மூக்கறுப்பது எங்கள் குலம்…


கவிதையே பாடலாக என்று ஒரு குறுந்தகடு வெளி வந்தது. வைரமுத்துவின் கவிதைகளை அவர் மேடையில் படிக்க, கலைஞர்.. வாலி.. போன்ற ரசிகர்கள் முன்னிலையில் அதையே பாடலாய் பிரபல பாடகர்கள் பாடி வலம் வரும் இசைத் தொகுப்பு தான் அது. அதில் மதுரையினை மாமதுரை என்று, கலைஞரை புகழ்வது போல் புகழ்ந்து தள்ளிவிட்டு கடைசியில் வைகை வற்றிப் போனதையும், ரசிகர் மன்றம் அதிகமானதையும், ஜாதிச்சண்டைகள் அதிகமானதையும் சோகமாய் தந்திருப்பார் கவிதையாகவும் பாடலாகவும்.

காதலும் வீரமும் தான் தமிழனின் உடன்பிறவா உடன்பிறப்பு. அப்பொ, ’மதுரைக்கும் வீரத்திற்கும் தொடர்பு இருக்கா? இல்லையா?’ என்ற பட்டிமன்றம் வைத்தாலும் ரெண்டு பக்கம் பேசவும் அதே மதுரைக் காரங்களைத் தான் கூப்பிடனும். மதுரையில் பெண் எடுத்த எனக்கு, மதுரையின் வீரம் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும்.

அந்தக் காலத்து ஏபி நாகராஜன் இயக்கத்தில் வந்த திருவிளையாடல் படத்தில் வந்த டயலாக் ஒன்று, அநியாயத்துக்கு இப்பொ ஞாபகத்துக்கு வந்து நிக்குது. சும்மா சொல்லக்கூடாது தமிழன் தைரியமானவன் தான். ஆனா அந்த மதுரைக்காரத் தமிழன், கடவுள் கிட்டேயே தன் தைரியத்தைக் காட்டியவர். ஆனா சந்தடி சாக்கில் சாமிக்கே குலம் பத்தி பேசி, குழப்பும் தைரியசாலிகள். அப்படத்தில் நக்கீரன் பாத்திரம் வழியாய் வரும் டயலாக் தான் நான் சொல்ல வருவது. “சங்கறுப்போர் எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம், உன் போல் இரந்துண்டு வாழோம்…” இப்படி கடவுளுக்கே சவ்டால் விடும் தைரியம் நம்மாட்களை விட்டால் வேறு யாருக்கும் வராது. உண்மையில் நக்கீரன் அப்படிச் சொன்னாரா? அல்லது ஏபிஎன் விட்ட சரடா?

லேசா கிளறித்தான் பாக்கலாமே என்று பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (எஸ் எஸ் மாத்ரு பூதேஸ்வரன் எழுதியது) புரட்டிப் பாத்தேன். தருமிக்கு பொற்கிளி அருளல், கீரனைக் கரையேற்றிடல், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்திடல் என்று மூன்று திருவிளையாடல்கள் ஒட்டித்தான் அந்த நாகேஷ் சிவாஜி புராணம் செய்யப்பட்டிருக்கின்றது. சினிமாவில் வீராப்பாவாய் காட்டப்படும் நக்கீரர் உண்மையில் அப்படித் தெரியவில்லை. தமிழ் இலக்கணம் சரியா தெரியாத காரணத்தால் சிவனை எதிர்த்ததாய் வருகின்றது.

சிவனின் கோவத்துக்கு இன்னொரு சூப்பர் காரணம் சொல்கிறார்கள். ஒரு சமயம் தேவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் வந்து நிக்க, கொடெ சாஞ்சி போச்சாம் பூமி. அப்போ அகத்தியரை நிமித்த அனுப்பினாராம் சிவன். லாங்குவேஜ் பிராப்ளம் வராமெ இருக்க தமிழ் இலக்கண கிராஷ் கோர்ஸ் எடுத்து அனுப்பப் பட்டாராம். இப்படிப்பட்ட தமிழ் யுனிவர்சிட்டியின் வைஸ் சான்ஸ்லர் – விசி எழுதின பாட்டை வீசிட்டு குத்தம் சொன்னா, விடுவாகளா?? அப்புறம் அதே அகத்தியரை டியூசன் மாஸ்டரா ஆக்கி நக்கீரர்ருக்கு நல்ல தமிழ் சொல்லிக் கொடுத்து, ஏற்கனவே எழுதின பாட்டெல்லாம் திருத்தி எழுதினாராம்.. சூப்பரா இருக்கில்லெ கதை…

எதுக்கு இவ்வளவு வருஷம் கழிச்சி இந்த மேட்டர் எல்லாம் தோண்டி எடுத்து ஏன் பழைய ஆட்களின் மூக்கறுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? சும்மா இந்த மூக்கறுப்பு பத்தி இராமயண ஆச்சாரியர்கள் கம்பரும் வால்மீகியும் எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று ”பர்வால்” இராமாயணம் என்று நானும் கொஞ்சமாய் சரடு விடத்தான். (இதெ எழுதவே இப்படி நீட்டி முழக்குறப்போ, எத்தனை நூற்றாண்டு காலமாய் தொடர்ந்து வரும் தொடர்கதையில் அப்படி இப்படி மாற்றங்கள் இல்லாமலா இருக்கும்??) அதை சொல்லத்தான் இவ்வளவு சுத்தி சுத்தி வர்ரேன்.

தாடகை இருக்கும் வனத்திற்கு அழைத்து வருகின்றார் விசுவாமித்ரர் இராம இலட்சுமணர்களை. அந்த வனத்தின் பெயரே தடகாவனமாம். (காரணப் பெயராய் இருக்குமோ?). சிங்கம் புலி எல்லாம் வாழும் செம காடு என்கின்றார் வால்மீகி. நம்ம கம்பர் அதை லேசா மாத்திவிட்டு, மருத நிலமாய் (வயலும் வயல் சார்ந்த இடமாய்) இருந்தது இப்போது பாலை நிலமாய் மாறியதாய் கவிதை பாடுகின்றார். அப்படி மாற்றியவள் தாடகை என்பதையும் கம்பர் சொல்லத் தவறவில்லை. “.. கேடி இலா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினாள்” – இது கம்பர் வாசகம்.
தாடகையைக் கொல்ல வேண்டும் என்று விசுவாமித்ரர் சொன்னதும், ஒரு பெண்ணைக் கொல்வதா என்று யோசித்தாலும், அவள் வரும் எப்பெக்டைப் பாத்ததும் கொஞ்சம் மனசு இரங்கி (அல்லது மேலே போய்..) ”சொன்ன பேச்சு கேக்காட்டி காது மூக்கை அறுத்து கையிலெ கொடுத்திடலாம்” என்று இராமன் திருவாய் மலர்ந்தருளியதாய் வால்மீகியின் ஆக்கத்தில் வருகின்றது. முற்றிலும் ராமனைக் கடவுளின் அவதாரம் என்று காட்ட நினைத்த கம்பரின் வார்த்தையில் இந்த டயலாக் மிஸ்ஸிங்.

அப்படிச் சொல்லிய போதும் தாடகை கற்களையும் பாறைகளையும் ஆகாயத்தில் பொழிந்தாள் என்பதாய் வால்மீகி லேசா டச் செஞ்சிட்டு தவம் செய்யப் போய்விடுகிறார். ஆனா கம்பர் அதை அப்படியே பின்னிப் பெடலெடுத்துக் காட்டுகின்றார். தாடகை, மலைகளையே பரல்களாய் கோர்த்த சிலம்பு அணிந்தவளாம். அவள் நடந்தால், தரையே நெளியுமாம். அந்தக் குழிகளில் கடல் நீர் பாயுமாம். எமனே இவளைப் பாத்தா ஓடியே போவானாம். இவளின் வேகத்தால் மலையெல்லாம் கூட இவளோடு சேர்ந்தே வருமாம்.. எப்படி?? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. கம்பரோடு சேர்ந்து.

நமக்கெல்லாம் மூக்கறுத்தது சூர்ப்பனகை வரும் போது தான் தெரியும். அதுவும் இலக்குவன் செய்தது என்று. (இது பற்றிய அலசல் அப்புறமா வச்சிக்குவோம்). தாடகை வதம் நேரும் பொது மூக்கை அறுப்பேன் என்று சூளுரைத்த்து என்னவோ இராமர் தான். ஆனால் அதை நடைமுறைப் படுத்தியது உடன்பிறப்பான இலட்சுமணன் தான். இராமனைக் கொல்ல வந்தபோது இலட்சுமணன் தடுத்து அவளின் காதுகளையும் மூக்கையும் அறுத்தான் என்று மூக்கறுபட்ட சேதியினை முணுக் என்று கோபம் கொப்பளிக்கும் முனி (விசுவமித்ரர்) முன் செய்ததாய் வால்மீகி சொல்கிறார்.

கம்பர் ஏனோ தெரியவில்லை இந்த மூக்கறுப்புக் காட்சியினை (வரம்பு மீறல் என்று நினைத்தாரோ என்னவோ?) சென்சார் செய்து விட்டார். இவ்வளவு அகோரமான காட்சியை நல்ல மெஸேஜ் ஒன்று குடுத்து பில்டப் செய்கிறார் நம்ம கம்பர். கருப்பான இராமனின் அம்பு, முனிவர்களின் சாபச் சொல் போல் வேகமா வந்திச்சாம். அது இருள் மாதிரியா இருக்கும் (பயங்கரக் கருப்பா) தாடகையின் மார்பில் (வைரம் பாய்ஞ்ச ஒடம்பு என்றும் வருது) அம்பு புகுந்ததாம். பின்புறமா ஓடிப் போயிடுச்சாம். இத்தோடு உட்டாரா நம்மாளு? கல்வி கற்காத இழிந்தவர்களுக்கு, கற்று உணர்ந்த நல்லவர்கள் சொன்ன அறிவுரை போல் பின்புறமாய் விழுந்து விட்டதாம். கம்பர்…. கம்பர் தான்… வால்மீகி வால்மீகி தான்..

பர்வால் அலசல்கள் தொடரும்.

4 thoughts on “மூக்கறுப்பது எங்கள் குலம்…

  1. Kambar Kambar thaan ! Valmiki Valmiki thaan !!
    Andaman Krishna Murthy Andaman Krishna Murthy thaan !!!

  2. ravi says:

    putiya konam nalla alasal ilakiyatai ipatiyum parkalama nanri

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s