இடையோ இல்லை, இருந்தாலும்…


சமீப காலமாய் வரும் பஞ்ச் டயலாக்குகள் திகைக்க வைக்கின்றன. “நான் இப்பொ கெளம்பிட்டா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” இது சமீபத்திய டயலாக். நானும், என் பேச்சை கேட்கும் நானும் வேறு வேறா?? அய்யா சாமி கொழம்புதே.. இதுக்கு பேசாமெ அத்வைதம் துவைதம் இப்படி ஏதாவது படிச்சி போற நேரத்திலெ புண்ணியமாவது தேடிக்கலாமெ!!!

இப்படித்தான் ஒரு படத்தில் செந்தில் உதைபடும் காட்சி வரும். அதான் எல்லா படதிலும் வந்ததே… அது என்ன புதுசா? என்று கேட்க வேண்டாம். ராமராஜனுடன் காரைத் தள்ளும் ஒரு கலக்கல் காமெடி. “அதெ என்னைப் பாத்து ஏன்டா கேட்டெ?” என்று திரும்பத் திரும்ப உதைக்கும் சீன் அது.

கேட்ட விஷயத்தை, விட தன்னிடம் கேட்டது தான் வீரியம் அதிகம் என்பது தான் நான் இப்பொ கையில் எடுத்திருக்கும் சங்கதி… அதில் நாம் காண வேண்டிய நீதியும் இருக்கு.

கோபம் வந்துட்டா நான், நானாகவே இருக்க மாட்டேன் என்பார்கள் சிலர். அது எப்படி ஒரு ஆள் என்பது என்ன… ஒன்பது ஆட்கள் குடி இருக்கும் வீடா என்ன?? நேரத்துக்கு நேரம், மாறி மாறி எடுத்து விட. மனம் போல் மாங்கல்யம் என்பர். அது போல் குணம் போல் மனிதன். எல்லாராலும் கோபமாய் கத்திவிட முடியாது. அதுபோல் அத்தனை பேராலும் சாந்தமாயும் பேசிவிட முடியாது.

பெண்கள் வேலை செய்யும் இடங்கள்ல சிக்கல்கள் அதிகம். ஆண் ஊழியரை திட்டுவது போல் அவர்களை திட்டிவிட முடியாது. (ஆமா அவர்கள் வீடுகளில் திட்டு தருபவர்களாய் அல்லவா இருப்பர்!!) ஒரு கட்டை குரல் உயர்த்தி சொன்னால் போதும், அணை உடைந்து வருவது போல் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து வரும். எப்போதும் எப்படித்தான் அப்படி தயாராய் கண்ணில் ஸ்டாக் வைத்திருப்பார்களோ!!! அந்த பெண் தேவதைகளுக்குத் தான் வெளிச்சம்.

சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். என்ன? என்று விசாரித்ததில் ஒரு நபர் அவரை ஊனமுற்றவர் என்று சொல்லி விட்டாராம். நான் கேட்டேன், நீங்கள் ஊனமுற்றவர் தானே? ஆம் என்று பதில் வந்தது. உண்மையை ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இல்லை என்னை கேவலப் படுத்துவதற்குத் தான் அந்த வார்த்தையை பயன் படுத்தினார்.

சரி அது நியாயமான வாதம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் பேசுகிறார். வருத்தப்பட்டால் வந்தவர் ஜெயித்த மாதிரி. நாம் சகஜமாய் அதனை எடுத்துக் கொண்டால் நாம் ஜெயிக்கலாம் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

சில மாநிலங்களில் ஊன்முற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று தான் அழைக்க வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளதாம். இதே போல் ஹிந்தி தெரியாத ஆட்களை அஹிந்திபா4ஷி என்று சொல்லி வந்தனர். இப்போது அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு ஹிந்தி தெரியாத இடத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லச் சொல்கிறது அரசு.

ஊனமுற்றவர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே அந்த ஊனத்தின் உபாதையிலிருந்து மீண்டு வர முடியும். அட..ஊனம் இருந்தாலுமே…. இப்படியா??? என்று உலகம் மூக்கில் கை வைத்து வியக்கும்படி செய்ய வேண்டும்.

சிறுபிள்ளைக் காலத்தில் என்னை பூனைக் கண்ணா என்று கேலி செய்வர், அதே பெயரிலும் அழைப்பர். ஆரம்பத்தில் கோபம் வந்தது. பின்னர் அவர்கள் சொன்னது உண்மை தானே என்று எடுத்துக் கொள்ள கிண்டலும் கேலியும் குறைந்து விட்டது. இப்போ ஐஸ்வர்யா ராயின் ஐஸ் என்று ஐஸ் வைக்கிறார்கள் எனக்கு முன்பாக. (பின்னாடி பூனைக் கண்ணன் என்றும் பேசி வரக்கூடும்)

உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் என்பது மட்டும் தான் பொதுவான உண்மை. நான் யார் என்பதை அறிந்து விட்டால் யார் தான் நம்மை காயப்படுத்த முடியும்? முதலில் நம்மைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வோம். அது பிறரின் சங்கடமான வார்த்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றும்.

எதையாவது எழுதி அப்படியே இடையிலே கம்பராமாயணம் கொன்டு வருவது என்பதும் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாற்றுத் திறனாளியாக சீதையை சொல்லும் இடமும் வருது. சீதையா?? எப்படி? எப்படி? என்கிறீர்களா? சூர்ப்பநகை மூக்கு இல்லாமல் இருக்கும் போது, நானும் சீதையும் மாற்றுத் திறனாளிகள் தானே என்கிறார். நீங்க கேட்ட மாதிரி, ராமனும் எப்படி? எப்படி? என்கிறார். ஆமா… சீதைக்குத்தான் இடையே இல்லையே…

இடை பற்றி இன்னொரு இடமும் வருது. அசோக வனத்தில் சீதை வாடி வதங்கிப் போனாராம். எப்படி? எப்படி? இப்படி நீங்க கேக்கனும். கல்லுக்கு நடுவிலே ஒரு சொட்டு தண்ணியும் கெடைக்காமெ, வளரும் நல்ல மருந்துச் செடி மாதிரி வாடி இருந்தாராம். முன்னர் இடை மட்டும் தான் மெலிந்திருந்தது. இப்போது இடை போல் எல்லாம் இளைத்து துரும்பானாராம். எங்கே இருந்தார்? பெருத்த இடை வைத்திருக்கும் அரக்கியர் நடுவில் இருந்தாராம். கம்பர் பார்வை எங்கே போகுது பாருங்க…

வன் மருங்குல் வாள் அரக்கர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்க எழுந்த என்று ஓர் துளி வரக் காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்.

அது சரி உங்க பார்வை எங்கே போகுது??

8 thoughts on “இடையோ இல்லை, இருந்தாலும்…

  1. எங்க பார்வை எங்களை விட்டு எங்கேயும் போகாது !
    அது எங்களோடேயே இருக்கும் !!

    • Tamil Nenjan says:

      பார்வையின் நோக்கமே எதையாவது பார்ப்பது தானே சார்?? அதான் கேட்டேன்.

  2. Vontivillu Chittanandam says:

    Very nicely written.

    It will be useful if you will give meanings of uncommon words (arumpathavurai) in Kamban’s verse.

  3. maa,ulaganathan says:

    idaiyiillaathavalodu vaazhnthavan raman allava?kambanin uyarvu navirchchiyai enni enni viyakkalam thane!
    maa.ulaganathan,thiruneelakudi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s