எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.
ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.
இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.
அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?
குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…
இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”
இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..
மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..
சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.
ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…
அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???
அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…
குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.
என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?
வந்துட்டங்கய்யா வந்துட்டாங்க. நல்ல பதிவு நண்பரே. தொடருங்கள் பின் தொடர்வோம்.
நன்றி ஐயா… உங்களை மாதிரி தொடர்பவர்கள் இருக்கிறவரைக்கும் நான் நிச்சயம் தொடர்வேன்…