மனசு.. மனசு.. மாறும் மனசு….


மடிக்கணினி என்று லேப்டாப்புக்கு செய்த தமிழாக்கம் சரி தான் என்று இன்று (01-01-2013) தான் புரிந்தது. காலை முதல் மாலை வரை கொல்கொத்தா விமான நிலையத்தில் (இரண்டரை மணி நேர தாமதம் உட்பட) இருந்த போது உன்னிப்பாய் (இல்லெ..இல்லெ.. சாதாரணமாய்) பாத்தபோதும் தெரிந்தது. மடியில் பெரும்பாலான மக்கள் லேப்டாப்பையும், என்னை மாதிரி சிலர் டேப்லெட், ஐபோன் என்றும் வைத்திருந்தனர். ஒரு ஆர்வக் கோளாறில் எட்டிப் பாத்தேன். மகளிர் பெரும்பாலும் படம் பாத்தும் அல்லது பாட்டு கேட்டும் இருந்தனர். வயதானவர்கள் Free Cell ஆடியபடி இருந்தனர். (அடப்பாவிகளா இன்னுமா ஆடி முடியலெ??) மிகச்சிலரே அலுவலக மெயில்களை மேய்ந்து கொண்டிருந்தனர். (நானு..ஹி..ஹி.. எட்டிப்பாத்த நேரம் போக மத்த நேரமெல்லாம் கம்பராமாயணத்தில் மூழ்கி இருந்தேன்..ஹி..ஹி..)

”மனிதரில் இத்தனை நிறங்களா?” மாதிரி, மனிதரில் இத்தனை முகங்களா என்று கேக்கத் தோணும் அளவுக்கு இந்த விமான நிலையத்தில் மனித முகங்கள். சிலர் ”விமான கம்பெனிக்கே தான் தான் ஓனர்” என்பது போல் மிடுக்கான நடையில். நாம தான் Frequent Traveller என்பதைச் சொல்லாமல் சொல்லும் சிலர் ஒரு ரகம். புதிதாய் வந்தவர்களின் மிரட்சியே அதனைச் சொல்லிக் தரும். சில பயணிகளும், பெண் ஊழியர்களும் இருக்கின்ற உடையினைப் பாத்தா, நம்ம மதுரை ஆதீனம் சொன்னதில் ஒண்ணும் தப்பில்லையே என்று சொல்லத் தோனுது. (நமக்கு எதுக்கு இந்தப் பொல்லாப்பு). ஆனா விமானத்தில் ஏறும் மக்கள் அதிகமாயிட்டது என்பதை மட்டும், இந்தக் கூட்டம் பாத்து ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மூட்டை முடிச்சுகளை விமானத்திலும் அதிகமாகவே மக்கள் எடுத்துவருகிறார்கள் என்பது என் கருத்து.

மனித மனங்களின் மாற்றங்கள் விசித்திரமானது. முன்பெல்லாம் இளம் பெண்களை பாக்கும் போது, அடடா என்று வியக்கத் தோன்றும். (சைட் அடிக்கத் தோனும் என்று ஒடெச்சிச் சொல்லவா முடியும்?) ஆனா இப்பொ கொஞ்ச காலமா இந்த மாதிரி பயணிகள், இண்டர்வியூக்கு வரும் இளம் பெண்கள், அலுவல் காரணமாய் வரும் மகளிர் யாரைப் பாத்தாலும் என் மகளோட சாயல் தெரியுது. (ஒரு வேளை வயசு ஆயிடுச்சோ…)

சினிமாவில் வந்த சாதாரன் காமெடி டயலாக்குகளைக் கூட, அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாத மனசு, அதையே ஃபேஸ்புக்கில் போட்டுத் தாளிச்ச பிறகு அதே டயலாக்குகள் இனிக்கத்தான் செய்கிறது. உதாரணமா கவுண்டமனியின், “பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?” என்பதாகட்டும், ஒல்லியான வடிவேலுவின் “என்ன கையைப் புடிச்சி இழுத்தியா?” ஆகட்டும், தற்போதைய புஸ்டியான விடிவேலுவின், “தம்பீ, டீ இன்னும் வரலை” என்பதும் சரி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அடி மேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவது போல், போஸ்டிங் மேல் போஸ்டிங் போட்டு மனசெயே மாத்திட்டாங்களோ..

ஆனாலும் சும்ம சொல்லக் கூடாது, நம்ம மனசு இருக்கே மனசு, அதுவும் ஆதரவா யாராவது சொல்ல மாட்டாகளா என்று ஏங்கத்தான் செய்யுது. புதுப் புடவையோ, நகையோ போட்டு வெளியே வரும் மகளிருக்கு யாரும் எந்தக் கமெண்ட்டும் சொல்லாது இருந்தா, அன்னிக்கி அந்த அம்மாவுக்கு இருண்ட நாள் தான்.. அதுக்காக, காலில் போட்டிருக்கும் புது மாடல் கொலுசசைப் (அதிலெ சத்தம் என்பது கூட வரவே வராது) பாத்து யாரும் ஏதும் சொல்லலையே என்று சொல்லுவது தான் கொஞ்சம் கேக்க சிரமமா இருக்கு. (ஆமா.. பாக்க எப்படி இருக்கும்?) உங்களுக்கு எல்லாம் இனி ஒரு வேண்டுகோள். இனிமேல் காலையும் கொஞ்சம் பாத்து வைங்க.. ஒரு பாதுகாப்புக்கு செருப்பையும் பாத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.

என்னெக்காவது ஏதாவது வேலையெச் செய்யாமப் போயிட்டா, அல்லது நல்ல ஒரு சான்ஸை மிஸ் பன்னிட்டா, நம்ம மனசு என்ன செய்யும்? வருத்தப்படும். அப்புறம்… ஆதரவு தேடும். கெணத்துத் தண்ணியெ ஆத்து வெள்ளமா அடிச்சிட்டுப் போவப் போவுது? இப்புடி சொல்லி ஆதரவு தேடும். (இப்பொல்லாம், கிணத்திலெயும் தண்ணியில்லெ.. ஆத்திலும் தண்ணியில்லெ.. பேசாம பழமொழியெ மாத்தியிரலாமா?? ஏதாவது புதுசா கண்டு பிடிச்சிச் சொலுங்களேன்.

இப்படியே ஓர் எட்டு நம்ம கம்பரோட மனசையும் பாத்துட்டு வரலாமே? அவர் அனுமனோட மனசைப் பத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விபீஷணனை ஆட்டத்திலே சேத்துக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை. புஸ்கா பஸ்கா ஜாம் புஸ்கா என்றோ, பிங்கி பிங்கி பாங்கி என்றும் சொல்லி நிர்னயிக்க முடியாத கட்டம். அனுமன் செமெ பாயிண்டுகளை எடுத்து விட்றாரு. இவரை சேத்துக்காமெ நாம மத்தவங்க மாதிரி சந்தகப் பட்றது அவ்வளவு நல்லால்லே.. அப்படி பட்டா அது எப்புடி இருக்கும் தெரியுமா?? கிணத்திலே இருக்கிற கொஞ்சூன்டு தண்ணியெ நம்மளை அடிச்சிட்டுப் போயிடுமோ என்று கடல்..லே கலங்கின மாதிரி இருக்காம்.. (இந்த இடத்தில் கடல்லேயே இல்லையாம் என்று வடிவேலுவுக்காய் ஜா”மீன்” வங்கப் போன வசனம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை)

தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதெவர்
மூவர்க்கும் முடிப்ப வரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வோதோ கொற்ற வேந்தே.

இனி புலம்பும் போது இப்படி ஏதாவது வித்தியாசமா புலம்புங்களேன்… பிளீஸ்.

5 thoughts on “மனசு.. மனசு.. மாறும் மனசு….

  1. payanangkaL mudivathillai

  2. kaarman says:

    பெண்களைப் பார்க்கும் போது என்னென்ன வயதில் என்னென்ன தோன்றும் என்பதை நடிக, இயக்குநர் மணிவண்ணன் “பார்த்திபன் கனவு” படத்தில் சொல்வதை நினைவு கூறுங்கள் நண்பர்களே!!!

  3. கூவத்துல இப்ப தண்ணி இருக்கா என்ன? சாக்கடையா தானே கூவம் ‘நிக்குது’ இப்போ?! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s