வியப்பூட்டும் விஐபி – 42
புகழ், பதவி, பெயர் வந்தால், அதனை உதறித்தள்ளவோ, அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கவோ எத்தனை நபரால் முடியும்? அந்தமானில் இப்படி ஒரு உதாரண மனிதராய் இருந்து, ’என் கடன் தமிழ்ப் பணி செய்து கிடப்பதே’ என இருந்தவர் தான் புலவர் சி சக்திவேல் அவர்கள்.

2005 வாக்கில் ஒரு முறை அவருக்கு ஒரு சான்றிதழ் தமிழில் தேவைப்பட்டுள்ளது. அந்தமானில், கம்ப்யூட்டரும், பிரிண்டரும் சிலர் மட்டுமே வீடுகளில் வைத்திருப்பர். அதிலும் தமிழ் உபயோகம் செய்பவர், மிகக் குறைவாயும் இருப்பர். என்னால், தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்பதால் என் வீட்டிற்கு வந்தார்.
அவர் எதிர்பார்த்தபடியே சான்றிதழ் அமைந்தது. கீழே இடப்பக்கம் செயலர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் எனவும் வலப்பக்கம், தலைவர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம், அவர் சொல்படியே செய்தேன்.
செயலர் என்பதற்கு மேல், தனது பெயரான சி சக்திவேல் என வரட்டும் என்றார். ”நீங்கள் தலைவரல்லவா? செயலர் என்றல்லவா தட்டச்சு செய்யச் சொல்கிறீர்கள்?” இதற்குப் பதில் சொல்லுமுகமாய், ”தலைவர் என்பதன் மேல் சென்று, கிருஷ்ணமூர்த்தி என இருக்கட்டும்” என்றார்.
நான் அவரைப் பார்த்தேன். ”இனிமேல் இப்படித்தான்” என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அன்று முதல் இன்று வரை அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைமைப் பொறுப்பு என் வசமே இருக்கிறது.
பதவியினை விட்டு தந்த தகைமை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தும் திறன், அடுத்த தலைமுறையினை தமிழ் பால் ஈர்க்க செய்திட்ட முயல்வுகள், பிழை இல்லாமல் பேச, எழுத, பயிற்சிப்பட்டறை இப்படி பல தமிழ்ப்பணிகளை ஆற்றிய பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், ஓவியரும் புலவருமான சி சக்திவேல் அவர்களை நினைத்தால், வியக்காமல் இருக்க முடியவில்லலை.