பிரம்மன் சிவன் சந்திப்பு
அந்தமான் தீவிற்கு மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் அவர்களை, பொறியாளர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அவர் வருவதை கேள்விப்பட்டதும் அந்தமான் தீவில் இருந்த தலைமைச் செயலர் அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். யார்? எங்கே? எப்படி? சந்திப்பது என்ற கேள்வி அப்போதும் எழத்தான் செய்தது. அரசு உயர் அதிகாரியான தலைமைச் செயலரை, அவருடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பது தான் மரியாதை என்று ஸ்ரீதர் அவர்கள் சொல்ல, அது ஏற்கப்பட்டது. மெட்ரோ மனிதர் தலைமைச் செயலகத்தில் நுழைந்ததும், தலைமைச் செயலர் அவரே தன்னுடைய அறையில் இருந்து இறங்கி வந்து, மெட்ரோ மனிதரை வரவேற்றது மனதை நெகிழ வைத்தது. சிறப்பான செயல்கள் செய்தற்கு உரிய மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது என்பதை உணர வைத்த தருணம் அது.

இதே போல் இன்னொரு முறை மத்திய இணையமைச்சர் அந்தமான் வந்த போது, ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை எந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்வது என தீர்மானம் செய்வதே பெருபாடாய் இருந்தது. ஓர் அலவலகத்தில் நட்த்தினால் அது அவர்களுக்கு சாதகமாகவோ, மற்றவர்களுக்குப் பாதகமாகவோ அமைந்துவிடும் என நினைப்பதால் வரும் சிக்கல்கள் இவை.
ஆனா கம்பன் காட்டும் சந்திப்புகள் வித்தியாசமானவை. இங்கே பொதுநலன் மட்டுமே மேலோங்கிநிற்கும். மற்றபடி புரோட்டோகால் போன்றவை எல்லாம் பின்னாடி வாய் மூடிக் கொண்டு நிற்கும். அப்படி ஒரு சந்திப்பு தேவர்களுடன், பிரம்மன் சந்தித்ததை கம்பன் சொல்லியதைப் பார்ப்போம்.
தேவர்கள் அனைவரும் அசுரர்களின் கொடுமையிலிருந்து தம்மை மீட்க வேண்டி சிவனை வேண்ட, சிவபெருமான் பிரம்மனிடம் அழைத்துச் செல்கிறார். இந்த இடத்தில் தேவர்கள் நிச்சயமாக ஏதோ சிந்தித்து இருப்பார்கள். சிவபெருமான் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டியபோது அவரின் உச்சியினைக் காண இயலாது தோற்றவர் அந்த நான்முகன். அதனால் பொய்யாக அங்கு மேலிருந்து கீழ் வந்து விழுந்த தாழம்பூவை கையிலெடுத்து, காணாததைக் கண்டது போல் சொன்ன கதை நிச்சயமாக நினைவுக்கு வந்திருக்கும். அத்தகைய பிரம்மனை வரவழைத்துக் கூட பேசியிருக்கலாம் இந்த சிவபெருமான். ஆனால் அசுரர்களின் செயலின் கடுமை கருதி, சிவனே பிரம்மனை நோக்கி செல்கிறார். பிரம்மனும் அதனைப் புரிந்துகொண்டு தன்னிடம் அவர் வருதல் தகாதென்று, ஆலோசனை மண்டபமாக இந்த காலத்தில் கான்ஃபரன்ஸ் கால் என்று சொல்கிறோமே அதுபோன்ற இடத்தில் சந்திப்பு நிகழ்கிறது.
தேவர்களின் நினைப்பு அந்தமானில் இருக்கும் இந்தப் பாமரனுக்கே புரியும் போது, அந்த சிவபெருமானுக்கு தெரியாமலா இருக்கும்? ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று நோயாளியை காட்டுவதற்கு முன்பாக அந்த மருத்துவர் செய்த சிகிச்சையின் பலனாக இன்னார் இன்னார் நலம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லி, நோயாளியின் மனதைத் திடப்படுத்த வார்களே! அதுபோலவே தேவர்களின் மனதை திடப்படுத்து வதற்காக, பிரம்மாவைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி அந்த அவையில் சந்திப்புக்கு முன் சிந்திக்க வைக்கிறார்.
தேவர்கள் முழுவதும் பயப்படுவது அசுரனான இராவணன் மீது தான். ஆனால் இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரசித்தன் எனப் பின்னர் பெயர் பெற்றவன்) இந்திரனையே கயிற்றால் கட்டி, கூட்டிச் சென்றபோது அவரை மீட்டு கொண்டு வந்தவர் இந்த நான்முகன். இப்படி சொன்னவுடன் தேவர்கள் மகிழ ஆரம்பித்தனர். இராவணன் மகனையே வென்றவர். அப்போ வயதான இராவணனையும் வென்றிடுவார் என நினைத்து மகிழ்ந்தனர் உம்பர்கள். புரோட்டாகால் மீறுவதில் தவறில்லை என்றும் நினைஹ்திருப்பர்.
கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு இந்த புரோட்டாகால் மீது மிகப்பெரும் வெறுப்பு இருந்திருக்கிறது. ஏழை தியாகி ஒருவர் தன் வீட்டு திருமணத்திற்கு பத்திரிக்கை நீட்ட, அன்று முக்கியமான வேலை இருக்கு என மறுத்து விட்டாராம். ஆனால் எந்தவித அறிவிப்புமின்றி திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்தாராம். பொது நலன் மட்டுமே முக்கியம் என வாழ்ந்தவர் அவர்… ம்…. ஏக்கமெல்லாம் விட்டு விட்டு, நம் கம்பன் பாடல் பார்த்து சந்தித்ததை சிந்திப்போம்.
வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.
[பாலகாண்டம் – பாடல் எண் – 188]
மேருமலையின் சிகரத்தின் மத்தியிலே குற்றமற்ற ஒளிமிகுந்த மணிகளாலமைந்த மண்டபத்தை அடைந்து (அங்கு வந்து சேர்ந்த) பிரமனை அடிவணங்கி தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கரது இடிபோன்ற அக்கொடும் செயல்களை சொல்லலானான்.
பாகசாதனன்தனைப் பாசத்து ஆர்த்து. அடல்
மேகநாதன். புகுந்து இலங்கை மேய நாள்.-
போக மா மலர் உறை புனிதன்.- மீட்டமை.
தோகைபாகற்கு உறச் சொல்லினான்அரோ.
[பாலகாண்டம் – பாடல் எண் – 189]
(இராவணனது மகனாகிய) வலிமை மிகுந்த மேக நாதன் (இந்திரசித்து) எனுமரக்கன் (அமராவதி நகரக்குள்) புகுந்து, தேவர்கள் தலைவனான இந்திரனைக் கயிற்றால் கட்டி இலங்கைக்குக் கொண்டு போன போது இன்பம். தரும் அழகிய தாமரையில் வாழும் புனிதனாகிய பிரமன்தான் அந்த இந்திரனை மீட்டுவந்ததை உமையொருபாகனாகிய சிவபெருமானுக்குப் பொருந்த எடுத்தியம்பினான்.
சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி
15-07-2022.