குத்துப் பாடல்கள் இப்பொழுது மிகப் பிரபலம். பல்வேறு தொலைக்காட்சிகளிலும், குறிப்பாக டிஜே என்ற பெயரில், கூட்டம் கூடுகின்ற எல்லா இடங்களிலும் இந்தக் குத்துப்பாட்டு அரங்கேறும். இப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சியிலும் இவைகளுக்கு தனி நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். குத்துப்பாடல்கள் என்னவோ இப்பொழுதுதான் வந்தது என்று நினைக்க வேண்டாம். இதற்கெல்லாம் தாத்தா பாடல் எல்லாம் இருக்கிறது. சித்தாடை கட்டிகிட்டு, சிங்காரம் பண்ணிகிட்டு என்ற குத்துப் பாடலும், மச்சானைப் பார்த்தீங்களா? என்று குசலம் விசாரிக்கும் பாட்டாகவும் இருக்கட்டும், தன் இசையால் அனைவரையும் மயக்கி சொக்க வைக்கிறது.
ஒய் திஸ் கொலவெறி? துவங்கி, பத்தலை பத்தலை வரை இளைஞர்களை குறி வைத்தே இப்பாடல்கள் அமைகிறது. பாடல்களின் வரிகளில் இலக்கணம், இலக்கியம் எல்லாம் பார்க்கக் கூடாது. ஆனால் கால்களும் கைகளும் தானாகவே ஆட்டம் போட ஆரம்பிக்க வேண்டும். இது மட்டும்தான் இந்த குத்துப் பாடல்களின் விதி. லாலாக்கு டோல் டப்பிமா அல்லது ரண்டக்க ரண்டக்க இவற்றுக்கெல்லாம் கூகுளில் சென்று தேடி பார்த்தாலும் பொருள் தெரிய வாய்ப்பில்லை. ஆட்டம் போடுவதற்கு இந்தப் பாடல்களின் இசை மிக அவசியமாக இருக்கிறது.
சில சமயங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகள் நம்மை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கும். சபை நாகரீகம் கருதி ஆடுவதைத் தவிர்த்தாலும் கூட, மனதில் ஒரு குதூகலம் இருக்கத்தான் செய்யும். இந்த மாதிரியான குதூகலம் தான் கம்பன் படைத்த இந்த மூன்றாவது சந்திப்பில் நாம் காண இருக்கிறோம். தேவர்கள் முதலில் சிவனிடம் சென்று உதவி கேட்க, அவர் பிரம்மனை நோக்கி கைகாட்ட, பிரம்மனுடன் சேர்ந்து திருமாலை, அவர் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கும் நிகழ்ச்சியைத் தான் நாம் இப்போது காண இருக்கிறோம்.
நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து, அதனால் இன்பம் எய்தும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கனவில் வந்து போவது என்னமோ, கவர்ச்சிக் கன்னிகளாகத்தான் இருக்கும். காதலர்கள் படும் பாடும் பெரும்பாடு இந்த நேரங்களில். காதலன், காதலியை கனவிலேயே சந்தித்து, நேரில் சந்திக்கின்ற இன்பத்தை பெற்ற மாதிரி நினைப்பர். ஒரு காதலன் சற்றே வித்தியாசமானவன். அவன் தேசத்தைக் காதலிக்கின்றவன். மனம் முழுதும் தேச ரதம் இழுப்பவன். அவன் பெயர் பாரதி. அப்போது சுதந்திரம் அடையவில்லை; ஆனால் சுதந்திரம் அடைந்து விட்டோம் என அவன் மனது கும்மியடிக்க சொல்கிறது. சுதந்திரத்தை பாராதே மூடிய அவன் வீரியக் கண்கள், சுதந்திரத்தை கண்டுவிட்டோம் என்று களியாட்டம் ஆனந்த நடனம் புரிந்து இருக்கின்றது.
இதேபோல் சுதந்திர இந்தியாவை வீரத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த சுபாஷ் சந்திர போஸின் கண்களில் 1943 ஆம் ஆண்டிலேயே அப்படி ஒரு கனவு வந்துள்ளது. அதை அந்தமான் நிக்கோபார் தீவுகளில், முதன் முதலாக சுதந்திர இந்தியக் கொடியினைப் பறக்கவிட்டு, அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறான். தந்தையின் விருப்பம் அரசு நிர்வாக அதிகாரி ஆக வெண்டும் என்பது. அதில் தேர்வாகி தந்தையின் விருப்பம் நிறைவேற்றுகிறான். பின் தன் விருப்பம் சொல்லி அதன் பின்னர் தேசத்திற்காக பாடுபட தந்தையின் ஒப்புதலோடு, தேசியக்கொடியை பார்த்தவன் அல்லவா அந்த வீரன்! நேதாஜி அவர்கள் ஆனந்த நடனம் ஆடினார் என்ற தகவல் இல்லை.
அந்தமானில் சிறைச்சாலை வருவதற்கு முன்பு, முழு அந்தமான் தீவே ஒரு சிறையாகத்தான் இருந்திருக்கிறது. அங்கும் பாட்டும் ஆட்டமும் நடந்திருக்கிறது. ஆனால் ஆடியோர் ஆங்கிலேயர். உடன் ஆடியவர் மட்டும் தூத்நாத் திவாரி என்ற வடநாட்டு எட்டப்பன். இதென்ன புதுக்கதை என்கிறீர்களா? வாருங்கள் அப்படியே 1858 ஏப்ரல் மாதத்தை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்.
அப்போது அந்தமான் தீவுகளின் காடுகளில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட கிரேட் அந்தமானிய ஆதி பழங்குடி இருந்தார்களாம். அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வேட்டையாடுதல் தான் அவர்களின் ஒரே தொழில். அந்த வேட்டையாடல் தொழிலுக்கு ஆங்கிலேயர்களின் வரவு தடையாக இருப்பதை உணர்ந்து அவர்களோடு மோதியுள்ளனர். இந்தப் போரில் ஆதிவாசிகள் தோல்வி தான். ஆனால் அதைப் பார்த்து தூத்நாத் திவாரி மட்டும் பரிதாபமாக ஆடிக் கொண்டிருந்தார்.
திறந்தவெளி சிறைச்சாலையாக அந்தமான் இருந்தபோது அங்கிருந்து 130 கைதிகளுடன் தப்பித்து ஓடிய ஒருவர்தான் அந்த தூத்நாத் திவாரி. தப்பித்த கைதிகள் அனைவரும் ஆதிவாசிகளின் அம்புக்கு இறையாகிவிட, இவர் மட்டும் சிறு சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். தப்பித்த அவர், மீண்டும் சிக்கினார். இந்தமுறை அவரின் நல்ல நேரம். மகளிரும் குழந்தைகளுமாய் ஆதிவாசிகள். தூத் என்ற பெயரை ஒட்டி பால் வடியும் முகம் பார்த்து ஆதிவாசிகளின் உள்ளமும் ஏதோ உருகி இருக்கிறது. அந்த கருணையின் காரணமாக அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது அவர் ஆதிவாசி கூட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆதிவாசிப் பெண்ணுடன் திருமணமும் செய்தி வைக்கிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, கண்ணா… ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று கேட்காமலேயே இன்னொரு மனைவியும் தந்திருக்கிறார்கள் அந்த ஆதிவாசிகள்.
இதற்கிடையில் மிகப்பெரிய போராட்டம் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆதிவாசிகள் போரிடத் தயாரான பொழுது, ஏனோ தெரியவில்லை இந்த எட்டப்பன்தான் அந்த தகவலை ஆங்கிலேயர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அம்புகளோடு வந்த ஆதிவாசி மக்களை, துப்பாக்கியால் சுட்டு அழித்து நாசமாக்கியது பிரிட்டிஷ் இராணுவம். அந்தமான் நிக்கோபார் தீவுகளிலேயே மிகவும் அதிகமான அளவில் இருந்த ஆதிகுடிகள் இப்போது மிகவும் குறைந்த அளவாய் ஆக்கியது அயோக்கிய ஆங்கில அரசு. பிரிட்டிஸ் மன்னர்களும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஆடிப்பாடியது ஒருபக்கம் இருக்கட்டும். இங்கே தேவர்கள் எப்படி ஆடிப் பாடுகிறார்கள் என்பதை கம்பனின் பார்வையில் பார்க்கலாம்.
கம்பன் பார்வையில் அப்படி ஒரு சந்திப்பு தென்படுகிரது. ஏன் இப்படி ஆட்டம்? பாட்டம்? என்ன நடக்கிறது அங்கே? நம்ம கையில் இருப்பதே அந்த கம்பன் பாடல் என்ற தொலைநோக்கி தான். அந்தப் பெருமாளைச் சந்தித்த போது அப்படி ஒரு மகிழ்ச்சியாம். தொலைநோக்கு சிந்தனையில் தேவர்கள் ஆடுகிறார்கள் பாடுகிறார்கள்.
ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
சூடினர். முறை முறை துவளத் தாள்- மலர்.
[பாலகாண்டம் – பாடல் எண் – 194]
அசுரர்கள் இறந்து பட்டார்கள் என மனம் மகிழும் பொருமலால் (அத்தேவர்கள்) மகிழ்ச்சி என்னும் தேனைப்பருகி, எதுவும் அறியாதவர்களாய், ஆடியும் பாடியும் அங்கும் இங்குமாய் ஓடினவர்களாக அப்பரமனது துளசி மணக்கும் பாத மலர்களை வரிசை வரிசையாகச் சென்று வணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள். இதன் உட்குத்து (குத்துபாடல் சொன்னதெ இதற்குத்தானே!) ‘பரமனது தரிசனமே தமது துயரைப் போக்கும்’ என்ற நம்பிக்கை இருப்பதனால் துயருக்கே காரணமான அரக்கர் அழிவர் என்ற மகிழ்ச்சி மிகுதியால் ஆடிப்பாடி உவந்தனராம்.
சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…
nice
நன்றி நன்றி