வியப்பூட்டும் விஐபி – 33
அந்தமான் துறைமுகத்தில் பயிற்சிப் பொறியாளனாக (வடிவேலு பாஷையில் அப்ரசண்டிகள்) வேலைக்குச் சேர சென்னையில் நேர்முகத் தேர்வு நிகழ்ந்தது. ஒரு கேள்வி கேட்டார்கள் , ”கேம்பல்பே – தீவுக்கு வேலைக்கு வருவீகளா?”
”அந்தமானுக்கே போவதா முடிவுசெஞ்சாஞ்சி! கேம்பல்பே என்ன? வருவேன்” – இப்படிச் சொல்லாமல், தலை மட்டும் அசைத்தேன்.
அந்தமானுக்கு மூன்று நாள் பெரிய கப்பலில் பயணம் செய்து, போர்ட் பிளேயர் சென்று, மீண்டும் மூன்று நாள் சிறிய கப்பலில் பயணம் செய்தால் தான் கேம்பல்பேக்கு சென்று சேரலாம் எனப் பின்னர் தெரிவித்தார்கள்.
“கக்கன் யார் என்று தெரியுமா?” அடுத்த கேள்வி வந்தது. ”கேள்விப்பட்ட மாதிரி இருக்கு முழுசா தெரியலை” – இது நான்
ஓரிரு மாதத்தில் கேம்பல்பே தீவில் பயிற்சிப் பொறியாளனாய் சேர உத்திரவு வந்தது. அந்தமானில் அரசுப் பணிக்குச் சேர்ந்தேன் 1986 மே தினத்தன்று.
இண்டர்வியூ செய்து தேர்வு செய்த அதிகாரியான திரு சிவசாமி அவர்களை அந்தமானில் மரியாதை நிமித்தமாய் பார்க்கச் சென்றேன். ஞாபகம் வைத்து மீண்டும், ”கக்கன் பத்தி கேட்டப்போ, தெரியாமெ முழிச்ச அந்தப் பையன் தானே? இப்பொவாவது சொல்லு ஏதாவது தெரியுமா?” நல்ல வேளையா இண்டர்வியூக்குப் பின்னர், கொஞ்சம் படிச்சித் தெரிஞ்சி வச்தெச் சொன்னேன்.

தன் மனைவியை அழைத்து அறிமுகம் செய்தார் அந்த அதிகாரி;
“அந்தக் கக்கன் பெற்ற மகள் தான் இவர்”
மரியாதையுடன் வணங்கி விடை பெற்றேன்.
நேர்மையான போராட்ட வீரர் கக்கன் அவர்களின் உறவுகளோடு, நான் அரசு வேலை துவங்கப் போகிறேன் என்ற வியப்போடு என் அரசுப் பயணம் துவங்கியது.
கக்கன் என்றது தொடர்ந்து வரும் பெயர்… காமராஜர்.
அப்பொ அடுத்த விஐபி கர்மவீரர் காமராஜர்
காத்திருக்கவும்.