இதை சாதாரணமாகப் படிப்பதற்கும், பாட்டாய் படிப்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? சாதரனமாய் படிக்கும் போது இரண்டு வார்த்தைகளின் உச்சரிப்பு.. அவ்வளவு தான். ஆனால் அதே பாடலாம் படிக்கும் போது இருக்கும் ஏற்ற இறக்கங்கள்,அதுவும் காதலில் உருகிப் பாடும் TMS. இதெல்லாம் சேர்ந்து கேட்கும் போது அலாதி சுகம் தான்.
மிகப் பிரமாண்டமாய் யாராவது, ஏதாவது வரவேற்பு குடுத்தால், அங்கே… அந்தப் பந்தல் பாக்கனுமே ஆகாசத்தையே மறைச்சிட்டு நிக்குது என்பார்கள். அதுக்கு நேர் மாறா.. நம்பவே முடியாத ஒரு செயலை செய்வதாக யாராவது சொன்னால், ஆகாச கோட்டை கட்டுவதாகவும் நம்ப மறுப்பார்கள்.
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நுழைவாயில்கள் அதான்.. Gate என்பது ரொம்பப் பிரபலம். அது India Gate ஆகவும் இருக்கலாம்… அல்லது Gate way of India ஆகவும் இருக்கலாம். (அது சரி ஒரு பாஸ்மதி அரிசிக்கு ஏன் இண்டியா கேட் என்று பெயர் வைத்தார்கள் என்பது யோசிக்க வேண்டிய செய்தி தான்… ஒருவேளை உடம்பின் கேட் வாய்.. அதுக்கு ருசியா, நல்லா இருக்கட்டும்னு வச்சிருப்பாங்களோ..!!). இந்த வாசலுக்கு சம்பந்தமே இல்லாத water gate (ஊழல்) & Bill Gates இப்படி சிலவும் இருக்கு (அ) இருக்கிறார்கள்.
சென்னையில்கூட பிரபலமான நுழைவாயில் பெசண்ட் நகர் பீச்சில் இருக்குமே.. அதான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஏரியா தான். அண்ணா சதுக்கம், சைதை வளைவு இப்படி ஏகமாய் இருக்குது. யானையுடன் கூடிய அண்ணா பலகலைக்கழக வளாக வாயில் ரசிக்கும் படி தான் இருக்கு எப்பொ பாத்தாலுமே..
ஒரு நுழைவாயில் என்பது, …. அதன் உள்ளே எப்படி இருக்கப் போகுது என்று சொல்வதின் ஒரு ஆரம்ப அடையாளம் தான். வெள்ளையர்கள் காலத்தில் தான் இந்த வளைவுகள் அதிகமாக வைத்து கட்டினார்கள். இப்பொ வளைவுகள் ஜாக்கிரதை என்று லேடீஸ் காலேஜுக்கு முன்பாக போர்டு மட்டும் தான் வைக்கிறார்கள்.
அது சரி..அப்பொ நுழைவாயில் பாத்துட்டு ஊர் பாக்காமெ போயிடலாமா என்ன?? இதையும் கொஞ்சம் கேளுங்க… இதைப் பாத்தா அதெப் பாக்க வேண்டியதில்லைன்னு சொல்லுவாங்க.. ஆப்பிள் இல்லையா?? நெல்லிக்காய் போதும்.. காசி ராமேஸ்வரம் போக வசதி இல்லையா?? போரூர் போனால் போதும்.. இப்படி ஏகமாய் சொல்லுவாய்ங்க.. முக்கியமான சேதி ஒண்ணு இருக்கு.. அம்மாவை படித்துறையில் பாத்தா பொண்ணை வீட்டில் போய் பாக்க வேண்டியதில்லை என்பார்கள்.. நான் பெண் பார்த்த போது நடந்த கலாட்டா இது..
மதுரைக்காரங்க கொஞ்சம் ஒரு கோட்டிங்க் மேக்கப் அதிகமா போடுவார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. (எல்லா ஊரிலும் அப்படித்தான் என்று உலகம் சுற்றிய வாலிபர்கள் சொல்லக் கேள்வி.. நமக்கெதுக்கு ஊர் பொல்லாப்பு?) சம்பிரதாயமாய் பெண்பார்த்தது போதவில்லை எனக்கு.. சரி டீச்சரா வேலை செய்றவங்க தானே என்று, ஸ்கூல் பெயரை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து கிளம்பினேன்… ஸ்கூல் விடும் சமயம் பாத்து.
ஸ்கூல் வாசலில் ரொம்ப ஆவலோடு காத்திருந்த போது எல்லா டீச்சர்களும் (அந்த ஆயா உட்பட) அனைவரும் அழகானவர்களாய்த் தான் தெரிந்தார்கள்.. (இந்தக் காலமாய் இருந்தால்.. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று மனசுக்குள்ளாவது கேட்டிருக்கலாம்?) ஒரு அழகிய தமிழ் டீச்சர் ஆங்கலத்தில் கேட்டது.. யார் வேண்டும்? என்று.
உஷா என்றேன்.. One Minute Please என்று என்னை பத்து நிமிடம் காக்க வைத்தார்.. (அது மட்டும் பத்து மணி நேரமாய் கனத்தது).. உஷா please என்று ஒரு யூனிபார்ம் போட்ட குழந்தையை கையில் தினித்தார்கள்.. நானும் அந்த குழந்தை அதைவிடவும் விழித்தது…
மிஸ்… நான் கல்யாணம் செஞ்ச்சிக்கப் போற பெண்ணு உஷா மிஸ்ஸைப் பாக்க வந்தேன்..என்றேன். அப்போது தான் அவர்களுக்கே வெக்கம் வந்து.. சாரி..சாரி.. அவர் இதே ஸ்கூல் தான் ஆனால் அதன் கிளை வேறு இடத்தில் என்றுசொல்ல… அப்புறம் பாத்தது கல்யாணம் ஆனது எல்லாம் தனிக்கதை..
பரமக்குடியில் Archவளைவு என்பது ஒரு லேண்ட் மார்க். ஒருபக்கம் காந்திசிலை, மறுபக்கம் ரயில் நிலையம். இன்னொரு பக்கம் பேருந்து நிலையம். மீதம் இருப்பதோ அடிக்கடி கலவரமாகும் ஐந்துமுனை. இப்படி எல்லாத்துக்கும் வழி சொல்லும் இதமாய் இருந்த Archவளைவு சமீபத்தில் காணவில்லை. ஏதோ விபத்தில் உடைந்து விட்டதாய் தகவல். அது வெறும் ஒரு வளைவு அல்ல. அதன் பின்னால் இருக்கும் வரலாறும் அல்லவா காணமல் போகிறது? யாரோ எப்பவோ வந்ததிற்கு வேறு யாரோ அமைத்த வளைவு என்று தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.
உலகத் தமிழ் மாநாடு நடந்ததின் விளைவாக மதுரைக்கு இப்படி பல நுழைவாயில்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரும் உண்டு. இனி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதன் பெயர் கேட்டாலும் கேட்கக் கூடும். மதுரை மக்கள் வாய்ப்பை பயம் படுத்திக் கொள்ளவும்.
கம்பருக்கு ஒரு சிலை இருக்கு மாட்டுத்தாவணி பேரூந்து நிலயத்துக்கு அருகில். பக்கத்தில் ஒரு வளைவும் உண்டு. ஒரு நாள் கம்பரின் கழுத்தில் மாலைகள் அமர்க்களமாய். பொதுவாய் சாதீய தலைவர்களுக்கும், சாதி சாயம் பூசப்பட்ட தேசீயத் தலைவர்களின் சிலைகளுக்கு தான் அப்படி மாலைகள் விழும். கம்பருக்கு மாலைகளளிருக்கே… ஆட்டோவில் போகும் போது கவனித்தது.
எப்படியோ கம்பர் வரை வந்து விட்டோம்.. அப்புறம் இன்னும் கொஞ்சம அவர் சொல்லும் நுழைவாயில் சமாச்சாரத்தையும் தான் பாத்திடுவோமே.. கம்பருக்கு முன் அனுமன் தான் Gateway of Lanka வைப் பார்க்கிறான். சாதாரணமா எதுக்கும் பயப்படாத பய தான் நம்ம அனுமன்.. ஆனாலும் அந்த நுழைவாயில் பாத்து செத்த நொடிஞ்சி போகிறார் என்பது தான் உண்மை.
நம்ம நாகேஷ் மெட்ராஸை முத்ன்முதலாக பாத்து, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று வாயெப் பிளந்தது மாதிரி அனுமன் வாயை மூடாமல் பாக்கிறார். ஒரு valuation கணக்கு போகுது.. ஏழு உலகத்து மக்கள் எல்லாரும் சண்டை போட வந்தாலும் (அனுமன் சண்டைக்கு வந்ததால் இப்படித்தானே யோசனை போகும்?) எல்லாரும் ஒண்ணா போயிடலாமாம்..அவ்வளவு பெரிய நுழைவாயில்..அதுவும் இதெல்லாம் சாதாரண டிராபிக் போகத்தானாம்.. அப்படிப்பாத்தா இந்த ராஜாவோட படை ஏழு கடலைவிட அதிகமா இருக்குமே… இப்படி போகுதாம் யோசிப்பு..
ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்த்தால்
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான்.
சரி..சரி.. வேற எந்த வளைவைப் பத்தியும் யோசிக்காம பொங்கல் வைப்போம்.. பொங்கல் வாழ்த்துக்கள்.
கேட் திறந்த வெள்ளமாக வரிகள் …
உள்ளத்தை அள்ளிச் செல்கிறது..
தொடர்புகள் அருமை.
வழக்கம் போல் கம்ப ராமாயணம் கலந்தது சிறப்பு.
பொங்கல் வாழ்த்துகள்..
தொடர்ந்து எழுத தரும் ஊக்கம்.. நன்றி
சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ மாதிரி
பரமகுடி ஆர்ச்சின் கதை என்று ஒரு கதை/கட்டுரை எழுதி
விடுங்களேன் !
அடுத்த முறை பரமக்குடி செல்லும் போது அவசியம் ஆர்ச் பற்றி ஆராய வேண்டும்..
ஊக்கமூட்டும் உங்களுக்கு நன்றிகள்.