ஹிந்தியும் நானும்


Abi 1

அபியும் நானும் படத்தெ எல்லாரும் ரசித்துப் பாத்திருப்பீங்க. அந்தப்படம் ஏன் பிடிச்சிருக்கு? ன்னு கேட்டா, ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொல்லுவீங்க. ஆனா, எனக்கு என்னவோ, அந்தப் படத்தோட பெயரே ரொம்பப் பிடிச்சிப் போச்சி.. (இம்புட்டு நாள் கழிச்சி எழுதுறதுக்கும் ஆச்சி). அந்தப் பட டைட்டில் என்னை பள்ளிக்கூட நாட்களுக்குக் கூட்டிப் போயிடுச்சி. ஆறாவது வகுப்பில் பரமக்குடி பள்ளியில் பி என் நாகநாதன் அவர்கள் நடத்திய பாடத்தை நினைவு படுத்திடுச்சி அந்தப் பட டைட்டில். ஆங்கிலத்தில் அபியும் நானும் மாதிரி சொல்வதானால் எப்பொவுமே Abi & I என்று தான் சொல்லணுமாம். I and Abi என்று சொல்லக் கூடாதாம். ஆனால் தமிழில் அந்தச் சிக்கலே கிடையாது. நானும் அவனும், அவனும் நானும் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

abi 2

இப்பொ அந்த ஹிந்தியும் நானும் டாபிகுக்கு வரலாம். தமிழ் நாட்டுக்கும் ஹிந்திக்கும் தான் ஏழாம் பொருத்தம் இருகிறது உலகத்துக்கே தெரிஞ்ச கதை தானே? சமீபத்திலெ மங்கல்யான் வெற்றியினை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்க, டீவியிலெ நாமெல்லாம் மயில்சாமி அன்னாதுரையத் தேடிக் கொண்டிருக்க, காமெடி நடிகர் மயில்சாமியோடு சூரிய வணக்கத்தில் பேசிக் கொண்டிருந்தனர் சன் குழுமத்தினர். அதெப்படி படிக்கத் தெரியாமல் வெளிநாடு எல்லாம் போய் கஷ்டமாயில்லையா என்று கேட்டனர். ஒரு வெளிநாட்டில், இங்கிலீஸ் ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டாராம். காமெடி நடிகர் சீரியஸாக, எனக்கு தெரியாவிட்டாலும் என் மகன்களை ”இங்கிலீஸ் படிங்க.. ஹிந்தி படிங்க” என்று சொல்லி அவர்களும் நல்லா படிச்சி நல்லா இருக்காங்க என்றார். ஹிந்தி எதிர்ப்பு சேனல்களில் இப்படி ஹிந்தி ஆதரவு செய்தி வருவது வித்யாசமாய்ப் பட்டது.

இப்படித்தான் என் அப்பாவும் ஒரு தடவை ராமேஷ்வரம் போய் வரும் போது முழுக்க ஹிந்திக் காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டு தடுமாற, நான் வம்பாய் ப்ராத்மிக் மத்யமா என்று ஹிந்தி படிக்கத் திணிக்கப் பட்டேன். அறம் செய விரும்பு என்பதற்கே கோணார் உரை தேடும் அந்தக் காலத்தில் வம்படியாய் ஹிந்தி படிப்பது சிரமமாய் தான் பட்ட்து. பின்னே சும்மாவா பரமக்குடி சின்னக் கடை பஜார் முதல் ஆத்துப்பாலம் வரை அஞ்சு கிமீ போய் வர வேண்டுமே?). அப்பா மீதும் வம்பாய் “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா…” என்று சொல்லிக் கொடுத்த ஹிந்தி வாத்தியார் மீதும் புரியாமலேயே கோபம் தான் வந்தது.

abi 3

அப்படியே நானும் BE படித்து முடித்து வேலைக்கு மனு போடும் போது கவனமாய் ஹிந்தி பேசும் இடங்களுக்கு அப்ளிகேஷன் போடுவதைத் தவிர்த்து வந்தேன். சிவில் படிப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும்… ஹிந்தி ஒழுங்காய் படிக்காத காரணத்தால் இப்படி ஹிந்தி பெல்ட் இடங்களுக்கு அப்ளிகேஷன் கூட போட முடியாமல் இருந்தது. கால ஓட்டத்தில் அந்தமானில் ஹிந்தி பேச வேண்டி இருக்கும் என்ற உண்மை தெரியாமலேயே வந்து சேர்ந்தேன்.

அந்தமானில் வந்து இறங்கியவுடன் இங்கு வாழும் தமிழர்கள் அத்தனை பேரும் ஹிந்தியில் பேசித் தள்ளுவதைப் பாத்தா நமக்குத் தலை சுத்த ஆரம்பித்த்து. ஹிந்தி தெரியாத காரணத்தால் சில இளம் பெண்களிடம் சகஜமாய் பேச முடியாத சங்கடம் வேறு மானத்தை வாங்கியது. (தோதாக அப்போது தான் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சில இளைஞிகளும் இருந்தனர். ஹிந்தியில் சந்தேகம் என்று சொல்லி கடலை போடவும் முடிந்தது. ஹிந்தி பேச ஒரு பெங்காலி நண்பர் சொன்ன ரெண்டு டிப்ஸ்… 1. அடுத்தவன் சிரிப்பதை பொருட்படுத்தாமல் பேச வேண்டும். 2. தெரியாத வார்த்தைக்கு ஓ போட்டு சமாளிக்கணும். [அம்மாவுக்கு சங்கடம் வரும் போது உதவும் ஓ மாதிரி]

நான் ஹிந்தி பேச ஆரம்பித்தாலே எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விடுவர். கவலைப்படாமல் தொடர்ந்தேன். இந்த ஓ விதியும் கொஞ்சம் பாக்கலாமே.. கடப்பாறையைக் கையில் எடுத்து கல்லின் கீழே வைத்து கல்லை இங்கிருந்து அந்த இடத்திற்கு தள்ளு என்று ஹிந்தியில் சொல்ல வேண்டும். ஒ ஹாத் மே லேகர் ஓ நீசே ஓ கரோ ஓ சே ஓ மே ஓ கரோ.. இப்படி முதலில் சொல்லி அப்புறம் வார்த்தை வளர வளர போட்டு நிரப்பும் வித்தை காலப் போக்கில் வர ஆரம்பித்தது.

ஆண்டுகள் கடந்தன. மற்றவர்களின் ஹிந்தி சுமாராய் இருப்பதால் என் ஹிந்தி நல்ல ஹிந்தி என்று சொல்லப்பட, ரேடியோ, தூர்தர்சனிலும் தொடர்கிறது என் ஹிந்திப் பயணம். அந்தமானில் டாலிக் எனப்படும் TOLIC – Town Official Language Implementation Committee க்கு செயளர் ஆகி மலர் வெளியிடும் அளவுக்கு வந்துட்டேன். தற்போது லட்சத்தீவுகளின் டாலிக் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பும் இருக்கிறது. (நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? அல்லது பேய்க்கு வாழ்க்கைப் பட்டா புளிய மரத்துக்கு ஏறப் பயந்தா எப்படி? எப்படி வேணும்னாலும் நெனெச்சுக்குங்க)

போன வாரம் லீவில் பேங்களூர் சுத்திக் கொண்டிருக்கும் போது தில்லியிலிருந்து (ரெண்டு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும்) ஒரு (திருமதி) செயலர் வருவதாகவும், ஹிந்தி வேலையை ஆய்வு செய்யவே வருவதாகவும் செய்தி வர, என் லீவுக்கு வந்தது வேட்டு. என் ஹிந்தியும், என சக ஊழியர்களின் துல்லியமான உச்சரிப்பும் அவருக்கு பிடித்துவிட நாங்கள் அவருக்காய் வழங்கிய பொக்கேக்களை அதான் பூச்செண்டுகளை, நம் துறை ஊழியர்களுக்கே வழங்கி கௌரவித்தமை பெருமையாகவே இருந்தது.

கம்பர் இறங்கி வந்தார். ”நல்லா மாட்டிக்கிட்டெ… இந்த டாபிக்லெ எப்படி இராமாயணம் கொண்டு வருவே?” கிண்டலாய்க் கேட்டார்.

இங்கே சொல்றதுக்கு முன்னே அங்கே அவர்களிடமே சொல்லிட்டேனே… இது நான்.

என்னப்பா வம்பா ஏதாவது சொல்லி வச்சியா?? – கம்பர் கேள்வியில் வருத்தம் தெரிந்தது.

தொடர்ந்தேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயனே… கொச்சியில் இருந்து அகத்தி தீவுக்கு விமானம் ஏறி, அப்புறம் கவரத்தி தீவுக்கு ஹெலிகாப்டரிலும் பயணம் செய்த அந்த பொக்கே என்ற பூங்கொத்து அவ்வளவு விரைவாக நம் கைக்கே திரும்பி வந்தது சுக்ரீவனைப் பாக்கப்போன இலக்குவன் வேகமா போனமாதிரி வேகமா வந்திடுச்சே என்றே செயலரிடம். வாவ் என்று ஒரு ஆச்சரியம் வந்தது..

நீங்களும் கிட்கிந்தா காண்டத்து கிட்கிந்தைப் படலத்தில் வரும் அதெப் படிச்சா ஒரு வாரே…வா சொல்லிட மாட்டீங்க.. ?? (அந்த அல்ப சந்தோஷத்துக்குத்தானே இம்புட்டு எழுதுறது)

வாலியின் வலிமையான தம்பி சுக்ரீவனைப் பாக்க, மனுகுல திலகமான இராமன் தம்பி இலக்குவன் கிளம்புகிறான். சுட்டுப் பொசுக்கும் காட்டில், வானையே தொட்டு நிற்கும் ஏழு மராமரங்களைப் போகும் வேகத்தில் அப்படியே தள்ளிட்டுப் போறதெப் பாக்கறச்செ, ஏழு மரங்களெத் தொளச்சிட்டுப் போன இராமபாணம் மாதிரியே போனானாம். எப்புடீடீடீ???

வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயு மராமரத் தூடுசெல்
அம்பு போன்றன னன்றடல் வாலிதன்
தம்பி மேற்செலு மானவன் தம்பியே

வேகம் பற்றி சொல்ல கம்பன் யூஸ் செய்ததை சந்தடி சாக்கில் நானும் யூஸ் செய்திட்டேன். தப்புங்களா என்ன??

ஆஸ்திரேலியா நண்பர் அன்பு ஜெயா அவர்கள் கவனத்திற்கு… உவமையணியும் உயர்வு நவிற்சி அணியும் ஒரே பாட்டில் இருக்காம்… உங்களுக்குத் தெரியாததா??

வேறு அவல் கெடச்சா மெல்ல வர்றேன்.

“பாரு”க்குள்ளே நல்ல நாடு….


dry day 1

அந்தமான் தினசரியான ”தி டெய்லி டெலிகிராமில்” (இது தானுங்க இந்த ஊரு தினத்தந்தி) அடிக்கடி இன்று Dry Day என்று அறிவிப்பு தருவார்கள். மது விற்பனை மற்றும் மதுவிடுதிகளுக்கு அன்று விடுமுறை என்று அறிவிக்கின்றனர் இப்படி. சாதாரணமாக Dry Fruits என்றால் உலர்ந்த கனிகள் என்று சொல்லும் அந்த வார்த்தைப் பிரயோகத்தை, மதுவில்லா நாளைக் குறிப்பிடும் போது சொல்வது லேசாக நெருடலாய் இருக்கிறது. மது இல்லை என்றால் அன்றைய தினமே ஏதோ வறண்ட பாலைவனமாய் ஆகிவிடுமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது அந்த சொல்லாடல். ஹிந்தி தெரியாத நம்மைப் போன்ற (பெரும்பாலான தமிழக மக்கள் உள்ளிட்ட) பலரை முன்பு அஹிந்திபாஷி என்று சொல்லி வந்தனர், ஹிந்தி அறிந்தோர். இப்போது அதனை ஹிந்தி அறியாதோர் என்று சொல்லும் படியாக மாற்றிக் கொண்டனர். இதே போல் மதுவில்லா நாள் என்றும் இந்த Dry Dayக்குப் பதிலாக மாற்றம் செய்தால் நல்லது.

அது சரி…. இப்படி பெயரை மாற்றுவதால் என்ன ஆகப் போகுது? என்ற கேள்விக்கு பதில் தேடும் முன்னர், இப்படி அந்த தினங்களால் என்ன லாபம்? என்ற கேள்வியினைக் கேட்டுப் பார்க்கலாம். நாட்டின் நல்ல குடிமகன்களுக்கு, எப்போதெல்லம் கடை திறப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரியும். மற்றவர்களுக்கோ, திடீரென்று உற்சாகபானக் கடைகளில் கூட்டம் மிகுந்திருந்தால், ஏதோ அரசியல் கட்சி மாநாடு நடப்பதோ, திருவிழா நெருங்குவதோ அல்லது அடுத்து ஏதோ மதுவில்லா Dry Day வருவதாய் அறிவர்.

காந்தி ஜெயந்தியன்று மக்களை குடியின் பிடியினின்று மீட்டெடுக்கும் கனவு, அரசின் திட்டமாய் Dry Day தத்துவம் சொல்கிறது. ஆனால், எந்த ஊரு குடிமகனும், எதையும் பிளான் செய்யாமெ பண்ணா இப்படித்தான் என்று சொல்லி வைத்தார் போல், அட்வான்ஸ் பிளானிங் செய்து அசத்துவது தான் ஆச்சரியமாய் இருக்குங்க… அப்பொ பேசாமெ அட்வான்ஸ் பிளானிங் தினம் என்று அதுக்கு முன்பான நாளையும் அறிவிச்சிடலாமோ?? குடிமகன் மேல் இப்படிக் கூட அக்கரைப் படலைன்னா, அப்புறம் எப்படி???

Kudi 2

அரசுப் பயணமாய் இலட்சத்தீவுகளுக்கு மாதம் ஒரு முறை பயணம் போவதுண்டு, கேரளா வழியாக. சமீபத்திய கேரள பத்திரிக்கைகளில் பட்டை… சாரி…. சாரி…. கொட்டை எழுத்துக்களில் சமீபத்திய கேரள அரசின் மதுவெட்டு கொள்கை பற்றித் தான் பத்தி பத்தியாய் எழுதி வைத்திருந்தது. பார்களின் தரம் சரி இல்லை என்று இழுத்து முக்கால்வாசி பார்களை மூடுகிறதாம் மூக்கால் பேசும் மழையாள அரசு… ரொம்பத் தைரியமான அரசு தான். [ஆக, தமிழக பார்கள் எல்லாம், ஐ எஸ் ஓ தரம் வாங்கியதாய் இருக்கிறதா? என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்]. பரமக்குடியில் ஏசி பார் வந்து விட்டதாய் முகநூல் படம் தெரிவித்தது. அந்தமானில் அனைத்து பார்களும் நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகின்றன என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி.

அரசுக் கட்டிடங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து சரியாக அடிக்கிறார்களோ இல்லையோ, அந்தமானில் பார்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்தெல்லாம் அடிச்சி சுகாதாரமா வெச்சிருப்பதாய் நண்பர் ஜெயராமன் தெரிவித்தார். அவர் ஏதோ பார்களின் ரெகுலர் கஸ்டமர் என்று கருதிவிட வேண்டாம். பார்கள் தான் இவருடைய கஸ்டமர்கள். பூச்சிகளிடமிருந்து நம்மை ரட்சிப்பதற்காகவே அந்தமானில் அவதாரம் எடுத்திருக்கும் ஜெய ராமர் அவர். மருந்து வயிற்றில் இருக்கும் பூச்சிகளை சரியாக கொல்ல வேண்டும் என்ற அக்கரையுடன் செயல்படும் பார் ஓனர்களைப் பாராட்டத்தான் வேண்டும். அவ்வப்போது சில ஆஸ்ரமங்களுக்கும் உதவி செய்து ஹாட் விற்ற காசும் ஸாப்ட் செய்யும் என்றும் காட்டுகிறார்கள்.

கேரள அரசின் அதிரடி முடிவால் மற்ற மாநில மது விரோதிகளும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். (அந்தமானில் அப்படி ஏதும் இதுவரை எழுந்ததாய்த் தெரியவில்லை) கேரள முதல்வர் முத்தான தன் கருத்தைச் சொல்லி இருக்கின்றார். சாராயத்தினால் வரும் வருமானங்களை விட அதனால் விளையும் கேடுகள் அதிகம் என்று. இலாபம் தான் முக்கியம் என்று ஒவ்வொரு விவசாயியும் யோசித்தால், கஞ்சாப்பயிர் தான் தேசீயப் பயிராக இருக்குமாம். இது நான் சொல்ல்லிங்கோ… வினோபாஜீயே சொல்லியிருக்காங்க. அப்படிப்பாத்தா கடல் கொள்ளையர்கள் மாதிரி தொழில் தொடங்கி இலாபம் பாக்கலாமா? அல்லது வேறு சில நாடுகள் ”தோல்” வியாபாரம் செய்து வருவாய் ஈட்டுவதையும் செய்யுமா பிற நாடுகள்? இது பத்தி மேலும் தகவல் கொடுத்து உங்களை மேலும் கெடுக்க விரும்பலை.
அரசு பார்களை விட்டுத் தள்ளுவோம்…. கம்பர் காலத்தில் பார் டைமிங் சங்கதி ஏதும் தேடலாமா?? கம்பரை ரொம்பவும் ஜாலியா கொண்டு போயிடரீங்க… எதுக்கும் ஒரு லிமிட் இருக்குங்க என்று (மனைவியிடமிருந்து) ஆலோசனை வேறு வந்திட்டிருக்கு. நேரா கம்பர் கிட்டெ அதெக் கேட்டா, நம்மளை தப்பா நெனெச்சிட மாட்டாரு?? அதனாலெ ஸ்கைபில் மடக்கி விசாரித்தேன் அவரிடம்.

ஹாய்… வணக்கம் ஐயா….

கம்பர்: உம்மன் சான்டியையும் நாசூக்கா உமனையும் டச் பன்றப்பவே நெனெச்சேன்…. அடுத்த டார்கெட் நாம தான்னு…

”அப்படி ஏதும் வில்லங்கமான ஐடியாவோட வரலீங்க… சும்மா உங்க கருத்து கேக்கத்தான்…..”

கம்பர்: கருத்து கண்ணாயிரம் மாதிரி, கம்பர் கிட்டெ கருத்து கேக்கிறே…. இந்தா புடி…. ”குஜராத் மாதிரி பாரே இல்லாத ஊரில் குடிக்காமெ இருக்கிற நபரை விட, பாரே நிரம்பி வழியும் அந்தமானில் குடிக்காமெ இருக்கிறவன் பெட்டர்… அதாவது அயோத்தியில் குடிக்காமல் இருக்கும் பரதனை விட, இலங்கையில் குடிதவிர்த்து நிற்கும் வீடணன் மேல்…” இது தான் என் கருத்து…

”அப்படியே…இலங்கையில் பார் டைமிங் பத்தி சொன்னீங்கன்னா……”
கம்பர்: அதானே பாத்தேன்…. என்னடா புள்ளெ… கருத்துலெ கவனமா இருக்கேன்னு பாத்தேன்… சங்கதி இது தானா?

”ஹி..ஹி…ஹி…”

கம்பர்: ஊரெல்லாம் பார் தேடும் படலத்தில் இருக்கிறச்சே, நம்ம பேரும் சேந்து ரிப்பேர் ஆயுடும்… பை…

கம்பர் ஆஃப்லைன் ஆகிவிட்டார். அவர் நேரடியாய் சொல்லாட்டியும் ஊர் தேடு படலம் என்று பொடி வச்சி சொல்லிட்டுப் போயிட்டார்…. கம்பென்டா… நண்பென்டா….

சுந்தர காண்டத்தில் ஊர் தேடு படலத்தின் ஒவ்வொரு பாட்டையும் தேடினேன். (அந்த அனுமன் எதுக்குத் தேட்றாரு? இந்தக் கொரங்கு எதுக்குத் தேடுது??… ம்… எல்லாம் காலக் கொடுமை) நம்மள மாதிரு ஆட்களை படிக்க வைக்க கம்பர் அங்கங்கே சரக்கு வச்சிட்டுப் போயிருக்காறோ?.. சரக்கு என்றவுடன் சிக்கியது பாடல்.

அந்நள்ளிரவில் கள்ளுண்ணும் தொழில்கள்” அடங்கின. (அப்பவே தொழிலாவே இருந்திருக்கே!) பெரிய கடலொளி போல் இலங்கை சிட்டியில் இருந்த சவுண்ட் சிஸ்டம் எல்லாம் ஆஃப் ஆயிடுச்சாம். பாடலும் அடங்கியது. தொழிலாளர்கள் அவங்கங்க ஊட்டுக்குப் போயிட்டாய்ங்க. மூனு டிசைன் பறைகள் அடங்கின. அப்பத்தான் எல்லாரும் தூங்கப் போனாகளாம்…. இது பாட்டோட கோணார் உரை.

ஆமா இதுலெ..பார் டைமிங் எங்கே வருது? சரியான கதை தான் போங்க. அந்தமான்லெ பார் டயம் இரவு 11 மணிவரையாம். கடைசி ஆர்டர் 10.30ல் முடியுமாம். அதே லாஜிக் பாத்தா, நள்ளிரவு 12 மணிக்கு முடிஞ்சது என்றால், 11.30 க்கு கடைசி ஆர்டர் என்று கூடவா புரியாது நமக்கு??

இதோ பாட்டு:

வேரியும் அடங்கின நெடுங் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கியது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்
தூரியும் அடங்கின தொடங்கியது உறக்கம்.

அடங்கவே மாட்டியா? என்று சொல்கின்ற வரைக்கும் (அப்படிச் சொன்னாலும் கூட) தொடரும்.