லா தமிழ்க்காரன் எனத் தெரியும் படி விபூதி வச்சிகிணு, ஹிந்திக் காரர்களிடமே, கம்ப்யூட்டரில் ஹிந்தியைத் திணிப்பது, சாரி சாரி உபயோகப் படுத்துவது எப்படி என வகுப்பு எடுத்தா? கடுப்பாக மாட்டாய்ங்க? ஆனாலும் அந்த திருநீறு அணிந்த நெற்றி அழகே அழகு தான்.

இந்த ஹிந்திப் பாடம் நடத்தும் சங்கதி ஒன்றும் பிளான் செய்து வந்தது அல்ல. தற்செயலான நிகழ்வு. சிவில் பொறியியலின் ஒவ்வொரு வேலைக்கான ரேட் எவ்வளவு என நிர்ணயம் செய்யும் Analysis of Rates தான் தொந்திரவு தந்தபடி இருந்தது. நிமிந்தாள், சித்தாள் கூலி ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏறும் (குறைந்தபட்ச கூலி தான்); டீசல் டீவீ பார்க்கும் போதெல்லாம் விலை ஏறும்; கம்பி மணல் இதுவும், இப்படி எதுவும் நம்ம கையில் இல்லை; ஏறுமுகம் தான் விலையில். இதை திரும்ப திரும்ப ஒவ்வொரு முறையும் ரேட் ஏறும் போது எஸ்டிமேட் தயார் செய்வதில் மண்டெ காஞ்சி போகும். எக்செல் வைத்து அதை எளிமை ஆக்கினேன். மாறக்கூடிய சங்கதிகள் எல்லாத்தையும் ஒருசீட்டில் போட்டு அதை வைத்து கணக்கு பண்ணும் சங்கதிகளை, இன்னொரு பக்கத்தில் வைத்து லிங்க் செய்தேன். ஒரு தடவை உழைத்தால் போதும் அப்புறம் ரேட் சீட்டில் மாத்தினா பூரா எஸ்டிமேட்டும் தயாராகி விடும்.

இதை உற்று பாத்த ஒரு ஹிந்திக்காரர் இங்கிலீஸ் ஒரு பக்கமும் ஹிந்தி ஒரு பக்கமும் வச்சா என்ன? என்ற வீணாப்போன ஐடியா குடுக்க, அது செமெ ஹிட்டாயிடுத்து. ரேட் அனாலெஸிஸை விட, ஹிந்தி வகுப்பு தான் அதிகம் எடுத்து வருகிறேன். தற்செயலாக வந்தாலும் தக்கடாவா (உறுதியாக) வந்திடுச்சி.

நீ நினைத்த காரியம் ப்ளான் செய்தபடி வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தால், நீ தோல்வி பெற ப்ளான் செய்துள்ளாய் என்கிறார் ஆக்ஷன் ப்ளான் துறவி விவேகானந்தர். வடிவேலாணந்தர் இதையே நச்சுன்னு, எதையுமே ப்ளான் செய்யாமெ செஞ்சா இப்படித்தான் என்கிறார். ஆனால் சில, நாம் ப்ளான் ஏதும் செய்யாமல் தற்செயலாக கைக்கு கிடைத்துவிடும். ப்ளான் செய்து பெற்ற வெற்றியை விட இப்படி தற்செயலாய் வரும் எந்த சமாச்சாரத்துக்கும் (சம்சாரம் இல்லீங்கோ) ஒரு பிட் சந்தோஷம் அதிகம் தான். பலனை எதிர்பாராமல் செய்த கடமையின் பலன் என்பதால் இருக்குமோ? ஏடாகூடமான நேரத்தில் தற்செயலாக சம்சாரம் வந்தால், என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிட்டு தொடர்கிறேன்.

ஆனா சம்சாரம் இல்லாத நேரத்தில், “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என முதல் நாள் கத்தினாலும் (சந்தோஷமாத்தான்)  அடுத்தடுத்த நாட்களில் மனைவி இல்லாதது, கை ஒடிந்த மாதிரி தான் இருக்கிறது. ஒரு நெயில்கட்டரை கடந்த 10 நாளா தேட்றேன். என்னைக்கோ காணாமல் போன சார்ஜர் முதல், முதல் கேர்ள் ஃபிரண்ட் போட்ட லெட்டர் (இப்பொ அதெக் கிழிச்சிப் போட்டென் என்பதை எதுக்குச் சொல்லிட்டு?), காலேஜில் தொலைஞ்சது என நெனெச்ச ஆட்டோகிராப் புக், 1985 இல் எந்த விளம்பரம் பாத்து அந்தமான் வந்தேனோ அந்த எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பேப்பர், இப்படி எல்லாம் கிடைக்குது. நெயில் கட்டர் மட்டும் கையிலெ சிக்கலை இன்னும்..

ஒரு வேளை பாலகுமாரனின் கரையோர முதலைகள் நாவல் தேடினா, நெயில் கட்டர் கிடைச்சிடுமோ? ஆனா மனைவிமார்களின் கைக்கு மட்டும் எப்படித்தான் இதெல்லாம் டக்குன்னு சிக்குமோ? தொலெஞ்சே போச்சி என நினைத்த பாலாவின் நாவல், 15 வருஷம் கழிச்சி கெடெச்சது. மகிழ்சியின் உச்சத்தை அடைந்தேன் என்பதை சொல்லவும் வேணுமோ? அப்பொ 15 வருஷம் கழிச்சித்தான் நகம் வெட்டிக்கணுமோ?

இருப்பதை தொலைக்கும் நபர்கள் பலர். ஆனா இருக்கும் நிம்மதியை தொலைக்கும் மக்களும் இருக்காகளே? ஒருமுறை விமானப் பயணத்தில் ஜன்னல் சீட்டில் உக்காந்த ஒரு மனுஷனுக்கு ஏதோ தீப்பொறி கண்ணில் பட்டது. (ஒரு சீட் தள்ளி உக்காந்த எனக்கு, மயில் கலரில் உள்ள சேலை எப்படி எல்லா ஏரிண்டியா மகளிருக்கு பொருந்துது என்ற ரோசனையில் இருந்ததேன்.) கோ பைலட், பைலட் வரை வந்து எட்டி எட்டி பார்த்தனர் ஜன்னல் ஓர சீட்டிலிருந்து. அவருக்கும் எனக்கும் நடுவே இருந்த பயணி, பயந்து போய் கடைசி சீட்டுக்குப் போயிட்டார். ஜன்னல் சீட்க்காரர் சோறு தண்ணி இல்லாமல் வெறிச்சி பாத்தபடி இருக்க, நான் அந்த வடை உப்புமா இரசித்தபடி இருந்தேன். (என்ன ஒரு சாதி இது? என மனசிலெ திட்டி இருக்கலாம்). உயிர்பயமே இல்லையா? என்றார். உயிர் போவது முடிவாயிடுச்சி, உப்புமா வாடெ சாப்பிட்டு தெம்பா சாகலாமே? கேட்டதும் கடுப்பாயிட்டார் அந்த பட்டினி கிடந்த சக பயணி. எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் தரை இறங்கியது. நான் பசி ஏப்பம் விட்டேன். (பின்னே ஒரு ஸ்பூன் உப்புமாவும் மினிமினி வடையும் பசி தீர்க்குமா என்ன?) அந்தப் பயணி, போன உசுரு திரும்பி வந்தது போல் நிம்மதியாய் அசடும் வழிந்தபடி இறங்கினார். அவர் நெனெச்சபடி விமானம் தீப்பிடிக்காதது அவருக்கு மிகப் பெரும் கவலை.

”என்ன கிட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமெ வேற வேற சப்ஜெக்ட் ஓடிட்டு இருக்கே?” சொல்லியபடி கம்பர் அப்பியர் ஆகிறார்.

“சொல்வன நச்செனச் சொல் எனச் சொல்லிட்டு, ஒண்ணும் வெளங்கலையே?” என்றார்.

எல்லாம் உங்க பாணி தான் ஐயா… பொதுவா எல்லா புலவர்களும் ஒரு மேட்டருக்கு ஒரு உவமை சொல்லுவாக. நீங்க மூணு உவமை சொல்லிட்டு, கடைசியிலே வடிவேலு கணக்கா, முடியலைண்ணு வேறு அலுத்துக்கிறீங்க! நானும் உங்க தாசன்… உங்க பாணியில் ஹீ ஹீ ஹீ

“நடத்து கிட்டு… நடத்து நண்பா…” சொல்லி மறைந்தார்.

வாங்க… இப்பொ நாம் அசோக வனம் போவோம். கம்பனே எப்படி சொல்வது எனக் குழம்பிய இடம் வருது அங்கே.  அனுமன் இராமபிரானின் மோதிரத்தை சீதையிடம் தருகிறார். அந்தக் காட்சியெ ஒரு தடவெ பாருங்க; அப்புறம் பதிவெப் படிங்க

அப்படியே கம்பன் பாட்டும் படிங்க:

இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது கொல் என்கோ
திறம் தெரிவது என்னைகொல் இந் நல் நுதலி செய்கை

[சுந்தர காண்டம் – உருக்காட்டு படலம்]

[நல்ல நெற்றியைப் பெற்றுள்ள சீதை அம்மோதிரத்தைக் கண்ட செயலை, வாழ்நாளை வீணாக்கியவர்கள், மறுமைப் பயன் தரும் ஒன்றைத் தற்செயலாகப் பெற்றதைப் போன்றது என்பேனா? விலை மதிப்பரிய ஒரு பொருள் வைத்துவிட்ட இடத்தைப் பல்லாண்டுகள் மறந்துவிட்டவர்கள், திடீரென்று வைத்த இடம் நினைவு வரப் பெற்றதைப் போன்றது என்பேனா? உடலை விட்டுப் பிரிந்து போன உயிர் மீண்டு வந்து அந்த உடலோடு சேர்ந்ததைப் போன்றது என்பேனா? சீதையின் செயலது சிறப்பினை எவ்வாறு தெரிந்து சொல்வது?]

நெற்றி, தற்செயலை, நெயில் கட்டர் தேடல், பாலா நாவல், தீப்பிடிக்காத விமானம்… இப்பொ லிங்க் ஓகே வா?…. நல்லா கேக்குராங்கப்பா டீட்டெய்லூலூலூ….

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

திர்ஷா இல்லனா நயன்தாரா


Thirisha illana nayanthaara

இந்தக் காலத்தில் பாருங்க, சினிமா பட டைட்டிலுக்கும் கூட பஞ்சம் வந்து போச்சி. இப்பொல்லாம் பழைய படத்தோட டைட்டிலெ வைக்கிறது தான் வழக்கமாயும் கூட ஆகிப்போச்சி. இப்படி, த்ரிஷா நயன்தாரான்னு எல்லாம் பேரு வச்சா, அவங்க ஏதும் சொல்ல மாட்டாகளாங்கிற சந்தேகமும் வருது. ஒரு வேளை இலவச விளம்பரம் வருதுன்னு நெனைப்பாங்களோ? இன்னொரு விசயமும் நடக்குது இப்பொ. படத்தோட பேரெ சுருக்கிக் சொல்றது. அழகிய தமிழ் மகன்னு அழகா பேரு வச்சா, அதெ ATM ன்னு சொன்னாங்க. நல்ல வேளை இந்த த்ரிஷா இல்லனா நயந்தாராவை சுருக்கி TIN கட்டாமெ இருந்துட்டாங்களேன்னு சந்தோஷப்படலாம்.

atm

இந்தப்பட டைட்டில் நமக்கு ஒரு மெஸேஜ் சொல்லுது. இதெ நாம ஏத்துக்கத்தான் வேணும்.  நாம எதையாவது குறி வைக்கும் போது அது கிடைக்கலையா? ”சீ சீ இந்தப் பழம் புளிக்கும்”னு போகலாம். இது தான் பாட்டி காலத்துப் பால பாடம். ஆனா இந்த நவீன தத்துவவாதிகள், எதுக்கு சோர்ந்து போகணும்? அது இல்லனா இன்னொன்னு… ஆக..த்ரிஷா இல்லனா நயன்தாரா அம்புட்டுத்தானே?

அந்தமானில் விஸ்வகர்மா பூஜை மிகவும் பவாண்டோகலமாக நடக்கும். (மேக் இன் இண்டியா பாலிஸி என்பதால் கோலாகலம் என்பது பவாண்டோகலமாகி விட்டது என்பதை கவனிக்கவும்). இப்பண்டிகை தீவிரமாய் இருக்கும் எல்லா ஆயுதமிருக்கும் இடங்களிலும். நம்மூர் ஆயுத பூஜை எல்லாம், பிரமாண்டமாய் நடக்கும் துர்கா பூஜையில் அட்ரஸ் இல்லாமல் கரைந்து போய் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிஜம். எல்லா இந்து மத விழாக்களிலும் பிற மத்ததவர்களும் சேர்ந்து வழிபடுவது அந்தமானின் பிறவிக் குணமாய் இருக்கும். சமீபத்திய பூஜையில் ஐயர் (தற்காலிக பூஜைக்கான ஏற்பாடு தான்) செம்புக்கு பதிலாக சின்ன டம்ளர் வைத்திருந்த்தார். இங்கே இப்படித்தான் என்றார் தெலுங்கு பேசும் ஐயர் ஹிந்தியில். செம்பு இல்லனா டம்ளர் – இது  த்ரிஷாவுக்கும் நயந்தாராவுக்கும் கனெக்‌ஷன் கொடுத்தது.

thirishaa

இது எல்லா இடத்திலும் செல்லுபடியாகுமா? அப்படியும் சொல்லி விட முடியாது. நமக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் பேசும் போது அடிக்கடி ”புரிஞ்சதா? புரிஞ்சதா?” என்று சொல்லிக் கொண்டு தான் பேசுவார். நாளைக்கு காலை 8 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிட்டு, அதுக்கும் ”புரிஞ்சதா?” என்பார் வங்காள வழக்கில் வழக்கமான ஹிந்தியில். எப்போது பாத்தாலும் நோயாளிகளோடு பேசிப் பேசி இந்தப் பழக்கம் வந்திருக்குமோ? இப்படிப் பேசுவது த்ரிஷா ரகம் தான்; யாருமே நயன்ரகமில்லையோ?

புரட்டாசி வந்தாலும் வந்தது, முதன் முறையாக அந்தமானில் நாமும் சைவம் சாப்பிட்டு தான் பாப்போமே என்று ஆரம்பித்து இன்றோடு 18 நாள் வெற்றிகரமாய் ஓடி விட்டது. இதை அப்படியே ஐப்பசியிலும் மேலும் தொடரலாமே என்றேன் என் குழ்ந்தைகளிடம். மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழகிய குழந்தைகள், ”ஆப்ஷன் தாங்கப்பா” என்றனர். நானும் தந்தேன் நான்கு விதமானவைகளை:

ஆப்ஷன் 1: இரண்டாம் ஞாயிறு மட்டும் அசைவம் சாபிட அனுமதி. மற்ற நேரமெல்லாம் சைவம்.

ஆப்ஷன் 2: அசைவம் அவ்வப்போது வரும். ஆனால் சாப்பிடக் குறைவான அளவே கிடைக்கும்.

ஆப்ஷன் 3: நாமெல்லாம் எகிட்டேரியனுக்கு மாறிவிடலாம். அதாவது முட்டை மட்டும் சைவத்துக்கு கொண்டு வந்திடலாம்.

என்ன சொல்றீங்க? என்றேன் நான்.

உடனடியாக கேள்வியே பதிலாக வந்தது.

“None of the Above” தரவே இல்லையே?

இங்கே பார்த்தால், த்ரிஷாக்கள் வந்தாலும் கூட நயன்தாரா தேவைப்படுகிறது.

Nayanthaara

“நிறுத்துப்பா”… ஒரு குரல் கேட்டது. கம்பர் கோபமாய் நின்று இருந்தார். “இப்படியே போனால், அடுத்து சீதை இல்லனா சூர்ப்பனகை என்று சொன்னாலும் சொல்லுவே!!!” அனலாய் வந்தது வார்த்தைகள். தொடர்ந்து அதே கோபத்தில், ”வேண்டுமானால் இப்போதைக்கு கம்பராமாயணம் இல்லனா குறுந்தொகை, இப்படி ஏதாவது கையில் எடுக்கலாமே?” என்றார்.

பவ்யமாய் சொன்னேன்… கம்பர் ஐயா…உங்களின் கற்பனையினை வியந்து பார்ப்பவன் நான் உங்களுக்கு கோபம் வரும் அளவுக்கு ஏதும் எழுதிட மாட்டேன். என்னதான் எல்லாரையும் கலாய்ச்சாலும் உங்களை கலாய்ய்ச்தே இல்லை தெரியுமா? எனக்கு கம்பர் இல்லனா கம்பர் தான்”

கம்பர் கோபம் மறைந்து சிரித்தபடி மறைந்தார். ஆனால் அவரது வரிகள் மனதில் ஓடின. இந்த அது இல்லனா இது என்கின்ற சாயலில் எங்காவது கம்பசரக்கு இருக்கா? என்று தேடினேன். கிடைத்தது. கம்பனில் எதைத் தேடினாலும் தான் கிடைக்குமே!!

மாரீசன் மானாக மாறும் முன்னர் நடந்த நிகழ்வு. இராவணன் சொன்ன சொல் தவறாது, மானாக மாறி செல்லத் துணிந்த நேரம் அது. மைண்ட் வாய்ஸ் என்று சொல்வார்களே, அப்படி அந்த மாரீசனின் மைண்ட் வாய்ஸைப் படித்து கம்பர் தனது வரிகளில் சொல்லி இருக்கிறார். (என்ன கம்பரே… இதில் ஏதும் வில்லங்கமா இல்லை என்பதில் சந்தோஷம் தானே?) மாரீசன் மைண்ட் வாய்ஸ் இப்படிப் போகுதாம்…

இராவணன் சொல் கேட்டா எப்படியும் நமக்கு ஆப்பு தான். என்று தன்னோட  சொந்தக்காரங்களைப் பத்தி நெனெச்சி கவலைப் பட்டாராம். எப்படியும் நமக்கு இராம இலக்குவர்களால் சங்கு ஊதல் நிச்சயம் என்று பயந்து நடுங்கினானாம். அந்தப் பயம் எப்படி இருந்திச்சாம்?… ஆழமான குழி நீர் மாசு பட்டால் அங்கு வசிக்கும் மீன் என்ன ஆகும்? புட்டுக்கும். இல்லன்னா கரைக்கு குதிச்சு வரும். அப்பவும் பூட்டுக்கும். நீர் இல்லன்னா நிலம்; அதே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா?

என்ன நான் சரியாத்தான் சொல்றேனா?

இவ்வளவு படிச்ச நீங்க பாட்டையும் படிங்களேன்…. இல்லனா???

வெஞ் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

இதிலெ ஒரு வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு சொல்லிட்டு, அவரோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் யாரும் தெரிஞ்சிக்க முடியாதபடி கலங்கினானாம் என்றும் சொல்கிறார் கம்பர்.

இப்பொ சொல்லுங்க; கம்பர் இல்லனா கம்பர். சரிதானே?

அந்தக் கொசு செத்துப் போச்சா?


thampi raamaiyaa

சில சினிமாப் படங்கள் பாத்துட்டு வந்தா ஜம்முன்னு சில டயலாக் அல்லது பாட்டு மனசுலெ நிக்கும். (சில பேத்துக்கு சில நாயகிகள் ஜில்லுன்னு பல நேரங்களில் மனசிலெ நிக்கலாம்) ஆனால் முக்கியமானது  ஒன்று… தியேட்டரில் மட்டும் படம் பாத்துட்டு திரும்பணும். அப்பொத்தான் இந்த அனுபவங்தை உங்களால் உணர முடியும். வீட்டிலெ உக்காந்துட்டு திருட்டு வீசீடி பாத்தா எந்த எஃபெக்டும் வராது. படம் இன்னுமா பாக்கலை? என்று ரொம்ப கேவலமான பார்வையை வேண்டுமானால் இது தடுக்கலாம்.

சமீபத்தில் அந்தமான் தலைநகராம் போர்ட்பிளேயரில் இப்படி ஒரு படம் பாத்து வந்த நிம்மதி கிடைத்தது. புதிதாய் கட்டியுள்ள நவீன தியேட்டர் அது. பாத்த படம் தனி ஒருவன். (தனியா இல்லீங்கோ. குடும்பத்துடன் பார்த்த முதல் படமும் இது தான்). படம் என்னவோ நல்ல சிந்தனையை தூண்டும் செய்தியில் தொடங்கினாலும், படம் பலப்பல அதிரடி ஹைடெக்குகள் சுமந்து வந்தாலும், நல்ல இசையில் பாடல் வரிகள் கவர்ந்தாலும், அனைத்து மகளிருக்கும் மனதிலெயாவது எதிர்பார்க்கும் வரனாய் (ஒரு காலத்தில்) விளங்கிய அரவிந்தசாமி வில்லனாய் கலக்கினாலும் சரி, மனசிலெ கடைசியிலெ என்னவோ அந்த “கடைசியிலெ அந்தக் கொசு செத்துப் போச்சா?” என்ற டயலாக் தான் மனசுலெ நின்னது.

ஒரு வேளை அந்த ”தம்பி ராமையா” யாவின் அப்பாவித்தனம் தான் கதையின் மூலக்கருவோ? (நீங்க படம் பாரக்கலையா? அப்பொ புரியாது?) அப்பாவியாய் இருத்தல் என்பது ஒரு இயல்பு. குழந்தைகளிடம் தான் அந்த இயல்பு இருக்கும். வளர்ந்த பின்னர், அறிவு(??) என்னவோ வளர்ந்து விட்டதாய் நினைத்துக் கொண்டு, நாம் இயல்பிலிருந்து விலகி விடுகின்றோம். படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அப்பாவியாய் இருந்து விட்டால் மகிழ்வாய் வாழ்வினைக் கடத்தி விடலாம். மகிழ்ச்சியாக வாழ்வது தான் வாழ்க்கையின் லட்சியம்னு நானு நெனைக்கிறேன். இதெ மிஞ்சி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்கலேன். சந்தோஷமாக் கேக்போமெ! (நல்லா கவனிங்க. சந்தோஷமா…)

நேத்து ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் தொடர்பான விழாவில் பேச எனக்கும் கையில் மைக் கிடைத்தது. 100 நபர்களை அடக்கிய கூட்டம் கொள்ளும் அளவிலான கோவில் தான். அதில் 80 வரையிலும் குழந்தைகள் மாணவர்கள் இப்படித்தான். நான் உடபட இன்னொரு பேராசிரியர், ஒரு விஞ்ஞானி இப்படி மூவர் பேசிட ஏற்பாடு. (அபதுல் கலாமுக்குபின்னர் சைண்டிஸ்ட் என்று அறிமுகம் செய்த போதே கைதட்டல் பறந்தது. என் கையில் சோதனை முயல்வாய் மைக் தரப்பட்டு களத்தில் இறக்கப்பட்டேன். அப்பாவியாய்…  அவர்களே, இவர்களே.. என்று ஹிந்தியில் தொடங்கி, பின்னர் அனைவருக்கும் ஜென்மாஷடமி வாழ்த்தும் சொல்லியாச்சி. யாரும் கேக்கிற மாதிரியே இல்லெ நம்ம பேச்செ.

வந்த கூட்டம் மொத்தமுமே, போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். இன்னும் கலந்து கொள்ள இருப்பவர்கள். அவர்களின் பெற்றோர். இவ்வளவு தான் என்பது அப்போது தான் உரைத்தது. யாரும் யாருடைய பேச்சையும் கேக்க வரவில்லை என்பது புரிஞ்சது. (எல்லாமே நமக்கு மட்டும் ஏன் லேட்டாவே புரியுது?) எல்லாருடைய கவனம் முழுதும் பரிசு யாருக்கு கிடைக்கும்? ஆளுக்காள் நம்க்கும் கிடைக்காதா? என்ற ஆவலில் இருப்பதும் புரிந்தது.

sara sara

நிலைமையை சீராக்க ”ஒரு கதை சொல்லட்டுமா?” என்று கேட்டேன். சட்டென்று “ஓ” என்று பதில் வந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதும், கல்லூரியில் படித்த போதும், இல்லெ இல்லெ.. இருந்த போதும், இது மாதிரியான கேள்விக்கு ”வேண்டாம்” என்று விரட்டி அடித்து எல்லாமும் கூட ஏனோ, தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு இஞ்ஜினியர் ஆறாவது மாடியில் உள்ளார். உதவியாளர் கீழ் தளத்தில் உள்ளார். அவரை அழைக்க வேண்டும். கதை சொல்ல ஆரம்பித்தேன். எப்படி கூப்பிட? சொல்லுங்களேன்… என்றேன். ”மைக் தான் கையில் இருக்கே” என்றும், ”மைபைல் என்னாச்சி?” என்றும் நம்மை உண்டு இல்லை என ஆக்கினாலும், கதையால் ஆடியன்ஸ் கட்டுக்குள் வந்தது அப்பாடா என்று ஆனது. இன்னொரு கதையும் சொல்லி அன்று முடித்தேன்

கல்லூரிப் பேராசிரியரே, ”எப்படியோ பசங்களை சமாளிச்சிப் பேசிட்டீங்க..” என்று சொன்னது மிகப் பெரிய பரிசாய்ப் பட்டது அந்த ஆசிரியர் தின நாளில். அமர்ந்தேன் அப்பாவியான முகத்தோடு. (இருக்கிற முகம் தானே இருக்கும். அதுக்காக கமல் மாதிரி மொகத்தெ மாத்திட்டு வர முடியுமா என்ன?).

”அடப்பாவி… அப்பாவி, பாமரன், சாமான்யன் இன்னும் எத்தனெ பேரு தான் இருக்கு?” அசரீரியாய் கேள்வி வந்தது.

திரும்பி யாரென்று பார்த்தால், அட… நம்ம டிகிரி தோஸ்த் கம்பர்.

”ஹாய்” என்று அப்படியே, ”ராமாயணத்திலெ இப்படி ஒரு அப்பாவி கேரக்டெர் உங்க பார்வையில் யாரு? சொல்லுங்களேன்” என்றேன்.

appavi kulandai

“நூத்துக்கணக்கான வருஷங்களா, பட்டிமன்றங்கள் நடத்தி விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுவும் இதில் ஒன்று. சத்ருக்கணன், ஊர்மிளா, மண்டோதரி, திரிசடை இப்படி பட்டியல் தொடரும்.” pபதில் சொல்லிட்டு பறந்தார் கம்பர். அப்பப்பொ நமக்கு இப்படி டிப்ஸ் சொல்லிட்டு மறைவது பழக்கம் தானே

பரதனைப் பத்தி யோசிச்சேன். பதவி தலைக்கு வந்தாலும் கூட வேண்டாம் என்று உதறியது. அப்புறம் தான் ஆளாமல் பாதகை வைத்தே ஆண்டது. 14 ஆண்டுக்குள் வரலைன்னா, தீக்குள் இறங்க முயன்றது… அப்பா..அப்பப்பா. யுத்த காண்டத்து மிட்சிப் படலத்தில் பரதனது அப்பாவித்தனம் காட்சி கம்பன் வரியில் பாக்கலாம்.

இராவணவதம் முடிந்து, அக்னிப்பிரவேஷம் முடிந்த பின்னர் திரும்புகின்றனர் மகிழ்வோடு. மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் பரதன் பற்றிய நினைவு கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாமோ. பதைத்துப் போகிறார் ராமர். நெட்வொர்க், இமெயில் எல்லாம் இல்லாத காலம். அனுமனிடம் தான் தூது சொல்லி அனுப்பப்படுகிறது. தூது சொல்ல தோதா ஒரு ஆளு கெடெச்சா எவ்வளவு சௌகரியமாப் போச்சி? பறந்து வருகிறார் பரதனிடம் தகவல் சொல்ல அனுமன். அப்பாவியாய், ”இம்புட்டு குட்டியூண்டு குரங்கு ஒதவி செஞ்சதா சொல்லுதே, இதெல்லாம் கேக்க நல்லாவா இருக்கு?” என்று நினைக்கிறார். (கம்பர் சொன்னாரா என்று கேட்க வேண்டாம்) இந்தப் பாட்டெப் படிச்சாப் புரிஞ்சிக்கலாம்.

ஈங்கு நின்று யாம் உனக்கிசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின் உவப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான்.

பரதன் நம்ப ஏதுவாய் தன் வடிவைப் பெரிதாக்கிக் காட்டுகின்றான் அனுமன். அப்புறம் பரதன் ஏதோ சொல்ல, அது அனுமன் காதுக்கு ஏறவில்லையாம். (அவ்வளவு உயரம் காரணமாய்) ஐயா கொஞ்சம் சிறு உடம்புக்கு வாங்க, காதுலெ வாங்க என பரதன் அழைத்ததாய் கம்பன் வரைந்ததை படிக்க நான் அழைக்கிறேன்.

என்ன இப்பொ நான் சொல்றது உங்க காதுலெ ஏறுதா?

தாலியை விட்டு…


thaali

அந்தமான் என்றவுடன் எல்லாருக்கும் ஒரு காலத்தில் ஜெயில் தான் ஞாபகம் வந்திட்டு இருந்திச்சு. ஆனா சமீக காலமா சுனாமி தான் ஞாபகத்துக்கு வருதாம். அந்தா இந்தான்னு அதான் 11 வருஷமும் ஆச்சி. ஆனால் புதுசா யாரும் வந்தா தவறாம கேக்கும் கேள்வி, “ ஆமா, சுனாமி சமயத்திலெ எங்கே இருந்தீங்க?” என்னமோ நமக்கும் ஏதோ காலா காலமா சுனாமியோட பழக்கம் இருக்கிற மாதிரி கேக்கிறாகளே, “நல்லா கேக்கிறாங்கப்பா கொஸ்டினு” என்று பதில் சொல்ல ஆரம்பிப்பேன். ஆனால் நடு ரோட்டில் படுத்ததை இன்னும் மறக்க முடியாது தான். வீடு ஆடிகிட்டே இருந்தா எங்கே சாமி படுக்க? அதான் இப்படி.

அந்தமானில் சுனாமியின் கோரத் தாண்டவம் அதிகம் இருந்தாலும், சமயம் சார்ந்த கோவில் மசூதி தேவலயம் இவை எல்லாம் அதிகம் சேதமடையாமல் தப்பித்துள்ளன். கோவில் அப்படியே இருக்க பக்கத்தில் இருந்த அரசு விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாமல் போன கதை எல்லாம் உண்டு. ஒரு சமயம் ஒரு கிருத்துவ தேவாலய திறப்பு விழாவில் பேசவும் கையில் மைக் வந்தது. (அப்பப்பொ இந்த மாதிரி கையில் மைக் வருவது தவிர்க்க இயலாத ஒன்று தான்). அப்போது ஒரு அரசுக் கட்டிடம் ஆரம்பித்து முடியாமல் இருந்தது. அதன் பின்னர் ஆரம்பித்த அந்த தேவலயம் திறப்பு விழா வரை வந்துவிட்டது. நான் பேசும் போது, அரசு வெறும் கோட் (CPWD Code) வைத்து வேலை செய்யும். ஆனால் நீங்கள் காட் (God) வைத்து கட்டியுள்ளீர்கள் என்றேன். இது அங்கு நன்கு எடுபட்டது.

cn temple

ஒரு வேளை கோவில் போன்றவை சுனாமியிடமிருந்து தப்பித்தமைக்கு நல்ல கட்டுமானமும் கடவுளின் அருளும் காரணமா? யோசித்தேன். சென்னை ஐ ஐ டி யிலிருந்து ஒரு பேராசிரியர் ஒரு சம்பவத்தினை சொன்னார். அதஒ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பெரிய அரசுக் கட்டிடம் கட்ட தயாராய் இருந்தது. கம்பிகள் எல்லாம் கட்டி ரெடி. சரி பாக்க வந்தார் ஜுனியர் எஞ்ஜினியர். எல்லாம் நல்லா தான் இருக்கு. ஊரிலிருந்து கம்பி எல்லாம் அந்தமான் வர்ரதுக்குள் தேஞ்சி போயிடுதே. அதனாலெ ஒவ்வொரு கம்பி எக்ஸ்ட்ரா போடுங்க என்றாராம். அப்படியே ஆனது. அடுத்து அசிஸ்டெட் எஞ்ஜினியர் வந்தார். எல்லாம் சை… இங்கே கிரானைட் அளவில் தரமான கல்லு கெடைக்காது. வேணும்னா ஒரு கம்பி கூட போடுங்களேன்.

images rod

அடுத்து எக்ஜிகூடிவ் எஞ்ஜினியர் முறை வந்தது. அவரும் மணலைக் காரணம் காட்டி ஒரு கம்பி கூடுதலாய்ச் சேர்த்தாராம். பின்னர் டெபுடி சீஃப் எஞ்ஜினியர் வருவதாய் தகவல் வந்ததாம். கட்டிடம் கட்டும் வேலையில் இருந்த சூபர்வைசர், தன்னோட சைக்கிளை வேகமாய் போய் மறைத்தாராம். டெபுடி சீஃப் வர்ரதுக்கும் சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கைவசம் ஒரு கம்பியும் இல்லை. ஒரு வேளை சைக்கிளைப் பாத்தா அந்த போக் கம்பி எல்லாம் புடிங்கி போடுங்க என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இப்படி சொல்லி முடித்தார் பேராசிரியர்.

”நாமளும் தான் அந்த பேராசிரியர் ரேஞ்சுக்கு சொல்லுமோலெ….” கம்பர் குரல் ஒலித்தது. நானும் தொடர்ந்தேன். “உலகப் பேராசிரியர்கள் ஒருவருக்கும் நீங்க கொறெஞ்சவர் இல்லெ… சங்கதியெ, ஒரு கோடா சொல்லுங்க..நானு ரோடே போட்டுடறேன்”

கம்பர் பதில், “சிவில் எஞ்ஜினியருக்கு கோடும் ரோடும் நல்லாவே போடத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். அனுமனை கட்டிப் போட்டாங்களே, அங்கே போய்த் தேடு… தேடியது கிடைக்கும்.” இப்படியாய் வந்தது.

இலங்கைக்கு ஓடிப்போய் பாத்தா…அடெ…சூப்பர் சமாச்சாரம் இருக்குதே.. வாங்க எல்லோருமா சேந்து ஒட்டுக்கா எட்டிப் பாப்போம்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்டபடி கட்டிப்பிடிடா என்று பாடாமல் அனுமனை கயிற்றால் கண்டப்டி கண்ணில் கண்ட கயிறு எல்லாம் வச்சிக் கட்டினாகளாம். அப்படி கட்டி முடிச்சி திரும்ப ஒரு எட்டு எட்டிப்பாத்தா இலங்கையில் ஊஞ்சலோட கயிறெல்லாம் காணவில்லையாம். தேரேட கயிறுகளும் காயப். குதிரை யானை இதெல்லாம் கட்ட கய்று மிஸ்ஸிங். அதான் அங்கே அனுமனை கட்ட எடுத்துட்டு போயிட்டாகளே.. அப்புறம் கண்ணுலெ கண்ட எல்லா கயித்தெயுமே எடுத்துக் கட்டப் போயிட்டாகளாம்…

சைக்கிள் கேப்லெ, நம்ம சைக்கிளை மறைச்ச மாதிரி இலங்கை மகளிர் எல்லாம் ஓடி ஒளிஞ்சாகளாம். தாலிக் கயிறைக் கையில் மறைச்சிட்டு. அதனாலெ அந்த தாலிக்கயிறு மட்டும் மிஞ்சி நின்னதாம்.

கயிறு கட்டாமெ மனசிலெ நிக்கும் அந்தப் பாட்டும் பாக்கலாமா?

மண்ணில்கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரியஏனையரை இகலின் பறித்த–  தமக்கு இயைந்த
பெண்ணிற்குஇசையும் மங்கலத்தில் பிணித்த கயிறேஇடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்;  தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக்
கொண்டு வந்த பாசங்களும்;  வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்;  எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் (ஆக);  தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த;  திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக்கட்டியி்ருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

”தாலியை வித்து….” என்று சொல்வதெத்தான் இது வரை கேட்டிருப்பீங்க. ”தாலியெ விட்டு….” கம்பன் சொல்லும் கதெ எப்படி கீது?

நாமளும் செய்வோம்லெ….


பழமொழி சொல்பவர்களை ‘பழமையான மனிதர்கள்’ என்று இன்றைய நவீன இளைஞர்கள் முகம் சுழித்து ஒதுக்குவதை கவனித்திருக்கிறீர்களா? இதே போல் தலைசீவுவது, பவுடர் போடுவது (பாடி ஸ்பிரே அடிப்பது இதில் அடங்காது), தலைக்கு எண்ணெய் வைப்பது, முழுக்கை சட்டை போடுவது இப்படி எல்லாமே இன்றைய இளைய தலைமுறைக்கு எட்டிக்காயாகத் தான் இருக்கின்றது. ஒரு காலத்தில் இளமைத் துள்ளலுக்கு இவை எல்லாம் அத்தியாவசியத் தேவையாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதில் பழமொழிக்கு பதிலா ‘புதுமொழி’ மட்டும் இந்த சந்தானம் புண்ணியத்தில் இப்போதும் இளைஞர்கள் வாயில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதே போல் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்; குடிகாரன் உண்மையைத் தான் உளறுவான் போன்றவை உண்மை என்றே நம்பப் படுகின்றன. திரைப் படப் பாடல்களில் குடிகாரர்கள் பாடும் பாட்டில் நல்ல நல்ல கருத்துள்ள பல வருவதைப் பாக்கலாம். “கிக்கு ஏறுதே” என்ற கொஞ்சம் பழைய பாட்டு தான். ரஜினி படத்தில் வரும் பாட்டு அது. ஒரே தத்துவ மழை தான் போங்கள். தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை. பிறப்பை தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை இல்லை. இப்படி ஒரு தத்துவம் கலந்த பாடல் கேட்டிருக்கலாம்.

தாய், தந்தை, பிறப்பு, இறப்பு மாதிரி நமக்கு கீழே வேலை செய்ய நல்ல எம்ப்ளாயீ கிடைப்பதும் இறைவன் தந்த வரம் லிஸ்டில் சேர்க்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று பலர் புலம்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் வேலை செய்வதற்கான என்ன திறமை இருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. கேட்டால், எது கொடுத்தாலும் செய்கிறேன் என்பார்கள். கொடுத்தால், என்னோட படிப்புக்கு இதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போவார்கள். இவர்களை எல்லாம் பேப்பர் போட்ட கலாம் கதைகளை எத்தனை முறை சொன்னாலும் மண்டையில் ஏறாது.

ரயில்வே ஸ்டேசனில் பிச்சை கேக்கும் ஒரு சிறுவனை தொழிலாளி ஆக்கும் காதாநாயகன் வேலை ஒரு படத்தில் வந்திருப்பதைப் பாத்திருப்பீங்க. பிச்சை கேக்கும் சிறுவனிடம் பணம் கொடுத்து குமுதம் கல்கி என வாங்கி விற்கும் வியாபாரியாக மாற்றும் நல்ல தரமான காட்சி அது. (அது கதாநாயகியைக் கவர செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் கூட). நாங்களும் செய்வோம்லே… என்று சொல்லும் அளவுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது எனக்கும்.

ஒரு வாலிபனும் வாலிபியும் ஆஃபீசுக்கு வந்தார்கள். கையில் தயாராய் வைத்திருந்த பயோடேட்டாவுடன் கூடிய ஃபைலும் தந்தார்கள். வேலை ஏதும் இருந்தால் கொடுங்கள் என்று வேண்டினர். அரசுத்துறையில் இப்படி எல்லாம் வேலை தருவது கிடையாது என்று ஒரு வார்த்தையில் சொல்லி அனுப்பி இருக்கலாம். நாமளும் கதாநாயகன் ஆக ஒரு சான்ஸாக இதெ பயன் படுத்திகிட்டோம். (கவனிக்கவும் பக்கத்திலெ எந்த கதாநாயகியும் கிடையாது) உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டேன். சாஃப்வேர் தெரியும் என்றார்கள். (நாம இருப்பதோ ஒரு சிவில் எஞ்ஜினியரிங் தொடர்பான துறை). அப்புறம் எப்படியோ, ஒரு சிக்கலான அரசுப் பிரச்சினையினைக் கொடுத்து, இதனை உங்கள் சாப்ட்வேர் அறிவு கொண்டு தீர்வு செய்து கொடுங்கள். உங்கள் லேப்டாப் வைத்து வேலை செய்யலாம். வேலைக்கு தக்க வருமானம் கிடைக்கும். இது மட்டும் நல்ல முறையில் செஞ்ஜிட்டீங்க, அப்புறம் பல ஆட்களுக்கு நீங்களே வேலை போட்டுத் தரலாம். என்ன தயாரா?

ஒரு நிமிடம் யோசித்தார். சரி என்றார். (நானே ஒரு ஹீரோ ஆன மாதிரி மனசுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது). ஒரு மணி நேரம் செலவு செய்து ஃப்ளோ சார்ட், நம்ம தேவைகள் இப்படி அவர்களுக்கு புரிய வைத்தேன். ஒரு வாரத்தில் வந்து சந்திப்பதாய் நம்பிக்கையோடு போனார்கள். போனவன் போனாண்டி தான். அந்த ஒரு வாரம் இன்னும் ஆகவே இல்லை. நாம ஒரு வேளை ரொம்ப அதிகமா எதிர்பாத்துட்டோமோ! ம்…ஹீரோ ஆகும் கனவு ஜீரோ வாட் பல்ப் மாதிரி ஆகிப் போச்சு.

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு கீழே வேலை செய்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா?  நாம என்ன நெனைக்கிறோமோ, அதெ மொகத்தெப் பாத்தே அடையாளம் கண்டுபிடிச்சி, அதெ ஜீரோ எர்ரர் மாதிரி எந்த தப்பும் இல்லாமெ, மனசாலெ ஒத்துப் போய் வேலை செய்யணும், அதுவும் நமக்கு வாய்த்த அடிமைகள் அம்புட்டு பேருமே அப்படி இருக்கணும். சர்ர்ர்ர்ர் என்று ஒரு சத்தம். பாத்தா அங்கே கம்பர்…

கம்பர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். என்ன கிமூ…. உனக்கு அப்படி ஊழியர்கள் கெடெச்சாங்களா?

நான்: வணக்கம் கம்பரே. நான் எங்கே கெடைசதுன்னேன்? கெடெச்சா நல்லா இருக்கும்.

கம்பர்: இந்த பரமக்குடிக்காரங்க கமல் மாதிரி பேசுறதெ நம்மாலெயே வெளக்கம் சொல்ல முடியாது. ஆனா நம்ம உருக்காட்டு படலம் படி. அப்பொ புரியும்.

கம்பர் மறைந்து போனார்.

உங்களையும் சுந்தர காண்டத்தின் உருக்காட்டு படலத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்…(ங்..ங்…என்ன நைஸா நழுவுறீங்க.. சந்தானம், அது இதுன்னு சொல்றப்பொ எல்லாம் இருந்தீக… இருங்க செத்த நேரம் தான்). சீதையிடம் அனுமன் சொல்கின்ற காட்சி. ராமன் ஒரு நிறுவனத்தின் தலைவர்ன்னு வச்சிக்குங்க. அனுமன் தான் ஜீ எம். தன்னோட எம்ப்ளாயீ வானரங்கள் பத்தி சீதையிடம் விளக்கும் இடம் அது.

ஒலகத்தையே கையிலெ எடுக்கும் திறமை (கொஞ்சம் ஓவரா பில்டப் இருக்கோ?) காலெ வச்சி ஒரு தம்பிடிச்சா கடலையே தாண்டுவாய்ங்க ஒவ்வொருத்தரும். நிமிந்து நின்னாலே வானமே வசப்படும் எம்ப்ளாயீ ஸ்ட்ரெந்த் 70 வெள்ளம். அடெ… அப்புறம் நான் எப்படி நெனெச்சேனோ அப்படியே அனுமனும் சொல்றாரே.. அட… அடடெ… ஒரு வேளை அந்தக் குரங்கு புத்தி கொஞ்சம் வந்திருக்குமோ?

வீட்டுக்கு வந்து விவரித்தேன். ”நான் நெனைகிற மாதிரி, நீங்களே இருக்க மாட்டேங்கிறீங்க… உங்களுக்கு இதெல்லாம் தேவையா?” இப்படி பாட்டு வந்தது. எதுக்கு வம்பு?. பேசாமெ கம்பர் பாட்டு போட்டு ஒதுங்கிக்கிடுவோம்.

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப வேலை தனித்தனி கடக்கும் தாள
குழுவின் உம் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி
வழுஇல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட.

எப்படி? உங்களுக்கும் இப்படி ஏதும் நெனெப்பு இருக்கா என்ன?

நீ யார்? நீ யார்? நீ யார்?


naan yaar

ஒரு காலத்தில் நான் யார்? நான் யார்? நான் யார்? என்று ஆரம்பிக்கும் பாட்டு வந்தது. அந்தப் பாட்டின் அடுத்த வரியிலேயே அதற்கான பதிலும் வந்துவிடும். நாலும் தெரிந்தவர் யார்? யார்? எல்லாம் தெரிந்த நபர் யாரும் இல்லை என்பதை ரொம்பவும் நாசூக்காய் சொல்லித் தந்த பாட்டுங்க அது. (பாட்டெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் எழுதிய காலம்…. ம்….. அதெல்லாம் அந்தக் காலமுங்க)

ஒரு கேள்வி கேட்டால், மற்றொரு கேள்வியே எப்படி பதிலாகும்? இப்படி எதிர் கேள்வி கேக்கீகளா? அது வேறெ ஒண்ணும் இல்லீங்க. கேள்விக்கு பதில் சரியா தெரியல்லேன்னு வச்சிக்கிங்க… அப்பொ இப்படி ஏதாவது சொல்லி சமாளிச்சே ஆகணும். இப்படித்தான், தெரிஞ்சோ தெரியாமலோ, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பயிற்சியாளன் ஆகி விட்டேன். (எல்லாருமா சேந்து ஆக்கிட்டாய்ங்க) எல்லா வகுப்பிலும் சொல்லும் அதே சங்கதியினை (கேள்வியையே கேள்விக்கான பதிலாக தரும் வித்தை) உங்களுக்கும் சொல்றேனே..

RTI in DD

2005ம் ஆண்டுக்கு முன்பு வரை (அதாவது இந்த ஆர் டி ஐ சட்டம் வராத வரை) ஒரு பொது ஜனம், ஏதாவது அரசு நிறுவனத்தில் சென்று, ஏதும் தகவல் கேள்வியாய் கேட்டால் என்ன பதில் வரும் தெரியுமா? ஒரு பதிலும் வராது என்பது தான் எல்லாருக்கும் தெரிந்த கதையாச்சே… அதுக்கும் மேலே நாலு பதில் கேள்வியும் வரும்… நல்லா ஞாபகப் படுத்திப் பாருங்க.. இதோ என் ஞாபகத்துக்கு வந்த பதில் கேள்விகள்:

  1. ஆமா… வக்கனையா இங்கே வந்து கேக்கறியெ, யாருய்யா நீ?
  2. இல்லெ, தெரியாமத்தான் கேக்கிறேன், இதெல்லாம் உனக்குத் தேவையா? எதுக்கு இப்படி எல்லாம் கேட்டு எங்க உயிரெ வாங்குறெ?
  3. நீ கேக்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றதுக்கா இந்தக் கவர்மெண்டு சம்பளம் குடுத்து என்னெயெ வேலைக்கு வச்சிருக்கு…?
  4. பதில் சொல்ல முடியாது. உன்னாலெ என்ன முடியுமோ செஞ்சிக்க.

இப்படித்தான் பெரும்பாலான இடங்களில் பதில் கெடைக்கும். ஒருவேளை இப்படிச் சொல்லிட்டு, நாக்கெப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டேன் என்று அவர்களும் சந்தோஷப் பட்டிருப்பாங்களோ?

எது எப்படி இருந்தாலும் நாம் செய்யும் உரையாடல்கள் ஏதோ ஒரு வகையில் கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுவாக இருக்க வேண்டும். அது பொய்யாகக் கூட இருக்கலாம். உதாரணமாய் ஒரு ஆஸ்பத்திருக்கே போறீங்க. நோயாளிக்கு நம்பிக்கை தரும் விதமா நாலு வார்த்தை சொல்லாட்டி, நீங்க அங்கே போயும் என்ன பிரயோஜனம்? அய்யய்ய இங்கே ஏன் அட்மிட் ஆனீங்க. பத்துக்கு ஒன்பது பேர் பொழெக்க மாட்டாகளே? இப்படிச் சொன்னா நோயாளி என்னத்துக்கு ஆவார்? (ஒரு வேளை போறதே அந்த நோயாளியெ மேலே அனுப்புறதுக்கா இருக்குமோ?)

கம்பர் உதயமானார்.. என்ன ஆச்சி? என்னெக் கழட்டி விட்ட மாதிரி தெரியுதே?

அதெல்லாம் இல்லெ சுவாமி. மோடி சர்க்காரில் கொஞ்சம் வேலைப் பளு அதிகம் அதான்…. சரி….. உங்க கிட்டெ ஏதும் சங்கதி இருக்கா?

அடெப் பாமரனே… நீ யார்? இப்படி யாராவது கேட்டா, நீ ரெண்டு நிமிஷத்திலெ சொல்லிடுவே. ஆனா அதுலெ யாருக்கும் ஒரு புண்ணியமும் இருக்காது. சொல்ற பதில் கேக்கிற ஆளுக்கு நம்பிக்கை தரணும். அனுமன் சீதைகிட்டெ விசிட்டிங்கார்ட் கொடுக்காமெ அறிமுகம் செஞ்ச இடம் படிச்சிப் பாரு. உனக்கே புரியும்.

கம்பர் டிப்ஸ் கொடுத்துட்டு மறைஞ்சிட்டார். நானும் வழக்கம் போல் தேடிப் பாத்தேன்.. அடெ..ஆமா… சீதையம்மா விரக்தியின் உச்சியில் உயிரை மாய்த்துக் கொள்ள அசோக வனத்தில் தயாராகும் இடம். அனுமன் முன் சென்று காட்சி தொடர்கிறது. சோகம் ஒரு பக்கம். பயம் மறுபக்கம். ஒரு வேளை இராவணனே குரங்கு வடிவில் வந்திருப்பானோ? சந்தேகமும் சேர்ந்து குழப்பும் இடம். சீதை கேட்ட கேள்வி தான் இந்தப் பதிவின் தலைப்பான ”நீ யார்?”

Hanuman meet sita

இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் என்னெய மாதிரி அல்பமான ஆட்களுக்கு கெடெச்சா என்னோட சிவி பயோடேட்டா ரெஸுமி இப்படி என்னென்ன பேர்லே என்னவெல்லாம் தரமுடியுமோ எல்லாம் தந்திருப்பேன். இதனாலெ என் விபரம் கேட்டவர்களுக்குத் தெரியும். அவ்வளவு தான். ஆனால் அனுமன் நிலை முற்றிலும் வேறு. சீதையின் முகத்தில் இருக்கும் கவலை ரேகையினை களைய வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ஏற்கனவே எல் கே ஜி பரீட்சை எழுதும் போதே டாக்டரேட் வாங்கியது போல் சொல்லின் செல்வன் பட்டம் வேறு வாங்கியாச்சி. சாதாரணமா பதில் சொல்லிட முடியுமா என்ன?

அனுமன் மூலமா கம்பர் சீதையின் மனக் குழப்பத்தை தீர்க்க உதவுகின்றார்.

தாயே, இராமபிரான் உங்களைப் பிரிந்த பின்னர் ஒரு தோஸ்த் புடிச்சார். சூரியனோட புள்ளெ. குரங்குக் கூட்டத்துக் கெல்லாம் தலைவன். குற்றமே இல்லாதவன். பேரு சுக்ரீவன். (நீ யாருன்னு கேட்டா உன்னோட ஆர்கனைசேஸன் பத்திச் சொல்றியேன்னு கோபம் வரலை சீதையம்மாவுக்கு. குற்றம் சில செய்திருந்தாலும் சுக்ரீவனைப் போட்டுக் குடுக்கலையே அனுமன்; நோட் பண்ணுங்கப்பா… நோட் பண்ணுங்கப்பா..)

தொடர்கிறார் அனுமன்: அந்த சுக்ரீவனுக்கு ஒரு வலிமையான அண்ணா வாலி. தன்னோட வாலில் இராவணனை கட்டி சுத்தி சுத்தி அடிச்சவர். (நிச்சயம் சீதை முகத்தில் சந்தோஷம் வந்திருக்க வேண்டும்) தேவர்கள் பாற்கடலைக் கடையும் போது லஞ்ச் பிரேக்கில் இந்த ஒத்தெ வாலி எல்லா வேலையும் பாத்தாரு. அம்புட்டு வலிமை. (வாவ்… மனதிற்குள் சீதை நினைத்திருக்க வேண்டும்)

அன்னையே, அம்புட்டு வலிமையான வாலியை உங்கள் அரசன் ஒரே அம்பில் போட்டுத் தள்ளிட்டார். (கவனிக்கவும்… இங்கேயும் மறெஞ்சி அம்பு விட்ட சங்கதி மிஸ்ஸிங். எதெ எங்கே எப்படி சொல்லனும்… கத்துகிடுங்க மக்களே) வாலியெத் தூக்கிட்டு, சுக்ரீவனை அரசனாக்கினார். அந்த அவைச்சரவையில் ஒருவன் நான். வாயு புத்திரன். என் பெயர் அனுமன்.

எப்படி இருக்கு அறிமுகம்? தான் யார் என்ற செய்தி சீதைக்கு தெரிவிப்பதை விட சீதையின் கலக்கத்தை முற்றிலுமாய் போக்க முழு முயற்சி எடுக்கும் கம்பரின் சொல்வித்தை பாத்தீங்களா?

முணு பாட்டா இருக்கும் கம்பரின் கவியில் ஒரு பாடல் இதோ

அன்னவன் தன்னைஉம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி
பின்னவர்க்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான் எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின்
நல் நெடுங் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன்.

இனி மேல் ஆறுதல் சொல்ல நினைக்கும் சம்யங்களில் ஆயிரம் முறை கம்பனை நினையுங்கள்.. கொஞ்சம் இருங்க… ஒருத்தருக்கு ஆறுதல் சொல்லிட்டு வாரேன்…

உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்…


images 1

நம்ம வாழ்க்கையில் ஏன் தினமும் ஏதாவது பிரச்சினைகள் வந்திட்டே இருக்கு? இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா? இப்படி வடிவேல் டயலாக் போல் புலம்புவர் பலர் இருப்பார்கள். [இப்படி எல்லாரும் இல்லையே என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் மனதுக்குள்ளாவது இப்படி புலம்பிக் கொண்டிருப்பார்கள். அம்புட்டு தான் வித்தியாசம்) இதுக்கு ஆதாரமான காரணம் தேடினா, நாம பிறந்ததே ஒரு பிரச்சினையின் முடிவில் தான். ஆயிரக்கணக்கான விந்துக்கள் போராடி, ஒன்று மட்டும் ஜெயிச்சி அதனால உருவான நாம,…. நமக்கு ஒரு சிக்கலும் இல்லாமெ கெடைக்கனும், நாம அக்கடான்னு கெடெக்கணும்னா என்ன வெளெயாட்டா?

அப்பொ அந்த ஒரு விந்து மட்டும் சவால் விட்டு (அல்லது விடாமலோ) முட்டி மோதி ஜெயிச்சி, நாமளா மாற வச்சிடுச்சி. அப்பொ நாம மட்டும் சவால் வந்தா ஏன் தொங்கிப்போகணும்? சவாலே சமாளி.. இது ஒரு ஆதி காலத்துப் பாடல். சவால்கள் வரத்தான் செய்யும் அதனைச் சமாளிக்க வேணும் என்று பால பாடம் நடத்திய பாடல் அது. இப்பொ வரும் பாடல்களான தண்டாமாரி ஊதிரி பீச்சிகினே நீ நாறி பாடலில் இப்படி ஏதாவது மெஸேஜ் இருந்தா கொஞ்சம் ஒரு வார்த்தெ எழுதுங்களேன்.

பொதுவான பலர் செய்யாத ஒன்றினை, சிலர் மட்டும் செய்யத் துணிவது தான் சவால்களின் ஆதாரம். அந்தமானில் சமீபத்தில் அந்தமானில் தமிழக் சாதனையாளர்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அரையடி நீளமுள்ள இரண்டு ஆணிகளை மூக்கினுள் செலுத்திக் கொண்டு பந்து விளையாட்டு காட்டினார் ஒரு தமிழக சாதனையாளர். பார்ப்போர் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டது தான் நடந்தது. நான் பார்வையாளர்களின் ரியாக்சன் பாத்துக் கொண்டிருந்ததால் தப்பித்தேன்.

நம்மால் இதெல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவது தானே இதன் உள் அர்த்தம்? [நாம இப்படி காமா ஸோமா என்று எதையாவது எழுதிட்டு, அப்புறம் நைஸா கம்பரைக் கொண்டு வருவதும் ஒரு வகையில் சவாலில் தான் சேத்தி என்று நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீக?]

images 2

பெரும்பாலும் சவால்கள் டிசப்பர் மாதம் 31ம் தேதி இரவு 12 மணிக்கு உதயமாகும். இனி இதை செய்வதற்கும், இதனைச் செய்யாததுக்குமான சவால்கள் பிறக்கும் தினம் அது. அது நடைமுறைக்கு வந்ததா என்று உறுதியாய் அடுத்த ஆண்டு தெரிந்துவிடும். அடுத்த ஆண்டும் அதே சவால் தொடர்ந்தால், அந்தச் சவால் அம்பேல் என்று புரிஞ்சிக்கலாம். பல நபர்களுக்கு மத்தியில் வீசப்படும் சவாலுக்கு பவர் அதிகம். செய்து காட்டினால் பெருமையாய் அவர்கள் முன் வலம் வரலாம். தவறிட்டா அவங்க்க கிட்டெ நல்லா வாங்கிக் கட்டிக்கணும்.

இதெல்லாம் தேவையா? என்று பலர் தனக்குள் சவால் விட்டுக் கொள்கின்றனர். சொல்லப்போனா, பகிரங்க சவால்களை விட இந்த தனி நபர் சவால்கள் தான் வெற்றி பெறுகின்றன. அல்லது வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இப்படி மனதுக்குள் சவால் விட்டவர்கள் தான். ஆனால் சவால் விட்டதில் ஜெயித்தும் அதற்கான சன்மானம் கிடைக்கவில்லையெனில் மானமே போன மாதிரி இருக்கும்.

images 3

இப்படித்தாங்க 1980களில் வைதேகி காத்திருந்தாள் படம் வெளிவந்த சமயம்.  அதில் ‘ராசாத்தி ஒன்னெ காணாதெ நெஞ்சு’ பாடல் வருமே, அதை பாடமுடியுமா என ஒரு சவால் வந்தது. 5 ரூபாய் பந்தயமும் ஒப்புதல் ஆனது.  ரொம்ப கஷ்டப்பட்டு, பாட்டுப் புத்தகம் எல்லாம் வாங்கி, பாடி முடித்தேன். 5 ரூபாய தர வேண்டிய நண்பரோ, இது அவ்வளவு சிரமமான பாட்டு இல்லை போலிருக்கு என்று ஜகா வாங்கிட்டார். (அவரு இப்பொ ஃபேஸ்புக்கில் இருக்கார். இதெப் படிச்சிட்டு அந்த அஞ்ச்சி ரூபாயெ வட்டியோட தருவாரா? பாக்கலாம்).

download4
பழைய கால கருப்பு வெள்ளை திரைப்படங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் சவால் விட்டு, பாக்கலாமா? சவாலா? என்று சொல்லி இடைவேளை விடுவார்கள். கையில் முறுக்கு அல்லது குச்சி ஐஸ் வைத்து மக்கள் சவால் பத்தி பேசுவதை வேடிக்கை பாப்போம். பேச்சு சுவாரஸ்யத்தில் சிலசமயம் ஐஸ் கூட கீழே விழுந்திருக்கும். அவர்கள் சொன்னபடியே கதை வந்திருந்தால் அவர்கள் நடையே வேறு மாதிரி இருக்கும்.

20150517_205718-1 (2)

சமீபத்தில் முனைவர் குறிஞ்சி வேந்தன் அந்தமான் வந்தபோது இப்படி சவால் விடும் சம்பவம் நடந்தது. ரொம்ப சீரியஸா என்னமோ ஏதோன்னு நெனெச்சிட வேண்டாம். [நாம சந்தானம் மாதிரி.. நமக்கு அந்த சீரியஸ் சுட்டுப் போட்டாலும் வராது] அவருடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தோம். அவரின் சிறு மகள் சித்ரபாரதி [என்ன ஒரு அழகான தமிழ்ப்பெயர்? இன்னொரு மகள் பெயர் திருப்பாவை] டேபிளில் வைத்திருக்கும் ஃபோர்க் கரண்டி வைத்து சண்டைக்கு அழைத்தாள். விடுவோமா என்ன? நானும் கரண்டியை எடுத்து மல்லுக்கு நின்றேன். [இதுக்குப் பேர் தான் உங்க ஊரிலெ சண்டையா? என்று யாரும் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம்]

வழக்கமாய் நான் தான் தோற்றேன். [குழந்தைக்காய் விட்டுக் கொடுத்தேன்] சவாலில் ஜெயித்த சந்தோஷத்தில் எனது கரண்டியை சூறையாடினாள். யாரும் எதிர் பாக்காத வகையில் தன்னுடைய கரண்டியை எனக்குத் தந்து விட்டாள். [புள்ளையெ ரொம்ப நல்லாவே வளத்துருக்காங்க்க இல்லெ!!) விவேக் ஒரு படத்தில் நாங்கள்ல்லாம் இந்த மாதிரி எத்தனை படத்தில் பாத்திருக்கோம்னு சொல்ற மாதிரி, நாமும் தான் இப்படி எழுதி இருக்கோமே என்று கம்பரிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. தொடர்ந்து பாடல் வரிகளும் தந்தார் கம்பர்.

images5

அசோக வனத்தில் சோகமே உருவாய் சீதை அமர்ந்த போது ஆறுதல் சொல்லும் முகமாய் ஒரு மாதத்தில் வருவதாய் சொல்கிறார் அனுமன். இல்லை இல்லை..சவால் விடுகிறார். அப்படி வரவில்லையென்றால், என் பேரை மாத்திக்கிறேங்கிற வெட்டி வீரப்பு எல்லாம் இல்லெ. பெரிய சவாலா சொல்றார். அந்த இராவணனையே இராமன் ஆக்கி விடுவாராமாம். சீதைப்பிராட்டிக்கு இராமன் தானே வேணும்? ஒரு ஃப்ளோவில் சொல்லிட்டார் கம்பர். அப்புறம் தான் யோசிக்கிறார். ஐயயோ, இந்த அவதார நோக்கமே, இராவணன் வதம் தானே? இராவணனே இல்லாட்டி ஏது வதம்? இப்படி யோசிச்சி அப்படியே ஒரு அடுத்த பிட் போட்றார் நம்ம கம்பர். இராமனை இராவணன் ஆக்கிடுவேன் என்று. நாம் ஹோட்டலில் வெளையாடின சின்னப் புள்ளைத்தனமான வெளையாட்டா இல்லெ?

இதோ அந்த சின்னப்புள்ளெத் தனமான பாட்டு:

குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு அரு நெடுஞ்ச் சிறை மீட்கிலான் எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன்.

குரா பூக்கள் வாடகை தராமல் குடி இருக்க வைத்திருக்கும் கூந்தலை உடையவேளே (சீதை அன்னையே)! நீ குறிப்பிட்ட ஒரு மாதத்தில்  சிறையிலிருந்து மீட்காவிட்டால் பரவி வரும் பழியும் பாவமும்  தொடர்வதற்க்கு அந்த இராவணனை இராமன் ஆக்கிடுவேன். அப்படியே இராமனை இராவணன் ஆக்கிடுவானாம் அனுமன். இது எப்படி இருக்கு? ரொம்ப சின்னப்புள்ளெத்தனமா இல்லெ?

தொடர்ந்து இன்னும் பார்ப்போம்….

நம்பிக்கை… ரொம்ப முக்கியம்…


கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.

இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…

Exam suicide

வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?

vaaz winaiththaal vaazalaam

தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]

நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.

ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று  பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)

சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.

Suki sivam
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..

இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..

கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)

வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…

வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி

மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…

ஒரு அடிமை சிக்கிட்டான்யா…


valluvar

ஒரு வேலையெ ஒரு ஆளுகிட்டெ குடுக்கிறதுக்கு முன்னாடி, அவனாலெ அதெ செய்ய முடியுமான்னு பத்து தடவெ பலவிதமா பாத்து யோசிச்சி அப்புறமா அவன் கிட்டெ கொடுத்து வேலெ வாங்கனும். இது ஐயன் வள்ளுவன் சொன்னதுங்க. இதெத்தான் Resource Allocation  அது இதுன்னு ஏகமா பக்கம் பக்கமா எழுதி இருக்காய்ங்க. ஆனா நம்ம ஐயன் வள்ளுவன் ரெண்டே வரியிலெ நச்சுன்னு சொல்லிட்டார். வள்ளுவரை இந்தியா முழுதும் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு நம்ம அப்துல் கலாம் ஐயாவையே சேரும். அவர் தனது பதவி ஏற்பு விழாவில் குறள் ஒன்றினை தமிழில் கூறி அதன் பொருளை வழக்கமான ஆங்கிலத்தில் கூறியது நினைவில் இருக்கலாம் பலருக்கு. அந்தமான் தீவின் கல்வித்துறை இயக்குனர் கூட (வட இந்தியர் தான்), யார் அந்த வள்ளுவர்? நம்ம கலாம்ஜீ அடிக்கடி சொல்றாரே என்று விசாரித்தார். பொறுப்பாய் குறளின் ஆங்கில வடிவத்தினை அவரிடம் சேர்த்தோம். (ஏதோ நம்மால் முடிந்தது).

சமீப காலமாய் அந்த வேலையை உத்தராகண்ட் எம் பி திரு தருண்விஜய் அவர்கள் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் அந்தமான் வந்திருந்தார். அவரது வருகையினை அறிந்து, அந்தமான் நண்பர் காளிதாசன் அவர்கள் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார். வாய் மொழி செய்தி பரவி 25க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கூடி விட்டனர் அவர் தங்கியிருந்த இடத்தின் வரவேற்பரையில். சரளமாய் அவர் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தேங்க்ஸ் என்று கேட்டு கேட்டு பழகிய நம் காதுக்கு ”நன்றி” ”நன்றி” என்று அவரிடமிருந்து கேட்பது கூட வித்தியாசமாய்த்தான் தெரிந்தது.

Tarun

குறள் தெரியாத அந்தமான், முழுமை பெறாது என்கிறார். அது போல் வட இந்தியாவில் குறள் அறிமுகம் இல்லாவிடில், அதுவும் முழுமை ஆகாது என்கின்றார் தருண்விஜய். அது சரி…. இம்புட்டு பிரியம் திருவள்ளுவர் மேலே எப்புடி வந்திச்சி? என்று கேட்டேன். ஒரு வேளை முன் ஜென்மத்தில் நான் தமிழனாய் இருந்திருப்பேன் என்று பதிலாய் சொன்னார். எப்படியோ, தமிழின் பெருமையினை பெருக்கிட தமிழர் அல்லாதவர் பலர் முன்னோடியாய் இருந்திருக்க,  இப்பொ இவர் கோடு போட்டு, ரோடும் போடுகின்றார். நாம ஜாலியா அதில் பயணிக்க வலிக்கவா செய்யும்?

சமீபத்தில் மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார் அந்தமானுக்கு.. அவருடைய பையன் படிக்கும் பள்ளியில் இருந்து ஆசிரியர் அழைத்தாராம். அப்பா அம்மா ஆசிரியர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இருபது அம்ச திட்டம் தந்து அட்வைஸ் மழை பொழிந்தாராம். கடைசியில் தான் அந்த அட்வைஸ் காப்பிரைட் உரிமையாளர் திருவள்ளுவர் என்றாராம் அந்த மராட்டிய ஆசிரியை. அவர் கணவர் பாண்டிச்சேரியில் வேலை பார்க்கும் போது கத்துகிட்டது என்றாராம். [ஆனா நம்ம மக்கள் பாண்டிச்சேரிக்கு போகும் காரணமே வேறெ…]

மறுபடியும் அந்த வேலையினை பாத்துத் தரும், குறளுக்கே வருவோம். கார்பரேட் கலாசாரத்தில் யார் ஒரு வேலையை திறம்படச் செய்ராகளோ, அவர்கள் தலையில் அந்த வேலையெக் கட்டியிரணும். அரசுத்துறை கொஞ்சம் விசித்திரமானது. வேலையெச் செய்யும் ஆளுங்க கிட்டெ வேலையெக் கொடு. மத்தவனுக்கு சம்பளத்தெக் கொடு. இது அரசிதழில் எழுதப் படாத (அ)தர்மம். புதிய டெக்னாலஜியினை கற்பதற்க்கு அரசு ஊழியர்களின் தயக்கம் இருக்கும். காரணம், தெரிந்து கொண்டால் தலையில் வேலையெக் கட்டிடிவாகளேங்கிற பயம் கூடவே இருக்கும். தெரியலை என்றால், தெரியாது என்று தப்பிச்சிரலாம்லெ…

ஆனா சமீபத்திய மோடிஜீயின் அரசு அதுக்கும் ஆப்பு வைத்து விட்டது. தெரியாத விஷயத்தெக் தெரிஞ்சிக்கிங்கொ என்று அறிவுரை வழங்கியுள்ளது. வாராவாரம் புதன் கிழமை 10 முதல் 11 மணிவரை தெரிந்தவங்க தெரிஞ்ச விசயத்தெ தெரியாதவங்களுக்கு (தெரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கும் சேத்துதான்) சொல்லித் தர உத்திரவு வந்திருக்கு. மத்த எடத்திலெ நடக்குதோ இல்லையோ, அந்தமானில் அந்த வேலை அடியேன் மேற்பார்வையில் (நான் இருக்கும் துறையில்) தொடர்ந்து நடக்குது.

10527311_729670610453353_8831568050053572345_n

ஆனா, ஒரே ஆளுகிட்டெ ஓவர் லோடா வேலையெக் கொடுக்கிறது நல்லதா? கெட்டதா? இந்த மாதிரி டவுட்டு எல்லாம் வந்தா நேரா கம்பர் கிட்டெ போய்க் கேட்டா போதும். அவரு சூப்பரா பதில் சொல்லிடுவாரு. நீங்களும் வாங்க ஒட்டுக் கேளுங்க நாம பேசுறதெ. (ஒட்டுக் கேக்கிறதும் ஓட்டுக் கேக்கிறதும் தான் நம்ம தேசிய குணமாச்சே..)

கம்பரே…… எனக்கு ஒரு டவுட்டு…

கம்பர் கேள்வியினை கேக்கும்முன்னர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஆளு மேலெ வேலையெத் தலையி்ல் கட்டுறதிலெ ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு அவரோட டென்ஷன் ஏறுது. அடுத்து, அந்த துறையிலெ இந்த ஆளை விட்டா வேற ஆளே இல்லைங்கிற ஒரு கெட்ட இமேஜ் உருவாக்கும். இது ரொம்ப மோசமான இமேஜ். இதெ தவிர்க்கும் வேலையிலெ மும்முரமா இருக்கனும். அதுக்கு பிளான் B பிளான் C தயாரா வச்சிருக்கிற மாதிரி அடுத்தடுத்த ஆளுகளெ தயாரா வச்சிருக்கனும்.

கம்பரே… கேக்கிறேன்னு கோவிச்சுக்கக் கூடாது. வக்கனையா இவ்வளவு பேசுற நீங்க அதெ ஃபாலோ செஞ்சிருக்கீங்களா?

தெரியும் கிட்டப்பா…இப்படி கேப்பேன்னு. நம்ப ராமாயணத்திலேயும் இந்த மாதிரி ஒரு சீனு வருது. அங்கதன் தூதுப் படலம் போய் தேடு கிடைக்கும்.

தேடினேன். கிடைத்தது. இராவணனுடன் யுத்தம் துவங்கும் முன்னர் இன்னொரு முறை தூதுவர் ஒருவரை அனுப்பலாமே என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கிறார்கள். யாரை அனுப்பலாம்? நாமளா இருந்தா என்ன செய்வோம்? பழைய ஃபைல் தேடிப் பாத்து, ஏற்கனவே இந்த வேலையெ அனுமன் பாத்திருக்கான். அவன் தலையிலெ கட்டு என்போம். ஆனா கம்பன் மேன் மேனேஜ்மெண்ட் வேறு மாதிரி. அனுமனை அனுப்பினா, வேற ஆளு இல்லையோங்கிற கெட்ட இமேஜ் வந்திடும். அதனாலெ இப்பொ அங்கதனை அனுப்பலாம் என்று முடிவு செஞ்சாகலாம்.

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏகத்தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

கம்பரோட ஃப்ரீ யோசனை நீங்களும் கடைபிடிக்கலாமே. ஃப்ரீயா கெடெச்சா நாம ஃப்னாயில் கூட குடிப்போமெ. இதெச் செய்ய மாட்டோமா?

அப்புறம் ஏதாவது ஃப்ரீ ப்ளானோட வாரென்…