*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 5*
கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….
நஞ்சு அனையான்
*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான் –
என்று சீதை சொல்வதாய் சொல்கிறது கம்பன் வரிகள்.
சோகத்தில் சீதை புலம்பும் இடத்தில் கம்பன் இட்ட வரிகள் இவை. *விடம் போன்றவன்* என்று இராவணனை குறிக்கப் பயன்படுத்திய உத்தி.
தனியே புலம்பும் போது பயன் படுத்துவது என்ன வீரம் இருக்கிறது? இதே வார்த்தையினை திரிசடையிடமே சொல்வதாயும் கம்பன் வீரமாய் படைத்தமை தான் கம்பனின் சிறப்பு.
இதோ அந்த இரு பாடல்களையும் முழுதும் பார்க்கலாம்:
‘வஞ்சனைமானின் பின் மன்னைப் போக்கி, என்
மஞ்சனை வைது,”பின் வழிக் கொள்வாய்” எனா.
*நஞ்சு அனையான்* அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென்இருத்தலும், உலகம் கொள்ளுமோ ? [5351]
பொய் மானுக்குப் பின்னே தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு என் மகனான இலக்குவனை இராமனைத் தேடிச் செல்க என்று பிறகு இழித்துப்பேசி *விடம் போன்ற இராவணனின்* வீட்டை அடைந்த பெண்ணாகிய யான் உயிர் பிழைத்து (இறவாமல்) இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா.
[5351 சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]
திரிசடையிடம் சொன்ன கம்பன் வரிகள் இதோ:
*’நஞ்சு அனையான்*, வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள்,வலம் துடித்த; வாய்மையால்
எஞ்சல; ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;
“அஞ்சல்” என்றுஇரங்குவாய்! அடுப்பது யாது ?’என்றாள். [5103]
பயப்படாதே என்று கருணை காட்டுபவளே! *விடம் போன்ற இராவணன்* காட்டிலே வஞ்சகத்தைப் புரிய எண்ணி (பஞ்சவடியை) அடைந்த அன்று வலப்புற அங்கங்கள் துடித்தன ; (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை தீமை) உண்மையால் உணர்த்தும் இப்போது குறைவில்லாதன இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும் என்னை வந்து அடையும் நன்மை யாது? என்று கூறினாள்.
[5103சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]
*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*
படித்துப் பொழுத்தைக் கழித்து, எங்களையும் படிக்க வைத்து, எங்களது பொழுதையும் கழிக்க வைக்கும்தொண்டு சாலச் சிறந்ததே !
ஓ.எஸ்.ஸுப்ரமணியன்.