விதியை விதியால் வெல்லலாம்


”என்ன இது, நம்மாளு ரொம்ப சீரியஸா “விதி” பத்தியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டாப்ளெ” என்று யாரும் யோசிக்க வேண்டாம். எனக்கு அது அவ்வளவு சரியா வராது. (சந்தானம் ஒரு புதுப்படத்தில் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருக்க.., அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று ஹீரோ சொல்லி மீண்டும் அவரை காமெடியனாகவே கண்டீயூ செய்ததையும் சற்றே நினைவு கொள்க). ”ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான்” என்று முன்னடியே நான் தான் சொல்லி வச்சேன் என்று முமு பாக்யராஜ் கோபப் படப் போகிறார். (முமு – முந்தானை முடிச்சு).

நான் சொல்ல வரும் விதி, விதிமுறை பற்றியது. (அப்பாடா… ஏதோ நியூட்டன் விதி பத்தி எழுதிடப் போகிறேனோ என்று பயந்தவர்களுக்கு ஒரு நிம்மதி). அப்துல்கலாம் ஐயா சொன்னதாக ஒரு செய்தி படித்தேன் வதனப்புத்தகத்தில் (முகநூல், மூஞ்சிப்புத்தகம் இதோட இதையும் உபயோகம் செய்கிறார்கள்). வெளிநாடுகளில் இந்தியர்கள், சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை பொது இடங்களில் சாப்பிட்டால், அதன் உறைகளை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள். பின்னர் குப்பைக் கூடைகளில் போட்டு விடுகின்றனர். ஆனால், அவர்களே, இந்தியாவிற்கு வந்தால் ஏர்போர்ட்டில் கூட புளிச் என்று துப்புவதாய் கலாமய்யா வருத்தப் பட்டாராம்.

நாமளும் செஞ்சி பாப்போமில்லெ, என்று அந்தமானில் வாக் போகும் போது யோசித்தேன். மற்ற ஊரை விட அந்தமானில் அவ்வளவு குப்பைகள் தெருவில் இருக்காது. (குப்பை போட ஆட்கள் குறைவு, என்பது தான் உண்மை. குப்பைகளை விட கார்களும், அதைவிட டிராபிக் போலீஸ்களும் தான் சமீபத்தில் அதிகமாய் மிரள வைக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக, ஜங்கிலிகாட் பள்ளியிலிருந்து சாக்லெட் கவர் வைத்துத் திரிந்தேன் அபர்தீன்பஜார் வரை. ஒரு குப்பை கூடை சிக்கவில்லை. ஒரு கடைக்கு முன்னாடி இளநி வெட்டி அதை போடுவதற்காய் ஏற்பாடு செய்திருந்தார் சுத்தமாய் இருக்க முயற்சிக்கும் கடைக்காரர். நாலு இளநி உள்ளேயும் பத்து இளநி வெளியேயும் இருந்தது. கடைசியில் வீட்லெ வந்து தான், குப்பைக் கூடையில் போட முடிந்தது.

சமீபத்தில் சான்சங் என்று ஒரு கப்பலில் சென்று வந்தேன் கிரேட் நிகோபார் தீவு வரை. அது வெளிநாட்டுக் கப்பல். ஒப்பந்த அடிப்படையில் அந்தமானுக்கு சேவையில் வந்து சேர்ந்தது. நல்ல உல்லாசமான கப்பல் தான் அது. (சின்ன சைஸ் டைட்டானிக் என்று கூட சொல்லலாம்). அவ்வளவு ஆடம்பரமான கப்பல். (ஆனால் இருவர் பயணிக்கும் கேபினில் ஒரே ஒரு டபுள் பெட் இருந்ததை மட்டும் சிக்கலோடு தான் பார்க்க (படுக்க) முடிந்தது. ஒரே குடும்பத்தினருக்கும், கணவன் மனைவிக்கும் பாத்து பாத்து கேபின் அலாட் செய்ததாய் கேள்வி..( அது சரி.., மேரேஜ் சர்டிபிக்கேட் ஏதும் கேட்டாங்களா? நானும் அதை கேக்க மறந்துட்டேன்).

அந்தக் கப்பலில் சின்ன கப்களில் டீ கொடுத்தார்கள். ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் ரெஸ்டாரெண்டில். நம்ம லுங்கி கட்டிய ஆட்கள் கூட டீ குடிச்சி முடிச்சதும், சூப்பரா அந்த கப்பை கொண்டு போய் குப்பை கூடையில் போடுவதை பாக்க முடிஞ்சது. அட, இந்தியா முன்னேறிடுச்சே என்று விளக்கம் கேட்ட போது தான் விபரம் தெரிந்தது. எச்சில் துப்பினாலொ, டீ கப்பை வெளியில் தூக்கிப் போட்டாலோ, 100 முதல் 500 வரை அபராதம் என்று ஒரு வருடமாய் பழக்கிய பின்னர் தான், நான் கப்பல் ஏறி பாத்திருக்கும் இன்றைய நிலமையாம்.

ஆக, இந்தியர்களிடையே கூட சுத்தமாய் இருக்க இயலும். (அந்தமானை மினி இந்தியா என்பதால், அந்தமான் அனுபவங்களை வைத்து இப்படி சொல்ல முடிகிறது). இப்படி மாற்றங்கள் வர மூன்று தேவைகள் கட்டாயம்.
ஒன்று: தண்டனைகள் கடுமையானதாக இருத்தல் வேண்டும்.
இரண்டு: தண்டனைகள் தருவோர் நேர்மையாக இருத்தல் வேண்டும்.
மூன்று: விதிமுறைகள் கடைபிடிக்க ஏதுவான சூழலை அமைத்தல் வேண்டும்.

விதிகளுக்கு ஏற்ப வேலையா? அல்லது வேலைக்கு தகுந்த மாதிரி விதிகளா? இந்தக் குழப்பம் அடிக்கடி வரும். ஒரு வேலையை செய்வது தான் அந்த நிர்வாகத்தின் கடமை. வெறுமனே ரூல் மட்டும் தான் பாப்பேன். வேலை நின்னாலும் பரவாயில்லை என்பது எந்த வகையில் சேத்தி?. அதுக்காக ரூல்களை காத்திலெ பறக்க உட்டுட்டு வேலை செய்ய முடியுமா என்ன? அப்புறம் ஆடிட், விஜிலென்ஸ், சிபிஐ இவங்களுக்கு யார் பதில் சொல்வது? ஆக, வேலையும் நடக்கனும். விதிகளையும் பாத்துக்கனும். நீ கொஞ்சம் இறங்கி வா. நானும் கொஞ்சம் ஏத்துறேன் என்ற விலை பேரம் பேசுற மாதிரி தான் இதுவும்.

Sustainable Development என்று ஒரு வாசகத்தை அடிக்கடி பயன் படுத்துகிறார்கள். செம அடி அடிக்கனும். ஆனா சாவக்கூடாது. வலிக்காத மாதிரி அழுவது. இப்படி பல வடிவமா அதை தமிழ்ப்படுத்தலாம். ஆனா முக்கியமான அமசம் “பொது நலன்” Public Interest இது தான் அதன் ஆணி வேர் (சுயநலம் சேராத பொது நலன்.. இது கொஞ்சம் இன்னும் பெட்டர்). பெரும்பாலும் ”சுற்றுச் சூழலுக்கு குந்தகம் வராமல் எப்படி கட்டுமானம் அமைப்பது?” என்ற கேள்விக்குத்தான் இந்த Sustainable Development என்பதை பதிலாகச் சொல்வார்கள். (தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கூட இந்தப் பொதுநலன் என்ற வார்த்தைகள் அடிக்கடி வந்து போகும்).

கம்பர் கனவில் வந்து, அவர் காட்டிய (ராமர் கட்டிய)பெரிய கட்டுமானத்தை சொல்லிவிட்டுப் போனார். காலையில் எந்திரிச்சி, கம்பராமாயணத்தை படிச்சபோ, இந்த மாதிரி Environmental Clearance வாங்குவது போன்ற சூழல் தெரியுது. ராமனுக்கு வந்ததோ இல்லையோ, நம்ம கம்பனுக்கு வந்திருக்கு. ஆமா.. கோல் மைனிங் என்றெல்லாம் இப்பொ அடிக்கடி பேப்பர்லெ வருதே, அதே மாதிரி இலங்கைக்கு பாலம் கட்ட மைனிங் செய்து தானே கல்லை எடுக்க வேண்டும்? அந்தப் பெரிய கட்டுமானம் நடக்கிறது. கம்பர் யோசிக்கிறார். எவராவது பிற்காலத்தில் கேள்வி கேட்டால்?? பதிலும் அவரே சொல்கிறார்.

கற்களை எடுக்கும் மலை எப்புடி இருக்காம்?? சும்மா குளு குளுன்னு இருக்காம். பெரிய்ய காய்களையும், கனிகளையும் தினமும் கொடுக்குதாம். தவம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்கள் இருக்கறச்சே, இந்த கட்டுமானம் காரணமாய் மலை தகர்ப்பு (வெடி வைக்காமலா) நடக்கிறது. முனிவர்களுக்கோ dislocate ஆகனுமே என்று கோபமும் வருது. ஆனா பின் விளைவுகள் பத்தி யோசிக்கிறாய்ங்க.. தீயோர் இறக்க, நல்லோர் நலம் பெற Public Interest இருப்பதால் அவர்கள் கோபப்படலையாம்.

கனிதரும் நெடுங்காய் தரும் நாள்தொறும்
இனிதருங் தவம் நொய்தின் இயற்றலால்
பனிதருங் கிரிதன் மனம் பற்று அறு
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.

ஆக, இந்த sustainable development போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் இந்தியாவுக்கு 1990களில் தான் வந்தது என்று யாரும் நெனைச்சிடாதீங்க. கம்பர் அப்பவே சொல்லிட்டார்.

அவனா நீ???


இன்றைய படங்களையும் காமெடி காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புரியும். அவைகள் ஒரு வகையில் நம் சமூகத்தோடு ஒன்றாகக் கலந்து போய் உள்ளன என்பதும் தான், நான் சொல்ல வந்த சேதி. சில வார்த்தைகள் திரைப்படங்களில் “சினிமாவில் பயன்பாட்டிற்கு முன்” மற்றும் “சினிமாவில் பயன்பாட்டிற்கு பின்” என்று சொல்லும் அளவுக்கு மாறியே போய் விட்டன. வருங்கால வரலாறு இதனை கிமு கிபி என்று அழைப்பது போல், சிமு சிபி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இப்பெல்லாம் “அவனா நீ?” என்று யாரையும் சாதாரணமாய் கேட்டுவிட முடியாது. கேட்டால் அதனால் உண்டாகும் பாதகங்களுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டி வரும். அடுத்தவர் மனம் கோணாது நடப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு பிறப்பிலேயே வரும். சிலருக்கு என்பது வயது தாண்டினாலும் வராது. கோவை பக்கம் சூப்பரான ஒரு வட்டார வழக்கு இருக்கு. சுட்டுப் போட்டாலும் வராது என்பார்கள். ஏன் தான் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு இன்னும் சுட்டுப் போட்டாலும் புரியலை.

சமீபத்தில் அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஒரு சின்ன உல்லாச விருந்துக்கு ஏற்பாடு ஆனது.. (உல்லாசம் என்றவுடன்.. உங்கள் கற்பனை சிறகுகள் எல்லாம் பறக்க விட வேண்டாம்.. ஏதோ வீட்டுல உக்காந்து சாப்பிடறதுக்குப் பதிலா, ஹோட்டலில் போய் நின்னுட்டு சாப்பிட்டு வர வேணும் அம்புட்டு தான். பில்லுக்கும் பல்லிளிக்கும் நபருக்கும், வாசற்கதவு திறந்து சலாம் வைப்பவருக்கும் பணம் தரவேணும் என்பது எழுதப்படாத விதி).
சில ஜாலியான குடும்ப விளையாட்டுகள் வைத்தோம். பேப்பர் கப் என்று கிடைக்கும் 25 கப்களை ஒன்றாக அடுக்கி, அதனை வலது & இடது என்று கை மாற்றி மேலிருந்து எடுத்து கீழாய் அடுக்க வேணும். கணவன் மனைவி ஜோடிகளுக்கு இடையே போட்டி நடந்தது. போட்டி போட்டு நடந்த போட்டியின் முத்தாய்ப்பாய், அன்று ஓய்வு பெறும் அதிகாரியை அழைத்தோம். பொறுமையாய் தன் மனைவியை சற்றும் விட்டுத் தராமல் மனைவிக்கு சமமாய் கப்களை நகர்த்தி ஒரு நிமிடத்தில் விளையாட்டை முடித்தார். இறுதியில் சிறந்த ஜோடிக்கான சிறப்பு பரிசை தந்தோம் என்பது கொசுறுத் தகவல்.
மனைவியின் மனம் வருந்தி விடக் கூடாதே என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முகம் தெரியா விருந்தினர்களையும் உபசரிக்க திண்ணை வைத்து வீடு கட்டியது அந்தக் காலம். உழைப்பாளிகளின் சுமைகளை இறக்கி வைக்க, சுமை தாங்கி எல்லாம் இருந்தது. குடிக்க தண்ணி கேட்டால் செம்பு நிறைய கிடைத்தது ஒரு காலம். இப்பொ பாக்கெட் தண்ணி வாங்கி குடிக்கும் காலம். அடுத்தவர் பற்றி நமக்கு அக்கறை குறைக்கும் வித்தை மிக அக்கரையோடு கற்பிக்கப் படுகிறதோ!!!

காக்கை வடை திருட்டும் கதை, நரி காக்கையை ஏமாற்றும் கதை இவை எல்லாம் நமக்கு கிடைத்த பால பாடங்கள். ஏமாற்றுவது என்பது ஒரு தவறு இல்லை என்று அந்த பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விட்டது. நடுவில் சினிமா படங்களும் சில தத்துவங்களை மனதில் பதிக்கின்றன. நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை – போன்றவை சாம்பிள் சினிமா தத்துவங்கள். நேர்மை நியாயம் எல்லாம் அந்தக்காலத்து நாடகம் & சினிமாக்களில் மட்டுமே பாக்க முடிகிறது.

இப்பேற்பட்ட சூழலில் நம்மை யாராவது மனசு நோகடிக்கும்படி செய்தால் அல்லது பேசினால் கஷ்டமாத்தான் இருக்கு. அதை எப்படி சமாளிப்பது என்பது அவரவர் சாமர்த்தியம். ஆனா இதே சங்கடத்தை அடுத்தவர்க்கு நாம் தராமல் இருக்கலாமே?? மாமியார் மருமகள் கொடுமை, ராகிங்க் போன்றவை ஒழிய இந்த மனோபாவ மாற்றம் தேவை. ஒரு புரமோஷன் கொடுக்க உயர் அதிகாரிக்கு வலிக்கிறது. ஏன் என்று கேட்டா, அவருக்கு இப்படி லேசா கெடைக்கலியாம்??? கோர்ட்டுக்கு எல்லாம் போய் தான் கெடேச்சதாம்.. அதனாலெ.. அடுத்தவங்களுக்கும் லேசிலெ தரமாட்டாராம்..
நான் செருப்பு கூட இல்லாமல் ஸ்கூலுக்கு போனேன். நடந்து தான் போனேன். நானும் இப்பொ என் பையனையும் “செருப்பில்லாமெ போ” என்று சொல்லவில்லையே… நல்லதா ஷு வாங்கி தரலையா?? காரில் போக வசதி செய்து தரலையா?? இதே மாதிரியான எண்ணங்கள் வேலை செய்யும் இடத்திலும் இருக்கலாமே என்பது என் கருத்து..
நல்லா இரு… என்று சொல்வதும், நல்லா வருவே என்று சொல்வதும் கூட சினிமாவில் வேறு பொருள்.. சரி.. நாம கம்பர் இந்த மாதிரி சமாசாரம் ஏதாவது சொல்லி இருக்காரா என்று தேட ஆரம்பிக்கலாமா என்று தேடினேன். தேடினால் கிடைக்காமல் போகாது என்பது சரி தான் கிடைத்தது.
ஹனுமன் நெற்றியில் ஒரு Spy Camera வச்சிட்டேன். அவரு என்ன பேசுகிறார் யோசிக்கிறார் (??) பார்க்கிறார் வரைக்கும் நீங்களும் பார்க்கலாம். ஆனா சிந்தனையின் Copy Right மட்டும் கம்பருக்கு. இலங்கையின் ஏரியல் வியூ தெரிகிறதா உங்களுக்கும்?? பிரம்மாண்டமான அரண்மனை… சுகமான நித்திரையில் ஒருவன். ஹனுமன் பார்க்கிறார். “அவனா நீ?” (இராவணனா நீ என்று தான் பொருள்??) அப்படியே இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தானே ஆயுள்.. அது வரை.. நல்லா இரு என்று ஆசி செய்து நகர்கிறார். செவிக்கு தேனாய் இனிக்கும் இராமனின் புகழினை திருத்தமாய் சொல்கின்ற வானரத் தலைவன் வாயால் வாழ்த்தினால் பலிக்காமலா போகும்!!
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கைகவித்து நீங்கிடச் சில பகல்என்பது கருதாசெவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்கவிக்கு நாயகம் அனையவன் உறையுளைக் கடந்தான்.
இனி மேல் வாழ்க வளமுடன் என்றாவது சொல்லிப் பாருங்கள்.. அவங்களோடு நீங்களும் நல்லா இருப்பீங்க..

தங்கத் தாமரை மகளே…


நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே வரும் பொருட்களை ஒரு பட்டியல் போட்டால் அதில் தங்கம் நிச்சயமாக இருக்கும். “முழம் ஏற.. ஜான் சறுக்க..” என்கிற மாதிரி அப்பப்பொ இறங்கு முகமும் காட்டி விளையாடும். ஆனா இந்த சொக்கத் தங்கம் நம் மக்களிடையே இந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாராலும் எதிர் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு எங்கும் எதிலும் தங்கம் பொன் இப்படி இருக்கிறது.

தங்கப்பதக்கத்தின் மேலே… ஒரு முத்துப் பதித்தது போலே.. இப்படி ஒரு கற்பனை ஓடுது ஒரு கவிஞருக்கு… ஒலிம்பிக்கிலெ தங்கம் கிடைக்கலையே என்று நொந்து கிடக்கும் போது அந்த பதக்கத்தின் மேல் ஒரு முத்தும் பதித்த மாதிரி ஒரு காதலி.. ஆஹா..இது போதாது?? எனக்கு ஒரு ஐடியா தோன்றது. இந்த மானாட மயிலாட மாதிரி எல்லா சேனல்லெயும் ஆட்டம் என்கிற பெயரில் செமெ ஜிம்னாஸ்டிக் வித்தைகள் செய்யிறாங்க.. பேசாமெ அவங்க எல்லாரையும் நல்லா டிரைன் பன்னி, தங்கம் வாங்க டிரை செய்யலாமே..( ஒரு தங்கம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு??)

என் எஸ் கிருஷ்ணன் & மதுரம் நடித்து பாடிய ஒரு சூப்பர் ஹிட் பழைய காமெடி பாடல் இருக்கு. நல்ல தம்பி தான் படத்தோட பேரு என்று நினைக்கிறேன். தங்கமே என்று அழைத்து.. வாரி அணைக்க பாடுவார். நாயகி தன்னை பாடுவதாய் நினைத்து கோபிக்க… அட… ஒன்னெ இல்லைம்மா… கொஞ்சம் கொஞ்ச்சமா காசு சேத்து செம்பு, பித்தளை, வரை வந்தாச்சி… தங்கம் தான்…என்று இழுப்பார்.. அன்று தொடங்கிய இழுப்பு இன்று வரை தொடர்கிறது.

பெரிய திரையில் இந்த தங்கம் வைத்து படத்தின் பெயரும் பாட்டும் அந்தக் காலம் முதலே பிரபல்யம் ஆக ஆரம்பித்து விட்டது. தங்கத் தோணியிலே தவழத்துடிக்கும் காதலன், தங்கத்தில் முகம் எடுத்து காதலியின் பிரதியை விதம் விதமாய் மாற்றத்துடிக்கும் காதலன், தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை இருக்குமா என்று கேட்கும் ஜோடி… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தங்கமலை ரகசியம், தங்கப் பதக்கம், எங்கள் தங்க ராஜா, எங்கள் தங்கம், தங்கச் சுரங்கம், பொன்னூஞ்சல் இப்படி பல ஹிட் தந்த தங்கப் படங்கள்.

கவிஞர்களுக்கும் என்னவோ பொன் பெண் இரண்டையும் இணைத்துப் பாடுவதில் ஓர் அலாதி இன்பம் தான். பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..என்று வரும் பாட்டு சாகாவரம் பெற்ற பாடல். இதேபோல் பொன்நகை புன்னகை என்பதையௌம் அவர்கள் விட்டு வைத்த்தில்லை. பொன்னகை அணிந்த மாளிகைகள்… புன்னகை மறந்த மண்குடிசை..பட்டம் போல் அவர் பளபளப்பார்.. நூல் போலே இவர் இளைத்திருப்பார் என்று ஏற்றத்தாழ்வுகள் பற்றி வந்த அழகான சோகமான பாடல் அது.

தங்கள் குடும்பத்தையே வேண்டாம் என்று வெறுத்து (நொந்து நூலாகிப் போய்) வீட்டை விட்டு வெளியேறிய சித்தர்களுக்கு இரும்பை தங்கம் ஆகும் வித்தை தெரிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை. பிறக்கும் போதே எல்லாரும் குவா குவா என்று தான் அழுதிருப்போம். ஒரு குழந்தை மட்டும் சிவா சிவா என்று அழுதபடியே பிறந்ததாம். அந்தக் குழந்தைக்கு சிவ வாக்கியர் என்றே பெயர் வைத்தனர். அவர் ஒரு முறை காட்டில் ஒரு மூங்கிலை வெட்ட… அப்படியே தங்கம் வந்து விழுந்ததாம்.. (கோலார் தங்க வயலுக்கு பக்கத்தில் அந்தக் காடு இருந்திருக்குமோ).. அந்த சித்தரோ, ஐய்யோ..எமன்..எமன் என்று ஓடி வந்துட்டாராம்.. (அது நான்கு பேரின் உயிர் வாங்கியது தனிக்கதை)

திருமதி சிவவாக்கியரிடம் கொங்கணச் சித்தர் என்பவர் வந்தாராம்..(சிவ வாக்கியாரின் குருவே, உனக்கு இல்லற ஆசை இருக்கு… கல்யாணம் செய்திட்டு அப்புறம் துறவறம் வரலாம் போ..என்று விரட்டியது இன்னோர் கிளைக்கதை) வெறும் மணலை அள்ளிக் கொடுத்து சாப்பாடு தயார் செய் என்றாராம். அவரும் மணலை அரிசி களைவது போல் செய்து உலையில் வைக்க சாதம் வந்ததாம். அரண்டு போன அந்த சித்தரும் ரெண்ட் இரும்பு துண்டை எடுத்து தங்கம் ஆக்கித் தந்தாராம். அதையும் நம்ம சிவ் வாக்கியார் தூக்கி கெணத்தில் தூக்கி எறிஞ்சாராம்.. எப்படி கீது??

ஆக இரும்பை தங்கமாக்கும் வித்தை நம்ம சித்தர்களுக்கு தெரிஞ்சிருக்கு என்பது அரசல் புரசலா தெரியுது.. அது உண்மையா?? ஏதாவது ஒரு Resource Person ஐப் பிடித்து கேட்டா என்ன?? எனக்கு ரொம்ப பரிச்சயமான ஒரே ஒரு அளு… அதுவும் கூப்பிடு தொலைவில் இருக்கிறவர் திருவாளர் கம்பர் தான். அவரைக் கேட்டேன்.. அவர் ஒரு பாட்டை refer செய்தார். பாப்பைய்யா ரேஞ்ஜிலெ இல்லாட்டியும் சுமாரா புரிஞ்சதை உங்களுக்கு சொல்றேனே…

மின்னலடிகும் சூப்பர் வெண்மை என்பார்களே..அதுபோல உடலின் நிறம் உடையவர் சீதை. ஏ கிளாஸ் ஜெயிலில் இருப்பதால் நகைகள் அணிய அனுமதி இருக்கிறது (இருக்கும் இடமோ அசோகவனம்). இராமன் மோதிரம் கைக்கு வந்ததுமே சீதையின் உடல் பொன்னிறம் ஆயிடுத்தாம். கம்பருக்கு ஆச்சர்யம் ஒரு வேளை அந்த உடம்மபையும் தங்கமாக்கும் Chemicals ஏதும் செய்து அனுப்பி இருப்பாரோ ராமன்?? ஆச்சரியம் கம்பருக்கு மட்டும் இல்லை. நமக்கும் தான்.

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறமே மெய்யே
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிக்கொல்லோ

தங்கம் இப்பொ விக்கிற வெலையிலெ இப்படி ஏதாவது குறுக்கு வழியில் தங்கம் செய்தால் தான் உண்டு.. என்ன சொல்றீங்க நீங்க??

வந்தாரய்யா ஜுனியர் வந்தாரய்யா


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும். இதெல்லாம் வாரிசுகளுக்காய் வரிஞ்சு கட்டிச் சொல்லும் வாக்கியங்கள். இது முற்றிலும் உண்மை தானா? காந்திஜியோடொ பிதாஜீ, விவேகானந்தரோட டாடி, சுஜாதவோடொ தோப்பனார் எல்லாம் யார் என்று கேட்டால் பலருக்கு அவர்களின் பெயர் கூட தெரியாது. இதே மாதிரி பல பிரபலங்களின் வாரிசுகளின் பெயர்களும் தெரியாமலேயே போனதும் உண்டு. இன்னொரு பக்கம் தகப்பனை மிஞ்சி மேயும் வாரிசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரையுலகில் வாரிசுகள் வந்து கொண்டிருக்கிறார்கள். பலர் கலக்கிக் கொண்டிருக்க, மண்ணைக் கவ்விய மைந்தர்களும் உண்டு தான். அரசியலில் வாரிசுகளுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பெரிய்ய நிர்வாகத்திறமை, கடின உழைப்பு என்று சப்பை கட்டு கட்டினாலும், உன்னிப்பா கவனிச்சா ஒரு பொறி தட்டும். ஒரு பிரபலத்தின் வாரிசு, சிறு வயதில் ஏதாவது ஒளறும். அந்த வார்த்தைக் கோர்வைகளைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் அந்த வட்ட மாவட்ட சுற்றுகள். அந்த வாரிசு, பாம்பாக இருந்தாலும் அது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு. அதனால் நிர்வாகம் மிக எளிதாக ஏதுவாகி விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுது??

திருவாசகம் பற்றிச் சொல்லும் போது சுகி சிவம் அவர்களிடமிருந்து ஒரு சுட்ட பழம், பறித்து உங்களுக்குப் பரிமாறலாம் என்று இருக்கேன். அந்தக் காலத்தில் ராசாவோட மகன் மக்கா இருந்தாலும் ராசா ஆய்டுவான். ஆனா மந்தரி மகன் மந்திரி ஆகிவிட முடியாது.. புத்திசாலியா இருந்தா தான் மந்திரி ஆக்குவாங்க (அந்தக் காலத்தில்). மந்திரி மகன், புத்திசாலியா இருந்தாத் தான் மந்திரி ஆக முடியும். அப்படி ஒரு மந்திரி தான் வாதவூரான்.. பிற்காலத்தில் மணிவாசகர் ஆனவர்.

வாரிசு வேண்டும் என்றும், அதுவும் அந்த வாரிசு நல்லபடியா பிறக்க வேண்டும் என்றும் பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள். அதனை நிறைவேற்றி வைக்கவும் சில பல Gynacologist கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பிறக்கும் கொழந்தைக்கும் சாமி பெயரும் வைப்பார்கள். நானும் அப்படி வேண்டுதல் வைத்தேன். எங்கள் சார்பில் கர்ப்ப ரக்சாம்பிகையிடம் இமெயில் அனுப்பப் பட்டது. மாமியார் சார்பில் சப்தகன்னி அம்மனுக்கு கூரியரும் தரப்பட்டது. குழந்தை வரம் கிடைத்தது. அப்புறம் ரெண்டு சாமிக்கும் கோபம் வராத மாதிரி, பொண்ணுக்கு சப்தரக்சிகா என்று பெயர் வச்சி, ரெண்டு சாமியையும் கூல் செஞ்சிட்டோம்.
அபிமன்யூ மாதிரி வயித்தில் இருக்கும் போதெ கத்துக் கொண்டு, அதி புத்திசாலிக் குழந்தை பிறக்கவும் இந்த பரமக்குடிக்காரர்கள் முயற்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெற்றது வெற்றியா என்று சகல கலா வல்லவர்தான் சொல்ல வேண்டும். ஆனா பழுத்த ஆன்மீகக் குடும்பத்தில் நிகழ்ந்த வேண்டுதல் ஏன் இப்படி ஒரு நாத்திகனை உருவாக்கித் தந்தது? இதற்க்கு அந்தக் கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மஹாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை நீதிமன்றத்துக்குப் போனாராம். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம் (நீதிபதி உட்பட). அந்த அளவு மரியாதையின் உச்சத்தில் இருந்தவர் அவர். பின்னர் ஒருகட்டத்தில் ஒரு குற்றவாளி அதே நீதிமன்றத்தில் வந்தார். அவரின் பெயர் கேட்டபின்னர், அப்பா பெயர் கேட்டனர். அவர் சொன்ன பதில், தேசத்தின் தந்தை பெயர். ஆடிப் போய் விட்டனர் அனைவரும். (அப்புறம் மன்னித்து விட்டது தனிக்கதை). தேசப்பிதாவிடம் இதைப்பற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் தெரியுமா நண்பர்களே.. “அந்தப் பையன் பிறக்கும் சூழலில் நானும் அப்படித்தான் இருந்தேன்”. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தேசப்பிதாவால் மட்டுமே தர முடியும்.

தமிழக எழுத்தாளர்களில் சுஜாதாவை விட்டு விட்டு பட்டியல் போட முடியுமா என்ன? அவரது வாரிசுகள் யாராவது அப்படி எழுதுகிறார்களா? தெரியலையே?? தமிழ்வாணன் வாரிசுகளில் லேனா தமிழ்வாணன் மட்டும் அப்படியே அதே பாணியில். அது சரி.. அவரின் வாரிசு..? எழுதுவதாய் தெரியவில்லை.. ஆமா இப்பத்தான் ஐடி வந்தாச்சே..எதுக்கு மத்த வேலைகள் எல்லாம்? காமெடி நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர். பழைய நடிகர் ஜெய்சங்கரின் வாரிசு கண் டாக்டர். ஆனா கண்டக்டரா இருந்து நடிக்க வந்து ஹா..ஹா.. கலக்கிட்டிருக்கார் வாரிசுகளோட..

தலைமுறை இடைவெளி என்ற வார்த்தை யார் தான் கண்டுபிடிச்சாங்க என்றே தெரியவில்லை. நம்ம வாரிசுகளை நம்மாள ஒழுங்கா திட்டக் கூட முடியலை. நாங்கல்லாம் அந்தக் காலத்திலெ, காலுக்கு செருப்பில்லாமெ, நடந்தே போயி…. இப்படி நாம படிச்ச விவரத்தெ முழுசா கேக்கவும் தயாரா இல்லை இப்பொ பசங்க. உடனே எதிர்க் கேள்வி வரும்… அப்பா உங்கப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.. உங்களுக்கு செருப்பு வாங்கித் தரலை.. ஆனா எங்கப்பா ஒரு இஞ்ஜினியருப்பா… செருப்பு ஷு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கித் தரணும்ப்பா… என்ன பதில் சொல்ல??

ராமாயணத்தில் இப்படி ஒரு சூழல் வருகிறது. (அங்கே சுத்தி இங்கே சுத்தி வந்தாரய்யா ராமாயணத்துக்கு என்று பாடுவது கேக்குது). இலங்கையில் அனுமர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சண்டையின் முன்னோட்டம். எதிரில் இந்திரசித்தன். இ சி அம்பு எய்கிறான் அனுமன் மீது. அடச்சீ என்று கோபம் வருது நம்ம வானர தூதனுக்கு. இந்திர சித்தனை தேரோடு தூக்கி வானத்திலெ வீரமா வேகமா எறிஞ்சி வீரப்பா சிரிப்பு சிரித்தாராம்.

இது வரை எல்லாம் ஓகே தான். கம்பர் ஒரு இடைச் செருகல் வைக்கிறார். கோபம் & தேரைத் தூக்கி எறிதல்.. இந்த ரெண்டுக்கும் நடுவுலெ சின்ன கேப். அதில் அனுமன் வேகமாமாமாமாப் போனாராம். வேகம் என்றால் வேகம், அது எப்பேற்பட்ட வேகம் தெரியுமா? ராமனின் அம்பு தான் வேகமானது. இதை அனுமனிடம் கேட்டா என்ன சொல்வார்?? ஆமா… ஆமா… Boss is always correct. ராம் தான் அனுமனின் Boss. கம்பர் சொல்லி இருக்கலாம் ராமன் அம்பு மாதிரி வெரெஸ்ஸாப் போனார் என்று.. சொல்லலையே

கம்பர் கலையே ஓவர் பில்டப்தானே… ராமன் அம்பைவிட அதி வேகமாக விரைந்து போனாராம். கொஞ்ச Gap ல என்ன வெளையாட்டு காட்டுகிறார் பாத்தீகளா??

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவக்க னன்றான்
வித்தகன் சிலை விடு கணைவிசையினும் கடுகி
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்.

மீண்டும் ஒரு கம்பர் கலாட்டாவோடு சந்திப்போம்…..

ஓவர் பில்டப்பும் அடக்கி வாசித்தலும்.


இப்பொல்லாம் சென்னை மாதிரியான ஊர்களில் டவுன் பஸ்களில் கூட வெளி மாநிலத்து ஆசாமிகளின் பயணம் தெரிகிறது. அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு வசதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை காட்டுகிறது (மின் வெட்டையும் மீறி…). ஆனால் எப்போதும் பல மாநிலத்தவர்களோடு கலந்து வாழும் வாழ்க்கை அந்தமான் வாழ்க்கை.

மாடிக் குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பீகார் மாநிலத்தவர் (அவர் பையன் என் கூட சேந்து தமிழ் பேச கத்துகிட்டு வர்ரான்). கீழ் தளத்தில் உ.பி & ஆந்திர மாநிலத்தவர். அதனாலெ தான் அந்தமானை மினி இந்தியா என்கிறோம்.

சினிமாவிலும் இந்த டாபிக் வச்சி சூப்பரான ஒரு படம் வந்தது பாரத விலாஸ் என்று. சிவாஜி நடிப்பில் வழக்கம் போல முத்திரை பதித்த படம் அது. அதில் அவர் தன் மனசாட்சியுடன் பேசுவது போல் TMS குரலில் பாட்டு வரும். சக்கை போடு போடு ராஜா…உன் காட்டுலெ மழை பெய்யுது.

அதில் நடுவே ஒரு வசனம் வரும். “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்”. என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒரிஜினல் தான் எப்போதும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லும் தத்துவம் தான் அது.
பில்டப் செய்வது என்று ஆரம்பித்து தமிழ் சினிமாக்களில் தேடினால், ஏகமாய் காமெடிகள் சிக்கும். கல்யாணப் பரிசு தங்கவேலுவின் எழுத்தளர் பைரவன் பில்டப், நாகேஷின் ஓஹோ புரடெக்சன் என்று ஆரம்பித்து சமீபத்திய விவேக் & வடிவேல் வரை தொடரும். (நடுவே ரஜனி & விஜய் கூட அந்த லிஸ்டில் வருவார்கள்… ஹீரோக்கள் என்பதால் அவர்களை ஓரமாய் வைத்து தொடர்வோம்)

துபாய் ரோட்டை பத்தி வடிவேல் சொல்லும்…. சாரி… பில்டப் தரும் காட்சி எப்பொ பாத்தாலும் சிரிப்பாவே இருக்கும். “சோத்தை அள்ளி வச்சி ரசத்தை ஊத்தி கொளைச்சி அடிக்கலாம்டா” என்று சொல்லுவது தான் பீக். நடுவே துபாயில் திருநீறு வைச்சி என்றும் பிட்டு போடுவது நல்ல கலக்கல் தான்.

“கெணத்தைக் கானோம்” என்று அலறி அடித்தபடி வடிவேல் வரும் இன்னொரு காமெடி இருக்கு. சிவில் இஞ்சினியர்களை வைத்து இப்படி ஒரு காமெடி அடிக்கடி பேசப்படுகிறது. (விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்ட அத்துனை சிவில் பொறியாளர்களும் மன்னிக்கவும்.)

காசு ஆசை பிடித்த ஒரு சிவில் இஞ்சினியர் ஒரு கிணறை தோண்டாமல், தோண்டியது போல் ரெக்கார்ட் பில்டப் செய்து காசு பாத்து கிளம்பிட்டாராம். அதுக்கு பின்னால் வந்தவருக்கும் அது தெரிந்து விட்டது. அவர் என்ன சளைத்தவரா என்ன?? அவர் இருந்த 5 வருஷமும் பராமரிப்பு செஞ்ச மாதிரி கணக்கு காட்டி காசு சாப்பிட்டாராம். பின்னர் 5 வருடம் நல்ல மனுஷன் வந்து ஏதும் செய்யாமல் போய் விட்டார்.

அடுத்த முறை வந்தவர் பாத்தார். அட 5 வருஷமா பராமரிப்பே இல்லாமல் இருக்கே. அப்பொ சிறப்பு மராமத்து வேலை செய்ய ஆரம்பித்து ஸ்வாகா செய்து விட்டு அவரின் tenure முடித்தார். சமீபத்திய போஸ்டிங்கில் வந்தவர் காலத்தில் தான் அந்த வடிவேலுவின் காமெடி வந்த காலம். அவர் யோசித்தார். அட… நம்ம ஏரியாவிலெ இப்படி ஏதும் கம்ப்ளெய்ண்ட் வந்தால்???? என்ன செய்வது யோசித்தார். கிணறு தோண்டி பல வருடங்கள் ஆயிடுச்சி.. இனி மராமத்து செய்ய முடியாது. இதெ மூட்றது பெட்டர் என்று மூடும் செலவை அவர் பாக்கெட்டில் போட்டுகிட்டாராம்.

இது கொஞ்சம் ஓவராவே பில்டப் செய்த சேதி மாதிரி தானே தெரியுது??

என் பையன் கிட்டெ கேட்டேன், “உங்க வாத்தியார் யார் பேராவது ரொம்ப உனக்கு பிடிச்சிருக்கா??”

“தெரியும். அம்பேத்கார் பத்தி தானே சொல்ல வர்ரீங்க. அம்பேத்கார் என்பது பீமின் டீச்சர் பெயர் தானே?” இப்படி பதில் வந்தது முந்திரிக் கொட்டை போல் (இந்தக் காலத்து பசங்க கிட்டெ வாயே திறக்க முடியறதில்லை. அப்பொ பொன்டாட்டி கிட்டெ??..ம்…மூச்…)

அம்பேத்கார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். கீழ் சாதி என்று ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட மறுக்கப்பட்ட காலம் அது. அவரும் அவரது ஆதரவாளர்களும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து வந்தனர். அதை அறிந்து ஜாதி வெறியர்கள் மாட்டு சாணம், மாட்டின் சிறுநீர் (கோமியம் – உபயம் பாக்யராஜ்) ஆகியவை ஊற்றி பூஜை செய்து, மூன்று நாள் பயன் படுத்தாமல் இருந்தார்களாம். [ஆர். முத்துகுமார் எழுதிய அம்பேத்கார் புத்தகத்தில் இன்னும் பல சேதிகள் படிக்க முடிந்தது]

இது கொஞ்சம் ஓவரா இல்லெ?? இது என் பையன் கேட்ட கேள்வி. அவனால் நம்பவே முடியவில்லை இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பது.

ஓவரா பில்டப் தருவதின் எதிர்ப்பதம் அடக்கி வச்சித்தல். ஒன்னுமே தெரியாமெ இருக்கிறவன் தேமேன்னு இருக்கிறது இந்த லிஸ்டில் வராது. நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கேன்.

அப்புறம்… “இப்படித்தான் ராமாயணத்தில்…” என்று அடிக்கடி எழுதி வரும் நான் ராமாயணம் முழுசாக்கூட படிக்காமெ, ஆரம்ப பாடத்தில் இருக்கும் கத்துகுட்டி.

அதுக்கு நேர் ஆப்போசிட்டா, எல்லாம் தெரிஞ்ச்சி வச்சிருப்பாக… ஆனா சொல்றதுக்கு முன்னாடி, “ உங்களை விட எனக்கு ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் என் சிற்றறிவுக்கு…” இப்படி சொல்வது தான் அடக்கி வாசித்தல்.

இப்படித்தான் ராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது.

அனுமன் சீதையை சந்தித்த இடம். தான் ராமனின் தூதன் என்றும், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பின்னர் அடக்கமாய், தேவி வாருங்கள் உங்களை நான் ராமன் வசம் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு மறுமொழி சொல்லும் சீதையோ, தன்னால் அதுக்கு ஓகே சொல்ல முடியாது என்பதற்கு லீகலா காரணங்கள் சொல்கிறார் பல.. இதோ அவற்றில் சில…

1. இலங்கை வரும் போதே பல சிக்கல்களை அனுபவித்த அனுமனுக்கு தன்னை சுமந்து திரும்பும் போது அதே சிக்கல் வந்தால் அனுமனுக்கு அல்லவா சிக்கல் வரும்?
2. ராமரின் வீரத்தை குறைத்த மாதிரி ஆயிடாது??
3. ராவணன் என்னை கொண்டு வந்த மாதிரியே வஞ்சனையா, அனுமன் என்னை கொண்டு போவது.. நல்லாவா இருக்கு?
4. இராவணன் & இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
5. என் கற்பை ராமரிடம் நிரூபிக்க வேண்டாமா?
6. ஆடவரை தீண்டாது இருகும் நான், நீயும் ஆடவன் அல்லவா??
இப்படி நச் நச் என்று போகுது பாயிண்ட்..

ஆனா நான் சொல்ல வந்த சேதி இது இல்லை.

இவ்வளவு லாஜிக்கலா யோசிக்கும் சீதை சொல்லும் முன் அடக்கி வாசித்தது தான் நான் சொல்ல வந்த செய்தி.

சீதை அனுமனிடம் முதலில் சொன்னது இது தான்: நீ சொல்றது ஒனக்கு ஒன்னும் பிரமாதமான வேலையா இருக்காது தான். ரொம்ப ஈஸியாவும் செஞ்சிடுவேதான். நல்லாத் தான் யோசிக்கிறே.. நான் ஒரு பெண். பெரிய(!!!) சிற்றறிவு தான் இருக்கு. எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு படுது. இது என்னோட கருத்து.

இப்படி அடக்கி வாசிச்சிட்டு அப்புறம் தான் அத்தனை லா பாய்ண்டும் வருது சீதையிடமிருந்து.

அறியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.

இதனால் அறியப்படும் நீதி: பில்டப் செய்யலாம். ஆனா ஓவர் பில்டப் கூடவே கூடாது. அடக்கி வாசிக்கலாம். ஆனா தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் சொல்ல வேண்டிய சேதியை சொல்லியே ஆக வேண்டும்.

இது சீதை சொன்ன கீதை.
மீண்டும் சந்திப்போம்.

சும்மா அதிருதில்லெ…


இந்த டயலாக் ரஜினி பேசும் போது, உண்மையில் தியேட்டரே அதிர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனால், உண்மையில் பூமி ஆடிய அந்த கருப்பு ஞாயிறு டிசம்பர் 2004 ஐ நினைத்தால், ரஜினி மாதிரி பூமி “சும்மா அதிருதில்லெ” என்று சொல்லிவிட முடியாது.. அந்தமானைப் புரட்டிப் போட்ட அந்த சுனாமியின் நினைவுகளை அசை போடலாமா?.. லேசா பயத்துடன் தான்.

எப்போதும் 8 மணிக்கும் மேல் தான் எல்லா ஞாயிறுகளும் விடியும் எனக்கு. ஆனால அந்த ஞாயிறு மட்டும் அதிகாலை 6.30க்கு பூமியையே குலுக்கி எழுப்பி விட்டது. என்ன நடக்கிறது? என்பதை மூளை தீர்மானிக்கும் முன் டிவி பிரிட்ஜ் ஆகியவை அங்கங்கே நகர, ஏதோ இறுக்கமான பிளக் இருந்த காரணத்தால் வயரை கயிறாய் கொண்டு அங்கங்கே நின்றன அவை. தனியறையில் படுத்திருந்த இரு குழந்தைகளையும் வாரிச் சுருட்டி, முதலில் வெளியில் போய் நிற்போம் என்று ஓடினோம். சில விநாடிகளில் சிலிண்டர் வெடித்து பக்கத்த்தில் இருந்த ஒரு மரவீடு தரை மட்டம் ஆனதை.. வெறுமனே வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது.

சுனாமி என்ற வார்த்தை மட்டும், அன்பே சிவம் படத்தில் கேட்டதோடு சரி.. சத்தியமா அப்போது அதன் spelling T ல் ஆரம்பிக்கிறது என்று கூடத் தெரியாது. மனிதர்களை அழவைத்த பூமியின் அதிர்வு ஒரு பக்கம் இருக்கட்டும்..

பூமியே அதிரும் படி சிரிக்கிற நிகழ்சிகள் பாத்திருப்பீங்க.. டீவிகளில்… தமிழில் அப்படி யாரும் சிரித்து விட முடியாது நம்ம மதன்பாப்பை விட்டால். ஆனால் காமெடி சர்க்கஸ் என்று ஹிந்தியில் வரும் நிகழ்ச்சியில்… சிரிச்சா காசுங்க்கிற மாதிரி.. எப்பொ பாத்தாலும் கெக்கெ புக்கெ என்று சிரிச்சிகிட்டேயே இருப்பாங்க.. பொம்பளை சிரிச்சா போச்சி என்கிற டயலாக் மட்டும் அங்கே போய் சொல்லிட முடியாது அம்ம்புட்டுத் தான்.
நாம சிரிச்சா பரவாயில்லெ.. நம்மளைப் பாத்து நாலு பேரு சிரிச்சிடக்கூடாது. அதெத்தான் நம்ம வாத்தியாரு எப்பொவோ பாடி வச்சிட்டாரே… சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழாதேன்னு..

எல்லாராலும் இப்படி வாய் விட்டு சிரிச்சிட முடியாது. ஆஃபீசில் பெரிய்ய அதிகாரி மொக்கெ ஜோக்குக்குச் சிரிச்சா… நாம அவரோடு சேந்து அதுக்கும் சிரிக்கலாம்.. ஆனா கவனமா இருக்கனும். அவரு எப்பொ நிப்பாட்டுறாரோ, அதுக்கு ஒரு செகண்ட் அதிகமா நாம சிரிச்சிடப் படாது. நல்ல ஜோக்குக்கு உங்களுக்கு சிரிப்பு வரலாம்.. ஆனா உங்க பாஸ் அதை ரசிக்கலையா?? நீங்க ரசிச்சா… பின்னாடி வரும் விளைவுகள், ரசிக்கும்படியா இருக்காது.

சிரிப்பில் உண்டாகும் ராகங்களில் பிறந்தது தான் சங்கீதம் என்கிறார் ஒரு கவிஞர். ஊரே சிரிக்குது என்பார்கள்… ஊரா சிரிக்குது? ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று தமிழாசிரியர் சொன்ன இடவாகுபெயர் இலக்கணம் தான் ஞாபகத்துக்கு வருது. ஆமா இந்த இலக்கணத்தால் ஏதாவது பிரயோஜனம் இருக்கா?? (நல்லா தூக்கம் வரவழைப்பதைத் தவிர… ஆமா.. பாதி தூக்கத்தில் கேட்ட இடவாகு பெயரே.. இம்புட்டு ஞாபகம் இருந்தா…!!!)

எப்போவும் போகும் ராமாயணக் காட்சியை, இன்னெக்கிம் கிளைமாக்ஸில் பாப்போம். அதுக்கு முன்னாடி ஒரு மஹாபாரதக் காட்சி (அ) கதைக்கு போவோம். கரணன் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான். ஆனால் சாவு மட்டும் வரவில்லை. (சிவாஜி நடித்த கர்ணன் படம் ஞாபகம் வந்திருக்குமே!!! ஒரு சின்ன coincidence : இதை எழுதி முடிக்கும் போது, முரசு டிவியில் கர்ணன் படப் பாடல் ஒளிபரப்பானது. 10.50 காலை 8 ஜனவரி 2012).. தர்மம் தலை காக்கும் அல்லவா?? அப்பொ கடவுளே ஐடியா குடுக்கிறார்.. நல்லதுக்கு பாவமில்லெ.. நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா, எதுவுமே தப்பில்லே… (தென் பாண்டி சீமையிலெ… இது மட்டும் கடவுள் போட்ட டியூன் இல்லெ.)

ஒரு ஆளை கூப்பிட்டு, செய்த தர்மத்தை எல்லாம் தானமா கேளு என்றார் கட்வுள். அந்த ஆளுக்கு ஒரு சந்தேகம்.. சாதாரன தர்மமே தலை காக்கும் என்றால், செஞ்ச எல்லா தர்மத்தையே தர்மம் செஞ்சா.. அப்பொ அந்த தர்மம் தலை காக்காதா??

கடவுளுக்கே கலங்குது.. அட.. நாம இப்படி யோசிக்காமெ போயிட்டோமே?? என்ன பன்னலாம்.. பிரச்சனை சொன்ன ஆள் கிட்டேயெ தீர்வு கேப்போம்… (அவர் என்ன அரசியல்வாதியா பிரச்சினைகள் இருக்கட்டும்… ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒதவும்னு சொல்றதுக்கு??)

அந்த நபரே பதில் சொல்றார்.. கடவுளே.. நான் கொஞ்சம் இலக்கணம் தூங்காமெ படிச்சிருக்கேன். “செஞ்ச தர்மம் தா” என்று கேக்காமெ, “செய் தர்மம்” கேக்கிறேன். இதில், இதுவரை செய்த தர்மம், இப்போது செய்கின்ற தர்மம், இனி மேல் செய்யப் பொகும் தர்மம் எல்லாம் வந்திடும். அப்புறம் கர்ணன் செய்யும் எல்லா தர்மத்தோட புன்னிய கிரிடிட் நம்ம அக்கவுண்ட்டுக்கே வரும். தேவைப்பட்டா sms வரவழைக்கவும் முடியும்.. இப்படியாக கரணன் கதை முடித்த இலக்கணம் தான் வினைத்தொகை.

சரி இப்பொ ராமாயணத்துக்கு வரும் நேரம் வந்தாச்சி..

ஊர் சிரிக்கிற மேட்டர் தான் முன்னாடி பாத்தோம். ஆனா ஊர் எப்போவாவது ஓடறதைப் பத்தி கேட்டிருக்கீங்களா?? இல்லையா?? அப்பொ கம்பர் கிட்டெ வந்து பாருங்க.. எல்லாம் தெரியும்
அனுமன்… தன் முழு வேகத்துடன், ராமர் விட்ட பாணம் போல், வேகமா இலங்கை நோக்கி போய்க் கொன்டிடுக்கிறார். அந்த வேகம் எப்படி இருந்ததாம்??

கையில் வஜ்ராயுதம் வச்சிருக்கிற இந்திரனோட தேவலோகமே கவலைப்பட்டதாம்.. கிளம்பிட்டான்யா… கிளம்பிட்டான்யா… என்று கோரஸாவும் அந்தக் காலத்தில் சொல்லி இருக்கலாம்!!. இலங்கை வரைக்கும் தான் பயணம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா.. வரும் வேகம் அப்படித் தெரியலை… அப்படி நெனைச்சி இலங்கைக்கு அப்பால் உள்ள நாடுகள் எல்லாம் வெலகி ஓடியே போயிடிச்சாம்.

வலங் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்க்கியது ‘ஏகுவான் தன் கருட்து என்கொல்?’ என்னும் கற்பால்;
’விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்க்கையின் அளவு அன்று’ என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே.

எனக்கு என்னமோ, சுனாமியில் கானாமல் போன ஊர்களும் ஒரு தீவு மூன்று தீவானது மட்டும் அனாவசியமா ஞாபகத்துக்கு வந்து போகுது. உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது??

கனவுகள் இல்லை…


கனவுகள் என்பது நமக்கு இயற்கை தந்திருக்கும் Free Channel திரைப்படம். அதில் எப்பேற்பட்ட படம் போடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத புதிர். சில சமயம் ஆன்மீகம், சில நேரங்களில் அந்தரங்கம், இன்னும் சில நாட்களில் அசிங்கங்கள். காமெடிகளும் திகில்களும் கூட பல நேரங்களில் கலக்கும். 

கனவு – ஏன்? எதற்கு? எப்படி? என்று சுஜாதா எழுதவில்லையே தவிர…அதன் ஆய்வுகள் இன்னும் நடந்தமேனியாய்த்தான் இருக்கின்றன.

 எந்த நேரத்தில் கனவு வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில், எப்பொ கனவு வந்தா, என்ன நடக்கும் என்று சாத்திரம் கணித்து வைத்துள்ளதாம்.. பின்னெ இருக்காதா… வெறும் ஏடும் எழுத்தாணி மட்டும் வச்சிகிட்டு என்ன நேரத்தில் சந்திர சூரிய கிரகணம் வரும் என்று சொன்ன ஆட்கள் அல்லவா???

 ராத்திரி ஒரு மணிக்கு மேலே கனவு வருதா, அது பலிக்க நீங்கள் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

 வேறு நல்ல சொப்பனம் என்ன என்ன என்ற கேள்விக்கு பல்லி விழும் பலன் மாதிரி காலண்டர் பின்னாடி இருந்தா நல்லா இருக்குமே… இப்படித்தான் பல்லி தலையில் விழுந்தால் மரணம் என்று போட்டிருந்தார்கள்.. உண்மை தான் என் தலையில் விழுந்து தரையில் விழுந்த அந்த பல்லி பரிதாபமாய் செத்துப் போனது..

 பெரும்பாலும் கனவுகளுக்கு நல்ல நம்பிக்கையூட்டும் பலன் தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அதன் தொகுப்பு பார்க்கணுமா.. இதை கிளிக் செய்யுங்கள் : http://ularuvaayan.blogspot.com/2009/08/blog-post_8674.html

பொல்லாத சொப்பனங்கள் எவை எவை என்று கட்டபொம்மன் படத்தில் ஜக்கம்மா பாடும் பாட்டு வச்சி தெரிஞ்சிக்கலாம்.

 பலான கனவுகள் விடாம வருதா?? பக்கத்து வீட்டில் அழகான பொண்ணு இருக்கனும்..அதன் மேல் உங்களுக்கு ஒரு கண்ணும் இருக்கணும்.. நேரில் நீங்க கம்முன்னு இருக்க, உங்க நிறைவேறாத ஆசை கனவில்..ரைட்டா?? ஹலோ..போங்க… கல்யாணம் வேணும்னு கேளுங்க.

 ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா???…ஆன்மீகம் பக்கம் திரும்புங்க…

 கனவுக் காட்சிகளில் சினிமாப் பாடல்கள் பிரபலம். பொன்மகள் வந்தாள் என்ற பழைய பாடல் பத்து பைசாவை வைத்து பணம் காய்க்கும் மரம் வைத்தே காணும் கனவு…. கிராமத்து நாயகி ஸ்விட்சர்லாந்து போகணுமா..எடு ஒரு கனவு சீன்..இது தான் இன்றைய டெக்னிக்.

 வைரமுத்துவின் வைர வரிகள்:

காதலன்: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை….
காதலி: நான் தூங்கவில்லை..கனவுகள் இல்லை..

 வாவ்..என்ன ஒரு கற்பனை..தூங்காமல் எப்படி இருக்க முடியும்?? இடிக்கிறதே… ஆமா…இதே டயலாக் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே??

 அப்படியே தூங்கிப்போனேன்.. கனவில் கம்பர் வந்தார்… (கனவில் கம்பர் வந்தால், விரைவில் ஒரு போஸ்டிங் போடுவார் என்று இருக்குமோ..) வைரமுத்து என் ராமாயணத்தில் சுட்ட சேதி தான் அது என்றார்.. விடியற்காலை கனவு.. கண்டிப்பா உண்மை இருக்குமோ… இருந்தது.

 மீண்டும் அதே அசோகவனம்.. அதே அழகான சீதையும் அழகான ராட்ஷசி திரிசடையும்.

திரிசடை சொல்கிறாள் சீதையிடம்… எனக்கு வந்த கனவு பத்தி சொல்கிறேன் கேள்…ம்… நீ தான் தூங்குறதே இல்லெ…உனக்கு எப்படி கனவு வரும்??

 ஏன் தூங்கலை என்று யோசித்தால்…அது வேல் போன்ற விழியாம்…என் விழியும் என் வாளும் சந்தித்தால் என்ற கற்பனையும் காப்பி தானா?? அப்பொ வேலும் வேலும் சண்டை போட்டு மேலும் விபரீதம் வரக்கூடாது என்பதற்காய் சீதை தூங்கலியாம்…யப்பா…கம்பரே…சும்மா..கலக்கிறீங்க தலைவரே..

 துயில்இலை ஆதலின் கனவு தோன்றல
அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யான விளம்பக் கேட்டியால்.

 திரிசடை சொல்லும் கூடுதல் சேதிகள்: குற்றமுள்ள நாடு இது.. ஆனா கனவு குற்றம் இல்லாதது. சூரியன் எப்படி பளிச்சுன்னு இருக்குமோ.. அப்படி கனவு பலிக்கும்.

 அதுசரி சமீபத்தில் உங்களுக்கு வந்தது நல்ல கனவா?? பொல்லாத சொப்பனமா??