காலில் விழும் கலாச்சாரம்


இந்தக் காலில் விழும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வருவது தான். நான் முழுவதும் என்னை உன்னிடம் ஒப்பதைத்து விட்டேன், இனி எல்லாமே நீதான்… என்று சராணாகதி தத்துவத்தை போதிக்கும் Total Surrender தான் காலில் விழும் உச்ச கட்ட முயற்சி.

சாமி கும்பிடுவதை விட்டால் இப்படி சாஸ்டாங்கமாய் காலில் விழுவது தீபாவளி அன்று தான். பட்டாசும் பலகாரமும் அம்மா அப்பாவின் காலில் விழுந்து வணங்கிய பின் தான் கிடைக்கும் என்ற போது, அதை எப்படி செய்யாமல் விட இயலும்? பட்டாசும் பட்சனமும் முக்கியம்.

முழுவதும் காலில் விழவில்லை என்றாலும் சற்றே குனிந்து ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெறும் டிரில் கண்டிப்பாய் நடக்கும் நாள், திருமண தினம். அதிலும் முதல் மரியாதை என்று தெரிவு செய்து சரியாய் அதே வரிசைக்கிரமமா விழ வேண்டும் இல்லையேல் அதுவே பெரிய்ய பிரச்சினையாக வெடித்துவிடும்.

சாஸ்டாங்கமாய் காலில் விழுவது ஒழிந்து போய் விடுமோ என்று இருந்த போது, அதை சில அரசியல் கட்சிகள் தூக்கி நிறுத்தின. புடவை பேண்ட் மாதிரியான உடைகள், கீழே விழுந்து நமஸ்கரிக்க ஒவ்வாத உடைகள். வேட்டி சுடிதார் தான் அதுக்கு ரொம்ப சௌகரியம். ஒரு வேளை அரசியல்வாதிகள் காலில் விழும் கலாச்சாரத்தை கெட்டியாய் பிடித்து வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ??

வடநாட்டவரிடம் இன்னும் அந்தக் காலை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. அப்படியே காலை வாரிவிடும் பழக்குமும் இருக்கு என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆனா வாஜ்பேய் காலில் விழுந்தது தமிழகத்திற்கே மரியாதை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இத்தகைய நல்ல பழக்கங்களை நாம் சொல்லிக் கொடுக்க மறந்திட்டோமோ?? கோவையில் இருந்து என் கல்லுரித் தோழர் குடும்பத்துடன் அந்தமான் வந்து திரும்பினர். அவரின் துணவியார், நாம் படித்த அதே பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். டூர் முடிந்து ஊர் திரும்பும் போது அவர்தம் குழந்தைகள் சாஸ்டாங்கமாய் வரிசையாய் அனைத்து பெரியவர்களின் காலில் விழுந்த போது, உண்மையில் புல்லரித்து விட்டது.

அலுவலகத்தில் காரியம் ஆகனுமா?? காலைப்பிடி என்ற தத்துவம் படு பிரபலம். நான் கூட சில முறை கழுதை ஆகி இருக்கிறேன். வயது வித்தியாசம் கூட பாக்காது சிலர் விழுந்திருகிறார்கள். அப்போதெல்லாம் நான் மனதில் நினைப்பதுண்டு.. இவர்கள் என் காலில் விழவில்லை… அந்த காரியத்தில் குறியாய் இருக்கிறார்கள். காரியத்தில் கை வையடா தாண்டவக்கோனே.. என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வரும்.

இந்தக் காலில் விழுந்து காரியம் சாதித்து சம்பாதிப்பதை வைத்து கவுண்டமணி ஒரு படத்தில் நல்ல காமெடி செய்திருப்பார். மேலிடம் என் கையில் என்று உள்ளே புகுந்து அவர் காலில் விழுந்து காரியம் சாதித்து வெளியில் கம்பீரமாய் வந்து வாய் சவ்டால் விட்டு தூள் கிளப்புவார். எப்படியோ காரியம் ஆக வேண்டியது நம் எல்லாரின் கட்டாயத் தேவை.

இந்தக் காலில் விழும் கலாச்சாரம் காக்காய் பிடிக்க இருந்திருக்கோ இல்லையோ, அந்தக் காலத்திலும் இருந்திருக்கு. இதுக்கு நான் வேறு எங்கே போகப்போறேன்.. வழக்கமா கம்பரைத்தான் புடிக்கனும்.
கம்பராமாயணத்தில் இராவணனை வர்ணிக்கும் ஒரு இடத்தில் கம்பர் இந்த மேட்டரை எடுக்கிறார். இராவணனின் பாதங்களில் ஏகப்பட்ட வடுக்கள் இருக்காம். அது எப்படி அங்கே வந்தது? எதிரி மன்னர்கள் கிரீடத்தோட காலில் விழுந்து விழுந்து அதனால் காயமான தழும்புகளாம்.. எப்படி கீது??

அதுமட்டுமா? முரட்டுத்தனமான வீரன் இராவணன். யானை எல்லாம் மோதி மோதி அந்த தந்தக் காயங்கள் உடம்புலெ அங்கங்கெ இருக்காம். இராவணன் உடம்பிலெ பூசின சந்தனம் யானையின் முகத்திலெ மாறுது. அதே மாதிரி யானையின் முகத்திலெ இருக்கிற குங்குமம் இராவணன் உடம்புக்கு டிரான்ஸ்பர் ஆகுதாம்.

மாலை போட்டிருக்கும் இராவணன் பக்கத்திலெ வந்து ஒரு வண்டு தேன் குடிக்குது. அது அப்படியே யானையின் மதத்தில் போயும் திளைக்குதாம். அங்கே திளைத்த வண்டுகளும் மாலைகளுக்கு Exchange ஆகுதாம்.
ஆனா காலில் விழுந்த ஆட்களுக்கு மட்டும் பயம் தான் Exchange Offer ஆக கிடைக்குதாம்.

தோடு உழுத தார் வண்டும் திசை யானை
மதம் துதைந்த வண்டும் சுற்றி
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின்
சிந்துறத்தை மாறு கொள்ள
கோடு உழுத மார்பானை கொலை உழுத
வடிவேலின் கொற்றம் அஞ்சி
தான் தொழுத பகை வேந்தர் முடி உழுத
தழும்பு இருந்த சரண்த்தானை.

சரி.. இப்பொ யார் கால்லெ விழுவதா உத்தேசம்?? நானு கம்பர் கால்லெ விழுந்து நமஸ்காரம் செய்யலாம்னு இருக்கேன். நீங்களும் கூட வாரியளா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s