
மாமல்லபுரத்து சிற்பம்
“அண்ணே… ஒரே வயித்து வலிண்ணே… ஏதாவது மருந்து சொல்லுங்கண்ணே”
“அடேய்… நா என்ன.. டாக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ் ன்னு போர்டு மாட்டியா இருக்கேன்”
என்றும் மறக்காத, அருமையான அனைவராலும் ரசிக்கப்பட வைத்த காமெடி அது. இதே படத்தில்… “அடேய் இது ஒனக்குத் தெரியுது.. இந்த ஊருக்குத் தெரியலையே..?? இதெல்லாம் ஊருக்கு எடுத்துச் சொல்லனும்டா… இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா, நல்லவரு, வல்லவரு..” இப்படி ஒரு சூப்பர் டயலாக்கும் வரும்.
ஒருவர் நல்லவரா வல்லவரா என்பதை யார் சொல்வது? யாராவது நம்மைப் பத்தி தப்பா சொல்லித் தொலைக்கிறதுக்கு முன்னாடி நாமளே நல்லபடியா சொல்லிக்கிறது நல்லது இல்லையா? இதெத்தான் அந்த கவுண்டமனி காமெடி சொல்லி இருக்குமோ..
சமீபத்தில் கல்கத்தா போயிருந்தேன். நட்பு ரீதியாய் பழகி இருந்த மத்திய புலனாய்வு அதிகாரியை சந்தித்தேன். அவரோ, அவரது சக சகாக்களிடம், நான் வல்லவர் நல்லவர் , RTI Expert, பாடகர், தமிழ் பேச்சாளர், Electronic Man என்று ஏகமாய் சொல்லி வைக்க, அப்பொ… முழு நேரம் இது தானோ? என்ற ரேஞ்சுக்கு கேட்டு வைத்தார் ஒருவர். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
நீங்கள் வீட்டுக்கு., ஆபீசிலிருந்து செல்ல எவ்வளவு நேரம் கல்கத்தாவில் ஆகிறது ? என்று கேட்டேன். இரண்டரை என்று பதில் வந்து. ஆக ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவு செய்கிறீர்கள் டிராவலுக்கு மட்டும். நான் எனது லிட்டில் அந்தமான் தீவில் அதற்காய் 5 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். ஆக எனக்கு உங்களை விட அதிதிதிதிக நேரம் இருக்கிறது.. என்றேன்.. ( ப்ளாக் எழுதுவதின் சூத்திரம் புரிந்திருக்கும் இப்போது).
நல்ல பேரு வாங்குவது இருக்கட்டும். பேர் சொல்லி அழைப்பதே பெரிய காரியம் தான். சமீபத்தில் அந்தமான் வந்த பிரபலமான அரசியல் தலைவர் கூட, கூட வந்த அமைச்சரின் பெயரையே மாற்றிச் சொன்னார். ( தலைவருக்கு ஒரே அலைச்சல் அதான்… என்று தொண்டர்களும் அதனை சமாளித்தனர்)
மேடைப் பேச்சாளர்கள் பலர் மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அழைத்து பேச்சை ஆரம்பிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சிலரோ யார் பேராவது விட்டிருக்கிறதா? என்று பொறுப்பாய் கேட்டும் வைப்பார்கள்.
சமீபத்தில் “ஒன்றே சொல் நன்றே சொல்” புகழ் சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்திருந்தார். அனைவரின் பெயரையும் எந்தக் குறிப்பும் எடுத்து வைக்காமல், வரவேற்பு நடனம் ஆடிய சிறு குழந்தை, மேஜிக் செய்த (என் பையன் தான்) சிறுவனையும் தம்பி விஜய் என்றும் விளித்துப் பேசியது சிறப்புச் செய்தி.
இன்னொரு சீடி வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து ஒன்று. 20 வருடங்களாய் எங்களோடு தோளோடு தோள் கொடுத்தவரும், நீண்ட நாள் நண்பருமான … ஆமா உங்க பேரு என்ன?? என்று கேட்ட வேடிக்கையும் நடந்து இருக்கிறது.
நல்ல பேரு என்பதுடன் நல்ல கருத்தும் சேர்த்து பாக்கலாம் என்பது என்னோட கருத்து. ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்று சொன்ன போது நானும் அட… மல்லிகை பூவை அலுங்காம குலுங்காமெ ஸ்கூட்டரில் எப்படி எடுத்துப் போவது? என்றே யோசித்தேன் நான். இட்லிக்கு சாம்பார் சட்னி இதெல்லாம் பிளாஸ்டிக் இல்லாமல் எப்படி கொண்டு போவது??
போதாக் குறைக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் பிளாஸ்டிக் ரோடுக்கு ரோடு போட.. அட.. பிளாஸ்டிக் இருந்தா என்ன என்ற நெனைப்பும் வந்தது.
அப்புறம் டார்ஜிலிங்க் போய் பாத்த போது தான் பிளாஸ்டிக் இல்லா ஊரின் அழகே புரிந்த்து. நானும் காரில் ரெண்டு துணி பைகளை வைக்க ஆரம்பித்தேன். Reduce Reuse, Recycle இதில் முடிந்த வரை அமல் படுத்தும் திட்டம் அமலானது. நானும் காரில் ரெண்டு துணி பைகளை வைக்க ஆரம்பித்தேன். கோழி வாங்கப் போனா, பையில் ஒரு சில்வர் பாத்திரம் இருக்கும். ஏனென்றால் அந்த கோழிக்கறியின் பையை நாம் ரீயூஸ் செய்ய இயலாது. வாரம் தோறும் பாத்திரம் பார்க்கும் பத்து பேரில் யாராவது பிளாஸ்டிக் கைவிட மாட்டார்களா என்ற நப்பாசை தான்.
மறுபடியும் கவுண்ட மணியின் பாப்புலர் டயலாக்குக்கு வருவோம். அது என்னவோ தெரியலை செந்திலின் தலை பாத்து தான் அதிக டயலாக் இருக்கும். அதில் தலை சிறந்த ஒன்று தான் “பன்னித் தலையா”.
சிங்கம் தான் சிங்கிளா வரும்… அது ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டாவும் இருக்கும். ஆனா.. பன்னி கூட்டமா வரும். பன்னியோட சேந்த…..ம் எதையோ திங்கும் என்பார்கள். ஆனா நிகோபாரி ஆதிவாசிகளின் சீர்வரிசையின் முதல் வரிசையில் இருப்பது அந்த திருவாளர் பன்றிகள் தான். அதற்காகவே பால் ஊட்டி (தேங்காப்பால் தான்) வளர்ப்பார்கள்.
தனக்கு பிடிக்காத ஆட்களைத்தானே பன்னித்தலையா என்பார்கள்?? ஆனா இன்னொரு Criteria இருக்கே.. அதான் மாமியார் ஒடெச்சா… அது,.. அது.. அதே தான்.
அரசு அலுவலகங்களில் கூட வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று இரு குரூப் அங்காங்கே இருக்கும். வேண்டிய நபர் ஆபீசில் புகுந்து லேப்டாப்பை உடெச்சாலும் டீக் ஹை… சலேகா தான். அதே வேண்டாத ஆள் பைலில் பேஜ் நம்பர் போடாது வந்தாலே மெமொ தான் பாயும்.
இதே மாதிரி தான் ராமாயனத்திலும் ஒரு பன்னித்தலையா என்று திட்ட வேண்டிய சீன் வருது. ஆனா அவரோ மேலிடத்துக்கு ரொம்ப வேண்டியவர். அவரை திட்ட முடியுமா என்ன??
கம்பர் அதை சூப்பரா சமாளிக்கிறார். என்ன சீன் என்று சொன்னால் உங்களுக்கும் புரியும். அனுமன் சீதையை சந்தித்த பின்னர் திரும்பும் போது சில மனிஷ சேட்டைகள் செய்கிறார். (பின்னெ மனிதர்கள் கொரங்கு சேட்டை செய்யும் போது, அனுமன் மனிஷ சேட்டை செய்ய மாட்டாரா என்ன?? )
அனுமன் அசோக வனத்தை அழித்ததை பாக்கும் போது தான் கம்பருக்கு “பன்னித்தலை வைத்து செய்யும் சேட்டையா” தெரியுது. அதை நல்ல விதமா சொன்னா நல்லா இருக்குமே என்று நினைத்து, வராக அவதாரம் மாதிரி இருந்தார் என்கிறார். இதிலெ வேடிக்கை என்னவென்றால், ராம அவதாரம் போல் இன்னொரு அவதாரம் தான் அந்த வராக அவதாரம். ராமனின் தூதன், இன்னொரு ராம அவதாரம் மாதிரி இருக்கே என்று சொல்வது கொஞ்சம் ஒவராத்தான் இருக்கு..
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம்எனல் ஆனான்
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்.
வட்டச் செயலாளர் ஒருவர் முதலமைச்சர் மாதிரி இருக்கிற கற்பனை மாதிரி தெரியலை??.
ஏதாவது விமர்சனம் எழுதியாகணுமே !
ஒரு மேனேஜ்மெண்ட் புத்தகத்தில் முன்னுரையில் படித்தது.
விமானப் பயணம் சுமார் இரண்டு மணி நேரம் ஆனதாம்.
அந்த நேரத்தை வீணாக்காமல் ஒரு புத்தகத்தையே எழுதி முடித்துவிட்டாராம் ! அப்படின்னா ஒரு நாளைக்கு
2 1/2 + 2 1/2 = 5 மணி நேர பயணத்தில் குறைந்த பட்சம்
ஒரு புத்தகமோ அல்லது ஒரு பிளாக் கில் எழுதப்படும் கட்டுரையோ எழுதி விடலாம். ஆனால் அதற்கு வசதி வேண்டுமே ! ஆசை இருக்கு, தஹஸில் பண்ண !
ஏதாவது எழுதினாலும், எதையாவது எழுதினாலும் யாருக்காவது பயன் இருந்தால் அதுவே பெரும் வெற்றி தான்.