வியப்பூட்டும் விஐபி – 38
அந்தமான் நிகோபார்த் தீவுகளின் தென் கோடித் தீவுதான் கிரெட்நிகோபார். இந்தியாவின் இறுதி முனை இத்தீவில் தான் இருக்கிறது. கன்யாகுமரியை விட கீழே இருக்கும் இந்திய தீவுப் பகுதி இது.
அந்தத் தீவில், 1987 புத்தாண்டு துவக்கத்தில், பொங்கல் விழா கொண்டாட, அதுவும் ஒரு நாடகம் நடத்தலாமென அழைப்பு வந்தது. 10 பேர் மட்டுமே உட்கார முடியக் கூடிய சிறு அறையில் 10 பேர் கூடினோம்.
அமைப்பாளர் ரொம்பக் கறாரான பேர்வழியாய்த் தெரிந்தார். நாடகக் கதை சொல்லி விட்டு, ”யாருக்கு எந்தப் பாத்திரம் என்பதை நான் தான் முடிவு செய்வேன்; அதை அவரவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார். அனைவரும் ஏற்றனர். எனக்கு தமிழாசிரியர் வேடம்;
அத்தீவில் நடந்த முதல் நாடகம் அது. மிகப் பெரிய வெற்றியினைத் தந்தது. நாடகக்கதை வசனம் பாடல்கள், இசை, என எல்லாம் செய்த அந்த அமைப்பாளர் தான் காரா என்ற எஸ்பி. காளைராஜன் என்ற ஒரே நபர்.

ஆண்டுகள் கடந்தன. தொழிற்சங்க தலைவர் என்ற ஒரு முகம், சத்யசாய் பெயரில் ஆன்மீகத்துடன், தேவைப்படுவோர்க்கு சேவைகள் செய்வது, மரபுக் கவிதைகள் எழுதுவது என பல முகங்களாய் வளர்ந்து நிற்பது தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன் கப்பலில் சந்திப்பு நிகழ்ந்தது. 20 நிமிடங்களில் ’வெண்பா எழுதுவது எப்படி?’ என்பதை அன்பா(க) விளக்கிவிட்டார் அந்தப் பொறியாளத் தோழர், அருள்மிகு காளைராஜன் அவர்கள்; வியக்காமல் இருக்க முடியவில்லை
இப்படியான பன்முகத்திறத்தினைக் கண்டு.
சமீபத்தில் இவரது ‘கவிதை இலக்கணமும் கணினியும் (பைனரிடிஜிடல் முறையில்)’ என்ற நூலினையும் வெளியிட்டு ’எழுத்தாளர்’ என்ற முகமும் காட்டி வியப்படைய வைத்துள்ளார்.
தொழிற்சங்க போராட்ட குணம் மேற்கு எனில், ஆன்மீக முகம் கிழக்கு; இலக்கண மரபோடு கவிதை வழங்கல் வடக்கெனில், கணிய முறை ஆய்வு தெற்கு. இப்படி எப்பக்கம் பார்த்தாலும் வியப்பாய் ஒரு ராஜன்தான், இந்தக் காரா என்ற எஸ்பி காளைராஜன்