வியப்பூட்டும் விஐபி – 36
அந்தமானில் பிரபலங்களை அழைத்து விழா நடத்துவது உண்டு; பிரபலங்கள் வேறு வேலையாக இங்கு வந்திருக்கும் போதும் விழா ஏற்பாடு ஆவதுண்டு; விழா நடைபெறும் போதே, வேறு பிரபலம் வந்திருந்தால், அவர்களையும் மேடை ஏற்றுவதுண்டு.
இப்படி மூன்றாவது வகையில் அந்தமான் வந்த நடிகர் நெப்போலியன் அவர்களை மேடை ஏற்றியது தமிழர் சங்க அரங்கம்.

அவர் பேச ஆரம்பித்தார். ”தாயே தமிழே தரணி ஆளும் தங்கமே….” என்று மூச்சு விடாமல் மூன்று நிமிடம் அழகு தமிழில் அந்தக்காலத்து எதுகை மோனை எல்லாம் வைத்து, யாரும் எதிர்பார்க்காமல் பேசி எல்லார் கை தட்டலும் பெற்றார்.
ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் கிராமிய மணம் கமழும் தமிழ் பேசியதையே கேட்டுப் பழக்கப் பட்ட நமக்கு அந்த தீந்தமிழ் வியப்பாய் பட்டது.
”இப்படி எல்லாம் பேசணும்னா யாராவது இப்படி நல்லா எழுதிக் கொடுதாத்தான் உண்டு” என்றபடி ஒரு பேப்பரை எல்லார் முன்பும் காண்பித்தார். பின்னர் சாதரணமாய் கிராமியத் தமிழில் பேச்சினைத் தொடர்ந்தார்.
அரங்கினில் கிடைத்த கை தட்டலுக்கு, தான் காரணம் இல்லை, அந்த பேப்பரில் எழுதித் தந்தவர் தான் என்பதை வெளிப்படையாக மேடையிலேயே ஒப்புக் கொண்ட குணம் வியப்பாய் இருந்தது.
இரவு உணவு விருந்துக்கு அசைவம் ஒரு பிடி பிடித்தார். ”அந்தமானில் மீன் உணவுகள் அதிக சுவையோடு இருக்கின்றன. சாப்பாடு இல்லாமல் அவனவன் சாவுறான். நாம் சாப்பிட என்ன வெக்கப் பட வேண்டி இருக்கு? நல்லா திருப்தியா கேட்டு வாங்கி சாப்பிடுங்க…” என்றார் பக்கத்து இலை மீனாக.
ஒரு பிரபலம் என்பதனையும் மீறி திரு நெப்போலியன் அவர்களது எளிய, மனதில் பட்டதைச் சொல்லிய விதம் எல்லாமே வியப்பாய்த் தான் இருந்தது.