சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை. இப்படி ஒரு திரைப்பட பாடல் வரும். திரைப்படங்களில் வரும் காதலில் வேண்டுமென்றாலும் இது சாத்தியமாகும் ஆனால் ஒவ்வொரு சந்தித்த வேளையிலும் சிந்திக்க வைப்பவர் நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பரின் இரு பாத்திரம் மற்ற பாத்திரங்களை சந்திக்கும் போதெல்லாம் எப்படி நம்மைச் சிந்திக்க வைக்கிறது என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.
இந்தவகையில் கம்பராமாயணத்தில் வரும் முதல் சந்திப்பு உம்பர்களுடன் சிவபெருமான் சந்திப்பு. (உம்பர்கள் – தேவர்கள்; உம்பர்கட்கரசே என்று மாணிக்கவாசகர் பாடியதை நினைவில் கொள்க).
சிவபெருமான் தியானத்தில் இருக்கிறார். அப்படித்தான் அவர் நம் கண்ணுக்குத் தெரிந்தவரையில். ஆனால் அவரோ வேறு ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ஒரு பின்னோக்கு பயணத்தில் இருந்தார். முகத்தில் லேசான ஒரு புன்னகை.
தன்னிடம் வாங்கிய வரத்தை வைத்து தன்னையே, சோதிக்க முனைந்த ஒரு சிவனடியாரும் அசுரனுமாகிய பஸ்மாசுரனைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். பக்தி என்று வந்துவிட்டால், அதில் அடியார்களுடைய தவ வலிமையை மெச்சி அவர்களுக்கு வரம் கொடுத்து மகிழ்ந்த நேரங்களை சிந்தித்துக் கொண்டிருந்தார். தன் தலை மேல் கை வைத்தாள் எரியுமா? என்று சோதனை செய்து பார்க்க முயன்ற அந்த அசுரனின் வரத்தை எண்ணிப் பார்த்து சிரிக்கிறார். அப்பொழுது மோகினியாக உருவெடுத்து தன் தலை மேல் கை வைத்து அழிந்து போகச் செய்தது மகாவிஷ்ணுவை நினைத்துப் பார்க்கிறார் நன்றியுடன்.
ஏன் இப்படி திடீர் என்று இந்த எண்ணம் சிவபெருமானுக்கு? தேவர்கள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணம் அவர் அறியாத்தா என்ன!! இராவணன் என்ற அசுரன் தங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார் அவரிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொண்டு வந்திருந்தனர். வரம் கொடுத்தவரே சிவனே என்று உட்கார்ந்திருக்க, மற்றவர்கள் அலறிக் கொண்டிருந்தது தான் வேடிக்கை. கொடுத்த வரத்தை எப்படி திரும்பப் பெற முடியும்? சாபம் என்று ஒன்று இருந்தாலாவது சாபவிமோசனம் கிடைக்கலாம். ஆனால் சிவன் தந்தது வரமும் ஆயிற்றே!
நாட்டு நடப்பு ஒன்றைப் பார்த்துவிட்டு வரலாம். ஒரு செல்வந்தர் இருக்கிறார். அவரிடம் ஒரு தெரிந்தவர், ஒரு பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்குகிறார். கடனாக பெறும்போது அந்த அன்பருக்கு பத்தாயிரம் ரூபாய் மிகப்பெரிய தொகையாக தெரிகிறது. ஆண்டுகள் பல கழிகின்றது வட்டியுடன் தருவதாகத் தான் பேச்சு. ஆனால் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் அவருக்கோ துளியும் இல்லை. மறைமுகமாக அந்த செல்வந்தர், பிறர் வாயிலாக விசாரித்தபோது பத்தாயிரம் ரூபாய் எல்லாம் ஒரு செல்வந்தருக்கு என்ன பெரிய தொகையா? என்று கேட்டதாய் தகவல் வந்தது.
வட்டி தருவதாக வாங்கியவரிடமே திருப்பி போய் கேட்பது எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிகமான அளவு சங்கடம் அல்லவா வரம் கேட்டவரிடமே போய் வரத்தை திரும்ப பெறுவது. அதுதான் தர்மசங்கடத்தில் சிவபெருமான்.
சரி இன்னொரு நாட்டு நடப்புக்கும் வரலாம். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட்து. அந்த தீர்ப்பை எதிர்த்து அதை விட உயரிய உச்சநீதிமன்றத்தில் போய் முறையீடு செய்கிறார்களே! அப்படி செய்ய இயலுமோ?
அதற்கும் முன்பாக, ஒரு சமரசம் போவதற்கான வழிகளும் தான் கடைபிடித்து வருகிறார்கள். சமரசம் பேசுவதற்கு ஏதாவது ஒரு சொந்தக்காரர் இருந்தால் நல்லது என்று பட்டிருக்கிறது சிவபெருமானுக்கு. ஒரு தாத்தா சொன்னால் பேரன் கேட்பார் என்று நினைத்திருப்பாரோ? அதனால்தான் இராவணனுக்கு தாத்தா உறவுமுறை ஆகிய பிரம்மனிடம் சென்று முறையிடுங்கள் என்று சிவபெருமான் தேவர்களிடம் சொல்லியதாக கம்பர் சொல்கிறார். கம்பர் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான காரணங்கள் கம்பன் சொல்லாதது. என்னுடைய கற்பனையில் உதித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். பிரம்மனின் பேரன் தான் இராவணன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். குபேரன் கூட இராவணணின் சகோதர உறவு தான். நம்பமுடியலையா? குடும்ப வாழையடி வாழைப் படம் பாருங்கள்.

சரி அப்படியே அந்த கம்பர் நிகழ்த்திய முதலாம் சந்திப்பு பாடலை இரசித்து விட்டு மேலே செல்லலாம்.
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்.
[பாலகாண்டம் – பாடல் எண் – 186]
சுடுகின்ற தொழிலை உடைய அரக்கர்களால் வானுலகில் வாழும் தேவர்கள் வாழ்வறிந்து நஞ்சுதங்கிய மிடற்றை உடைய சிவபெருமானது பாதங்களை அடைந்து தமது துன்பத்தைக் கூறலும், மேலே நிகழவேண்டியவைகளை முன்னரே உணர்ந்துள்ள அப்பெருங்கடவுளான சிவபெருமான் இனி யான் அரக்கருடன் போர்புரிய மாட்டேன் என மறுத்து உரைத்து நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.
இதே போன்று அடுத்த சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு உங்களை பின்னர் அழைத்துச் செல்கிறேன்.
சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி
10-07-2022.
dear Krihnamoorthi
thanks for sharing i read in thumbi just now and copied the article
from dear Ara
மிக்க நன்றி
நன்றி நன்றி