இன்றைய சூழலில் அகநானூறு


[சிட்னி (ஆஸ்திரேலியா) சங்கத்தமிழ் மாநாடு 2014 மலரில் வெளியான எனது கட்டுரை இது… சும்மா எத்தனை நாள் தான் கலாய்ச்சியே எழுதுவீங்க? ஏதாவது நல்ல தமிழிலும் எழுதப்படாதா? என்று என் மீது (ரொம்ப அதிகமாகவே) நம்பிக்கை வைத்து கேட்ட ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்களுக்கு நன்றி…நானும் நல்ல தமிழில் எழுத முயற்சி செய்துள்ளேன்…இதோ உங்கள் பார்வைக்கு…]

Capture 3

சங்கத் தமிழ் என்ற தேடலுக்குள் செல்லாமல், சமீப காலத்திய காப்பியமான கம்பராமாயணத்தை இக்காலத்தோடு பொருத்திப் பார்க்கும் வேலையினை செய்து கொண்டிருந்தேன். சிட்னியின் சங்கத்தமிழ் மாநாட்டை ஒட்டி, சங்கத் தமிழின் பக்கம் ஒரு கழுகுப் பார்வை பார்த்திட வாய்ப்பு வாய்த்தது. அகநானூறு பாடல்களை வைத்து கட்டுரை வடிக்க எண்ணம். (அந்தமான் தீவில், கைக்கு எட்டிய நூல் என்ற காரணம் தவிர வேறு ஏதும் யாமறியேன்). காலத்தை மிஞ்சி நிற்கும் கவிகளின் தொகுப்பாம், சங்கத்தமிழ் வகைப்படுத்தித் தந்த அகநானுறுப் பாடலகளை இன்றைய சூழலுக்கும் பொருத்திப் பார்க்கும் முயல்வு தான் இக்கட்டுரை. என்றோ, யாரோ எழுதி வைத்த பாடல்கள் இன்றைய நவீன கணிய உலகில் எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி, இயற்கையாகவே எழும். அகநானூறு பாடல்களின் உள்ளே எங்கும் புகாமல், அவைகள் தொகுக்கப் பெற்ற முறையினைப் பார்க்கும் போதே, இன்றைய நவீன யுகத்திற்கு தொடர்பு உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

images 1

அறிவியல் வளர்ச்சியினைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தாவரங்கள், விலங்கினங்கள், கணிமங்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதின் மூலம் அதன் தொடர்பினையும் தெரிந்து கொள்ள ஏதுவாய் தொகுப்பு செய்யும் பணி நடைபெறும். இப்படி முயன்றதின் மூலமாகத்தான் அறிவியல் நமக்கு அதிகமாய், பெயரிடல் முறையும் பட்டியலிடும் கலையுமாய் தந்துள்ளது இவ்வுலகிற்கு. இத்தகைய தொகுப்பின் மூலமாய்த்தான் விலங்குகலுக்கு பெயரிடுவதும், தாவரங்களுக்கு அறிவியல் பெயர் சூட்டலும் நடைபெறுகின்றது. வேதியியல் பயன்பாட்டில் இருக்கும் கணிம அட்டவணையும் இந்த தொகுக்கும் அறிவியலில் அடங்கும். இவை எல்லாம் இக்கால அறிவியல் முன்னேற்றம் என்று நினைப்போம். இதற்க்கு சற்றும் முறைவான தரம் என்று சொல்ல இயலாதவாறு அகநானூறு பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன சங்க காலத்திலேயே என்பது வியப்பின் உச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

பெயருக்கு ஏற்றபடியே, அகம் தொடர்பாய் மொத்தம் நானூறு பாடல்கள்.. (நானூறு பாடல்களின் தொகுப்பு என்பதாலேயே அதன் பெயரும் இப்படி) அந்த பாடல்கள் எல்லாமுமே ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப் பட்டுள்ளன. பண்டைய தமிழக நிலங்களை ஐந்தாக பிரித்து அதற்கு குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று பெயரும் இட்ட சேதி தான் நாம் அனைவரும் அறிந்த்து தானே? எல்லாப் பாடல்களிலும் ஏதோ ஒரு நிலம் நிச்சயமாய் சம்பந்தப் பட்டு தானே இருக்கும்? அந்த்த் தொடர்பினை வைத்து பாடல்களின் தொகுப்பு நிகழ்ந்துள்ளது. கணிய அறிவியலில் உயிர்நாடியான ஒழுகுபடம் (ஃப்ளோ சார்ட்) மூலம் இதனை நாம் உற்று நோக்கலாம்.

Capture 2

சங்ககாலத் தமிழனின் அறிவியல் பூர்வமான சிந்தனை வடிவாக்கத்தில் அகநானூறுப் பா பாடல்கள் தொகுத்துள்ளனர் என்கின்ற உண்மையினை இந்தச் சிட்னி சங்கத்தமிழ் மாநாட்டில் பதிவு செய்திட விழைகின்றேன். இதோ இதற்கு சான்று சொல்லும் சங்க காலத்துப் பாடல்:

ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

anbu jeya

இனி சற்றே ஓரிரு பாடலை உள் நோக்கி, படித்து இன்புற அகத்தின் உள் செல்வோம். இந்தியத் துணைக்கண்டத்தின் தீவுகளாம் அந்தமான் நெய்தல் நிலத்தினின்று பல வருடங்கள் வாழ்ந்து வரும் காரணத்தால் நெய்தல் நிலப் பாடல்கள் சில்வற்றை நோக்குங்கால், அன்றைய தமிழரின் அறிவியல் பார்வையும் உடன் தெரிய வந்தது. கடல் மட்டம் ஏறி இறங்கும் இயற்கை நியதியினை அன்றே தெரிந்து சொன்ன, அகப்பாடல் வரிகள் சொல்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலையினை தோழி விவரிக்கும் போது,கடலின் இயற்கையான சூழலான அலைகளோ, ஏறி இறங்கும் ஓத மாற்றங்களோ (டைட்) இல்லாமல் இருந்தன என்பதை சேந்தன் கண்ணனார் “ எறிதிரை ஓதம் தரல் ஆனதே” என்று குறிப்பிடுகின்றார். [பாடல் எண் – 250; நெய்தல் நிலப்பாடல் என்று சொல்லவும் வேண்டுமோ?]

நக்கீரணார் பாடிய இன்னொரு பாடலின் மூலம் வடநாட்டவருடன் வியாபாரத் தொடர்புகள் இருந்த செய்தியும் தெரியவருகின்றது. அப்போதே பிடித்த மீனுக்கு பண்டமாற்றாய் கிடைத்த வெண்ணெய் என்ற செய்தியும் கூடவே வருகின்றது. அந்த நெல்லின் மாவினைத் தயிரிட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை தந்ததாய் தகவல் சொல்கின்றது. அப்படியே மணம் பொருந்திய சாந்து உண்டாக்கும் வித்தை சொல்ல வந்த நக்கீரணாரோ, வடநாட்டினரிடமிருந்து வாங்கிய வட்டக்கல்லிலே அரைத்த சேதியும் சொல்கின்றது.

“….வடவர் தந்த வான் கேழ் வட்டம்; குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய; வண்டிமிர் நற்சாந்து அணிகுவம்- திண்திமில்…” இப்படிச் செல்கின்றது அந்த அகநானூற்றுப் பாடல், அகநானூற்றுப் பாடல்கள் இன்றைய சூழலில் ஏற்றவையாக, அறிவியல் மற்றும் வரலாற்றுக் கோப்புகளின் பெட்டகமாய் விளங்குகின்றது என்பது தான் இக்கட்டுரை மூலம் சொல்லவந்த கருத்து.

அஞ்சலிக் கவிதை


boat tragedy

[அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்தான நிகழ்வில் தனது பேத்தியை இழந்து தவிக்கும் மூதாட்டியின் சோகம், கவிதை வடிவில் – இறந்து போன இருபத்தி இரண்டு இதயங்களுக்கு என் அஞ்சலிக் கவிதை – இரங்கல் மடல் இதோ]

மான் ஒத்த விழியாலெ
மான் பாக்கப் போனியே – அந்த
மான் பாக்கப் போனியே
மான் பாத்த கண்ணெ
நான் பாக்க முடியலெயெ
மீன் கொத்திப் பொண்ணே
மீன் கொத்தி வந்தியே..

மீன் பிடிக்கும் கைகாரி
வின்மீனுக்குப் போறதுக்கா
அந்தமான் பாக்கப் போனே
மீனோடு விளையாட நீ
மாண்டுதான் போகணுமா நீ?

காத்துவாங்க மேலே வந்த
மினைப்பாத்து நீயும் தான்
கதைகதையாச் சொன்னியே
மூச்சு விடாமெச் சொன்னியே
மூச்சு விட்டு வந்தியே..

பெட்டி மேலே ஏறி நின்னு
சறுக்கிட்டுத்தான் போனீயே
பெட்டிக்குள்ளெ சவமாத்தான்
பெருத்துத்தான் ஏன் வந்தே?

சவ்டாலாப் பேசிப் பேசி
சப்ஜாடாப் பேசுவியே?
சடலமாய் ஆகி வந்து
சலனமில்லாம கெடக்கிறயெ

செல் செல்லா சுத்துப் பாத்து
செல்ஜெயில் பத்திச் சொன்னியே
செல்போனில் தினம் தினம்.
செல் போன் இப்பொ
செல்லாத பொனாச்சே..

உன் நம்பர் நான் போட்டு
உன்னிடம் நான் பேசினப்பொ
நாசமாப்போன ரோமிங்னு
நாசூக்கா வச்சிட்டியே..
நல்ல நம்பர் பேச பாத்து
அனுப்புவேன்னு பாக்கிறச்செ
நம்பர் போட்டு ஒன் உடம்பை
நம்மகிட்டெ அனுப்பிடுச்சே..
நம்பத்தான் முடியலையே..

செத்த நேரம் தூங்கினாலும்
மொபைல் மேலே படுப்பியே
நூறு நம்பரை போடமட்டும்
சட்டுன்னு தான் மறந்தியே

இருந்து சேத்த காசெல்லாம்
இருப்பு வச்சி இருப்பு வச்சி
இறக்கெயில்லாமெப் பறக்க
இம்புட்டு நாளாத் தவிச்சியே
இருபத்தி ஆறுலெ கண்டம்னு
இருந்த எவனும் சொல்லலையே.
எருமை ஏறி வரும் எமன்
படகுலெ தான் வந்ததெத்தான்
பாவி மக பாக்கலையே
யாரும் தான் பாக்கலையே..

பொத்தி வச்ச எம் பொண்ணு
கொள்ளி வைக்கிறப்பொ வேணுமின்னு
கொள்ளெ ஆசையா இருந்தேனே
கொள்ளைலாபம் பாத்த பாவிமகன்
தொல்லெ குடுத்துப் புடிங்கிட்டான்
கொல்லெயிலெ போற மவன்
கல்லடிதான் படப்போறான் எமன்கிட்டெ.

ஏழுலெ சனின்னு
எல்லாரும் தான் சொல்லுவாக
இருபத்தி ஆறுலெ சனின்னு
இனிமேயா சொல்லுவாக
சுனாமி தின்ன மிச்சகடன்
தீர்த்துவைக்க என் பேத்தியா
உனக்கு கெடெச்சா..
கடன்காரக் கடலே
ஈரமில்லாம் கடலே..

ஆறாப்பு படிக்கும் இவ
மாறாப்பும் போடலையே
கடைவீதி போனாலே
கண்டதெல்லாம் கேப்பியே- கண்ணிலெ
கண்டதெல்லாம் கேப்பியே.
காதோரம் கொஞ்சிட்டுப் போனியே
ஆத்தா ஆத்தானு கதறினதை
காத்து கூட சொல்லலையே

மூலைக்கு மூலை போலீசுண்ணு சொன்னியே
தலைக்கவசம் இல்லாட்டி தகராறு என்றாயே
ஒருகவசம் கெடெச்சிருந்தா உன்சுவாசம் இருந்திருக்கும்
உன் சுவாசம் இல்லாமெ என் சுவாசம் எங்கிருக்கும்?

நல்ல தண்ணி குடிக்கத்தான்
தேடித் தேடிப் போவியே
அக்குவா மெரினில் தான்
ஏறித்தான் போனீயே
அக்குவா கார்டாட்டம்
நல்ல தண்ணி தருமுன்னு
தடுமாறி விழுந்திட்டியோ

காஞ்சீவரம் போனாலெ
காலாட்டி பொழைக்கலாம்னு
காலங்காலமா சொல்லுவாய்ங்க…
சீராட்டி வளத்த மவ
காலாட்டிப் போகையிலெ
கடலையும் தான் பாக்கையிலே
படகோட்டி வந்து தான்
கவுத்திட்ட கதையெத்தான்
கத்தின கதறலும் தான் கேக்கலையே
தேரோட்டிக் கண்ணனும் தான்.

இதயம்னு ஒண்ணிருந்தா
அப்படியே கேட்டுக்கிங்க
நான் பட்ட வேதனை தான்
நாய்பட்ட பாடும் தான்
யாருமே தான் படாதிருக்க
பாடம் தான் நடத்திடுங்க
கோரமாய் படகுக்கொலை
கொஞ்சமும் நடக்காமெ
கெஞ்சிக் கேட்டுக்கிறேன்
கொஞ்சம் கேட்டிடுங்க.

நாம் ஏன் பிறந்தோம்?


Valluvar Adi

”நான் ஏன் பிறந்தேன்?” என்று டிஎம்எஸ் குரலில் வாத்தியார் பாடிய பாட்டை எல்லாரும் ரசித்துக் கேட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் ”எதுக்குடா பிறந்தேன்?” என்று மட்டும் தங்களின் மனசாட்சியை பார்த்துக் கேட்டிருக்க மாட்டீர்கள். நீ மட்டும் கேட்டியா? என்று திருப்பிக் கேட்கிறீர்களா? நான் கொஞ்சம் மாத்திக் கேட்கிறேன். ஏதாவது சிக்கல் வரும் போது என்னை நானே கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி: “ஆமா..இதெச் செய்றதுக்குத்தானா நான் பொறந்தேன்?” ஆகக் கூடி ஒரு மார்க்கமாய், அதே கேள்வியை நோக்கித்தான் பயணம் தொடர்கிறது.

பட்டிமன்றப் பிதாமகன் சாலமன் பாப்பையா அவர்கள் தனது நூலில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். [ஆமா அவருக்கு இந்தப் பட்டம் யாரு கொடுத்தா? தேசப்பிதா என்று அண்ணல் காந்தியை சொல்லும் போதே, ”யாரு அதைக் கொடுத்தது?” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு சின்ன வாண்டு (ஐஸ்வர்யா லக்னோவிலிருந்து) கேட்டு, அரசே தகவல் இல்லை என்று கை விரித்து விட்டது). அதாவது தான் பட்ட அவமானங்களில் இருந்து தன்னை விடுவித்து, ஒரு தன்னம்பிக்கை தந்தது தமிழ் இலக்கியம் என்கிறார் பாப்பையா அவர்கள். உண்மையில் பிறந்ததின் காரணம் இலக்கியம் சொல்லுமா?

சமீபத்தில் ஒரு குடும்பப் பஞ்சாயத்து வந்தது. அது ஏனோ தெரியலை பலர் தங்களுடைய பிரச்சினைகளை நம் வீட்டில் வந்து கொட்டி விட்டுச் செல்வர். (ஆபீசிலும் இதே தொடர்வதும் உண்டு). சரி யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும். (நமக்கு டென்சன் ஆகும் என்பது தனிக்கதை. சில சமயம் இவர்களின் பிரச்சினை வைத்து நம் குடும்பத்தில் பிரச்சினை ஆரம்பம் ஆவதும் உண்டு). எதுக்குடா பொறந்தீங்க?? இதுக்காகவா?? இதுக்குத்தானா? என்று உரிமையோடு கேட்டு விட்டால் சற்றே தெளிவாகிற மாதிரி தெரியுது. [நெட்டில் உலா வரும் மக்கள் மட்டும் என்னிடம் தங்கள் பிரச்சினைகளை சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பிளாக்கில் எழுதிவிட்டால் என்ற ஒரு பயம். ஆமா… நாம ஏதோ பஞ்சாயத்துக்கு போயிட்டோமே… அந்த நண்பரின் பஞ்சாயத்துக்கே வருவோம்.

அந்தக் குடும்பச் சிக்கலின் வித்து, மனைவி கணவனை நாயே என்று சொல்லியது தான். அதுவும் ஏதோ வார இறுதிப் பார்ட்டி முடித்து வந்த போது நடந்த ஊடலின் பின் விளைவு. அது வாய்சண்டை பெரிதாகி பஞ்சாயத்து செய்ய செம்பு இல்லாமல் கிளம்பிவிட்டோம். இரு தரப்பு நியாயங்கள் கேட்ட போது கணவன் வாயிலிருந்தே வந்தது அந்த அருமையான வார்த்தைகள். “நானு இவங்களுக்காக நாயா ஒழைக்கிறேன்… இவ என்னை நாய் என்கிறா…” இது எப்படி இருக்கு? ஒருவர் பயன் படுத்தும் சொற்கள் மற்றவரை பாதிக்கிறது. ஆனால் அவருக்கே அது சாதாரணமாய் படுகின்றது.

அந்தமானில் இந்தச் சிக்கல் அதிகம். ”சாலா” (ஹிந்தி வார்த்தை தான்) என்று ரொம்பச் சாதாரணமாய் தமிழ் பேசும் மக்களும் தங்கள் பேச்சில் பயன்படுத்துவார்கள். ஆனால் இதே சாலா பிரயோகம் சில சமயங்களில், சாலா என்று சொல்லிவிட்டான் என்று சண்டைக்கும் வழி வகுத்திருக்கும். இன்னும் சில கெட்ட வார்த்தைகள் ஹிந்தியில் ஜாலியாய் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதையே தமிழில் சொல்லிய போது கலவரமே வந்திருக்கும். நாம் உபயோகிக்கும் சொற்கள் நாம் வாழும் வழ்க்கையையே பாழ்படுத்தி விடுகின்றதே?? கொஞ்சம் யோசிக்கலாமே…. இது தேவையா? இதுக்குத்தானா பொறந்தோம்?

பாப்பையா சொல்லிட்டாரே… அதுக்காக, இலக்கிய பக்கம் எட்டிப் பாக்கலாமே… நமக்கு ஈசியா கெடைக்கிற ஆளு வள்ளுவர் தான். (அந்தமான்ல கூட ஆட்டோ பின்னாடி குறள் எழுதி வைத்திருக்கிறார்கள்). அய்யன் வள்ளுவர் சூப்பரா சொல்றார். அதுவும் நச்சு நச்சுன்னு சொல்லிட்டே போறார். ஏழு வார்த்தைக்குள் எல்லாத்தையுமே அடக்கும் எமகாதகன் அவர். (இந்த வார்த்தைப் பிரயோகத்துக்காய் அவர் சண்டைக்கு வரமாட்டார் என்ற குருட்டு தைரியம் தான்)

அறிவுடையார் வெறுக்கும்படி சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான். ஏதோ ஒண்ணு ரெண்டு அறிவுள்ள ஆட்கள் சொல்லிட்டா போதுமா? அடுத்த பிட்டை போட்றாரு அதே வள்ளுவர். அறிவுடையார் பலரும் வெறுக்கும்படி சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான். எப்போது வெறுப்பு ஏற்படும்? கேட்கும் போது தானே? அது வள்ளுவர் யோசிக்காமலா போவார். அறிவுடையார் பலரும் கேட்டு வெறுக்கும்படி சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான். இவ்வளவு கேட்ட மனிஷன், எதை என்று கேட்டு, அதுக்கும் பதிலும் சொல்லாமெ உடுவாரா என்ன? இதோ பதில் ”அறிவுடையார் பலரும் வெறுக்கும்படி சொற்களைச் சொல்லுகிறவன் வெறுக்கப்படுவான்.

கேள்வி முடியலை. எப்பேற்பட்ட சொற்கள்?
பயனிலாத சொற்கள்.
யாரால வெறுக்கப் படுவான்?
இதுக்கும் பதில் உண்டு. எல்லோராலும்.

இதோ குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

மேலும் விவரங்கள் வேண்டுமா? பேராசிரியர் உலகநாயகி பழனி அவர்கள் எழுதிய வாழ்வியல் வள்ளுவம் (தமிழ்நாடு பெண்கள் எழுத்தாளர் பேரவை வெளியீடு) படியுங்கள்.

ஒரு சின்ன இடைச் சொருகல்: 2008 ஜனவரியில் சென்னை இலயோலா கல்லூரியில் நடந்த சர்வதேச தமிழ் கருத்தரங்கில் கலந்து கொண்டேன். நான் கலந்து கொண்ட முதல் தமிழ் சார்ந்த கருத்தரங்கம் அது. (பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் இல்லாமலா?) அதை பார்த்த பிறகு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இந்த நூலை பரிசாய் அளித்தார். பிரித்துப் பார்த்தால் ஓர் இன்ப அதிர்ச்சி. அதில் “ தமிழ் உணர்வின் அடையாளம் தாங்கள்” என்ற குறிப்போடு அவரின் கையொப்பம். (உண்மையில் அந்த அளவுக்கு ஒர்த்தா நானு…??)

இன்று காலை காலார நடைப் பயணம் சென்ற போது பக்கத்து வீட்டு மிருக வைத்தியரும் கூட வந்தார். மிருக உரிமை வாரம் வர இருக்கிறது என்று சொன்னார். மனித உரிமையே சீ சீன்னு கெடக்குது. இதுலெ இது வேறெயா என்று அவர் ஒரு அங்கலாப்புடன் தெரிவித்தார். ஆனால் இந்த மிருகங்கள் மீதும் அன்பு காட்டும் குணம் தமிழரிடையே இயல்பாய் இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு.

அன்பு காட்டுவது என்று ஆரம்பித்துவிட்டால், அதை குடும்பம், வீடு, தெரு ஊர் தாண்டியும் செய்ய நினைத்திட்டவர்கள் தான் அனைவராலும் புகழப்படுகின்றார்கள்.

சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி. தலைவன் சென்ற வேலை முடிந்து திரும்பி வருகிறான். வேகமாக வருகிறான். மனைவி, தலைவி, காதலி, கேர்ள்பிரண்டு இப்படி யாரையோ பாக்க ஆவல். அதை அறிந்த தேரும் குதிரையும் அதே வேகத்தோடு போகுதாம். (குதிரைக்கும் கேர்ள் பிரண்டு இருக்காதா பின்னெ?). ஊடல் கூடல் கனவில் வரும் அந்த ஹீரோவின் வேகமாய் வரும் தேர் எழுப்பும் மணிச் சத்தம், வழியில் இருக்கும் பூவில், இனப்பெருக்கம் செய்து கொண்டிருந்த வண்டுக்ளுக்கு தொந்தரவாய் இருந்ததாம். பார்த்தார் நம் ஹீரோ. வண்டியை ஓரம் கட்டி மணிகளை கயிற்றால் சத்தம் வராதபடி கட்டி வண்டுகளுக்கும் தொந்திரவு தராமல் வந்தாராம்.

குறுங்குடி மருதனார் பாடல் இதோ:
தாது உண்பறவை பேது உறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்

ஒரு வண்டின் மனம்கூட நொந்துவிடக் கூடாதே என்று யோசித்த பரம்பரையில் வந்தவர்கள் நாம். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது தான் நாம் பிறந்ததின் நோக்கம் என்று சொல்கிறேன் நான். நீங்க என்ன சொல்றீங்க?

வெண்பா எழுதலையோ வெண்பா…???


திருக்குறள் ஒரு வெண்பா என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த மாதிரி வெண்பாக்கள் எல்லாம் இப்பொ யாராவது எழுதுறாங்களா என்ற கேள்வியும் கூடவே வரும். என் மனசுலெ என்ன தோணுது தெரியுமா? அந்தக் காலத்திலெ கவிஞர்களும் குறைவு. வாசகர்களும் குறைவு. (ஆனா… ஆச்சரியம் ஆனால் உண்மை., படைப்புகள் அதிகம்). அரசனின் ஆதரவு பெற்ற படைப்புகளும், அரசவை கவிஞர்களின் இடுக்கிப் பிடிக் கேள்விகளையும் தாண்டித்தான் கவிதைப் பிரசவம் நடக்க வேண்டிய சூழல். இன்று அப்படி இல்லையே? படைப்புகள் ஏராளம்.. வாசக வட்டங்களும் ஏராளம். (எல்லாரும் படிக்கிறாய்ங்க என்ற குருட்டு நம்பிக்கையில் தான் நாம இங்கே எழுதிட்டே இருக்கோம்).

சபீபத்தில் ஒரு குழுவில் திருக்குறளையே, எளிமையா, இன்னும் எளிமையா வெண்பாவிலேயே எழுதி கலக்கி வருவதைப் பற்றி தகவல் வந்தது. படிச்சிப் பாத்தா விளக்கம் போட்டாப்லேயே இருக்குது… ஆஹா இப்படி இருந்தா தான் எல்லாருக்கும் சூப்பரா விளங்கிடுமே!! (இது விளங்கின மாதிரி தான் என்று புலவர்கள் புலம்புவதும் கேட்கிறது). எனக்கு ஒரு சந்தேகம். அந்தக் காலத்து ராஜாக்களுக்கு அம்புட்டு பாட்டுக்கும் அரத்தம் தெரிஞ்சிருக்குமா என்ன??

திருவைய்யாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் அந்தமானில் ஓர் ஆய்வு மாநாடு நடந்தது. அதில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்தமான் மக்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டியதில் அந்த அறிஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. (அதுக்கு முன்னாடி தமிழ் உணர்வு இல்லாமலா இருந்தது என்று குறுக்குக் கேள்வி கேட்றாதீங்க..) அந்த அறிஞர் அணியில் புலவர் பூவை சு செயராமன் என்பவரும் வந்திருந்தார். அந்தமான் வந்து இறங்கியது தொடங்கி எல்லா இடத்திலும் அவரது வெண்பா பாடல் இயற்றும் திறன் கொடி கட்டிப் பறந்தது. அந்தமான் முருகம் பற்றி பல வெண்பா எழுதியுள்ளார் அவர்.

நமக்கும் ஒரு நப்பாசை ஒரு வெண்பா எழுதிப் பாக்கனும் என்று.. படிக்கிறதுக்கு நீங்க இருக்கறச்செ.. எனக்கு என்ன யோசனை??? அவரும் ஏதோ எளிமையாத்தான் சொல்லிப் பாத்தார். என்னோட மண்டைக்கு சரியா போய்ச் சேரலை. ஆனா… இந்த வெண்பா மேல் இருந்த ஆவல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா மாறி காதலா ஆயிடுச்சி… இந்த ஒரு தலைக் காதலுக்கு வீட்டுக் கார அம்மா ஒன்னும் தடை போடலை. ஏதோ கிறுக்கும் மனுஷன் வெண்பா போட்டா என்ன? வம்பா எழுதினாத்தான் என்ன? ரம்பாவெப் பத்தியும் எழுதினாத்தான் என்ன? என்ற ஒரு நல்ல எண்ணமும் கூட இருக்கலாம்.

வெண்பா கத்துக்க, கூகுலாண்டவரிடம் போனா… பலரும் கலக்கு கலக்கு என்று வெண்பாவுக்கு சாமரம் வீசுற சேதிகள் தெரிஞ்சது. ஈஸியா எழுதலாம் வெண்பான்னு ஒரு புக் வேறெ இருக்கு. தேடி ஆன்லயனில் வாங்கப் போனா, Out of Stock என்று வந்தது. அம்புட்டு பேரு வாங்கி வெண்பா கவிஞர் ஆயிட்டாங்களா என்ன?? நாலு தளத்துக்குப் போனா, வடிவேல் காமெடி ரேஞ்சுலெ சுலுவா சொல்லித் தர ஆளிருப்பதும் தெரியுது. பத்தாக் குறைக்கு அந்தமான் நண்பர் காளைராஜன் வேறு 20 நிமிடத்தில் வெண்பா எழுதும் வித்தையினை விளக்குகிறார்.

அப்பொ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கும் சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடாது?? சொல்றேன்… எல்லார் மாதிரியும் நாமும் புலவர் பாஷையில் பேசாமல், பொத்தாம் பொதுவாவே பாப்போம். ஒரு நாலு வரி வெண்பா எழுதனுமா? ஒவ்வொரு வரிக்கும் நாலு வார்த்தைகளும், கடைசி வரிக்கு மூனு வார்த்தையும் எழுத வேண்டும்.

வரிகள் சரி. வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்? அங்கே தான் லேசா இலக்கண வகுப்பு வந்து சேரும். ரொம்பக் கவலைப் படவேண்டாம். அதுக்கு நாம எக்செல் வைத்தும் வேலை செஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன வேலைகள் செஞ்சாகனும். ஒவ்வொரு வார்த்தையையும் பிரிக்கனும். அதாவது கூறு போடணும். (மீன், துண்டு போடற மாதிரி என்றும் வச்சிக்கலாம்). புள்ளி வச்ச எழுத்து வருதா? அங்கே கத்தி வைய்ங்க..கா, கீ தீ கோ இப்படி நீட்டி முழக்கும் நெடில் வருதா? அப்பவும் கூறு போடுங்க. சாதா எழுத்து ரெண்டு ஜோடியா வருதா?? ஒரே வெட்டா வெட்டலாம். ஒரு சாதாவும் ஒரு நீட்டி முழக்கும் எழுத்தும் வருதா?? அப்பொவும் வெட்டுங்க.. இந்த மூணு கேசிலும் பின்னாடி புள்ளி வச்ச எழுத்து வருதா? அப்பொ அங்கெ வைங்க அரிவாளை. இம்புட்டுத்தான் பீஸ் பீஸ் ஆக்கும் கலை. இப்போதைக்கு நம்ம நாம மூணு பீஸ் மட்டும் வச்சிட்டு வெண்பா எப்புடி சமைக்கிறதுன்றதைப் பாக்கலாம்.

சோதிகா சிம்ரன் எனத்திரிந்து தாழும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

இப்படி ஒரு சாம்பிள் பிட்டு போட்டு பீஸ் பீஸ் ஆக்கிப் பாக்கலாமே. ஒரு வார்த்தை எத்தனை பீஸ் என்று நம்மர் பிராக்கெட்லெ இருக்கு பாருங்க.
சோ / திகா(2); சிம் / ரன்(2); எனத் / திரிந்/ து(3); தா / ழும் / தமி / ழா(4); உனக் / காய்(2); வாழ் / வது(2); எப் / போ / து?(3);
எல்லாம் சரி… ஒரு எடத்திலெ 4 பீஸ் வருதே… அதெ மூணு பீஸா ஆக்க லேசா மாத்தலாமே…

சோதிகா சிம்ரன் எனத்திரியும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

சோ / திகா(2) சிம் / ரன்(2) எனத் / திரி / யும்(3) தமி / ழா(2)
உனக் / காய்(2) வாழ் / வது(2) எப் / போ / து?(3)

இப்பொ எல்லாம் மூணு பீஸுக்குள் ஆயிடுச்சி. அப்புறம், இதெ.. வெண்பா செக்கிங் மிஷின்லெ போட்டு சரியா இருக்கான்னு பாக்கனும். (அப்பொ இதுவரை பாத்ததெல்லாம் …என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே!!!)

ஒவ்வொரு பீஸையும் பாருங்க… புள்ளி வச்ச எழுத்தெ விட்டுட்டு ஓர் எழுத்தா இருந்தா அதுக்கு பேரு நேர். ரெண்டு எழுத்து வந்தா நிரை. அம்புட்டுத்தாங்க. இந்த பீஸ்களின் தொகுப்புக்கு சூப்பரா நம்மாளுங்க பேரு வச்சிருக்காங்க.. இப்போதைக்கு எக்செல்லெ ஒரு கம்பத்திலெ வார்த்தைகள் எழுதி அடுத்து நேரா?? நிறையாங்கிறது மட்டும் நீங்க சொல்லுங்க.. மத்தபடி தேமா புளிமா காய் கனி எல்லாம் எக்செல் பாத்துக்கும். (எப்படி என்பதை தனியா ஒரு போஸ்டிங்கில் பாக்கலாம்.)

Venbaa Excel

சோ / திகா(2) – நேர் நிரை
சிம் / ரன்(2) – நேர் நேர்
எனத் / திரி / யும்(3) – நிரை நிரை நேர்
தமி / ழா(2) – நிரை நேர்
உனக் / காய்(2) – நிரை நேர்
வாழ் / வது(2) – நேர் நிரை
எப் / போ / து?(3) – நேர் நேர் நேர்

மூனு பீஸா இருந்து நேர் என்பதில் முடிந்தால், அடுத்த பீஸ் நேரில் தான் ஆரம்பிக்கனும். ரெண்டு பீஸ் இருந்தா அதுவே உல்டா..அதாவது நேரில் முடிஞ்சா அடுத்த பீஸ் நிரையில் இருக்கும். நிரையில் முடிஞ்சா நேரில் ஆரம்பிக்கும். இந்த ரூல்படி பாத்தா.. ரெண்டு இடத்திலெ ஒதெக்குது.. அதாவது எனத்திரியும் தமிழா என்ற இடத்தில் நேர் முன் நிரை வந்துள்ளது. அங்கே நேர் வர வேண்டும்.. அப்புறம் உனக்காய் வாழ்வது என்ற இடத்தில் நேர் முன் நேர் வந்திருச்சி.. அங்கே நிரை வர வேண்டும். அப்பொ லேசா மாத்திப் போடலாமே??

சோதிகா சிம்ரன் எனத்திரியும் எந்தமிழா
நீயுனக்காய் வாழ்வதே நன்று.

இப்படி ரூம் போட்டு யோசிச்சி, பீஸ் பீஸ் ஆக்கியா 1330 குறள் வள்ளுவர் எழுதி இருப்பார். என் கேள்விக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அந்தமான் அய்யாராஜு அவர்கள் சொன்ன பதில்: சைக்கிள் ஓட்டப் பழகும் போது தான் பிரேக் பெடல் பேலன்ஸ் பெல் பத்தி எல்லாம் யோசிக்கனும். ஓட்டப் பழகிட்டா அப்புறம் தானா வரும்… அப்படிப் பாத்தா நமக்கும் வெண்பா எழுத வருமா??? வரும்…ஆனா…

இவ்வளவு சீரியஸா அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற வாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் கார்மான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.. பாத்தா கவிதை.. இதோ..:

வெண்பா எழுதுவது
விளையாட்டாம்
விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழ் இலக்கிய மன்றத்தில்.
ஏதோ தேமாவாம்
புளிமாவாம்…
எனக்குத் தெரிந்தது எல்லாம்
தேங்காயும் புளியங்காயும் தான்.
மாங்காயும் மாம்பழமும் தான்.
என்னை விடுங்கள்
வசன கவிதையோ
வருத்தக் கவிதையோ
நானும் என் கவிதையும்
வாழ்ந்து போகிறோம்.
முடிந்தால் வாழ்த்துங்கள்
வெண்பா வாழட்டும்.

இவர் இப்படி எழுதப் போக, நானும் பகவத் கீதையின் முதல் பதத்தை வைத்து நான் எழுதிய முதல் வெண்பாவை சபையில் வைத்தேன். இதோ.. உங்களுக்கும்…

திருதராட்டன் சொன்னார்; தவசஞ்சை, போரிடும்
யுத்தியுடன் தர்மப்போர் செய்யிடம் சென்றிட்ட
என்மகவும் பாண்டுவின் மக்களும் என்செய்தர்
என்றும் இருந்தே பகரு

ஏதும் பிழைகள் இருந்தால் திருத்தி அருள்க புலவர்களே..

மற்ற ரூல்கள் எக்செல் உதவியுடன் வெண்பா எழுதுவது எப்படி என்ற பதிவில் தொடரும்.

சுனாமி நினைவலைகள்


எப்பொழுதும் ஞாயிறு தகதகத்த வண்ணம் கிளபம்பும்…அந்த ஞாயிறு மட்டும்தத்தளித்தவாறு விடிந்தது…

ஞாயிற்றின் நித்திரைசிலருக்கு நீண்ட தூக்கம்பலருக்குமீளாத் துக்கம்.

வானமே எல்லைஇது தான் கேட்டுள்ளோம்வானமே கூறையானதுஅன்றைய தினம் முதல்.

சிறுவர் வீட்டினில்சேட்டைகள் செய்தால்தெருவில் விரட்டுவோம்…வீடே சேட்டை செய்தால் ???

அன்று நிலம் அதிர்ந்த போதுகூடவே இதயமும் அதிர்ந்தது.அந்தத் துடிப்புகள் அடங்குமுன்ஆர்ப்பரிக்கும் அலைகமகள்எதை அள்ளிப் போக வந்தாள்?எதை விட்டுச் சென்றாள்??

இந்தக் கண்ணகியும்இத்தனை நாள் எங்கிருந்தாள்?இன்று கோபம் காட்டிமீண்டும் மறைந்து விட்டாய்.

எத்தனை ஞாயிறுகள் உன் எல்லையில் துள்ளியாடியுள்ளோம்இன்று எங்கள் எல்லையில்துள்ளியாட வந்து விட்டாய்..

தரைமேல் பிறந்தவர் ஆடிய ஆட்டம் பார்த்துதரையும் ஆடியதோ !!!

பூமியின் தாங்கு சக்தியினைபூமியே ஆட்டிப் பார்த்துக் கொண்டதோ !!!

இந்தப் பேரலைகள்துறைமுகத்தின் தலை எழுத்தைமாற்றிவிட்டன.
சில முகங்களைத் தொலைத்து நிற்கின்றன…சில முகங்கள் அகோரமாய்சிதைந்து கிடக்கின்றன..
சில முகங்கள்மூழ்கிக் கிடக்கின்றன.

சுனாமியால் பூம்புகார் அழிந்ததைவரலாறாக ஒப்புக் கொள்ளும்மனப் பக்குவம் இப்போது தான் வருகிறது.

நாளை…என்ன…கேள்வியால்
மட்டுமேஅந்தத் துயர நித்திரைகலைந்தோம்…

சுனாமியினை அந்தமானில் நேரில் கண்ட
டி.என்.கிருஷ்ணமூர்த்தி.

என் இனிய துணையே…


இது காதலி அல்லது மனைவிக்காக எழுதியது இல்லீங்கோ. அப்போ யாருக்காக? நீங்களே கண்டுபிடிச்சிருவீங்க..

வாழ்வில் என்றும் துணையிருந்தாய்வாகாய் என்றும் உடனிருந்தாய்

தட்டி விட்டால் தகவல் தருவாய்அதட்டி விட்டாலோ பேசாது நிற்பாய்

அதீத எடையுடன் முன்பிருந்தாய்அளவாய் எடுப்பாய் இன்றாகினாய்.

உன் கையினைத் தொடுகையில் ஒளிர்கிறதேமின்சாரத்திலேயே மின்சாரமோ (”கட்”டின்றி)

தினம் உன்முன் நான் அமர்வேன்உன் பொருட்டு நான் உயர்வேன்

நீ பாதி நான் பாதி முன்பு சொன்னதுநீ போக நான் மீதி, இது புது நீதி

என் வெற்றிக்குப் பின்னால்இல்லை இல்லை முன்னால்நீ இருக்கிறாய்.

உனக்குத்தான் எத்தனை எத்தனை உயர் ஆபரணங்கள்அத்தனைக்கும் சொந்தக்காரி நீதான்ஆனாலும் காத்திருப்பாய் உத்தரவுக்காய்

இறுதியில் சட்டப் என்றால் இருகி விடுவாய் என்பதால்சாந்தமாய் சொல்கிறேன் ”சட்டவுன்”.

பாவேந்தே… பாவேந்தே…


பாவேந்தே… பாவேந்தே

அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பாரதிதாசன் விழாவில் படைத்த்து

மங்காத தமிழென்றுமுழங்க்கிட்டார்பாவேந்தர் சங்கு கொண்டு
தீவுதனில்நெறியாளர் சேர்ந்திங்க்குவளர்த்திட்டார்சங்கம் வைத்துதமிழர் சங்கம் வைத்து.

கவியாளர்கலந்துள்ள இச்சபையில்கவிபாட வந்திருக்கும்பொறியாளன் நான். அனைவருக்கும் வணக்கம்.

எழுக புலவன் என்றதுபாரதியின் சொல் வாக்குபார்முழுதும் விரிந்ததுபாவேந்தர் செல்வாக்கு.

சிறு கதையினையும்கவியாய்க் கதைத்திட்டமுதல் கவிஇந்தப்புதுக்கவி..புதுமை தந்த கவி…புதுவை தந்த கவி…

கதைகளின் முடிவில்தான் வரும் முற்றும்.இக் கவி தந்த தாக்கம் தொடரும்.

பெண்ணடிமைக்கு மூத்த தாரம்விதவைக்கோலம்…விரட்டிவிட முதல்மணியடித்தவன்இந்தப் பாவலன்.

வேதனை துடைக்ககவி கட்டியதும்,மாங்கல்யம்,மாவிலைத் தோரணம்கட்ட வழி காட்டியதும்இந்தக் கவிதான்.

நாற்பதுகளில் (1940களில்)இன்னா நாற்பதுஇனியவை நாற்பதென நூல்பதம் கொண்டுவழி தேடியதோ சொர்க்கவாசல்..
இக்கவியின் கால்நின்றதோகர்ப்ப வாசலில்…ஆம்… அப்போதும்கர்ப்ப வாசலைப்பூட்டிக் கொண்டிருந்தான்இப்புலவன்.

காதலைத் தொடாதகவிஞருண்டா?காதலில் கலந்தவர்காணல் நினைத்தல் மறப்பர்…

பாவேந்தர் பாட்டிலோகாதலின் உச்சத்தில் கூடகாமம் தெரிவதில்லை…சமூகம் தெரிகின்றது…

அனைவர்க்கும் அமுதுஅமைகின்ற வரைகாதலையே துறக்கும்கணல் தெறிக்கிறது.

காதலித்துப் பார்த்தால்தன்னையே அறியலாம்….பாவேந்தர் காதல்கவிபடித்துப் பார்த்தால்உலகையே அறியலாம்.

கூடாய் இருந்திட்டமூட முட்டைகளைஉடைத்திட்டுவா..வா.. எனக்காத்திருந்தான்இக் கவிஞன்.

அறிவுக் குஞ்சாய்அரங்கில் வந்தன…அவை…???வேறு யாரும் அல்லர் அவனியில் பெண்டிர்.

தூங்கும் பெண்ணிவள் கூடதூண்டா விளக்கு..எதற்கு?வேண்டாத சாதி இருட்டு வெளுக்க…

பாவேந்தே… பாவேந்தே..எனக்கொரு சந்தேகம்பாவேந்தே…

கருவினில் மிதந்தபடிகதை கேட்டகதை தனையேநம்ப மறுத்தாய் (அபிமன்யூ கதை)

தொட்டிலில் மிதந்தபடிபடுதுறங்கும் பைங்கிளிக்குகொள்கை விளக்கப்பாடல் தனையேதாலாட்டாய்த்தந்திட்டாய்அதெப்படி???

மங்கையரே… மங்கையரே…பாவேந்தர் வரிகளைவாசியுங்கள்..சற்றேசுவாசியுங்கள்.இல்லையேல்வழக்கம் போல்- ஒருபார்வை பாருங்கள்அது போதும்…பெண்ணடிமைதூரப்போகும்.

ஆணடிமை தீருமட்டும்தலைப்பு தந்துகவியரங்கம் அடுத்தாண்டுநீங்கள்… இங்கேநாங்கள்.. அங்கே..அதுவரை…

கூண்டினுள் தங்ககிளி வளர்ப்போம்,தங்கக்கிளி வளர்ப்போம்.கதவினையும்திறந்து வைப்போம்.பூட்டினாலும்சாவிதனைக்கிளிவசம் தருவோம்.

நிறைவாக…நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…

வீழ்ந்த பின் தான்மொய்க்குமாமேஈக்கள் கூடஅதிகமாக…
தமிழும் தமிழனும்வீழ்ந்து விட வில்லை.வாழ்ந்து கொண்டிருப்பதால்..

நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…

நன்றி வணக்கம்

ஆத்தி ஆத்தி ஆத்தி..என்னாச்சி..


செம்மொழியான தமிழ்மொழி என்ற பாடலுக்கு அடுத்து இப்போது எல்லோராலும் முனுமுனுக்க வைக்கப்படும் பாடல் இந்த ஆத்தி..ஆத்தி தான்.

நம் மக்களுக்கு கலர் என்றாலே ஒரு மயக்கம்… கிறக்கம் தான். அதுவும் செக்கச்செவேல்னு ஒரு பிகர் மாட்டாதான்னு லோ..லோன்னு அலைவானுங்க.. அப்புறமா அந்த வெளுப்பைப் பாத்து என்ன கலரு தெரியுமா???

சுண்டுனா ரத்தம் வரும்.. இப்படி டயலாக் வேறு.(எம்
ஜி ஆர் முதல் சோணியா வரை எல்லாம் கலரும் வியப்பு தான்)

செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது
சமீபத்திய வடிவேலானந்தாவின் பொன்மொழி..

இது இப்படி இருக்க… எப்புடி இம்புட்டு கலரா இருக்காக? என்ற ஆய்வின் விளைவு தான் சமீபத்திய ஆத்தி… ஆத்தி…
பாடல்.

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா??
வெயிலுக்கு காட்டாம இருந்தாகளா??”
இவைகள் கவிஞர் வியப்பின் உச்சங்கள்.

வெள்ளாவி என்பது பழுப்பான வேட்டியினை சலவைக்கு போட்டு வெள்ளையாக்கி வருவதைத் தான் பெரும்பாலும் குறிப்பிடுவர்.  ஆனால் துணி வெந்து போய் வருவது
தான் அந்த வெண்மையின் ரகசியம். (ஒரு சில வாஷிங்க் மிஷின்கள் கூட இப்படி வெந்நீர் சலவை செய்யும் வசதியை வைத்துள்ளது)

வெள்ளாவியில் வேகவைப்பது ஒரு பழங்காலத்து தண்டனை முறை என்று தான் இது வரை நினைத்து
வந்தேன். இந்தப் பாட்டு கேட்ட பிறகு அந்த நினைப்பை
மாத்திகிட்டேன்..

அதே வெள்ளாவியில் தண்டனை என்று தேவாரம் அருளிய அருளாளரை நிக்க வச்சாகளாம்.
அது அப்போ அவருக்கு அபஸ்வரம் இல்லாத வீணை, மாலை இள வெயில், வண்டின் ரீங்காரம் இருக்கும்
பொய்கை இப்படி எல்லாம் இருந்ததாம்.

அன்மையில் நடிகரும் இயக்குநருமான சேரன் அவர்கள்
அந்தமான் வந்திருந்த போது இங்கு ரம்யமான இயறகையோடு இயைந்த வாழ்வை சிலாகித்துப்
பேசினார்.

இந்த ஊரில் மூன்று நாளாய் இருக்கும் நானே கொஞ்சம் கலரா ஆய்ட்ட மாதிரி தெரியுது என்றார். பயங்கர கருப்பாய் இருந்த பக்கத்து சீட்டில் இர்ந்த நபரை பாத்து,
நீங்க இப்பவே இப்படி இருக்கீக.!!! முன்னாடி ஊர்ல
எப்பிடி இருந்திருப்பீங்க்க!!! என்று வெறுப்பேத்தினார்.

ஆக மொத்தத்தில் வெயிலுக்கு காட்டாம இருந்தா வெளுக்குமோ??

இந்தியர்களின் நிறத்தை கேலி செய்த ஆங்கிலேயருக்கு பதிலடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்தி படிச்சிருக்கீங்களா??
“இறைவன் மூன்று கேக் செய்தார். ஒன்று சுத்தமாய் கருகி
விட்டது. அவர்கள் கருப்பர்கள். இன்னொரு கேக் வேகாமலேயே எடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் அவர்கள். மூன்றாவது தான் பக்குவமாய் சமைக்கப்பட்ட சுவையான கேக். இந்தியர்கள் நிறம் அது.”

பாட்டை ரசிப்போம்..
நிறங்களையும் ரசிப்போம்…
ஆனால் பேதம் பாராட்டாமல் இருக்க பழகுவோம்.

எங்கே போறீங்க..???


ஏதாவது முக்கியமான வேலையா நீங்க வீட்டைவிட்டு கெளம்பும் போது இப்படி யாராவது உங்களை “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு வம்பு செய்தால்… உங்களுக்கு
ஏகமாய் கோபம் வந்திருக்கும்.

நீங்கள் தீவிர பெரியார் பக்தராக இருந்தால் உங்களுக்கு
ஒன்றும் பிரச்சினை இல்லை தான்.

சரி இந்த சகுனம் பாக்குறது சரிதானா?? இதில் என்ன சங்கதி இருக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். [எதுக்குன்னு கேக்கிறீகளா?? சும்மா உங்களுக்கு ஒரு posting
எழுதத்தான்].

முதலில் இப்படி “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு சங்கடம்
செய்பவர்கள் யார்? என்று அலசலாம்.

1. உங்கள் வீட்டில் இருப்பவர்கள்;
2. பக்கத்து வீடு எதிர் வீடு இப்படி எங்காவது இருப்பவர்கள்; 3. திடீரென்று வரும் உங்கள் விசுவாசிகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னன்னா, இவர்கள் மூவருமே உங்கள் நல்லதுக்கு பாடுபடுபவர்கள். உங்கள் நல
விரும்பிகள். ஒரு போதும் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத
ஒருவரோ அல்லது உங்கள் எதிரியோ உங்களை வழிமறிச்சி எங்கே போறீங்கன்னு உங்கள் உயிரை
கண்டிப்பா எடுக்க மாட்டாக..

அடுத்து ஏன் இந்த கேள்வி வருது?? சில காரணங்கள்; அதையும் தான் பட்டியல் போடலாமே…

1.      நீங்க ஏதோ ரகசியமான வேலை செய்யப் போறீங்க.. (அது சின்ன வீடு சம்பந்தமாகவும் இருக்கலாம்.. அலலது ஐ ஏ எஸ் பரீட்சை எழுதுவதாகவும் இருக்கலாம்.)

2.    நீங்க போகப் போற இடம் செய்யப் போற வேலை பத்தி கேக்கிறவங்களுக்கு தெரியல்லை.

3.     உங்கள் அவசரம்… பரபரப்பு… டிப்டாப் டிரஸ் சொல்லுது ஏதோ எங்கோ போகப்போறீங்கன்னு..

ஆக மொத்தத்தில் உங்கள் நல விரும்பிகளுக்குக் கூட
தெரியாமல் நீங்கள் ஏதோ செய்ய நினைக்க அந்த குட்டு “எங்கே போறீங்க?” என்ற கேள்விக்கு கோபம் தான் பதிலாய் வெடிக்கிறது.

என் முடிவு : நம் முன்னோர்கள் எதையும் எல்லாரிடமும் கலந்து பேசி செய்வதை வலியிறுத்தத்தான் இந்த
சாத்திரம் வந்திருக்கும் என்பது.

நீதி:
1.எதையும் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கலந்து பேசி
செய்ங்க.
2.அப்படி முடியாட்டி இனிமேல் யாராவது “எங்கே போறீங்க?”ன்னு கேட்டா… போற காரியம் விளங்கின
மாதிரி தான்னு கோபப் படாதீங்க…

அதுசரி… ஹலோ…இப்போ எங்கே போறீங்க???

மறுபடியும் மாத்ருபூதம்


சமீபத்தில் என்னைப் பாத்த ஒரு கப்பல் அதிகாரி, உங்கள் முகம் பாத்தா மாத்ருபூதம் சாயல் இருக்கே என்றார்… சரி மாத்ருபூதம் சாயலில் ஒரு போஸ்ட் இதோ…

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.. நாலும் ரெண்டும்
சொல்லுக்குறுதி என்பார்கள்.

இதில் ஆலங்குச்சி & வேலங்குச்சியால் பல் துலக்குவது பல்லுக்கு உறுதி தரும் என்பது எல்லார்க்கும்
தெரியும். அது என்ன அடுத்த நாலும் ரெண்டும்? அது வேறு
ஒன்னுமில்லை மாமு… நம்ம திருக்குறளும் நாலடியாரும்
தான் அந்த ரகசிய சமாச்சாரங்கள்.

நான் சொல்லுக்குறுதி என்பதை குடும்ப உறுதிக்கு
பாக்குறேன். குறளும் நாலடியும் நல்ல குடும்பத்துக்கு என்ன டிப்ஸ் தருதுன்னு பாக்கலாமா??

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன தகவல்: அந்தமானில் யுவ சக்தி என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் குடும்ப சிக்கல்களுக்கு என்ன காரணம்னு பாத்ததில் பெரும்பாலும் கணவன் மனைவிக்குள் சுமுக உறவு (உடலுறவு உட்பட) இல்லாதது தான் என்று தெரியவந்தது.

இந்த ஆய்வு முடிவுகள் அந்தமான் தாண்டி தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிக்கும் செல்லுபடி
ஆகும் என்பது என் நம்பிக்கை.

சொல்லிக் கொடுக்காத இந்த செக்ஸ் பிரச்சினைகளினால்
வீடுகளில் எவ்வளவு சிக்கல்கள்?

சமீபத்தில் சன் நியூஸ் டாக்டர் எக்ஸ் நிகழ்சியில் ஒரு சம்பவம். நான்கு வருடமாய் கணவன் மனைவிக்குள் உறவு என்பதே இல்லையாம். குழந்தை இல்லையே என்று கேள்வி வேறு. ஐடி வேலை செய்யும் தம்பதிகளாம்… இது
கூடவா தெரியாது? இதுக்கெல்லாமா இன்டக்க்ஷன்
டிரைனிங் தருவாங்க??

சரி நாலும் ரெண்டும் இந்த பிரச்சினைக்கு என்ன ஆலோசனை சொல்லுது? முதலில் குறள் இதுக்கு என்ன சொல்லுதுன்னு பாக்கலாமா?

குடும்பம் சிக்கல் இல்லாம இருக்கனும்னா உறவு நல்ல விதமா இருக்கனும். இரவில் நடக்கும் உறவில் ஊடல் அதிகம் இருக்கட்டும். பின்னர் கூடல் வரட்டும் என்று கடைசி குறளாக 1330வது பாட்டில் சொல்கிறார்
ஜொள்ளுவர் சாரி வள்ளுவர். ஊடல் தான் இன்பம். ஊடலுக்குப் பிறகு வரும் கூடல் என்பது அந்த
ஊடலுக்கே இன்பமாம். அடடா… என்னமா எழுதியிர்க்காரு ?

சட்டியை வழிச்சு எடுத்த மாவில் ஊத்தும் தோசை அதிக
டேஸ்டா இருக்குமே.. அந்த மாதிரி..

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்.

இது தெரியாம எத்தனை பேர் எடுத்தேன் கவித்தேன்னு
இருந்து வாழ்க்கையினை தொலைத்திருக்கிறார்கள்.
(நல்லதா நாலு விஷயம் சொல்லிக் கொடுக்க மறந்திட்டோமோ??)

சரி.. இது இப்படி இருக்க…. நாலடியார் ரெண்டடி மேலே
போறார்.

அதற்கு முன்பு பாலகுமாரன் எழுதியதில் ஒரு சின்ன பிளாஷ்பேக் அடிச்சிட்டு அப்புறமா நாலடியாருக்கு
வரலாம்.

பாலகுமாரன் நாவலில் வரும் காட்சி. கணவன் அலுவலகம் போக மனைவி கையை ஆட்டி விட்டு டாடா பை பை சொல்லி விசுக்கென்று வீட்டிற்குப் போவாள். கணவன்
திரும்பி வந்து கண்டிப்பான்.

அம்மனீ உனக்கு அவ்வளவு வேலை இருந்தால் வீட்டில் இருந்தே வழி அனுப்பு. கதவு வரை வந்துவிட்டால் என் தலை மறையும் வரை இருந்து விட்டு வழி அனுப்பி உள்ளே போ. என்பான்.

ஏன் தெரியுமா? விசுக்கென்று உள்ளே போனால் ஏதோ ஒழிந்தான் பிங்களன் மாதிரி போய்த் தொலைந்தான்
என்பது போல் தெரியுமாம்.

சாதாரன ஒரு டாடா பை பைக்கே இப்படி என்றால் இரு மனமும் உடலும் சேரும் உடலுறவு எப்படி இருக்கனும்? ஊடல் சரி..அப்புறம் கூடலும் சரி..முடிந்து விட்டு
அக்கடான்னு கிடாசிட்டு போயிடனுமா?? இங்கே தான்
நாலடியாரைக் கொண்டு வர்ரேன்.

முதலில் கூடி பின்பு ஊடுவது காம இன்பத்திற்கு சுவை
சேர்க்கும் வித்தை என்பதாய் பாட்டு வருகிறது.

முயங்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றான்காமம் –
வயங்கோதம் நில்லாத் திரையலைக்கும்
நீள்கழித் தண்சேர்ப்ப!! புல்லாப் புலப்பதோர் ஆறு

{ திகழ்கின்ற கடலானது நிலையாய் இல்லாது அலைகளால் மோதப்படுகின்ற குளிர்ந்த கரையையுடைய மன்னா!! தலைவனும் தலைவியும் கூடா விட்டால்
பிரிவுத் துன்பத்தால் உடலில் பசலை உண்டாகும். ஊடல் கொண்டு வருந்தாவிட்டாலோ காமம் சுவையுடையது ஆகாது. எனவே முதலில் கூடிப் பின்பு ஊடுவது
காம இன்பத்துக்குச் சுவை உண்டாவதற்கு ஒரு வழியாகும்}

ஊடல் பிறகு கூடல் – இது வள்ளுவர் பாஃர்முலா
கூடலுக்குப் பிறகும் ஊடல் – இது நாலடியார் தத்துவம்.

ரெண்டும் சேர்ந்தால்…???

முதலில் ஊடல்… பிறகு கூடல் … மறுபடியும் ஊடல்…

இதுதான் நாலும் வேலும் வாழ்க்கைக்கு உறுதி என்கிறேன்
நான்..

ரொம்ப காலம் கடந்த ஞானமோ???