மீன் வாசம் மறையுமா??


சமீபத்திய சன் மியூசிக் சேனலில் அடிக்கடி வரும் பாட்டு “சர..சர..சாரக்காத்து வீசும் போது” என்ற பாடல் தான். பாடல் வரிகளை மீறி அதன் இசையும், அதற்கும் மேலாக அந்த நாயகியின் முக பாவங்களும்.. ஆஹா.. எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காது இருக்கிறது.

அதில் வரும் ஒரு காட்சியில், ஓடையில் மீன் பிடித்து அதனை வறுத்துத் தருவது மாதிரி ஒரு சீன்… பாக்கும் போதே வாயில் நீர் ஊறுது… மீன் மணமும் லேசா அடிக்குது… அதென்ன மீன் வாசம் என்று சொல்லாமல், மீன் மணம் என்று சொல்றேன்னு பாக்குறீங்களா??

இது ரெண்டையும் விட, நல்ல வார்த்தைப் பிரயோகம் நாற்றம் என்பது தான். ஒரு காலத்தில் நல்ல அரத்தம் தரும் இந்தச் சொல், சமீப காலமாய் பொருள் மாறி நாத்தமடிக்க ஆரம்பித்து விட்டது. கற்பூரம் நாறுமோ.. கமலச் செவ்வாய் நாறுமோ என்று ஆழ்வார் பாசுரங்களில் வந்த காலம் போய், அது வேறு வாய்…இது நாற வாய்.. என்று வடிவேலு வாயில் வந்து விழுந்து கிடக்கிறது, இந்த மணம் கமழ்ந்த தமிழ் வார்த்தை.

அந்தமானில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, சைவ உணவு விடுதிகள் உள்ளன.. சைவக் காரர்கள், அசைவ ஆட்களோடு இருந்து சைவம் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டியது, இங்கு மிகவும் அவசியமான ஒன்று. காய்கறி மார்க்கெட் அருகிலேயே மீன் மார்க்கெட் இருப்பதும் இங்கே சர்வ சாதாரணம்.

மீன் வாசமே இப்படி என்றால்… கருவாடு வாசம் எப்படி இருக்கும்??
கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள், ஆசை ஆசையாய் பரமக்குடி கருவாடுக்காய் ஏங்குவார்கள்… (மதுரை கிட்னி, சட்னிக்கு பேமசு என்பது போல், பரமக்குடி கலாட்டாவுக்கு அடுத்து கருவாடு தான் ரொம்ப பேமஸு). ஒரு படத்தில் கூட கருவாடு கூடை கூடையாய் கமல் கொண்டு வருவது போலவும், ஆட்டோக்காரர் படும் அவதியும் காமெடியாய் பாத்திருப்பீர்கள்.

அந்தமான் வந்த பிறகும் அந்த பரமக்குடி கருவாடுக்கு ஒரு டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. மறைந்த கக்கன் அவர்களின் மருமகன் நம்மூர் கருவாட்டுக்கு ரசிகர் என்ற ரகசியமான தகவல்… யாருக்கும் சொல்லிடாதீங்க..

கல்லூரிக் காலமாய் ஆகட்டும், அந்தமான் வந்த போதும் சரி… அந்த கருவாட்டை ஒரு வாசமில்லா மலரிது மாதிரி…. வாசமில்லா கருவாடு ஆக்கி எடுத்துச் செல்வது தான் பெரிய்ய கலை மாதிரி..
இதோ.. இந்த பிரச்சினையால், கருவாடு சாப்பிடும் ஆசையினையும் நாக்கையும் அடக்கும் அசைவ பிரியர்களுக்கான உன்னத டிப்ஸ்..

அரை கிலோ கருவாடை நாடு கடத்தி, வாசமில்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா..?? அதற்கு, அரைக்கிலோ கருவேப்பிலை வாங்குங்கள்.. முதலில் கருவேப்பிலையை படுக்க வைத்து அதன் மேல் பேப்பர் வைத்து கருவாட்டினை அடுக்கவும். பின்னர் அதன் மேல் இன்னொரு பேப்பர் வைத்து அங்கும் கருவேப்பிலை வைத்து சுருட்டவும்.. ஒவ்வொரு ரவுண்டிலும், கருவேப்பிலை வைக்க மறக்காதீர்கள்..

பேக்கிங்க் அளவு கொஞ்சம் பெரிசா இருக்கும்.. ஆனா மூக்கு மேலே வச்சி உறிஞ்சி பாத்தாலும் கூட, கருவாடு வாசம் வரவே வராது… கருவேப்பிலை தான் Default ஆக வந்து நிற்கும்..

ஒரு நாள் பரமக்குடியிலிருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஏம்மா கருவாட்டுக் கூடெ.. ஏறாதே…எறங்கும்மா..என்று கராராய் மூக்கில் விரலை … கையை வைத்து… வைது கன்டக்டர் விரட்டினார்.. நான் போனேன் வக்காலத்து வாங்க…

நீங்க கருவாடு சாப்பிடுவீங்களா?? என்று கண்டக்டரைக் கேட்டேன்..
ம்..என்றார்..

அப்பொ..ஏன் இவங்களை இந்தக் கெடாசு கெடாசுறீங்க?? இது என் கேள்வி.

இந்தக் கருவாட்டுக் காரிக்கு டீஸண்டா(???) இருக்கும் நீங்க சப்போர்ட்டா??? இது அவர்களின் ஆச்சரியமான கேள்வி..

நானும் ஒரு கருவாட்டுக்காரன் தான் என்று அந்த கருவேப்பிலை பேக்கிங்க் காட்டினேன்… கருவாட்டுக் காரிக்கு சீட் கிடைந்தது… நாலைந்து பேர் வாந்தி எடுதார்கள் என்பதை நான் எழுதப் போவதில்லை..

அரைக்கிலோ கருவாடு வாசம் எடுக்க இவ்வளவு சிரமப் பட்டா… ஒரு கடலில் இருக்கும் மீன் பூரா வாசமில்லாமெ மணக்க என்ன செய்யலாம்???

கம்பர் உதவிக்கு வருகிறார்… நான் பார்த்திருக்கேன் என்று.. வடிவேலு ரஜினி ஸ்டைலில் “நான் கேட்டேனா” என்று என்னால் கேக்க முடியலை… “சொல்லுங்க வாத்தியாரே நீங்க” என்றேன்.

கம்பர் தொடர்கிறார்: இலங்கையின் பிரமாண்டம் பாத்து அப்படியே பிரமித்துப் போகும் அனுமன், அப்படியே அதன் கடல் மீதும் ஒரு பார்வை பாக்கிறான். கடலில் கலப்பவை எவை? எவை? என்று கண் பார்க்க, மனசு அதுக்கு மேலும் போய் பார்க்கிறது..

பூக்களின் மீதுள்ள தேன்; சந்தனக் குழம்பு, கஸ்தூரியின் (நடிகை இல்லீங்க) வாசனைக் கலவை; வானுலக fresh ஆன கற்பகப்பூ; யானையின் மத நீர் இதெல்லாம் கடல்லெ கலக்க… கடல்லெ இருக்கிற மீன் எல்லாம் புலால் நாத்தம் போய் மணக்க ஆரம்பிச்சிட்டதாம்…

தேனுன் சாந்தமும் மான்மதச் செறி நறுஞ் சோறும்
வான நான் மலர்க் கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கழமும் அவ்வேலை.

இப்பொ சொல்லுங்க கருவாடு மணக்கிறதா??? நாத்தமடிக்குதா???

2 thoughts on “மீன் வாசம் மறையுமா??

  1. Sivamurugan says:

    நல்லா இருக்குங்கோவ்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s