வியப்பூட்டும் விஐபி – 35
கம்பன் கவிமழையில் நனையும் போது, அச்சாரலில் சில நட்புகள் கிடைக்கும். அவற்றுள் ஒருவர் தான் பேராசிரியர் இராசேந்திரன் அவர்கள். சென்னை கிருஸ்தவக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணி புரிந்து, இப்போதும் அதே தமிழ்ப்பணியினை தனது வீட்டு மாடியில் தொடரும் தமிழ் ஆர்வலர்.
கம்பராமாயணத்தில் உவமை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

வீட்டினுள் நுழைந்தால் ஏதோ நூலகத்தில் நுழைவது போன்ற உணர்வு. எங்கு நோக்கினும் நூல்கள்…. நூல்கள்…. நூல்கள்.
இயற்கை விவசாயம், விவசாயிகள் போராட்டம் என கோஷம் எழுப்பி விட்டு, பிளாஷ்டிக் பாட்டிலில் தண்ணீர் கேட்கும், போலி இயற்கை ஆதரவாளர்கள் மத்தியில், நொச்சி இலை மூலம் கொசு விரட்டுவதும், நிலக்கடலை, எள் போன்றவை கொறிப்பான்களாகவும் தந்து, சுக்கு, மிளகு மல்லியில் தேநீர் தந்து உபசரித்ததும் வியப்பாய் இருந்தது.
”இலங்கையில் ஈழத்து தமிழர்கள் இப்படி, இயற்கை சார்ந்து வாழ்கிறார்கள். இவை வெளி உலகம் அறிந்தால் தங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வியாபாரம் நடவாதே என்ற காரணமும் ஈழத்தமிழ்ர்களுக்கு எதிராய் உலகம் ஒன்று திரண்டமைக்குக் காரணம்” என்கிறார்.
”தமிழில் இல்லாதவைகளே இல்லை” என்கிறார். ”காலை எழுவது முதல், இரவு உறங்கப் போகும் வரை எல்லாவற்றிலும் மகிழ்வாய் இருப்பதின் விதிகளை தமிழன் கண்டு பிடித்து வைத்துள்ளான். ஆனால் நாம், அன்னிய மோகத்தின் பிடியில் சிக்கி மீள முடியாமல் இருக்கிறோம்” என்பதை வருத்தமுடன் கூறுகிறார் பேராசிரியர் இராசேந்திரனார்.
தனது வீடே தமிழ் ஆய்வாளர்களுக்கு உதவும் ஆய்வுக் களமாய் மாற்றி வைத்திருப்பதும் வியப்பைத் தான் தருகின்றது.
ஒரே சந்திப்பில் எத்தனை வியப்புகள்!! அத்தனையும் தந்தவர் முனைவர் பேராசிரியர் இராசேந்திரன் அவர்கள்.
தொடரும் அடுத்த விஐபி திரைப்பட நடிகர் நெப்போலியன்