இந்த மந்திரத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்தவர் அறிஞர் அண்ணா. அவரது கருத்துக்களை திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே முழுதாய் கேட்பவர்களாய் இருபந்தாலும் கூட, இந்த “மாற்றான் மல்லி” டயலாக்கை எல்லாரும் கண்டிப்பா யூஸ் செஞ்சிருப்பாய்ங்க.
ஆனா இதை பேரறிஞர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ அதை மட்டும் சரிய்யா, எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாய்ங்க. பக்கத்து வீட்டு பொண்ணை ஒரு வாலிபன் சைட் அடிக்கனுமா?, அடுத்த வீட்டு அக்கா பாக்க நல்ல பளிச்சுன்னு இருக்காகளா? கீழ் போர்ஷன்லே செவத்த குட்டியை டாவடிக்கனுமா?, சில ஆண்டிகளை பலருக்குத் தெரியாமல் சில நேரங்களில் ரசிக்கனுமா? – இது எல்லாத்துக்கும் ஒரே பதில் இது தான்:- அண்ணா சொன்ன மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம். இதை அவுத்து விட்டு விட்டு நிம்மதியா கடலை போட ஆரம்பிச்சிருவாங்க.. (நான் அப்படி எல்லாம் கிடையாதுங்க.. எந்த வீட்டிலும் குழந்தைகள் தான் எனது நண்பர்கள்)
அண்ணா சொன்னதின் அத்தம் என்ன? எதிர் கட்சியினர் என்பவர் எதிரிக் கட்சியினர் இல்லை. நமக்கு எதிர் அணியில் இருப்பவர். அவர்களில் நல்லவர்கள் வல்லவர்கள் இருப்பார்கள். அப்படி எதிராய் இருப்பதாலேயே அந்தத் திறமைகளை குறைத்துச் சொல்லிவிட முடியுமா என்ன? அவர்களின் திறமைக்கு மரியாதை தரும் கண்ணியமான வாசக வசனம் அது.
ஆனா என்ன நடக்கிறது. எதிரணியினரை விரோதிகளாய் பாக்கும் வழக்கம் வந்து விட்டதே.. ஆய் ஊய் என்றால் வீச்சறுவா தூக்கும் வித்தையை சினிமாக்களும் தொடர்ந்து காட்டி வந்து கெடுக்கின்றன். கேட்டா காதலும் வீரமும் நமக்கு இரு கண்கள் என்று டயலாக் வேறு.. ஆமா எங்கே போய்க்கொண்டிருக்கோம் நாம்?
பக்கத்து வீட்டு வடநாட்டவர் ஒரு கேள்வி கேட்டார். தில்லியில் ஆளும் கட்சி தலைவரும் எதிர் கட்சி தலைவரும் பொது நிகழ்சிகளில் ஒன்றாய் தோன்றுவது போல் தமிழகத்தில் நடக்காதா? என்றார். ரொம்ப விவகாரமான கேள்வி அது. இதுக்கு நான் ஏதாவது சொன்னால் அது அரசியல் ஆகிவிடும். நானும் மழுப்பலாக அப்படி எல்லாம் இல்லையே ராஜாஜி பெரியார், கமல் ரஜனி, எம்ஜிஆர் சிவாஜி இப்படி எல்லாரும் ஒன்றாய் காட்சி தந்திருக்கிறார்களே என்று சொல்ல, கேட்டவர் அடங்கி விட்டார்.
ராஜாஜி, சக்கரவர்த்தி திருமகன் பெயரில் ராம காவியத்தை படைத்தவர். பெரியாரோ, அதே ராமருக்கு செருப்பு மாலை போட்டவர். பாம்பையும் பார்ப்பனரையும் ஒன்றாய் பார்த்தால் பார்ப்பனரை முதலில் விரட்டு என்று சொன்னவர்களின் தலைவரின் நண்பர் தான் ராஜாஜி என்ற பார்ப்பனர். ஆன்மீகவாதி ஒருவர் பெரியாரின் வீட்டில் தங்குவாராம். குளித்தவுடன் அவருக்கு திருநீரை ஏற்பாடு செய்து தந்தாராம் பெரியார். எவ்வளவு பெரிய மனிதர்கள்!!!
காமராஜர் கக்கன் போல் எளிமையின் மறு உருவமாய் வாழ்ந்தவர் தோழர் ஜீவா அவர்கள். அவரின் பெயரில் பரமக்குடியில் ஜீவா படிப்பகம் என்று உள்ளது. அங்கு ஆண் பெண் பலருக்கும் ஜீவா என்று பெயரும் வைப்பர். அவரைப் பற்றி வேறு ஒன்றும் அவ்வளவாய் வெளி உலகிற்குத் தெரியாது. ஆனால் வந்தார் ஒரு கதர் சட்டைத் தமிழர். பட்டி தொட்டி எங்கும், உலகெங்கும் உள்ள மேடைகளில் எல்லாம் ஜீவா பற்றி பேசினார். அந்தமானிலும் கூடப் பேசினார். ஆன்மீகச் சொற்பொழிவில் கூட ஜீவா இடம் பெறத் தவறவில்லை. அந்தப் பேச்சாளர் ஒன்றும் கம்யூனிச கட்சி ஆதரவாளர் அல்ல. மாற்றான் தோட்டத்து மல்லியின் மணத்தை மறுபடி மறுபடி மலரச் செய்த அந்த அபூர்வ மனிதர் தமிழருவி மணியன் அவர்கள்.
எதிரில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும் அவரும் மனிதர் தானே! எதிரியை அழிக்க வேண்டுமா? சுலம்பான வழி ஒன்று உள்ளது. அவரை நண்பனாக்கிக் கொள். இது ஒரு அறிஞர் சொன்னது.
அரசு வேலைக்கு ஆள் எடுத்தோம். எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதாய் அரசல் புரசலாய் சேதி காதில் விழுந்தது. போட்டோவுடன் வந்து தேர்வு எழுத அழைத்தோம். 10% மக்கள் போட்டோ இல்லாமல் வந்தனர். இதை முன்பே எதிர்பார்த்து கேமிராவும் கையுமாய் ஒரு அரசு ஊழியரை அமர்த்தி, சுடச்சுட போட்டோ எடுத்து (இலவசமாய்) பிரிண்ட் போட்டு கையிலெ குடுத்து, போ பரீட்சை எழுதுப்பா என்றோம். அரசின் கரிசனம் பாத்து மிரண்டே போனார்கள்.
முதியவர் ஒருவர் வந்தார். தன் மகளுக்கு காலையில் வேறு பரீட்சை இருக்கிறது. என்ன செய்ய? என்று. மாலையில் வந்து எழுதலாமே. இதோ பிடிங்க புது ஹால் டிக்கட். நேரம் மாத்தி தர்ரேன் என்று தந்தேன். காலை பரீட்சை இருக்கு என்று சொன்னதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? என்று கூட அரசு கேட்காதா? என்றார் ஆச்சரியத்துடன். வயதில் பெரியவர். மகளை அழைத்து வராத போதே தெரிகிறது. மகள் அங்கே பரீட்சை எழுதுவது. அவங்க கையில் தான் அந்த ஹால் டிக்கட் இருக்கும். எதுக்கு இதெல்லாம் என்றேன் நான். இஸ்லாமிய பெரியவர் மனம் இளகி முதுகில் தட்டி “அல்லா உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்” என்றார். அவர் சண்டை போட தயாராய் வந்தவர் என்பது இங்கே நான் சொல்லாமல் விட்ட உண்மை.
இப்படித்தான் இராமயணத்திலெ…. அதான் தெரியுமெ.. சீதையை ராவணன் தூக்கினது மாற்றன் தோட்டத்து கதை தானே… ஹலோ.. ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க… இந்த மாற்றான் கருத்தையும் கொஞ்சம் கேளுங்க…
நான் சொல்ல வந்தது, இந்திரசித்தன் கதை. அனுமன் களேபரம் செய்து விளம்பர இடைவேளையில் இருக்கும் போது, இந்திரசித்தன் கிளம்புகிறார். எல்லா திசைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவன். ஆனா செத்த நேரம் அங்கே இங்கே என்று கிடக்கும் செத்த உடல்களைப் பார்க்கிறார். அட.. அனுமனது பேராற்றல் மிகவும் சிறந்தது என்கிறாராம். கேட்ட பார்ட்டிங்க எல்லாம் ஆடியே போயிட்டாங்களாம். கம்பர் எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிக்கு பாட்டு எழுதி இருக்கார் பாத்தீகளா??
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன்
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார்.
மீண்டும் தேடி வருவேன்.
Well-written.
Thanks jee. I am motivated to write more with your blessings.