சரசுவதி இராமநாதன்

திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் காப்பியத் தமிழ் மாநாடு அந்தமானில் நடந்தது (29-04-2012). அதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்த பல தமிழறிஞர்களில், திருமதி சரசுவதி இராமநாதன் அவர்களும் ஒருவர்.
விழா மேடையில் அவரது பேச்சுகள் முடிந்த பின்னரும், சிறு சிறு குழுவோடு உரையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது. இலக்கியம், ஆன்மீகம், இசை, சினிமா, கண்ணதாசன், கம்பன், வாலி இப்படி பல தளங்களில் ஓடிக் கொண்டிருந்தது அந்த உரைகள்.
நான் அமைதியாய் எல்லாம் கேட்டபடி இருந்தேன். என் அமைதி பார்த்து,
”என்ன ஏதும் பேசாமெ இருக்கீங்க?” அவரே கேட்டார்..
”ஒன்றும் இல்லை, கம்பனின் பாடல்களை எளிமைப்படுத்தி நகைச்சுவை கலந்து எழுதி இருக்கேன்”
”எங்கே பாக்கலாம்….”
ஐ பேடில் கடை விரித்தேன்.
”நல்லாத்தான் இருக்கு… இப்படி யாரும் கம்பனை பாக்கலையே… புத்தகமா போடுங்களேன் நானே அணிந்துரை தாரேனே…”
சென்னை சென்றதும் மறக்காமல், கம்பராமாயண சுந்தர காண்டம் அனுப்பி வைத்தார். கம்பனை கலாய்த்து எழுதிய ‘பாமரன் பார்வையில் கம்பன்’ என்ற என் நூலுக்கு சொன்னபடி அணிந்துரையும் வழங்கினார்.
தமிழகம் தாண்டி, ஒரு புதிய எழுத்தாளனுக்கு, அதுவும் மரபை மீறி கம்பனை எழுதும், இலக்கியத் தொடர்பே இல்லாதவனுக்கு, இவ்வளவு உற்சாகமூட்டிய சரசுவதி இராமநாதன் அவர்களின் தமிழ் உணர்வு வியப்பைத்தான் தருகிறது.
தொடரும் அடுத்த விஐபி பெரியார்தாசன்