பாடல்களில் எத்தனையோ வகைகள் இருக்கிறதா சொல்றாங்க… நமக்குத் தெரிஞ்ச வகை எல்லாம் ஒண்ணு தான்..அது சினிமாப் பாட்டு தான். வேணும்னா.. அதிலெ எத்தனை வகையான பாட்டு இருக்கு என்று யோசிக்கலாம். (இந்த கொலைவெறி பாட்டை எந்த ரகத்தில் சேர்ப்பது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுட்டு நான் மேலே தொடர்கிறேன்.)
சில சொக்க வைக்கும் பாடல்கள்… Mid Night Masalaa ரகமும் உண்டு.. கண் கலங்க வைக்கும் பாட்டுக்கு நடுவே அப்பப்பொ தூங்க வைக்கும் பாட்டும் வரும். தாலாட்டுப் பாடல்கள் வகை அவை.
தொப்புள் கொடி உறவு அறுந்து போய்விடாமல் இருக்க தாய் பாடும் உறவுப் பாலம் தான் அந்த தாலாட்டு.
தாலாட்டு பாடல் கேட்கும் குழந்தை, தான் ஒரு பத்திரமான இடத்தில் இருப்பதாய் உணர்ந்து அதனால் தான் தூங்குவதாய் ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் ஆய்ந்த போது, தாலாட்டுப் பாடல்களின் அமைப்புகள் குழந்தைக்கு பரிச்சயமான தாயின் இதயத்துடிப்பான லப் டப் ஓசைக்கு சமமாய் இருப்பதாகவும் சொல்லியது தெரிந்தது.
கண்ணே கலைமானே.. கண்ணின் மணியென கேட்டுப் பாருங்கள்… நீங்கள் குழந்தை ஆகி தூங்கிவிடுவீர்கள்.
தென்பாண்டி சீமையிலே..தேரோடும் வீதியிலெ… சோகம் தெரிந்தாலும் சுகம் தான்.
புஷ்பவனம் தம்பதிகள் பாடிய ஆராரோ ஆரீரரோ கேளுங்கள்..அதில் மாமன் அடிச்சானோ..என்று தொடங்கி உறவுகளை இணைக்கும் முயற்சி முளையில் விதைக்கும் ரகசிய வித்தை தெரியும்.
தண்ணீர் தண்ணீர்…பாலசந்தர் படம் தெரிந்திருக்கும். அதில் வரும் பாடல் ஒண்று அந்த தண்ணீர் பிரச்சினையையும் இணைத்தே பாடும்..
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து,
தொட்டில் நணையும் வரை,
உன் தூக்கம் கலையும் வரை…
கண்ணான பூமகனே..கண் உறங்கு சூரியனே.. இப்படி வரும்.
சோக வெள்ளம் வரட்டும் அல்லது நீ முழிச்சிக்க whichever is earlier என்று தாய் பாடும் பாட்டு அது.
சரி நல்ல தூக்கத்தின் அடுத்த கட்டம் கனவு. ஆழமான தூக்கத்தில் தான் கனவு வரும் என்பார்கள்.. Benzeen எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடையே கனவில் தான் கிடைத்ததாய் அறிவியல் அறிஞரே சொல்லி இருக்கிறார்.
கண் விழித்துச் சொப்பனம் கண்டேன்..இது லேட்டஸ்ட் டெக்னிக்.. கனவு காண். ஆனால் தூங்கிவிடாதே.. கலாம் காணச் சொன்ன கனவும் அது தானே..
இருக்கும் சூழல் ஒட்டித்தான் பல கனவுகள் வரும்.
என் பையன் ஒரு கனவு பற்றிச் சொன்னான்.. சுனாமி வந்து..(அந்தமானில் வேறு நல்ல கனவா வரும்??) எல்லாரும் ஓட…நான் மட்டும் ஒரு நல்ல எடத்துக்கு போய் தப்பிச்சேன்.
நான் ஆர்வமா கேட்டேன்..எங்கே..எங்கே..
அதான் நீங்க தூங்க உடாமே எழுப்பிட்டீங்களே..ஸ்கூல் போகணும்னு.
இன்னும் ஒரு பத்து நிமிஷம் டயம் இருக்கு.. இன்னும் கொஞ்சம் தூங்கி கனவு continue செஞ்சி எந்த எடம்னு பாத்துச் சொல்லேன்… என்றேன்.
பையன் சொன்ன பதில் தான் இந்த போஸ்டிங்க் டைட்டில். என்ன இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு?
பையனை சமாதானப் படுத்தி, அடப்பாவி அந்த டயலாக் என்னோடது இல்லெ..கம்ப ராமாயணத்திலெ வருது என்றேன்.. அப்பொ அதை போஸ்டிங்க் போடுங்க..எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி என்று பறந்து விட்டான்.. அவன் போனா என்ன..நீங்க கேக்க மாட்டீகளா என்ன??
இலங்கை அழிவதாயும் அப்போது திருமகள் விபீடணன் அரண்மனைக்குள் நுழைந்ததாகவும் கனவு. இது பாதிக்கனவு. கண்டவள் திரிசடை அழகான இராட்சசி. கேட்டவர் சீதை. அப்புறம் என்ன ஆச்சி…ப்ளீஸ் கொஞ்சம் தூங்கிட்டு சொல்லும்மா..கெஞ்சுகிறார் சீதை…
பொன்மனை புக்க அப் பொரு இல் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன்குறை காண் என்று ஆயிழை
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள்.
நம்மளை இப்படி யாராவது தூங்கச் சொன்னா..தாலாட்டு கேக்காமலேயே ஜாலியா தூங்குவேன்..ஆமா..நீங்க எப்படி??
யாராவது தூங்கச் சொன்னா எப்படி தூக்கம் வரும்?
நம்மளே தூங்கினால் தான் உண்டு !