சுத்தி சுத்தி எப்படியாவது மதுரைக்காரங்க வாயிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் வந்து விழும் வார்த்தைகள் தான் இந்த மதுரெ மதுரெ தான்.
எனக்கு என்னவோ மதுரை என்றதும் மல்லி தான் நினைவுக்கு வரும். அந்தமான் தீவுகளில் மல்லிகை பூ வந்து சேர்கையில் பக்கத்தில் போய் பாத்த தான் அட இது மல்லி..என்பதே தெரிய வரும்.
கையில் கிளி வைத்திருக்கும் மீனாட்சி இருக்கும் ஊரில் கிளி மாதிரி அழகான பெங்களுக்கு பஞ்சமே இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்த 4ம் நம்பர் பஸ்ஸில் ஒரு வேளையும் இல்லாமல் சும்மா சுற்றுபவர்களும் இருக்காங்க..
வீட்டில் மதுரையா?? சிதம்பரமா?? என்று உலகத்தில் எந்த மூலையிலுன் கேட்கும் அளவுக்கு மதுரை பேமஸு. சமீப காலமாய் மதுரெ கிட்னிக்குமாடா பேமஸு என்ற வடிவேலுவின் டயலாக் அசத்தலோ ஆசத்தல்.
மதுரை மண்ணை அனுபவித்து வைரமுத்து கவிதையே பாடலாக தொகுப்பில் எழுதி இருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த வரிகள்..உங்களுக்கும் பிடிக்கும்..அட..அடடே என்று சொல்ல வைக்கும்.
பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை – இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை!
நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை – தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை!
தமிழைக் குடித்த கடலோடு – நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை – இது
மரபுகள் மாறா வேல்மதுரை!
போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும்
பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை
நிறுத்திப் போகும் வளையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண்
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!
ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம்
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை!
நெஞ்சு வறண்டு போனதனால் – வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப்
பட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை – பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை
கடைசி வரிகள் பாடும் போது உங்களையும் அறியாமல் ஒரு சோகம் வரத்தான் செய்யும்… எப்படி இருந்த மதுரை இப்படி ஆயிடுச்சே என்ற கவலையும் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்.
சமீபத்திய மதுரையே இப்படி இருந்தா…கம்பன் காலத்து மதுரை எப்படி இருக்குன்னு பாக்க வேணாமா… வாங்க..ஏறுங்க…நம்ம Time மிஷினில் ஏறினால் கம்பன் காலத்துக்கு நொடியில் பயணம் at free of cost.
எல்லா உலகமும், எல்லா வகையிலும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் இருப்பவை ரெண்டாம்..1. முத்து 2. தமிழ் (அதுவும் இயல்,இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தது). இந்த ரெண்டும் எக்கச்சக்கசக்கமாய் ஓர் எடத்திலெ இருந்தா அங்கெ செல்வங்களுக்கு குறையே இருக்காதாம்… அப்பேற்பட்ட இடம் தேவலோகம் தான்.. ஆனா மதுரையிலு இதெல்லாம் கீது..அதனாலெ மதுரெயும் தேவலோகம் தான் என்கிறார் கம்பர்.
அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எத் திறத்திலும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து முற்றலால்.
இப்பொ மதுரெ மதுரெ தான் ஒத்துக்கிறீங்களா??? எங்கே..எல்லாருமா சேர்ந்து ஓ போடுங்க பாக்கலாம்.
கம்பன் பாட்டில் மதுரை என்ற வார்த்தை வரலியே?
நல்ல கேள்வி…
இதற்கு முந்தைய பாடலில் நீர் வளம் கொண்ட சோழ நாட்டை நீங்கி, இல்லறத்தில் சிறப்பு விளங்கும் சேர நாட்டை அடைந்தார்கள். அங்கும் சீதையை காணாமல் இனிய தமிழ் வழங்கப் பெறுகின்ற தென் பாண்டி நாட்டை அடைந்தார்கள்..என்று வருகிறது..அதைத் தான் நான் மதுரை என்று குறிப்பிட்டேன்…